பெரு நிறுவனங்கள், எளிதான வர்த்தகத்தை மேற்கொள்ளவும் எளிதான வாழ்வுக்கு வகை செய்யவும் அண்மைக் காலங்களில் மத்திய பெரு நிறுவன விவகாரங்கள் அமைச்சகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. நிறுவனச் சட்டம், 2013 மற்றும் வரையறுக்கப்பட்ட பொறுப்பு கூட்டுத்தொழில் சட்டம், 2008 ஆகியவற்றின் பல்வேறு விதிகளை குற்றமற்றதாக்குதல், புத்தொழில் நிறுவனங்களை துரிதமாக இணைப்பது, ஒரு நபர் நிறுவனங்களை ஒருங்கிணைப்பதை ஊக்குவித்தல் போன்றவை இதில் அடங்கும். முன்னதாக, நிறுவனங்கள் சட்டம், 2013-இன் கீழ் சிறு நிறுவனங்கள் என்பதற்கான வரையறை மாற்றியமைக்கப்பட்டு, இது போன்ற நிறுவனங்களுக்கு ரூ. 5 லட்சம் என்ற மூலதன வரையறை, ரூ. 2 கோடியாகவும், ரூ. 2 கோடி என்ற விற்றுமுதல் வரையறை, ரூ. 20 கோடியாகவும் மாற்றியமைக்கப்பட்டது. இந்த வரையறை இப்போது மீண்டும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதன்படி, ரூ. 2 கோடி என்ற மூலதன வரையறை, ரூ. 4 கோடியாகவும், ரூ. 20 கோடி என்ற விற்றுமுதல் வரையறை, ரூ. 40 கோடியாகவும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. லட்சக்கணக்கான குடிமக்களின் தொழில்முனைவு லட்சியங்களையும், புதிய கண்டுபிடிப்பு திறன்களையும் சிறிய நிறுவனங்கள் பிரதிபலிப்பதோடு, வளர்ச்சியிலும் வேலை வாய்ப்பு உருவாக்கத்திலும் கணிசமான பங்களிப்பை வழங்குகின்றன. சட்டத்தின்படி செயல்படும் நிறுவனங்களுக்கு மிகவும் சாதகமான வணிக சூழலை உருவாக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வதில் அரசு தொடர்ந்து உறுதிபூண்டுள்ளது. இது சம்பந்தமாக மத்திய பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சகத்தின் அறிவிக்கை https://www.mca.gov.in/bin/dms/getdocument?mds=tiMs9IFJ8xuPm%252B%252Foxc6fUw%253D%253D&type=open என்ற அமைச்சகத்தின் இணையதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஆதாரம்: பத்திரிக்கை தகவல் மையம்