மின்னணுவியல் மற்றும் பிபிஓ பிரிவில் எதிர்வரும் 2 ஆண்டுகளில் 10 மில்லியன் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட உள்ளதாகவும், இதனை சாத்தியமாக்க ஸ்டார்ட்-அப் நிறுவனங்களை நாடு முன்னிறுத்துவதாகவும் மத்திய ரயில்வே மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். இந்திய மென்பொருள் தொழில்நுட்பப் பூங்கா [Software Technology Park of India (STPI)], எலக்ட்ரானிக்ஸ் மற்றும் மென்பொருள் ஏற்றுமதி வளர்ச்சிக் கவுன்சில் [Electronics and Computer Software Export Promotion Council (ESC)] சார்பில், புதுடில்லியில் நவம்பர் 30, 2022 அன்று நடைபெற்ற தேசிய அளவிலான ஸ்டார்ட்-அப் கருத்தரங்கத்தின் தொடக்க விழாவில் அமைச்சர் இவ்வாறு கூறினார். எலக்ட்ரானிக்ஸ் எனப்படும் மின்னணுவியல் துறையில் மட்டும் 2.5 முதல் 3 மில்லியன் வேலைவாய்ப்புகளும், பிபிஓ பிரிவில் 8 மில்லியன் வேலைவாய்ப்புகளும், எதிர்வரும் 2 ஆண்டுகளில் தற்போதுள்ள வேலைவாய்ப்புகளுக்கு கூடுதலாக உருவாக்கப்படும் என அவர் குறிப்பிட்டார். திறமைகளின் சங்கமம், அறிவாற்றல், கனிணி சார்ந்த கல்வியறிவு ஆகியவற்றை மேம்படுத்த வேண்டும் என்பது தான் பிரதமரின் தொலைநோக்கு பார்வையின் அம்சம் என்பதை நினைவுகூர்ந்த அஸ்வினி வைஷ்ணவ், தகுதி, திறமை மற்றும் புத்தாக்க முயற்சிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் ஆரோக்கியமான சூழலை உருவாக்கியிருப்பதையும் சுட்டிக்காட்டினார். ஆதாரம்: பத்திரிக்கை தகவல் மையம்