கொவிட்-19 பெருந்தொற்றுக்கு எதிராகப் போராடுவதற்காக, தாமிரத்தை அடிப்படையாகக் கொண்ட நானோ துகள்கள் பூசப்பட்ட வைரஸ் எதிர்ப்பு முகக்கவசத்தை இந்திய விஞ்ஞானிகள் குழு, தொழில்துறை கூட்டாளருடன் இணைந்து உருவாக்கியுள்ளது. கொவிட்-19 வைரஸ், பல்வேறு இதர வைரஸ் மற்றும் பாக்டீரியா தொற்றுகளுக்கு எதிராக உயர் செயல்திறனை இந்த முகக்கவசம் கொண்டுள்ளது. மக்கும் திறன் கொண்ட இந்த முகக்கவசம், நல்ல முறையில் சுவாசிப்பதற்கான வசதியைக் கொண்டது மற்றும் சலவை செய்து மீண்டும் பயன்படுத்தக்கூடியது. இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையின் தன்னாட்சி பெற்ற ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான பவுடர் மெட்டலர்ஜி மற்றும் புதிய பொருட்களுக்கான சர்வதேச முன்னேறிய ஆய்வு மையத்தைச் (ஏஆர்சிஐ) சேர்ந்த விஞ்ஞானிகள், செல்லுலார் மற்றும் மூலக்கூறு உயிரியல் மையம் மற்றும் ரெசில் கெமிக்கல்ஸ் ஆகியவற்றுடன் இணைந்து இந்த முகக்கவசத்தை உருவாக்கியுள்ளனர். கொவிட்-19 பெருந்தொற்றை எதிர்த்துப் போராடுவதற்கான அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் நானோ-மிஷன் திட்டத்தின் கீழ் கிருமிநாசினித் திறனுடன் கூடிய, மக்கும் முகக்கவசங்களை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். டாக்டர் டாடா என் ராவ், டாக்டர் கலியாண் ஹேம்பிரம் மற்றும் டாக்டர் புலுசு வி சாராதா ஆகியோர் இதன் பங்களிப்பாளர்கள் ஆவர். கூடுதல் தகவல்களுக்கு, tata@arci.res.in, director@arci.res.in ஆகிய மின்னஞ்சல் முகவரிகளை அணுகலாம். ஆதாரம்: பத்திரிக்கை தகவல் அலுவலகம்