<div id="MiddleColumn_internal"> <h3><strong>நோக்கம்</strong></h3> <p style="text-align: justify;">கிராமப்புறங்களிலிருந்து நகரங்களுக்கு மக்கள் இடம் பெயரும் வேகம் அதிகரித்து வருகிறது. மேம்பட்ட வாழ்க்கைத் தரத்தைப் பெற விழையும் புதிய மத்திய தர வகுப்பினர் இப்பொழுது உருவாகி வருகிறார்கள். எண்ணிக்கையில் அதிகரித்து வரும் இம்மக்கள் அமைதியாக வாழ வகை செய்யும் புதிய நகரங்கள் உருவாக்கப்படாவிட்டால் இப்பொழுதுள்ள நகரங்களில் ஏற்படும் இட நெருக்கடியில் அவை வாழத் தகுதியற்ற இடங்களாகி விடும். இதைக் கருத்தில் கொண்டு தான், இப்பொழுதுள்ள பெரு நகரங்களுக்குத் துணை நகரங்களை உருவாக்கவும் இடைநிலை நகரங்களை நவீனப்படுத்தவும் வழி வகுக்கும் “ஸ்மார்ட் நகரங்கள்” என்றழைக்கப்படும் 100 சிறப்பு நவீன நகரங்களை அமைக்கும் <span style="text-align: justify;">தொலைநோக்குத் திட்டமொன்றில் பிரதமர் ஈடுபாடு கொண்டுள்ளார். </span></p> <p style="text-align: justify;">உலக மக்கள் தொகை அதிகரித்து வரும் பின்னணியில், அதிக எண்ணிக்கையிலான மக்கள் நகரங்கள் நோக்கி நகர்ந்து வருகிறார்கள். அடுத்த 35 ஆண்டுகளில் உலகளவில் நகரங்களில் வாழபவர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகும் என்று ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. உலகளவில் அதிகரித்து வரும் நகர மக்களின் எண்ணிக்கையில 90 சதவீதத்தினர் வளரும் நாடுகளில் இருப்பதாகக் கூறும் இந்த அறிக்கை, மொத்த உள் நாட்டு வளர்ச்சியில் நகர்ப்புறங்களின் பங்களிப்பு கணிசமான அளவு இருப்பதை சுட்டிக் காட்டுகிறது. இந்தியாவில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 60 சதவீதத்தை நகர்புற மக்கள் அளிப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. எனவே தான், நகரங்கள் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் கருவிகள் என்று குறிப்பிடப்படுகிறது. இதனால் தான் நகரங்களை மேம்படுத்த வழி வகுக்கும் ஸ்மார்ட் நகரங்கள் என்ற சிறப்புத் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தி உள்ளது.</p> <p style="text-align: justify;">“கிராமப் புறங்களிலிருந்து நகரங்களுக்கு மக்கள் இடம் பெயரும் வேகம் அதிகரித்து வருகிறது. புதியதாக உருவாகி வரும் மத்திய தர பிரிவினர் மேம்பட்ட வாழ்க்கைத் தரத்தை பெற விழைகிறார்கள். அதிகரித்து வரும் இத்தகைய மக்களுக்கு இடமளிக்கும் வகையில், புதிய நகரங்களை உருவாக்காவிட்டால் இப்பொழுதுள்ள நகரங்கள் வாழத் தகுதி அற்ற இடங்களாக மாறி விடும். எனவே, இப்பொழுதுள்ள பெரிய நகரங்களுக்குத் துணை நகரங்களாக 100 ஸ்மார்ட் நகரங்களை உருவாக்கவும் இடைநிலை நகரங்களை மேம்படுத்தவும் வகை செய்யும் தொலைநோக்குத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.</p> <h3><strong>பின்னணி</strong><strong> </strong></h3> <p style="text-align: justify;">இந்தியாவில் 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 121.02 கோடியாகும். இவர்களில் 37.71 கோடி பேர் நகர்ப்புறங்களில் வாழுகிறார்கள். இது மொத்த மக்கள் தொகையில் 31.6 சதவீதமாகும். 