முறைகேடான வர்த்தக செயல்பாடுகளில் ஈடுபடும் கல்வி தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை செயலாளர் திரு. ரோகித் குமார் சிங், புதுதில்லியில் இன்று, இந்திய இணையதள மற்றும் செல்போன் சங்கத்தின் (Internet and Mobile Association of India - IAMAI)-ன் கீழ் இயங்கும் சுய ஒழுங்குமுறை அமைப்பான இந்தியா எட்-டெக் கூட்டமைப்பு (India Edtech Consortium - IEC), உடன் ஆலோசனை நடத்தினார். சுய ஒழுங்குமுறைகள், முறைகேடான வர்த்தக செயல்பாடுகளை தடுக்காவிட்டால், வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்த ஏதுவாக அரசே கடுமையான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க வேண்டியிருக்கும் என்று திரு. சிங் தெரிவித்தார். இந்த கூட்டத்தில் IEC உறுப்பினர்களான பைஜூஸ் (BYJU’S), வேதாந்து (Vedantu), அப்கிரேடு (upGrad), அன்அகாடமி (Unacademy), கிரேட் லேனிங் (Great Learning), ஒயிட்ஹேட் ஜூனியர் (WhiteHat Jr.) மற்றும் சன்ஸ்டோன் (Sunstone) மற்றும் IAMAI பிரதிநிதிகளும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் கல்வி தொழில்நுட்ப நிறுவனங்களின் முறைகேடான வர்த்தக நடைமுறைகள் மற்றும் தவறான தகவல்களின் பேரில் ஆர்வத்தைத் தூண்டும் விளம்பரங்கள் குறித்து முக்கியமாக விவாதிக்கப்பட்டது. இந்திய கல்வி தொழில்நுட்ப சூழல்முறையில் நுகர்வோர் நலனை பாதுகாப்பதற்கான வழிமுறைகள் குறித்து செயலாளர் திரு. ரோகித் குமார் சிங் விவாதித்தார். சில விளம்பரங்கள் தற்போது நடைமுறையில் உள்ள வழிகாட்டு நெறிமுறைகளின் படி இல்லை என்பதை சுட்டிக்காட்டிய அவர், நுகர்வோர் நலனை பாதுகாக்கத்தக்க வகையில், தடுப்பு முறைகளை பராமரிப்பது அவசியம் என்று தெரிவித்தார். ஆதாரம்: பத்திரிக்கை தகவல் மையம்