<div id="MiddleColumn_internal"> <p style="text-align: justify;">இன்றைய சூழலில் நான்கு சக்கர வாகனங்களை விட இரண்டு சக்கர வாகனங்கள் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகமாகி விட்டது. இரு சக்கர வாகனத்தில் ஓரிடத்தில் இருந்து எளிதாக மற்றொரு இடத்திற்குப் போய்விட முடியும் ஆகையால். தற்போது இரு சக்கர வாகனங்கள் பெருகிவிட்ட நிலையில் இதை எவ்வாறு பாதுகாக்கலாம் என்பது பற்றிய குறிப்புகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.</p> <h3 style="text-align: justify;">இரு சக்கர வாகனத்தைப் பழுதில்லாமல் பாதுகாப்பது எப்படி?</h3> <p style="text-align: justify;">முதலில் இரு சக்கர வாகனத்தை ஓட்டும் முறையை நன்கு அறிந்து ஓட்ட வேண்டும். நமது இருசக்கர வாகனம் முடிந்தவரை ஒருவர் கைப்பட இருக்க வேண்டும். நமது இருசக்கர வாகனத்தைப் பழுதுபடச் செயபவர்கள் இரவல் வாங்கி ஓட்டுபவர்கள் தான். வாகனம் ஓட்டும் போது கிளச்சைப் பிடித்துக் கொண்டும், பிரேக்கை அழுத்திக் கொண்டும் ஓட்டக் கூடாது. அவ்வாறு ஓட்டினால் வாகனம் மிக விரைவில் பழுதாகிவிடும். வாகனத்தை ஓட்டும் போது எண்ணெய் (ஆயில்), காற்று, வாகன ஒலிக்கருவி, பெட்ரோல் இவைகள் சரியாக இருக்கிறதா? என நன்கு கவனித்து பின் ஓட்ட வேண்டும். இல்லாவிடில் இருசக்கர வாகனம் பெரும் செலவு வைக்கும். முக்கியமாக, நம் வாகனத்தை ஓட்டுவதற்கு முன்பு இரு சக்கர வாகன (ஸ்டாண்டு) தாங்கியை நன்கு எடுத்துவிட்டு ஒட்டுங்கள். இல்லாவிடில் வாகனத்திற்கும், உங்களுக்கு பெரும் சேதம் ஏற்படும். உங்கள் வாகனத்தில் ஏதாவது பழுது ஏற்பட்டு அதை இருசக்கர வாகன பழுது நீக்குபவரிடம் சென்று காட்டினால் அவர் சரி செய்துவிடுவார். வாகனத்தைச் சரி செய்த பிறகு “அவர் தான் சரி செய்துவிட்டாரே, இனி வாகனம் நன்கு ஓடும்” என நினைத்து நம் இஷ்டம் போல ஓட்டினால் மீண்டும் நம் வாகனம் பழுதாக நேரிடும். அதனால் இளம் வயதுப் பெண்ணை பெற்றோர் பாதுகாப்பது போல நம் வாகனத்தையும் பாதுகாத்து வந்தால் வாகனத்திற்கு எந்தப் பிரச்சனையும் இருக்காது.</p> <h3 style="text-align: justify;">இரு சக்கர வாகனத்திற்கு எந்த மாதிரி பிரச்சனைகள் வரும்?</h3> <p style="text-align: justify;">பலர் மண்ணெண்ணெய் ஊற்றி வைத்த குடுவைகள் மற்றும் ஒரு லிட்டர், இரண்டு லிட்டர் தண்ணீர்க் குடுவைகள் ஆகியவற்றில் பெட்ரோல் பிடித்துச் சென்று இரு சக்கர வாகனத்தில் ஊற்றுகின்றனர். குடுவையினுள் இருக்கும் சிறு அளவு மண்ணெண்ணையுடன் கலந்த பெட்ரோலை வாகனத்திற்கு ஊற்றி ஓட்டும் போது முதலில் இருசக்கர வாகனத்தின் போர் அடிபடும். பின்பு வாகனம் அதிக கம்பரசர் ஆகி ஓடாது.