கிராமப்புற இணைப்புக்கான புவியியல் தகவல் அமைப்பின் (ஜிஐஎஸ்) தரவுகளை மத்திய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சர் திரு. கிரிராஜ் சிங், புதுதில்லியில் உள்ள இந்திய வாழ்விட மையத்தில் 22 பிப்ரவரி 2022 பகல் 12 மணியளவில் வெளியிடுகிறார். நாடு முழுவதும் உள்ள இதுவரை சாலை இணைப்பு வசதி இல்லாத குடியிருப்புப் பகுதிகளுக்கு, அனைத்து பருவ காலங்களுக்கும் ஏற்ற சாலை இணைப்பு வசதிகளை ஏற்படுத்தும் நோக்கில் 2000-ஆவது ஆண்டு பிரதமரின் கிராமச் சாலைத் திட்டம் தொடங்கப்பட்டது. கிராமப்புற பொருளாதாரத்திற்கு ஊக்கமளிக்கும் விதமாக, பின்னர் இந்தத் திட்டம் பெரிய கிராமப்புற சாலைகளுடன் இணைக்கும் வகையில் மேம்படுத்தப்பட்டது. இத்திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து 7.83 லட்சம் கிலோ மீட்டர் நீள சாலைகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, ரூ. 2.69 லட்சம் கோடி செலவில் இதுவரை 6.90 லட்சம் கிலோ மீட்டர் தூரப் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. பிரதமரின் கிராமப்புற சாலைத் திட்டத்தின் ஒரு பகுதியாக 800,000+கிராமப்புற வசதிகள் தொடர்பான புவியியல் தகவல் அமைப்பு பற்றிய தரவுகளும், ஒரு மில்லியன்+ வசிப்பிடங்கள் மற்றும் 25,00,000+ கிலோ மீட்டர் தூர சாலைகள் பற்றிய தரவுகளும் சேகரிக்கப்பட்டு ஜிஐஎஸ் அமைப்பை பயன்படுத்தி டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளன. இந்த ஜிஐஎஸ் தரவுகள் நாளை பொதுமக்கள் உபயோகத்திற்கு வெளியிடப்படவுள்ளது. ஆதாரம்: பத்திரிக்கை தகவல் அலுவலகம்