<div id="MiddleColumn_internal"> <p style="text-align: justify;">True Labour Pain - அதாவது உண்மையான பிரசவ வலியை கணக்கெடுக்கும் விதம் வேறு. கர்ப்பப்பையின் வாய்ப்பகுதிக்கு Cervix (சர்விக்ஸ்) என்று பெயர். இந்த சர்விக்ஸ் மூன்று சென்டிமீட்டர் அளவுக்கு விரிவடையும் போதுதான் அதை பிரசவம் தொடங்கிவிட்டதாக கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் (Active Labour)</p> <h3 style="text-align: justify;">பிரசவத்தை எதிர்கொள்ள மூன்று முக்கிய கட்டங்கள்</h3> <p style="text-align: justify;"><strong>முதல்கட்டம்</strong></p> <p style="text-align: justify;">உண்மையான பிரசவ வலி தொடங்கி சர்விக்ஸ் பத்து சென்டிமீட்டர் (முழுவதுமாக விரிவடையும் கட்டம்) அளவுக்கு விரிவடையும் வரையுள்ள கட்டம்தான் முதல்.</p> <p style="text-align: justify;"><strong>இரண்டாம் கட்டம்</strong></p> <p style="text-align: justify;">சர்விக்ஸ் முழுவதுமாக விரிவடைந்து அதன் வழியே குழந்தை முழுவதுமாக வெளிவருவது வரையிலான பகுதியை இரண்டாம் கட்டம் என்கிறோம்.</p> <p style="text-align: justify;"><strong>மூன்றாம் கட்டம்</strong></p> <p style="text-align: justify;">குழந்தை வெளி வந்ததோடு விஷயம் முடிவடைவதில்லை. அம்மா உடலிலிருந்து நஞ்சுக் கொடி முழுவதுமாக வெளியேறுவதுதான் அதிமுக்கியம். இப்படி நஞ்சு வெளிவருவது வரையான பகுதியை மூன்றாவது கட்டமாகப் பிரித்துக் கொள்வோம்.</p> <ul> <li style="text-align: justify;">இந்த மூன்று கட்டங்களையும் கவனமாகக் கண்காணிக்க ‘பார்ட்டோகிராம்’ என்கிற ஒரு ரெகார்டை உபயோகிப்பர். ரெக்கார்டு என்றால் பெரிதாக நினைத்துவிடாதீர்கள். அது வெறும் பேப்பர்தான். என்றாலும், இதுதான் பிரசவத்தின்போது மிக முக்கியமான விஷயமாகக் கருதப்படுகிறது. அதில் சம்பந்தப்பட்ட பெண்ணின் பெயர் உள்ளிட்ட அடிப்படைத் தகவல்கள் தொடங்கி, அவர் எப்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், எப்போது வலி தொடங்கியது, அனுமதிக்கப்பட்ட போது குழந்தையின் நிலை எப்படி இருந்தது, அதன்பிறகு குழந்தை வெளிவர எந்தெந்தக் கட்டங்களை கடந்துள்ளது போன்ற எல்லா தகவல்களையும் அதில் எழுதி வைத்திருப்பார்கள். இன்னும் சில தகவல்களை கிராப் படமாகப் போட்டும் கண்காணிப்பர்.