</p> <p style="text-align: justify;">சாலைகளில் பள்ளங்களிலோ, மேடுகளிலோ, வாகனத்தை வேகமாக இயக்கிச் செல்லும் போது நம் வாகனத்தில் ஆயில் கசிவு ஏற்படலாம். ஏன் பிரேக் பிடிக்காமலும் போகலாம். சில நேரங்களில் வாகனத்தின் சிறு பாகங்கள் உதிர்ந்து விடக்கூடும். ஆதலால் நட்டு, போல்டுகளை நன்கு இறுக்கிய நிலையில் வைத்துக் கொண்டு வாகனம் ஓட்ட வேண்டும். இன்று ஓடும் இரு சக்கர வாகனம் அனைத்தையும் 3 மாதத்திற்கு ஒரு முறை வாகனத்தைச் சுத்தப்படுத்தி சரி செய்ய வேண்டும். அவ்வாறு சரி செய்யாவிடில் கிளச் போன்ற பாகங்கள் பழுதாகும்.</p> <p style="text-align: justify;">இருசக்கர வாகனத்தை 5% பேர் மட்டும் சரியாகப் பராமரிக்கிறார்கள். மீதமுள்ள 95% பேர் ஏனோ, தானோ என்று கடமைக்கு வாகனத்தைப் பராமரிக்காமல் ஓட்டிச் செல்வதால் இவர்களாலே பல விபத்துக்கள் இன்று ஏற்படுகிறது.</p> <h3 style="text-align: justify;">இரு சக்கர வாகனத்தைப் பழுது பார்க்க வரும் போது மக்கள் எப்படி ஏமாறுகிறார்கள்?</h3> <p style="text-align: justify;">இருசக்கர வாகனம் பழுது நீக்க வரும் வாகன ஓட்டிகள் ஏமாறாமல் இருக்க வேண்டுமானால், நம் வாகனத்திற்கு என்ன பழுது என வாகன பழுது நீக்குபவரிடம் கேட்டு அறிந்து, அதற்கான உதிரிப் பாகங்கள் வாங்க நேரிட்டால், நம் பணத்தை வாகனப் பழுது நீக்குபவரிடம் கொடுக்காமல் நீங்களே அப்பொருட்களை நேரடியாகச் சென்று வாங்கிக் கொடுக்க வேண்டும். அவர்களை வாங்கவிட்டால் குறைந்த விலையில் தரமில்லாத உதிரிப் பாகங்களை வாங்கி மாட்டிவிட்டு அதில் பணத்தை மிச்சம் பண்ணிக் கொள்வர். இதனால் நீங்கள் ஏமாற நேரிடும்.</p> <p style="text-align: justify;">சில நேரங்களில் நீங்களே அவ்வாறான வாகன உதிரிப்பாகத்தை வாங்கிக் கொடுத்தால் அதில் இது சரியில்லை, அது சரியில்லை என பொய் சொல்லி உங்களை (டூவீலர் மெக்கானிக்) வாகன பழுது நீக்குபவர் அலையவிடுவர். அல்லது நீங்கள் வாங்கி வந்த உதிரிப்பாகம் சரியில்லை. ஆதலால் என்னிடம் பணம் கொடுங்கள் நல்ல தரமான பொருட்களை வாங்கிப் பொருத்துகிறேன் என்பார். அவ்வாறு கூறியது அவர்களிடம் பணம் கொடுக்கும் போது நம் வாகனத்திற்கு தரமில்லாத வாகன உதிரிப்பாகத்தை வாங்கிப் பொருத்தி விட்டு, நாம் கொடுத்த பணத்தில் கொஞ்சம் பணத்தை கையாடல் செய்து விடுவர். இந்த உதிரிப்பாகத்தைப் பற்றியோ, வாகனம், வாகனப் பழுது பற்றியோ தெரியாதவர்கள் இவர்களிடம் சென்றால், இன்னும் ஏமாற அதிக வாய்ப்பு இருக்கிறது.