தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் [National Urban Livelihood Mission (NULM)] மற்றும் ஒடிசா நகர்ப்புற அகாடமி ஆகியவற்றுடன் இணைந்து, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் [Ministry of Housing and Urban Affairs (MoHUA)], தனது முதன்மைத் திட்டமான அம்ருத்தின் கீழ் தொடங்கிய "நீருக்காகப் பெண்கள், பெண்களுக்காக நீர்" (Women for Water, Water for Women) இயக்கம் நவம்பர் 7, 2023 முதல் நவம்பர் 9, 2023 வரை நடைபெறும். "நீருக்காகப் பெண்கள், பெண்களுக்காக நீர்" இயக்கம், நீர் நிர்வாகத்தில் பெண்களைச் சேர்ப்பதற்கான ஒரு தளத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அந்தந்த நகரங்களில் உள்ள நீர் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு நேரில் சென்று பார்வையிடுவதன் மூலம், நீர் சுத்திகரிப்பு செயல்முறைகள் குறித்து அவர்களுக்கு நேரடி விளக்கம் தரப்படும். இயக்கத்தின் முதல் நாளில் அனைத்து மாநிலங்களிலிருந்தும் (தேர்தல் நடைபெறும் மாநிலங்களைத் தவிர) 4,100-க்கும் மேற்பட்ட பெண்கள் "தண்ணீர் தீபாவளி" இயக்கத்தில் பங்கேற்றனர். அதிகாரமளிக்கப்பட்ட இந்தப் பெண்கள், நாடு முழுவதும் 250-க்கும் மேற்பட்ட நீர் சுத்திகரிப்பு நிலையங்களுக்குச் சென்று, வீடுகளுக்கு சுத்தமான மற்றும் பாதுகாப்பான குடிநீரை வழங்குவதில் உள்ள சிக்கலான செயல்முறைகளைப் பற்றிய நேரடித் தகவல்களைப் பெறுகிறார்கள். மகளிர் சுயஉதவிக் குழுக்களின் உறுப்பினர்களை மலர் தூவி வரவேற்ற மாநில அதிகாரிகள், தண்ணீர் பாட்டில்கள், சிப்பர்கள், டம்ளர்கள், சுற்றுச்சூழலுக்கு உகந்த பைகள், பேட்ஜ்கள் உள்ளிட்ட கள ஆய்வு உபகரணங்களை வழங்கினர். நாள் முழுவதும், நீர் உள்கட்டமைப்பு சார்ந்த செயல்பாடுகளில் மூழ்கிய பெண்கள், நீர் தரச் சோதனை நெறிமுறைகள் குறித்த நிபுணர் வழிகாட்டுதல்களைப் பெற்றனர். உள்கட்டமைப்பை நோக்கிய ஆழ்ந்த உரிமை மற்றும் பொறுப்புணர்வு பங்கேற்பாளர்களுக்கு வழங்கப்பட்டதன் வாயிலாக, பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் இயக்கத்தின் இலக்கு எட்டப்பட்டது. அம்ருத் திட்டம் மற்றும் அதன் பரவலான தாக்கம் குறித்து பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல், நீர் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு விரிவான வெளிப்பாட்டை வழங்குதல், மகளிர் சுய உதவிக் குழுக்களால் வடிவமைக்கப்பட்ட நினைவுப் பொருட்கள் மற்றும் தயாரிப்புகள் மூலம் உள்ளடக்கத்தை ஊக்குவித்தல் மற்றும் வீடுகளில் தண்ணீரைச் சிக்கனமாக பயன்படுத்தும் சாதனங்களின் உபயோகத்தை ஊக்குவித்தல் ஆகியவை பற்றி முதல் நாளில் கவனம் செலுத்தப்பட்டது. நீர் வளங்களை புத்திசாலித்தனமாகப் பாதுகாக்கவும், பயன்படுத்தவும், சிந்தனைக்குரிய நடவடிக்கைகள் மற்றும் உணர்வுப்பூர்வமாக முடிவெடுப்பதன் மூலம் விலைமதிப்பற்ற வளத்தைப் பாதுகாக்கவும் பங்கேற்பாளர்கள் உறுதிபூண்டனர். ஆதாரம்: பத்திரிகை தகவல் மையம்