</li> <li style="text-align: justify;">எதற்கு இந்த பார்ட்டோகிராம் என்றால், சிலருக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட உடனேயே பிரசவமாகலாம். இன்னும் சிலருக்கு சில மணிநேரம் கழித்தும் பிரசவமாகலாம். பேஷண்ட் ஒருவராக இருந்தாலும் அவரை வந்து பார்க்கும் மருத்துவர்கள், நர்ஸ் ஆகியோர் அவ்வப்போது டியூட்டி மாறிக் கொண்டே இருப்பார்கள். அப்படி மாறி மாறி வருபவர்களுக்கு, சம்பந்தப்பட்ட பெண் பற்றிய தகவல்கள் உடனே தெரியத்தான் இந்த பார்ட்டோகிராம் பயன்படுகிறது. அதுதவிர பிரசவத்தை நோக்கி முன்னேறிக்கொண்டிருக்கும் அம்மா, குழந்தை என்ற இருவரைப் பற்றிய அத்தனை தகவல்களும் சம்பந்தப்பட்ட மருத்துவருக்கு ஒரு பார்வையிலேயே கிடைத்துவிடுவதால் இது மிகப் பயனுள்ள விஷயமாகக் கருதப்படுகிறது.</li> <li style="text-align: justify;">பிரசவ வலி என்பது, ஏதோ வலி எடுத்தது... உடனே குழந்தை பிறந்தது என்பது போன்ற சாதாரண விஷயமில்லை.. லேசான வலியில் தொடங்கி, அது மெதுமெதுவாய் அதிகரித்து, கடைசியாக சஸ்பென்ஸை உடைப்பதுபோல குழந்தை ரிலீஸ் ஆகும் சந்தோஷ தருணம் அது. சில மணி நேர அவஸ்தைக்குப் பிறகுதான் குழந்தை வெளிவரும். வெளி வரவேண்டும். இந்த வலி மெதுமெதுவாய் அதிகரிக்கவும் ஒரு குறிப்பிட்ட வரைமுறை இருக்கிறது. முதல் பிரசவத்துக்கு ஒரு வகையாகவும் அதன்பிறகு வரும் பிரசவங்களுக்கு வேறுவிதமாகவும் இது அமையும்.</li> <li style="text-align: justify;">பிரசவ வலி எடுக்கும்போது கர்ப்பப்பையின் வாய்ப்பகுதி, அதாவது சர்விக்ஸின் நீளம் வழக்கத்தை விடவும் குறையத் தொடங்கும். இப்படி அதன் நீளம் குறையும்போதே அது மெதுவாகத் திறக்கவும் தொடங்கும். சர்விக்ஸின் இந்த இரண்டு செயல்பாடுகளுமே உண்மையான பிரசவ வலி ஏற்பட்டால் மட்டுமே ஒரே சமயத்தில் நிகழும்.</li> <li style="text-align: justify;">முதல் பிரசவத்தின்போது மணிக்கு ஒரு சென்டிமீட்டர் அளவுக்கு சர்விக்ஸ் விரிவடையத் தொடங்கும். அதுவே இரண்டாம், மூன்றாம் பிரசவங்களின் போது மணிக்கு 1.5 - 2 சென்டிமீட்டர் அளவுக்கு திறக்கும். இப்படி ஆவதுதான் நார்மல். இப்படி ஆனால்தான் பிரசவம் இயல்பாக நடந்துகொண்டிருக்கும்</li> <li style="text-align: justify;">ஏன், முதல் பிரசவத்துக்கு ஒரு சென்டி மீட்டராகவும் இரண்டாம், மூன்றாம் பிரசவத்துக்கு சற்றே அதிகப்படியாகவும் சர்விக்ஸ் விரிவடைகிறது முதல் பிரசவத்தின்போது சர்விக்ஸ் சற்றே இறுக்கமாக இருக்கும். காரணம், அதற்கு இது புது அனுபவமில்லையா... அதனால்தான். அதன்பிறகு அது சற்றே மிருதுவாகி விடுவதால்தான் அதற்கடுத்த பிரசவங்களின்போது அதனால், சற்றே அதிகப்படியாக விரிவடைய முடிகிறது.