பாரத் கௌரவ் டீலக்ஸ் குளிர்சாதன பயணிகள் ரயில் மூலம் வடகிழக்கு மாநிலங்களுக்கு பிரத்தியேக பயணம் மேற்கொள்ளும் "வடகிழக்கை கண்டறிதல்: குவஹாத்திக்கும் அப்பால்" (North East Discovery: Beyond Guwahati) என்ற சேவையை வழங்க இந்திய ரயில்வே முடிவு செய்துள்ளது. மார்ச் 21, 2023 அன்று தில்லி சாஃப்தார்ஜங் ரயில் நிலையத்திலிருந்து (Delhi Safdarjung Railway Station) புறப்படும் இந்த ரயில், அசாமின் குவஹாத்தி, சிவசாகர், ஜார்ஹட் மற்றும் காசிரங்கா, திரிபுராவின் உனகோடி, அகர்தலா மற்றும் உதய்பூர், நாகாலாந்தின் திம்மாப்பூர் மற்றும் கொஹிமா, மேகாலயாவின் ஷில்லாங் மற்றும் சிரபுஞ்சி ஆகிய பகுதிகளுக்குச் செல்லும். 14 இரவுகள் மற்றும் 15 நாட்கள் பயணிக்கும் இந்த ரயிலில் ஏராளமான வியக்கத்தக்க அம்சங்கள் இடம்பெற்றுள்ள. இரண்டு உணவகங்கள், உணரி அடிப்படையிலான கழிவறை வசதிகள், சிறிய நூலகம், பழமை வாய்ந்த சமையலறை, குளியலறை உள்ளிட்டவை இதில் அடங்கும். இவை தவிர கண்காணிப்பு கேமராக்கள், மின்னணு பாதுகாப்புப் பெட்டகங்கள், ஒவ்வொரு பெட்டிக்கும் பிரத்யேக காவலர்கள் போன்ற மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு வசதிகளும் இந்த ரயிலில் உள்ளன. ‘ஒரே பாரதம்-உன்னத பாரதம்' (Ek Bharat Shrestha Bharat) மற்றும் ‘எங்கள் தேசத்தைப் காணுங்கள்’ (Dekho Apna Desh) ஆகிய இந்திய அரசின் முன்முயற்சிகளுக்கு இணங்க உள்ளூர் சுற்றுலாவை ஊக்குவிப்பதற்காக பாரத் கௌரவ் பயணிகள் ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இந்த ரயிலில் பயணிக்க நபர் ஒருவருக்கு ரூ. 1,06,990 முதல் ரூ. 1,49,290 வரை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. கூடுதல் விவரங்களுக்கு https://www.irctctourism.com/ என்ற இணையதளத்தைத் தொடர்பு கொண்டு முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் இந்த சுற்றுலா பயணத்திற்கு முன்பதிவு செய்து கொள்ளலாம். ஆதாரம்: பத்திரிக்கை தகவல் மையம்