குறைந்த வயதில், குறைந்த நீரில் அதிக வருமானம் தரும் பயறு சாகுபடியினை ஊக்குவித்து தமிழ்நாட்டில் பயறு உற்பத்தியினை அதிகரிப்பதற்காக, வரப்பில் பயறு சாகுபடி, மாற்றுப் பயிர் சாகுபடி, சம்பா நெல் அறுவடைக்குப்பின் பயறு சாகுபடி தரமான விதைகள் மற்றும் இதர இடுபொருட்கள் விநியோகம், தொழில்நுட்ப செயல்விளக்கம் போன்ற பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வரும் தமிழ்நாடு அரசு, பயறு அறுவடை காலங்களில் விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைப்பதற்கும் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. வேளாண் நிதிநிலை அறிக்கையில் பயறு கொள்முதல் பற்றிய அறிவிப்பு கடந்த 2021-22 ஆம் ஆண்டு வேளாண் நிதிநிலை அறிக்கையில், "அறுவடைக் காலங்களில் விளைபொருட்களின் விலை வீழ்ச்சியிலிருந்து விவசாயிகளைப் பாதுகாக்கும் பொருட்டு, ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் மூலம் விவசாயிகளிடமிருந்து நேரடியாக குறைந்தபட்ச ஆதரவு விலையில் பயறு கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்” என அறிவிக்கப்பட்டது. அதன்படி, சென்ற 2021-22 ஆம் ஆண்டில் 4250 டன் பாசிப்பயறும் 33 டன் துவரையும், 4642 விவசாயிகளிடமிருந்து நேரடியாகக் கொள்முதல் செய்யப்பட்டது. நடப்பு 2022-23 ஆம் ஆண்டில் 72808 டன் பயறு கொள்முதல் இலக்கு உளுந்துக்கு கிலோவுக்கு ரூ. 66, பாசிப்பயறுக்கு ரூ. 77.55 என ஒன்றிய அரசு அறிவித்துள்ள குறைந்தபட்ச ஆதரவு விலையானது (Minimum Support Price) தமிழ்நாட்டில் உள்ள பயறு சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில், வேளாண்மை-உழவர் நலத்துறை நடப்பு ராபிப் பருவத்தில் 60203 டன் உளுந்தும், 12605 டன் பச்சைப்பயறும் கொள்முதல் செய்வதற்காக ஒன்றிய அரசிடமிருந்து அனுமதி பெற்று, கொள்முதல் பணியினை துவங்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. உளுந்து கொள்முதல் அரியலூர், இராணிப்பேட்டை, தேனி, கரூர், செங்கல்பட்டு, திருப்பூர், நாமக்கல், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, சேலம், திண்டுக்கல், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், இராமநாதபுரம் ஆகிய 17 மாவட்டங்களில் 01.03.2023 முதல் 29.05.2023 வரையிலும், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், திருச்சிராப்பள்ளி மற்றும் புதுக்கோட்டை ஆகிய 7 மாவட்டங்களில் 01.04.2023 முதல் 29.06.2023 வரையிலும் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் மூலமாக 60203 டன் உளுந்து கிலோவுக்கு ரூ. 66 என்ற குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல் செய்வதற்கு இலக்கு நிர்ணயித்து அதற்கான நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளது. பச்சைப்பயறு கொள்முதல் திருவள்ளூர், இராணிப்பேட்டை, விழுப்புரம், திருப்பூர், சேலம், நாமக்கல், விருதுநகர், திண்டுக்கல், தென்காசி, தூத்துக்குடி ஆகிய 10 மாவட்டங்களில் பச்சைப்பயறு சாகுபடி செய்யும் விவசாயிகளிடமிருந்து, 01.03.2023 முதல் 29.05.2023 வரையிலும் தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மற்றும் கடலூர் ஆகிய 5 மாவட்டங்களில் 01.04.2023 முதல் 29.06.2023 வரையிலும் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் மூலமாக 12605 டன் பச்சைப்பயறை கிலோவுக்கு ரூ. 77.55 என்ற குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல் செய்வதற்கு இலக்கு நிர்ணயித்து, அதற்கான நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளது. கொள்முதலுக்கு தரம் அவசியம் அறுவடை முடிந்தவுடன், உளுந்து, பாசிப்பயறை நன்கு காயவைத்து, சுத்தம் செய்து கல், மண், தூசி, கலப்பின விதை, முதிர்ச்சியடையாத விதை, வண்டு தாக்கிய விதை, ஈரப்பதம் போன்ற காரணிகளில் அரசு நிர்ணயித்துள்ள தரத்தில் கொள்முதலுக்கு கொண்டு வரவேண்டும். பயறு கொள்முதலுக்கு என்னென்ன ஆவணங்கள் தேவை? விலை ஆதரவுத் திட்டத்தின் மூலம் பயன்பெற விரும்பும் விவசாயிகள், உங்களுக்கு அருகில் உள்ள ஒழுங்குமுறைக்கூடத்திற்கு சென்று, நிலச்சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை மற்றும் வங்கி சேமிப்பு கணக்கு புத்தகத்தின் நகலுடன் தங்களது பெயரை பதிவு செய்திட வேண்டும். சேமிப்பு கிடங்குகளில் இருப்பு வைக்கப்பட்ட மூன்று நாட்களுக்குள் விளைபொருளுக்கான தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக அனுப்பி வைக்கப்படும். தற்போது, உளுந்து, பச்சைப்பயறு அறுவடை நடைபெற்று வருகின்றது. எனவே, தமிழ்நாட்டு விவசாயிகள் உற்பத்தி செய்த உளுந்து, பாசிப்பயறுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை கிடைக்க வேண்டும் என்பதற்காக, தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் இத்திட்டத்தில் விவசாயிகள் அதிக எண்ணிக்கையில் பதிவு செய்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9