ஜி-20 தலைமைப் பொறுப்பை ஏற்ற பிறகு, இந்தியா செயற்கை நுண்ணறிவுக்கான உலகளாவிய கூட்டாண்மையின் [Global Partnership on AI (GPAI)] தலைமைப் பொறுப்பை ஏற்க உள்ளது. இந்த சர்வதேச கூட்டாண்மையின் தலைமைப் பொறுப்பு, மனிதகுல மேம்பாட்டிற்காகவும், செயற்கை நுண்ணறிவு சார்ந்த தொழில்நுட்ப செயல்பாட்டினை ஊக்குவிப்பதற்காகவும் பயன்படும். செயற்கை நுண்ணறிவுத் துறை மூலம் வரும் 2035 ஆம் ஆண்டில் இந்தியப் பொருளாதாரத்திற்கு 967 பில்லியன் டாலர்களையும், 2025 ஆம் ஆண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 450-500 பில்லியன் டாலர்களையும் சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது, இது நாட்டின் 5 டிரில்லியன் அமெரிக்க டாலர் மொத்த உள்நாட்டு உற்பத்தி இலக்கில் 10 சதவீதமாகும். இந்த கூட்டாண்மை என்பது அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பிய ஒன்றியம், ஆஸ்திரேலியா, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, நியூசிலாந்து, கொரியா குடியரசு மற்றும் சிங்கப்பூர் உட்பட 25 உறுப்பு நாடுகளின் சபையாகும். இந்தியா 2020 ஆம் ஆண்டில் இந்தக் குழுவில் உறுப்பினராக சேர்ந்தது. டோக்கியோவில் நவம்பர் 21, 2022 அன்று நடைபெறும் அந்தக் குழு கூட்டத்தில் மத்திய மின்னணு, தகவல் தொழில்நுட்பம், திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவுக்கான இணை அமைச்சர் திரு. ராஜீவ் சந்திரசேகர் கலந்து கொள்கிறார். மேலும், அவர் தற்போது அந்தக் குழுவின் தலைமைப்பொறுப்பில் உள்ள பிரான்சிடம் இருந்து அடையாளப்பூர்வமாக பொறுப்பை ஏற்கிறார். கவுன்சில் தலைமைக்கான தேர்தலில், இந்தியா மூன்றில் இரண்டு பங்கு முதல் முன்னுரிமை வாக்குகளைப் பெற்றிருந்தது, அதே நேரத்தில் கனடாவும் அமெரிக்காவும் அடுத்த இரண்டு சிறந்த இடங்களைப் பெற்று இருந்தது. ஆதாரம்: பத்திரிக்கை தகவல் மையம்