</li> </ul> <h3 style="text-align: justify;">பிரசவ நேரத்தில் கடைபிடிக்க வேண்டிவை</h3> <ul> <li style="text-align: justify;">கர்ப்பப்பை சரியானபடி இறுக்கமடைந்தால் (Contraction) மட்டும்தான் சர்விக்ஸ் இப்படி விரிவடைய முடியும். கர்ப்பப்பை சரியாக இறுக்கமடைகிறது என்று எப்படிச் சொல்வோம் என்று கேட்டால், அதற்கும் ஒரு கணக்கு இருக்கிறது. பத்து நிமிடங்களுக்கு மூன்று முறையாவது இறுக்கமடைந்தால்தான் கர்ப்பப்பை நார்மலாகச் செயல்படுகிறது என்று நாங்கள் கணக்கில் கொள்வோம். சாதாரணமாகவே இயற்கையாக வரவேண்டிய விஷயம் இது. இது சரியானபடி நடக்கிறதா என்று, நாங்கள் உண்மையான பிரசவவலி தொடங்கியதிலிருந்து நான்கு மணி நேரத்துக்கு ஒருமுறை கர்ப்பப்பைக்குள் கைவிட்டுப் பரிசோதிப்போம். சர்விக்ஸ் 5 - 6 சென்டிமீட்டர் அளவுக்கு விரிவடையத் தொடங்கியதுமே, இரண்டு மணி நேரத்துக்கு ஒரு தரமாக உள்புற பரிசோதனைகள் செய்வோம்.</li> <li style="text-align: justify;">இப்படி கையை உள்புறமாக விட்டுப் பரிசோதிக்கும்போது, வெளிப்புறமாக செய்யப்படும் பரிசோதனையைவிட பல கூடுதல் தகவல்கள் நமக்குக் கிடைக்கும். அதன்மூலம் சர்விக்ஸ் எந்த அளவுக்கு விரிவடைகிறது மற்றும் குழந்தையின் தலை எந்த அளவுக்கு தாயின் இடுப்பெலும்புப் பகுதியில் இறங்கியிருக்கிறது போன்ற தகவல்கள் நமக்குக் கிடைக்கிறது. இந்த சமயத்தில் தாயின் வயிற்றை வெளிப்புறமாகத் தொட்டுப் பார்த்தால், குழந்தையின் தலை இன்னும் தாயின் வயிற்றுக்குள் எந்தளவுக்கு உள்ளது என்கிற விஷயமும் தெரியவரும். இதையெல்லாம் தொடர்ந்து கண்காணித்து, எல்லாமே இயல்பாக நடந்தேறினால், இந்த சமயத்தில், இத்தனை மணி நேரத்துக்குள் பிரசவமாகிவிடும் என்று எங்களால் ஓரளவுக்கு முடிவு செய்ய முடியும்.</li> <li style="text-align: justify;">எல்லாமே இயல்பாகவே நடந்தாலும் சிலருக்கு நேரத்தோடு பனிக்குடம் உடையாமல் தாமதப்பட்டுக்கொண்டே இருக்கும். ஒரு குறிப்பிட்ட கட்டம் வரைக்கும் காத்திருந்து பார்ப்போம். அது தானாகவே உடையாமல் போனால், நாங்களாகவே அதை செயற்கையாக உடையச் செய்துவிடுவோம். இதை மருத்துவரீதியாக Artificial Rupture of Membranes என்போம். இப்படி பனிக்குடம் உடைந்தால்தான் குழந்தை வேகமாகப் பிரசவமாகும்.</li> <li style="text-align: justify;">பனிக்குடம் உடையும்போது அதிலுள்ள நீர் வெளிவரும். அதை ‘Liquor Amni’ என்று மருத்துவரீதியாக அழைக்கிறோம். இந்த நீர் நார்மலாகத் தண்ணீர் போல எந்தவித நிறமும் இன்றி இருக்கும். இப்படித்தான் இருக்கவும் வேண்டும். ஆனால், சில சமயம் இந்த நீர் பச்சை, மஞ்சள் கலந்த ஒரு நிறமாக வெளிவரும். இது சாதாரணமான விஷயமல்ல... தாயின் வயிற்றுக்குள்ளேயே குழந்தை மலம் கழித்துவிட்டால், இப்படி பனிக்குட நீர் நிறம் மாறி வரும். தாயின் வயிற்றில் இருக்கும்போது குழந்தையின் உடலிலிருந்து இப்படி வெளியேறும் மலத்துக்கு ‘Meconium’ என்று பெயர். குழந்தை இப்படி தாயின் உடலுக்குள்ளேயே மலம் கழிப்பதன் மூலம் ‘நான் உள்ளே சவுகரியமாக இல்லை. சீக்கிரமே வெளியேற வேண்டும்’ என்று நமக்கு உணர்த்துவதாகத்தான் இதை நாம் எடுத்துக்கொள்ள வேண்டும்.