சிறுதானியங்களின் முக்கியத்துவத்தை உலக மக்களுக்கு பறைசாற்றும் வகையில், இந்தியாவின் கோரிக்கையை ஏற்று ஐக்கிய நாடுகள் சபை நடப்பு 2023 ஆம் ஆண்டினை அகில உலக சிறுதானிய ஆண்டாக அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து நடப்பாண்டில் சிறுதானிய பயன்பாட்டினை ஒரு மக்கள் இயக்கமாக நடத்துவதற்கு ஒன்றிய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. சிறுதானிய மேம்பாட்டிற்காக தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் நமது மாநிலத்தில் சோளம், கம்பு கேழ்வரகு, தினை, வரகு, சாமை, பனிவரகு, குதிரைவாலி போன்ற சிறுதானியங்களின் சாகுபடி பரப்பை உயர்த்துவதோடு, பொது மக்களிடையே சிறுதானியங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கும் மாநில அரசு நடப்பு ஆண்டு முழுவதும் பல்வேறு மேம்பாட்டு பணிகளையும், விளம்பரப் பணிகளையும் முன்கூட்டியே பல்வேறு அரசு துறைகளுடன் இணைந்து திட்டமிட்டு, செயல்படுத்தி வருகிறது. சிறுதானிய மண்டலங்கள் நடப்பு 2023 ஆம் ஆண்டில் வேளாண் நிதிநிலை அறிக்கையில் அறிவித்தபடி, தமிழ்நாட்டில் சிறுதானியங்களின் சாகுபடியை அதிகரித்து, சிறுதானிய உணவு வகைகளில் மதிப்புக்கூட்டுதலை மேம்படுத்தும் நோக்கத்தில், 22 மாவட்டங்களை உள்ளடக்கி இரண்டு சிறுதானிய சிறப்பு மண்டலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னை, கோயம்புத்தூர் மாநகரங்களில் உள்ள நியாய விலைக்கடைகளில் சிறுதானியங்கள் விநியோகம் சிறுதானியங்களில் அடங்கியுள்ள ஊட்டச்சத்துக்களின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, சென்னை மற்றும் கோயம்புத்தூர் மாநகரங்களில் உள்ள நியாய விலைக்கடைகளில் சிறுதானியங்கள் மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட சிறுதானியப் பொருள்களும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதற்கு தேவையான சிறு தானியங்கள் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டு வருகின்றன. தருமபுரி, நீலகிரி மாவட்டங்களில் உள்ள பொது விநியோகத் திட்டத்தின் கீழ் 2 கிலோ கேழ்வரகு: பொது மக்களின் உணவுப் பழக்கத்தில் சிறுதானியங்களையும் சேர்த்துக்கொள்ளும் வகையில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ், தருமபுரி, நீலகிரி மாவட்டங்களில் ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும், மாதம் 2 கிலோ கேழ்வரகு விநியோகிக்கப்பட்டு வருகிறது. அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகள், விடுதிகளில் சிறுதானிய உணவு வகைகள் சிறுதானிய உற்பத்தியை அதிகரிப்பதற்காக, வேளாண்மை உழவர் நலத்துறை எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு ஈடுகொடுக்கும் வகையில், சிறுதானியங்களை சார்ந்த உணவு வகைகளை பொதுமக்கள் அதிகளவில் உட்கொள்ள வேண்டும், அதன் மூலம் சிறுதானியங்களின் தேவை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக அரசு சீரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அனைத்து செயலாளர்கள், மாவட்ட ஆட்சியர்களுக்கும் தலைமைச்செயலர் கடிதம் அரசுக் கல்லூரிகள், விடுதிகள், அரசு மருத்துவமனைகள், மதிய உணவுக்கூடங்கள், சிறைச்சாலைகள் போன்ற அரசு சார்ந்த நிறுவனங்களில் சிறுதானியங்களிலிருந்து உற்பத்தி செய்யப்படும் மதிப்புக்கூட்டப்பட்ட உணவு வகைகளை அதிக அளவில் பயன்படுத்த வேண்டும் என்றும், பல்வேறு துறை சார்ந்த ஆய்வுக்கூட்டங்கள், கருத்தரங்குகள், பயிற்சிகள், அரசு விழாக்களில் சிறுதானியங்களிலிருந்து உற்பத்தி செய்யப்படும் மதிப்புக்கூட்டப்பட்ட லட்டு, மிக்சர், கொழுக்கட்டை, பிஸ்கட், சீடை போன்ற உணவு வகைகளை அதிகளவில் பயன்படுத்த வேண்டும் என தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் திரு. வெ. இறையன்பு, இ.ஆ.ப அவர்கள் அனைத்து துறை செயலாளர்களுக்கும் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார்கள். குறைந்த வயதில், குறைந்த நீரில் உற்பத்தி செய்யப்படும் சிறுதானியங்களில் ஊட்டச்சத்து அதிகமுள்ளதால், நமது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இதனைக் கருத்தில் கொண்டு மாநில அரசு எடுத்து வரும் சிறுதானிய மேம்பாட்டு நடவடிக்கைகளுக்கு அனைத்து தரப்பு மக்களும் முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும். குறிப்பாக இளைய சமுதாயத்தினர்கள் சிறுதானிய உணவு வகைகளை சேர்த்துக் கொள்ளும் வகையில், தங்களது உணவுப்பழக்கத்தை மாற்றிக் கொள்ள வேண்டும். இதன் மூலம், சிறு தானியங்களின் பயன்பாடு அதிகரிக்கும். சிறுதானியங்களை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஒர் உத்வேகம் வந்து அவர்கள் அதிகளவில் சாகுபடி செய்ய முன்வருவார்கள். அதன் மூலம் தமிழ்நாட்டு விவசாயிகளின் வருமானம் உயரும் என வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசுச் செயலர் அவர்கள் தெரிவித்துள்ளார்கள். வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு செயலாளர்வேளாண்மை-உழவர் நலத்துறை வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9