2001 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், நகர்ப்புற மக்கள் தொகை 3.35 சதவீதம் அதிகரித்துள்ளது என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றன. நகர்ப்புறங்களின் எண்ணிக்கை 2774 ஆக உயர்ந்துள்ளது. 10 லட்சத்திற்கும் கூடுதலான மக்கள் தொகை கொண்ட நகரங்களின் எண்ணிக்கையை 2001 ஆம் ஆண்டு கணக்கெடுப்புடன் ஒப்பிடுகையில் 35லிருந்து 53ஆக உயர்ந்துள்ளது.</p> <p style="text-align: justify;">பெரிய மாநிலங்களில் நகர்ப்புற வளர்ச்சியில் தமிழ்நாடு தொடர்ந்து முன்னணியில் இருந்து வருகிறது. இம்மாநிலத்தில் 48.4 சதவீத மக்கள் நகர்ப்புறங்களில் வசித்து வருகிறார்கள். இதையடுத்து கேரளம் 47.7 சதவீத நகர்ப்புற மக்களுடன் இரண்டாவது இடத்திலும் 45.2 சதவீத நகர்ப்புற மக்களுடன் மஹாராஷ்டிரா மூன்றாவது இடத்திலும் உள்ளன.</p> <h3 style="text-align: justify;"><strong>'அம்ருத்</strong><strong> </strong><strong>திட்டம்</strong><strong>‘ </strong><strong>விளக்கம்</strong></h3> <ul> <li style="text-align: justify;">இதன் அடிப்படையில் நகர்புறங்களின் சூழலை மேம்படுத்துவதுடன் அவற்றை பொருளாதார வளர்ச்சி மையங்களாக உருவாக்கும் நோக்கத்துடன் இப்பொழுதுள்ள நகர்புறங்களின் வடிவமைப்பை மாற்றி அமைப்பதும் அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய புதிய நகரங்களை அமைக்கும் இரு திட்டங்களுக்கு மத்திய அமைச்சகமும் அண்மையில் ஒப்புதல் வழங்கியது. அடுத்த 5 ஆண்டுகளில் சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாய் முதலீட்டில் நகர்ப்புறங்களை மேம்படுத்துவதற்காக இந்த இரண்டு இயக்கங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளன. சீரமைப்பு மற்றும் புத்தொளிக்கான அதல் இயக்கம் என்பதே அம்ருத் திட்டத்தின் விளக்கமாகும்.</li> <li style="text-align: justify;">இந்த இரண்டு திட்டங்களும் ஒன்றுடன் ஒன்று இணைந்தவை ஆகும். திட்ட அணுகுமுறையில் அம்ருத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. நகர்புறங்களில் குடிநீர் தேவை, வடிகால் வசதி, திடக் கழிவு மேலாண்மை, போக்குவரத்து போன்ற சேவைகளுக்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை இத்திட்டம் உறுதி செய்கிறது.</li> <li style="text-align: justify;">இயக்க ரீதியில் நடைமுறைப்படுத்தப்படும் இந்தத் திட்டம் நகர்ப்புற சீரமைப்புடன் இணைக்கப்பட்டதாகும். கணிணி வழி ஆளுமை, தொழில் பயிற்சி பெற்ற உள்ளாட்சி அலுவலர்கள், கட்டிடங்களுக்கான விதிமுறைகளை மறு ஆய்வு செய்தல், உள்ளாட்சி அமைப்புகளுக்கு செலுத்தப்படவேண்டிய வரி வசூலில் மேம்பாடு, எரிசக்தி மற்றும் நீர் பயன்பாடு தணிக்கை, மக்கள் நலன் அடிப்படையில் திட்டமிடுதல் போன்றவை இந்தப் பணிகளில் அடங்கும்.</li> <li style="text-align: justify;">10 லட்சம் வரை மக்கள் தொகை கொண்ட நகரங்களின் திட்டச் செலவில் 50 சதவீதம் வரையிலும், 10 லட்சத்திற்கும் கூடுதலான மக்கள் தொகை கொண்ட பெரிய நகரங்களின் திட்டச் செலவில் மூன்றில் ஒரு பகுதியும் மத்திய அரசு உதவியாக வழங்கப்படும்.