மத்திய ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகத்தின் (Ministry of Chemicals and Fertilizers) கீழ் செயல்படும் மருந்துகள் துறை (Department of Pharmaceuticals) புதுப்பிக்கப்பட்ட மருந்துத் தொழில்நுட்ப மேம்பாட்டு உதவித் திட்டத்தை (Pharmaceuticals Technology Upgradation Assistance Scheme) அறிவித்துள்ளது. மருந்துத் தொழில்துறையின் தொழில்நுட்பத் திறன்களை மேம்படுத்தவும், உலகளாவிய தரநிலைகளை உறுதி செய்யவும் அரசு மேற்கொள்ளும் குறிப்பிடத்தக்க முயற்சிகளில் இதுவும் ஒன்றாகும். சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறையால் 28/12/2023 அன்று வெளியிடப்பட்ட மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் விதியின் திருத்தப்பட்ட அட்டவணையின் அடிப்படையில் திருத்தப்பட்ட திட்டத்திற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இது நம் நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மருந்துப் பொருட்களின் தரம் மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துகிறது. திருத்தப்பட்ட திட்டத்தின் முக்கிய அம்சங்கள் விரிவுபடுத்தப்பட்ட தகுதி வரம்பு: அனைவரையும் உள்ளடக்கிய அணுகுமுறையைப் பிரதிபலிக்கும் வகையில், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. இது உயர்தர உற்பத்தித் தரத்தை அடைவதில் சிறிய நிறுவனங்ளை ஊக்குவிக்கிறது. நெகிழ்ச்சித் தன்மையுடன் கூடிய நிதி வாய்ப்புகள்: இந்தத் திட்டம் மிகவும் நெகிழ்ச்சித் தன்மையுடன் கூடிய நிதித் திட்டங்களை அறிமுகப்படுத்துகிறது. புதிய தரநிலைகளுக்கு ஏற்ற விரிவான ஆதரவு: திருத்தப்பட்ட அட்டவணை மற்றும் தரநிலைகளுக்கு ஏற்ப, இந்தத் திட்டம் இப்போது பரந்த அளவிலான தொழில்நுட்ப மேம்பாடுகளை ஆதரிக்கிறது. ஊக்கத் தொகை முறை: கடந்த மூன்று ஆண்டுகளில் குறிப்பிட்ட அளவு சராசரி விற்றுமுதல் கொண்ட மருந்து உற்பத்தி நிறுவனங்கள் அதிகபட்சமாக ரூ. 1 கோடி வரை ஊக்கத்தொகை பெறத் தகுதி பெறும். ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கு இன்றியமையாததாக விளங்கும் மருந்துத் தொழிலுக்கு ஆதரவளிப்பதற்கான அரசின் உறுதிப்பாட்டை இந்த புதுப்பிக்கப்பட்ட திட்டம் எடுத்துக் காட்டுகிறது. ஆதாரம்: பத்திரிகை தகவல் மையம்