இந்தியாவில் கடலுக்குள் கேபிள் அமைப்பதற்கு உரிமம் பெறும் கட்டமைப்பு மற்றும் ஒழுங்குபடுத்தும் நடைமுறை (Licensing Framework and Regulatory Mechanism for Submarine Cable Landing in India) குறித்த பரிந்துரைகளை இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் [Telecom Regulatory Authority of India (TRAI)] 20.06.2023 அன்று வெளியிட்டுள்ளது. அதிவேகமாக வளர்ந்து வரும் உலகளாவிய பொருளாதாரத்தின் டிஜிட்டல் தொடர்பு கட்டமைப்புக்கு கடலுக்குள் கேபிள்கள் அமைப்பது மிகவும் முக்கியமானதாகும். நாட்டின் தகவல் தொடர்பு மையம் உருவாக்குதல், வணிகம் மற்றும் பொருளாதார செயல்பாடுகளுக்கு ஊக்கமளித்தல் ஆகியவற்றுக்கும் இது முக்கியமானதாகும். பல நாடுகளின் கடற்பகுதியில் இத்தகைய கேபிள்கள் அமைப்பது மக்களை இணைப்பதோடு உலகம் முழுவதும் உள்ள வணிகங்களையும் இணைக்க உதவுகிறது. ‘இந்தியாவில் கடலுக்குள் கேபிள் அமைப்பதற்கு உரிமம் பெறும் கட்டமைப்பு மற்றும் ஒழுங்குபடுத்தும் நடைமுறை’ குறித்த பரிந்துரைகளை அளிக்குமாறு 2022 ஆகஸ்ட் 12 தேதியிட்ட கடிதம் தொலைத்தகவல் துறையிலிருந்து இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்திற்கு வரப்பெற்றது. இந்தியாவில் கடலுக்குள் கேபிள் அமைப்பதற்கும், பராமரிப்பதற்கும் இந்தியாவில் உள்ள சர்வதேச தொலைதூர ஆப்ரேட்டர்களிடம் இத்தகைய உரிமம் இல்லை என்ற கவலை தொலைத்தொடர்பு துறையால் எழுப்பப்பட்டது. இதையடுத்து இத்தகைய உரிமங்கள் வழங்குவதற்கும், கடலுக்குள் அமைக்கப்படும் கேபிளுக்கான நிலையத்தை அமைப்பதற்கும் பரிந்துரை கோரப்பட்டது. இதுதவிர இந்திய கொடிகளைத் தாங்கிய கப்பல்கள் கடலுக்குள் கேபிள் அமைப்பை செயல்படுத்துவது மற்றும் பராமரிப்பது அவசியமாகியுள்ளது. இந்தியாவின் கடலோரப்பகுதியில் 2-க்கும் மேற்பட்ட நகரங்களுக்கிடையே கடலுக்குள் கேபிள் அமைப்பதற்கான ஒப்புதலும் தேவைப்பட்டது. பல்வேறு கேபிள் அமைப்பு நிலையங்களுக்கிடையே தரைவழியான தொடர்பு குறித்தும் தெளிவு அவசியமானது. இவற்றுக்கான பரிந்துரைகள் தேவைப்பட்ட நிலையில் இது தொடர்பான கருத்துக்கேட்பு அறிக்கை வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து காணொலிக்காட்சி மூலம் விவாதமும் நடத்தப்பட்டது. இவற்றில் கிடைக்கப்பெற்ற கருத்துக்கள் அடிப்படையில் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் இறுதி செய்து வெளியிட்டுள்ள பரிந்துரைகளை www.trai.gov.in இணைப்பில் காணலாம். இவற்றின் மீது விளக்கம் பெறவோ, கூடுதல் தகவல் பெறவோ இந்த ஆணையத்தின் ஆலோசகர் திரு சஞ்சீவ் குமார் ஷர்மாவை+91-11-23236119 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். ஆதாரம்: பத்திரிகை தகவல் மையம்