இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள திருக்கோயில்கள் சார்பில் அர்ச்சகர், ஓதுவார், தவில் மற்றும் நாதஸ்வரம், பிரபந்த விண்ணப்பர், வேத ஆகம பாடசாலைகள் என 15 பயிற்சிப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இப்பயிற்சிப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு உணவு, சீருடை, உறைவிட வசதிகளுடன் கட்டணமில்லாமல் பயிற்சியும், ஊக்கத் தொகையாக மாதம் ஒன்றுக்கு ரூ. 3000 மற்றும் பகுதி நேரத்தில் பயிலும் மாணவர்களுக்கு மாத ஊக்கதொகை ரூ. 1500 வழங்கப்பட்டு வருகிறது. முன்னாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, ஜூன் 2023 முதல் திருக்கோயில்கள் சார்பில் நடத்தப்படும் அனைத்துப் பயிற்சி பள்ளிகளில் பயிலும் முழு நேர பயிற்சி மாணவர்களுக்கு பயிற்சி காலத்தில் தற்போது மாதந்தோறும் வழங்கப்பட்டு வரும் ஊக்கத் தொகை ரூ. 3000-லிருந்து ரூ. 4000 ஆகவும், பகுதி நேர பயிற்சிப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கான ஊக்கத் தொகை ரூ. 1500-லிருந்து ரூ. 2000 ஆகவும் உயர்த்தி வழங்க 26.07.2023 அன்று அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9