49வது ஜிஎஸ்டி கவுன்சில் மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்களுக்கான அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் தலைமையில் தில்லியில் பிப்ரவரி 18, 2023 அன்று கூடியது. சரக்கு மற்றும் சேவைகள் மீதான ஜிஎஸ்டி விகிதங்கள் மற்றும் வர்த்தகத்தை எளிதாக்குவதற்கான பிற நடவடிக்கைகள் ஜிஎஸ்டி இழப்பீடு, ஜிஎஸ்டி மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம், திறன் அடிப்படையிலான வரிவிதிப்பு தொடர்பான அமைச்சர்கள் குழுவின் (ஜிஓஎம்) அறிக்கையின் ஒப்புதல் தொடர்பான பின்வரும் பரிந்துரைகளை ஜிஎஸ்டி கவுன்சில் வழங்கியுள்ளது. 2022 ஜூன் மாதத்திற்கு நிலுவையில் உள்ள மொத்த ஜிஎஸ்டி இழப்பீடு ரூ. 16,982 கோடியாகும். ஜிஎஸ்டி இழப்பீட்டு நிதியில் எந்தத் தொகையும் இல்லாததால், இந்தத் தொகையை அதன் சொந்த ஆதாரங்களில் இருந்து விடுவிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. எதிர்கால இழப்பீடு செஸ் வசூலில் இருந்து திரும்பப் பெறப்படும். கூடுதலாக, மாநிலங்களின் தலைமை கணக்காளரால் சான்றளிக்கப்பட்ட வருவாய் புள்ளிவிவரங்களை வழங்கிய மாநிலங்களுக்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய இறுதி ஜிஎஸ்டி இழப்பீடான ரூ 16,524 கோடியையும் மத்திய அரசு வழங்கும். இந்த வகையில், தமிழ்நாட்டுக்கு ஜூன் மாத இழப்பீடாக ரூ. 1201 கோடியும், புதுச்சேரிக்கு ரூ. 73 கோடியும் விடுவிக்கப்படும். ஜிஎஸ்டி மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம் தொடர்பான விஷயத்தில், சில மாற்றங்களுடன் அமைச்சர்கள் குழுவின் அறிக்கையை கவுன்சில் ஏற்றுக்கொண்டது. ஜிஎஸ்டி சட்டங்களுக்கான இறுதி வரைவு திருத்தங்கள் உறுப்பினர்களின் கருத்துகளுக்காக அவர்களுக்கு அனுப்பப்படும். அதை இறுதி செய்ய தலைவருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. பான் மசாலா, குட்கா, மெல்லும் புகையிலை போன்ற பொருட்களிலிருந்து கசிவுகளை அடைத்து, வருவாய் சேகரிப்பை மேம்படுத்தும் நோக்கில், குழுவின் பரிந்துரைகளுக்கு கவுன்சில் ஒப்புதல் அளித்தது. பென்சில் ஷார்ப்னருக்கான வரியை 18%லிருந்து 12% ஆக குறைக்க ஒப்புதல். ஆதாரம்: பத்திரிக்கை தகவல் மையம்