</li> <li style="text-align: justify;">இந்த உதவித் தொகை 3 தவணைகளாக எட்டப்பட்ட குறியளவுகளின் அடிப்படையில் அளிக்கப்படும். இந்தத் தொகை 20:40:40 என்ற விகிதத்தில் பகிர்ந்து அளிக்கப்படும். சிறிய மற்றும் பெரிய நகரங்கள் நாளடைவில் ஸ்மார்ட் நகரங்களாக உருவெடுக்க அம்ருத் இயக்கம் வழி வகுக்கிறது. சீர்திருத்த நடவடிக்கைகளை சிறந்த முறையில் நடைமுறைப்படுத்தும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு பட்ஜெட் ஒதுக்கீட்டில் 10 சதவீதம் ஊக்குவிப்பாக வழங்க இத்திட்டத்தில் இடமுண்டு. ஒரு லட்சம் அல்லது அதற்கு மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட 500 நகர்ப்புறங்களில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். கண்டறியப்பட்ட நகரங்களின் தேவைகளின் அடிப்படையில் திட்டங்களை வரைவதில் நடைமுறைப்படுத்துதல் மற்றும் கண்காணிப்பில் மாநிலங்கள் நீக்குப் போக்கு முறைகளைக் கடைபிடித்தல் ஆகியவற்றிற்கு இந்த இயக்கம் இடமளிக்கிறது.</li> </ul> <h3 style="text-align: justify;"><strong>திட்டச்</strong><strong> </strong><strong>செலவும்</strong><strong> </strong><strong>பணிகளும்</strong><strong> </strong></h3> <p style="text-align: justify;">நகர்ப்புற மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதே இந்தத் திட்டத்தின் குறிக்கோள் ஆகும். அனைவருக்கும் இந்த வசதிகள் கிடைக்க வகை செய்யப்பட்டாலும், எளிய மற்றும் வாய்ப்பு வசதிகள் அற்ற நலிந்த பிரிவினர்களின் நலன்களைக் கருத்தில் கொள்ளுவது முன்னுரிமைப் பணியாக இருக்கும். இப்பணிகளை மேற்கொள்ளுவதற்கு அடுத்த 20 ஆண்டுகளுக்குத் தேவைப்படும் நிதி ஆதாரம் ரூ. 39.2 லட்சம் கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ளது. நகர்ப்புறங்களில் சாலை மேம்பாட்டிற்கு 44 சதவீத முதலீடு தேவைப்படுகிறது. வடிகால் மற்றும் குடிநீர் வசதி திடக் கழிவு மேலாண்மை, மழை நீர் வடிகால், தெரு விளக்குகள் போன்ற பணிகளுக்கென 20 சதவீதமும், போக்குவரத்துச் சம்பந்தப்பட்ட கட்டமைப்பு மற்றும் சாலைப் போக்குவரத்து வாகனங்கள் போன்றவற்றிற்கு 14 சதவீதமும் முதலீடுகள் தேவைப்படுவதாக கணக்கிடப்பட்டுள்ளன. குடிசைப் பகுதிகள் மேம்பாட்டுப் பணிகள் உள்ளிட்ட நகரச் சீரமைப்பிற்கு 10.5 சதவீத முதலீடும், நகர்ப்புற ஆளுமைத் திறன் மேம்பாட்டுப் பயிற்சிக்கென 2.5 சதவீத முதலீடும், தேவைப்படுகின்றன.</p> <p style="text-align: justify;">எனவே, நகர்ப்புற மேம்பாட்டுப் பணிகளுக்கென தேவைப்படும் மொத்த முதலீட்டில், பல்வேறு தலைப்புகளில் தேவைப்படும் தொகைகளை பின் வருமாறு வகைப்படுத்தலாம்:</p> <p style="text-align: justify;">நகர்ப்புறங்களில் சாலை <span style="text-align: justify;">வசதிகளை மேம்படுத்த ரூ. 17.3 லட்சம் கோடியும், குடிநீர் மற்றும் வடிகால் வசதி, திடக் கழிவு மேலாண்மை, மழை நீர் வடிகால் போன்ற சேவைகளை மேற்கொள்ள ரூ. 8 லட்சம் கோடியும் தேவைப்படும் என்பது இக்குழுவின் மதிப்பீடு ஆகும். இது தவிர இயக்கம் மற்றும் பராமரிப்பு பணிகளுக்கென ரூ. 