இசுலாமிய சமூகத்தில் உள்ள பொருளாதாரத்தில் நலிவடைந்த குடும்பங்களைச் சேர்ந்த பள்ளி/கல்லூரி மாணவிகள் படிப்பை இடை நிறுத்தம் செய்யாமல் தொடர்ந்து கற்க இத்திட்டம் தமிழக அரசால் 2008–2009 ஆம் ஆண்டில் சட்டப் பேரவையில் மானியக் கோரிக்கையின் போது அறிவிக்கப்பட்டு அதே ஆண்டில் துவங்கப்பட்டு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இத்திட்டத்தின் நோக்கம் என்ன ? மாணவியர்கள் அவர்களது வீட்டிலிருந்து கல்வி நிலையம் மிகுந்த தொலைவில் இருப்பின் படிப்பை இதன் காரணமாக இடை நிறுத்தம் செய்து விடாமல் இருக்க இவர்கள் தங்கி கல்வி பயில இந்த மாணவியர் இல்லங்கள் துவங்கப்பட்டன. இந்த மாணவியர் விடுதிகள் / இல்லங்கள் எங்கெங்கு செயல்படுகின்றது ? இத்திட்டத்தின் முதற்கட்டமாக இசுலாமிய சமூகத்தினர் அதிகம் வசிக்கும் பகுதிகளைக் கொண்ட கீழ்க்கண்ட 5 மாவட்டங்களில் துவங்கப்பட்டுள்ளது. வ. எண். மாணவியர் இல்லம் அமைந்துள்ள இடம் கட்டிடத்தின் தன்மை 1. வேலூர் வாணியம்பாடி தனியார் கட்டிடம் 2. கோயம்புத்தூர் சுந்தரபுரம் தனியார் 3. திருச்சி வைகுண்டகோசபுரம் அரசு கட்டிடம் 4. திண்டுக்கல் பேகம்பூர் தனியார் 5. திருநெல்வேலி பாளையங்கோட்டை தனியார் ஒவ்வொரு மாணவியர் இல்லங்களிலும் எத்தனை மாணவியர்கள் தங்கலாம் ? ஒவ்வொரு மாணவியர் இல்லத்திலும் 50 மாணவியர்கள் வரை (sanctioned strength) தங்கலாம். இதில் கல்லூரி மாணவிகளுக்கு 25 இடமும், பள்ளி மாணவிகளுக்கு 25 இடமும் ஒதுக்கப்பட்டுள்ளது. இடம் அளிப்பதில் மிகுந்த தொலைவிலிருந்து வரும் மாணவியருக்கு முன்னுரிமை வழங்கப்படும். மாணவியர் தங்கும் இல்லங்களில் உள்ள வசதிகள் யாவை ? இந்த இல்லங்கள் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் இல்லங்களுக்கு நிகரான அனைத்து வசதிகளையும் கொண்டதாகும். இங்கு மாணவியர்கள் கணினிக் கல்வி பழகுவதற்காக கணினிகள் (computer) மற்றும் அச்சு இயந்திரங்கள் (printers) உள்ளன. வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி, குடிநீர் சுத்திகரிப்பு கருவி (water filter), விளையாட்டு உபகரணங்கள் மற்றும் நூலக புத்தகங்கள் அனைத்து இல்லங்களிலும் உள்ளன. இதனைத் தவிர இல்லவாசிகளின் பொது அறிவை மேம்படுத்த ஒவ்வொரு இல்லத்திற்கும் ஒரு ஆங்கில மற்றும் இரண்டு தமிழ் நாளிதழ்கள் வழங்கப்பட்டு வருகின்றது. இந்த மாணவியர் இல்லங்களில் சேர்வதற்கான தகுதிகள் எவை ? இசுலாமிய சமூகத்தைச் சேர்ந்த பொருளாதாரத்தில் நலிவடைந்த குடும்பத்தைச் சேர்ந்த மாணவியராக இருத்தல் வேண்டும். நான்காம் வகுப்பு முதல் முதுகலை வரையில் உள்ள படிப்பில் ஏதேனும் ஒரு படிப்பில் படிப்பவராக இருக்க வேண்டும். பெற்றோர்/பாதுகாவலரின் வருட வருமானம் ரூ. 1 இலட்சத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும். இல்லங்களில் தங்கும் மாணவிகளுக்கு கிடைக்கும் சலுகைகள் என்ன ? இலவச தங்கும் வசதி மற்றும் இலவச உணவு நான்காம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை பயில்பவர்களுக்கு பள்ளிகள் மூலமாக இலவச பாடப் புத்தகங்கள் வழங்கப்படுகின்றது. பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு பயிலும் மாணவிகளுக்கு அரசுப் பொதுத் தேர்வில் உயர் மதிப்பெண்கள் பெற சிறப்பு வழிகாட்டி புத்தகங்கள் வழங்கப்படுகின்றது. பத்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கு பள்ளிச் சீருடை 2 செட் (set) வழங்கப்படுகின்றது. துணிகளை சுத்தம் செய்ய சலவை சோப் வாங்குவதற்காக சலவைப்படி (washing allowance) வழங்கப்படுகின்றது. இல்லத்திலிருந்து கல்விக் கூடத்திற்கு சென்று வர இலவச சைக்கிள் வழங்கப்படுகின்றது. அனைத்து இல்லவாசிகளுக்கும் பாய் (mat) மற்றும் போர்வைகள் வழங்கப்படுகின்றது. ஆண்டிற்கு இருமுறை இல்லவாசிகள் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்படுகின்றது. இந்த இல்லங்களில் சேர விண்ணப்பிப்பது எப்படி ? மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அலுவலரிடமிருந்து இலவசமாக விண்ணப்பத்தினைப் பெற்று பூர்த்தி செய்து வருமானச் சான்றிதழ் கல்விச் சான்றிதழ் மற்றும் சாதிச் சான்றிதழ் இணைத்து அந்த அலுவலரிடமே சமர்ப்பிக்கலாம்.