</li> <li style="text-align: justify;">அவசரமான இந்த நிலைமையில் தாயின் சர்விக்ஸ் எந்த அளவுக்கு விரிவடைகிறது என்று பார்ப்பர். 1 - 2 சென்டிமீட்டர் அளவுக்கு விரிவடைந்த நிலையிலேயே குழந்தை கர்ப்பப்பைக்குள் மலம் கழித்திருந்தால், தாமதிக்காமல் சிசரியன் செய்யத் தயாராகிவிடுவர். அதுவே எட்டு சென்டிமீட்டர் அளவுக்கு சர்விக்ஸ் விரிவடைந்துக் கொண்டிருக்கும் நிலையில், நார்மல் டெலிவிரிக்காக சிறிது நேரம் பொறுத்திருந்து பார்க்கலாம்.</li> <li style="text-align: justify;">பிரசவத்தின்போது அதிமுக்கியமான விஷயம், பாப்பாவின் தலை சரியானபடி இறங்கி வருவதுதான். இதுதான் பிரசவத்தை நார்மல் என்று கூட முடிவு செய்கிறது. பாப்பாவின் தலை உடனடியாக இல்லாமல் மெதுமெதுவாக அம்மாவின் வஜைனாவில் இறங்கி வரும். இயல்பாகவே பாப்பாவின் தலையிலுள்ள எலும்புகள் கொஞ்சம் விலகிய நிலையில்தான் இருக்கும். வஜைனாவில் இறங்கும் பாப்பாவின் தலைப்பகுதி, அங்கே சற்று இறுக்கப்படும்.</li> <li style="text-align: justify;">அப்போது பாப்பாவின் தலைப் பகுதியின் எலும்புகள் இறுக்கமாக ஃபிட் ஆகும். இந்த விஷயம் நார்மலாக நடந்தால்தான் பாப்பாவால் நார்மலாக வெளிவர முடியும். வெளிவந்த பிறகு பாப்பாவின் தலைப் பகுதி எலும்புகள் வழக்கம்போலவே அதே விலகிய நிலைக்கு வந்துவிடும்.</li> <li style="text-align: justify;">இந்த விஷயங்கள் நடந்துகொண்டிருக்கும்போதே CTG (Cardio Tocograph, இதற்கு Electronic Foetal Heart Monitoring என்று இன்னொரு பெயரும் உண்டு) என்கிற ஒரு கருவி வைத்து பாப்பாவின் இதயத் துடிப்பு, அம்மாவின் கர்ப்பப்பை இறுக்கமடைவது போன்ற விஷயங்களைக் கண்காணிப்பர். பெரியவர்களாகிய நம்முடைய இதயத்தின் இயக்கத்தைக் கண்காணிக்க இ.சி.ஜி கருவி பயன்படுவதுபோல, பாப்பாவின் இதயத் துடிப்பைப் பிரசவத்தின்போது கண்காணிக்க இந்தக் கருவி பயன்படுகிறது. இப்படிக் கண்காணிக்கப்படும்போது பாப்பாவின் இதயத்துடிப்பு குறைந்தால் (இது எல்லா குழந்தைகளுக்கும் நிகழ்வதில்லை. பிரச்னைக்குரிய சில பாப்பாக்களுக்கு மட்டுமே இப்படி ஆகலாம்.) அடுத்த கட்ட முடிவுகள் எடுக்க தயாராக வேண்டும்.</li> </ul> <p style="text-align: justify;"><strong>ஆதாரம் : </strong>நலவாழ்வு மருத்துவ இதழ்</p> </div>