மாணவர்களுக்கு திருக்குறள் இலக்கியங்கள் அனைத்திலும் சிறந்ததும் உன்னதமானதும், மனித குலம் அனைத்திற்குமாக உதித்த மேலானதும் ஆகிய தன்னிகரற்ற படைப்பு திருக்குறள். அத்தகைய சிறப்புமிக்க பொதுமறை எனப் போற்றப்படும் அறக்கருத்துக்களடங்கிய திருக்குறட்பாக்களின் மாண்பை வருங்கால மாணவர்கள் இளம் வயதிலேயே முற்றோதல் செய்தால், அவை பசுமரத்தாணி போல் பதிந்து, நெஞ்சில் நிலைத்து அவர்களது வாழ்க்கைக்கு வழிகாட்டும். தமிழ்நாடு அரசு திருக்குறள் முற்றோதல் திட்டம் தாம் பெறுகின்ற கல்வியறிவோடு, அறநெறி ஆற்றலை தன்னகத்தே பெற்று நல்லொழுக்கம் மிக்கவர்களாக மாணவர்களை உருவாக்கிட வேண்டும் என்ற உன்னதமான நோக்கில் தமிழ்நாடு அரசு திருக்குறள் முற்றோதல் திட்டத்தை ஆண்டுதோறும் செயற்படுத்தி வருகிறது. எனவே, திருக்குறள் முற்றோதல் செய்யும் மாணவச் செல்வங்களுக்கு பரிசு வழங்கிப் பாராட்டுவது, மாணவர்களின் நல்வாழ்வுக்குத் துணை நிற்பதாகவும், திருக்குறள் நெறி வழிவகுப்பதாகவும் அமையும். 1330 அருங்குறளையும் முழுமையாக ஒப்புவிக்கும் மாணவர்கள் அனைவருக்கும் திருக்குறள் முற்றோதல் பாராட்டுப் பரிசு தலா ரூ. 10000 வீதம் பரிசுத்தொகை, பாராட்டுச் சான்றிதழ் வழங்கி ஆண்டுதோறும் சிறப்பிக்கப் பெறுகின்றனர். திருக்குறள் முற்றோதல் பாராட்டுப் பரிசுக்கு கலந்து கொள்ளும் மாணவர்கள், திறனறி குழுவினரால் திறனாய்வு செய்து தகுதியானவர்கள் தெரிவு செய்யப் பெற்று, பரிசு பெறுவதற்கு அரசுக்குப் பரிந்துரை செய்யப் பெறுகிறார்கள். திருக்குறள் முற்றோதல் பாராட்டுப் பரிசு பெறுவதற்கான விதிமுறைகள் 1330 திருக்குறட்பாக்களையும் முழுமையாக ஒப்புவிக்கும் திறன் பெற்றவராக இருத்தல் வேண்டும். இயல் எண், பெயர், அதிகாரம் எண், பெயர், குறள் எண், பெயர் போன்றவற்றை தெரிவித்தால் அதற்குரிய திருக்குறளைக் கூறும் திறன் பெற்றவராக இருத்தல் வேண்டும். திருக்குறளின் அடைமொழிகள், திருவள்ளுவரின் சிறப்புப் பெயர்கள், திருக்குறளின் சிறப்புகள் ஆகியவற்றை அறிந்தவராக இருத்தல் வேண்டும். சென்னை மாவட்டத்தில் அமைந்துள்ள பள்ளி (அரசு / அரசு உதவி பெறும் / தனியார் / பதின்மப் பள்ளிகள்) மற்றும் கல்லூரிகளில் பயில்பவராக இருத்தல் வேண்டும். தமிழ் வளர்ச்சித் துறையால் வழங்கப்பெறும் இப்பரிசினை இதற்கு முன்னர் பெற்றவராக இருத்தல் கூடாது. திருக்குறளின் பொருளும் அறிந்திருப்பின் கூடுதல் தகுதியாகக் கருதப்பெறும். விண்ணப்பிக்கும் முறை ஒவ்வொரு ஆண்டும் திருக்குறள் முற்றோதல் போட்டியில் பங்கேற்க விரும்பும் மாணவ, மாணவியர்கள் தமிழ் வளர்ச்சித் துறையின் www.tamilvalarchithurai.tn.gov.in என்ற வலைத்தள முகவரியில் விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து நிறைவு செய்யப் பெற்ற விண்ணப்பங்களை எழும்பூர், தமிழ் வளர்ச்சி இயக்கத்திற்கு கீழ்காணும் முகவரிக்கு நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அளிக்க வேண்டும். தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர்சென்னை மாவட்டம்தமிழ் வளர்ச்சி வளாகம், முதல் தளம்தமிழ்ச்சாலை, எழும்பூர், சென்னை-8 மேலும் விவரங்களுக்கு 044-28190448, 044-28190412, 044-28190413 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம்.