செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான வழிமுறைகளைப் பயன்படுத்தி, மனிதர்கள் வசிக்கக் கூடிய கிரகங்களை அடையாளம் காண அதிக நம்பகத்தன்மை கொண்ட புதிய அணுகுமுறை ஒன்றை இந்திய வானவியலாளர்கள் உருவாக்கியுள்ளனர். நினைவுக்கு அப்பாற்பட்ட காலம் முதற்கொண்டே, மனிதர்கள் வசிக்கக் கூடிய வேறு உலகம் இருப்பதாக மனிதகுலம் நம்பி வருகிறது. நமது நட்சத்திர மண்டலத்தில் எண்ணற்ற கிரகங்கள் இருப்பதாக தற்போதைய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த கிரகங்களின் எண்ணிக்கை நட்சத்திரங்களின் எண்ணிக்கையைவிட அதிகமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த கிரகங்கள் உயிர் வாழ ஏற்றவையா என்ற கேள்வியும் எழுப்பப்பட்டு வருகிறது. மத்திய அறிவியல் தொழில்நுட்பத்துறையின் தன்னாட்சி பெற்ற நிறுவனமான பெங்களூருவில் உள்ள இந்திய வான்இயற்பியல் கழகத்தின் வானவியல் விஞ்ஞானிகள், பிட்ஸ் பிலானியின் (பிர்லா தொழில்நுட்ப அறிவியல் கழகம், பிலானி) கோவா வளாக வானவியல் விஞ்ஞானிகளுடன் இணைந்து, முரண்பாட்டை கண்டறியும் புதிய அணுகுமுறையை வகுத்துள்ளனர். இதன் மூலம் மனிதர்கள் வசிக்கும் மிகவும் உகந்த கிரகத்தை அடையாளம் காண முடியும் எனக் கூறப்படுகிறது. இந்த ஆய்வின் முதல் கட்டமாக 5000 கிரகங்களை ஆய்வு செய்ததில் 60 கிரகங்கள் வாழத் தகுதி வாய்ந்தவையாக இருப்பது கண்டறியப்பட்டிருப்பதுடன் மேலும் 8000 கிரகங்களில் ஆய்வு நடத்தவும் உத்தேசிக்கப்பட்டுள்ளதாக பிட்ஸ் பிலானியின் கே.கே. பிர்லா கோவா வளாக விஞ்ஞானி டாக்டர் ஸ்நேகன்ஷூ சாஹாவும் இந்திய வான் இயற்பியல் கழகத்தின் விஞ்ஞானி டாக்டர் மார்கரிட்டா சஃபோனோவாவும் தெரிவித்துள்ளனர். ஆதாரம்: பத்திரிக்கை தகவல் அலுவலகம்