புதுதில்லியில் நவம்பர் 6 முதல் 8 வரை நடைபெற்ற, இசை, நடனம், நாடகம் ஆகியவற்றுக்கான தேசிய அகாடமியான சங்கீத நாடக அகாடமியின் பொதுச்சபை கூட்டத்தின்போது, நிகழ்த்துக் கலைகளில் சிறந்து விளங்கும் 10 ஆளுமைகள் அகாடமியின் ஃபெல்லோஷிப் பெறுவதற்கு ஒருமனதாக தெரிவுசெய்யப்பட்டனர். இந்த ஃபெல்லோஷிப் மிகவும் கௌரவத்திற்குரிய அரிதான ஒன்றாகும். இதனைப் பெறுவோருக்கு ரூ. 300000 (மூன்று லட்சம் ரூபாய்) ரொக்கப் பரிசாக வழங்கப்படும். மேலும், வாய்ப்பாட்டு (இந்துஸ்தானி மற்றும் கர்நாடிக்), புல்லாங்குழல், சித்தார், மிருதங்கம் மற்றும் இதர பாரம்பரிய இசைக்கருவிகளில் சிறப்பான திறமையை வெளிப்படுத்துவோருக்கும், பரத நாட்டியம், கதக், கதகளி, குச்சிப்புடி, ஒடிசி, மோகினி ஆட்டம் போன்ற இந்தியாவின் நடன வகைகளில் சிறப்பாக செயல்படுவோருக்கும், நாடகம் எழுதுதல், இயக்கம், நடிப்பு, ஒளியமைப்பு, அரங்க வடிவமைப்பு ஆகியவற்றில் சிறந்து விளங்குவோருக்கும், இசை நாடகம் போன்ற பாரம்பரிய அரங்க கலைகள் மற்றும் நாட்டுப்புற மற்றும் பழங்குடியினர் கலைகள், பொம்மலாட்டம் போன்றவற்றில் சிறந்து விளங்குவோருக்கும் சங்கீத நாடக அகாடமி விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்த வகையில் 2019, 2020, 2021 ஆகிய ஆண்டுகளுக்கு 128 கலைஞர்களுக்கு சங்கீத நாடக அகாடமி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன . இந்த விருது பெறுவோருக்கு ரொக்கப்பரிசு ரூ. 100000 (ஒரு லட்சம் ரூபாய்) மற்றும் தாமிர பத்திரம், அங்கவஸ்திரம் ஆகியவை வழங்கப்படும். விருது பெறுவோரின் விவரங்களை https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2022/nov/doc20221125136501.pdf இணையதளத்தில் காணலாம். ஆதாரம்: பத்திரிக்கை தகவல் மையம்