ஜவுளித்துறையில் திறன் கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில் வேலைவாய்ப்புடன் கூடிய திட்டமாக செயல்படுத்தப்படும் சமர்த் திட்டம் [Scheme for Capacity Building in Textiles Sector (Samarth)] மார்ச் 2024 வரை செயல்பாட்டில் இருக்குமென்று ஜவுளி அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்தத் திட்டம் திறன் மேம்பாட்டு அமைச்சகத்தின் திறன் கொள்கைக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது. ஜவுளி மற்றும் அது தொடர்புடைய துறைகள், நெசவு, கைத்தறி, பட்டு, சணல் உள்ளிட்டவற்றில் திறன் பயிற்சிகளை இத்திட்டம் வழங்குகிறது. ஜவுளித் தொழில்துறையினர், மாநில அரசு அமைப்புகள், ஜவுளி அமைச்சகத்தின் கீழ் உள்ள கைவினைப் பொருட்கள் மற்றும் மத்திய பட்டு வாரியம் போன்றவற்றின் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் 184 பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. இத்திட்டத்தில் பயிற்சி பெறுவோருக்கு ஜவுளித்துறையில் 70 சதவீத வேலைவாய்ப்பை உறுதி செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 116 ஜவுளித் துறை நிறுவனங்களுடன் இணைந்து மத்திய ஜவுளி அமைச்சகம் இத்திட்டத்தை செயல்படுத்துகிறது. 28 மாநிலங்கள் மற்றும் 6 யூனியன் பிரதேச அரசுகளும் மத்திய ஜவுளி அமைச்சகத்துடன் இணைந்து இத்திட்டத்தை செயல்படுத்த உதவுகின்றன. 3 லட்சத்து 47 ஆயிரம் பேருக்கு பயிற்சி அளிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில் இதுவரை 1 லட்சத்து 50 ஆயிரம் பேர் இதில் பயிற்சி பெற்றுப் பயனடைந்துள்ளனர். இத்திட்டத்தின் கீழ் பலனடைந்தவர்களில் 85 சதவீதம் பேர் பெண்கள். மேலும் தகவல்களுக்கு https://www.texmin.nic.in/coming-tender மற்றும் https://samarth-textiles.gov.in/ வலைத்தளங்களைப் பார்க்கவும். ஆதாரம்: பத்திரிக்கை தகவல் மையம்