19.9 லட்சம் கோடி தேவைப்படும் என்றும் இக்குழு கூறியுள்ளது. நகர்ப்புற சீரமைப்பிற்காக தேவைப்படும் இவ்வளவு பெரிய தொகையை மத்திய மாநில மற்றும் உள்ளாட்சி அமைப்புக்களின் பட்ஜெட் ஒதுக்கீடுகளிலிருந்து சமாளிக்க இயலாது. எனவே, இவற்றிற்கான நிதி ஆதாரங்களைத் தீட்ட வேண்டிய கட்டாயம் எழுகிறது. மேலும், நகர்ப்புற மேம்பாட்டு செயல்பாடுகளில் தனியார் துறைகளின் பங்களிப்பை ஊக்குவிக்க வேண்டியது கொள்கை ரீதியில் அவசியமாகிறது. </span></p> <p style="text-align: justify;">அம்ருத் இயக்கத்தின் முக்கிய கூறுகள் நகரங்களை சீரமைக்கவும், அவற்றை மேம்படுத்தி பொலிவு பெறும் வகையில், மாற்றி அமைக்கவும் வழி வகுக்கும் அம்ருத் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குடியிருப்பிற்கும் குழாய் இணைப்பு ஏற்படுத்துவது உறுதி செய்யப்படும். குழாய் வழி குடிநீர் விநியோகத்திற்கும் வடிகால் வசதிக்கும் வழி வகுக்கும் இந்த இயக்கம் நகரங்களில் வசதிகளை மேம்படுத்துவதற்கும் முக்கியத்துவம் அளிக்கிறது. நகரங்களின் பசுமைப் பகுதியை அதிகரிக்கவும், பூங்காக்கள் போன்ற திறந்த வெளிகளை பராமரிக்கவும், மாசுபடுதலை குறைக்கவும், தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள இத்திட்டம் இடமளிக்கிறது. பொது போக்குவரத்து வசதியை மேம்படுத்துதல், நடைபயணம், சைக்கிள் சவாரி போன்றவற்றிற்கான வசதிகளை விரிவுபடுத்துதல் போன்ற பணிகளும் இத்திட்டத்தில் அடங்கும். இத்தகைய வசதிகளை பொது மக்கள், குறிப்பாக மகளிர் மதிப்பீடு செய்வர். மேலும், உள்ளாட்சி அமைப்புகளை ஏற்பதையும் உறுதி செய்கிறது. திறன் மேம்பாட்டுப் பணிகள் அலுவலர்கள் அதிகாரம் பெறவும், திட்டங்களைக் குறித்த காலத்தில் நிறைவு செய்யவும் வழிவகுக்கின்றன.</p> <h3 style="text-align: justify;">சிறப்பு</h3> <p style="text-align: justify;">அம்ருத் திட்டத்தின் கீழான பணிகள் முந்தைய ஜவஹர்லால் நேரு நகரச் சீரமைப்பு நடைமுறைகளிலிருந்து எவ்வாறு மாறுபட்டது என்ற ஐயப்பாடு எழலாம். அம்ருத் திட்டம் இந்த நடைமுறையை மாற்றி அமைக்கிறது. இதன்படி, மாநில அரசுகளின் ஆண்டு செயல் திட்டத்திற்கு மத்திய அமைச்சகம் ஆண்டுக்கு ஒரு முறை ஒப்புதல் வழங்கும். எல்லா நகர்புறத் திட்டங்களும், நகர்ப்புற மேம்பாட்டிற்கான திட்டங்களை வரைவதிலும் நடைமுறைப்படுத்துவதிலும், மாநிலங்கள் சம பங்களிப்பை அளிக்க அம்ருத் திட்டம் வகை செய்கிறது. இதனால், மத்திய அரசின், ‘கூட்டுறவு முறையிலான ஒன்றிய அமைப்பு’ என்ற உணர்வு செயல் வடிவம் பெறுகிறது. பெருகி வரும் நகர்ப்புறங்களால் எழும் சவால்களை எதிர் கொள்ளத்தக்க வகையில் ‘ஸ்மார்ட் நகரங்கள் மற்றும் அம்ருத் இயக்கங்கள் வடிவமைக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கதாகும். இவற்றின் கீழான செயல்பாடுகள் தொடர் நடவடிக்கைகளாக அமைவதுடன், நகர்ப்புற வளர்ச்சியின் பயன்பாடுகள் எளிய மக்களைச் சென்று அடைவதை உறுதி செய்வதற்கு இயக்கங்களின் குறிக்கோள்கள் ஆகும். இதற்கு ஏற்ற வகையிலான பங்களிப்பிற்கும் மேம்பட்ட வேலைவாய்ப்பிற்கும் இத்திட்டம் வழி வகுக்கின்றன.</p> <p style="text-align: justify;">ஆதாரம்: திட்டம் மாத இதழ்</p> </div>