ஒரு வாரம், ஒரு ஆய்வகம் (One Week One Lab Campaign) என்ற தேசிய அளவிலான இயக்கம் நாடு முழுவதும் இந்திய அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சிக் கவுன்சிலால் [Council of Scientific & Industrial Research (CSIR)] அதன் 37 ஆய்வகங்களில் நடத்தப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக சென்னையில் உள்ள கட்டமைப்பு பொறியியல் ஆய்வு மையத்தில் [CSIR-Structural Engineering Research Centre (CSIR-SERC)] இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 2023, ஜூன் 5-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை நடைபெறும் இந்த இயக்கம் சிஎஸ்ஐஆர் - எஸ்இஆர்சி-யின் நிறுவன தினமான ஜூன் 10-ம் தேதி நிறைவடைகிறது. சமூக இணைப்பு மாணவர் இணைப்பு, பொதுமக்கள் இணைப்பு, தொழில்முனைவோர் இணைப்பு போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு இதில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒரு வாரம், ஒரு ஆய்வகம் இயக்கத்தின் மூன்றாம் நாளான 07.06.2023 அன்று மாணவர் இணைப்பு (Student Connect) இயக்கத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 18 அரசு பள்ளிகளிலிருந்து 18 ஆசிரியர்களும், 54 மாணவர்களும் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பேசிய சிஎஸ்ஐஆர் - எஸ்இஆர்சி-யின் முதன்மை விஞ்ஞானி டாக்டர் எஸ். மகேஸ்வரன், இந்த மாணவர் இணைப்பு நிகழ்ச்சிக் குறித்து எடுத்துரைத்தார். இந்நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் என். ஆனந்தவள்ளி பேசுகையில், மாணவர்கள் அனைத்தையும் ஆர்வத்துடன் கற்க வேண்டும் என்றும் புரிந்துகொண்டு அனுபவித்து கல்வி கற்க வேண்டும் என்றும் கூறினார். அறிவியல் தொடர்பாகவும், கட்டுமானப் பொறியியலின் முக்கியத்துவம் குறித்தும் அவர் எடுத்துரைத்தார். பிற்பகலில் இரு அமர்வுகள் நடைபெற்றன. அதைத் தொடர்ந்து வளரும் விஞ்ஞானிகள் விருது காஞ்சிபுரம் மாவட்டம் அவலூர் உயர்நிலைப் பள்ளிக் குழுவுக்கு வழங்கப்பட்டது. ஆதாரம்: பத்திரிகை தகவல் மையம்