</p> <p style="text-align: justify;">அடுத்து இருசக்கர வாகனத்தைப் பழுது நீக்க, இருசக்கர வாகனத்தைப் பழுது நீக்குபவரிடம் நம் வாகனத்தைக் கொண்டு வரும் போது உங்களுக்கு நன்கு தெரிந்த அல்லது உங்கள் பகுதியில் அதிக ஆண்டுகளாக வாகனப் பழுது நீக்கும் இப்பணி செய்து வருபவரிடம் உங்கள் வாகனத்தைக் கொண்டு செல்லுங்கள். சாலையோரம் சிறு பெட்டிக்கடை வைத்து இருக்கும் இரு சக்கர வாகன பழுது நீக்குபவரிடம் சென்றால் நீங்கள் ஏமாற நேரிடும்.</p> <p style="text-align: justify;">இந்த மாதிரி சாலை ஓரம் இருப்பவரிடம் உங்கள் வாகனத்தைக் கொண்டு சென்றால் 100 ரூபாய் கேட்பார்கள். அதே போல் உங்கள் வாகனத்திற்குப் பழைய டயரைப் பட்டன் போட்டு மறு சீரமைப்புச் செய்து இது புது டயர் எனக் கூறி 500 ரூபாய்க்கு வரும் வாடிக்கையாளர்கள் தலையில் கட்டிவிடுவார்.</p> <p style="text-align: justify;">இருசக்கர வாடிக்கையாளர்கள் பலருக்கும் இதில் கவனமில்லை. காரணம் வாகனத்தை விட்டு விட்டு எப்படியாவது வாகனம் சரி செய்தால் போதும், வண்டி ஓடினால் போதும், அதுவும் விரைவாக வாகனத்தைப் பழுது நீக்கித் தர வேண்டும் என்ற மனநிலையே வாடிக்கையாளர்கள் இருப்பதே ஏமாறக் காரணமாகும்.</p> <h3 style="text-align: justify;">இருசக்கர வாகனம் ஓட்டுவோர் வேறு என்னென்ன தெரிந்திருக்க வேண்டும்?</h3> <p style="text-align: justify;">வாகனத்தில் ஓட்டுநர் உரிமம், காப்பீட்டு நகல்கள், மற்ற வாகனம் சம்மந்தப்பட்ட முக்கிய தாள்களை பத்திரமாக வாகனத்திலேயே வைத்திருக்க வேண்டும். வாகனக் காவலர் எப்போது நம் வாகனத்தை மடக்கிக் கேட்டாலும் காட்டத் தயாராக இருக்க வேண்டும்.</p> <p style="text-align: justify;">நண்பர்கள் ஓட்டுவதற்கு வாகனம் தருவதை அனுமதிக்கக் கூடாது. காரணம் உங்களின் வாகனத்தை வாங்கிக்கொண்டு எங்கேனும் சட்டத்திற்குப் புறம்பான செயல்களான நகை அறுத்தல், பிக்பாக்கெட் அடித்தல், தாக்குதல் போன்ற செயல்களில் உங்கள் நண்பர் ஈடுபட்டு காவலரிடம் தான் மாட்டிக் கொள்ளாமல் உங்கள் வாகனத்தை விட்டு ஓடிவிட்டால் அவ்வளவு தான். நீங்கள் தேவையில்லாத பிரச்சனையில் மாட்டிக் கொள்ள நேரிடும்.</p> <p style="text-align: justify;">இந்த மாதிரிப் பிரச்சனைகள் இன்றைய இளம் வயது இளைஞர்களால் மட்டுமே நிகழ்கிறது. இன்று அதிவேக இருசக்கர வாகனம் வந்துவிட்டது. 100 கிலோ மீட்டருக்குக் குறையாமல் செல்லும் இந்த வாகனத்தை ஓட்டுபவர் பெரும்பாலோருக்கு நிதானமில்லை. பல விபத்துக்களில் சிக்கி உயிரிழக்க நேரிடுகிறது. நன்கு ஓட்டத் தெரிந்தவர்களே இந்த மாதிரி வாகனத்தைக் கையாள வேண்டும்.</p> <p style="text-align: justify;">இன்று இரு சக்கர வாகனம் ஓட்டுபவர்கள் தாங்கள் ஓட்டும் பொது சாலையில் தன்னை எவரும் முந்திவிடக் கூடாது, அவ்வாறு முந்தினாலும் அவரை முந்திவிட்டு தன் திறமையை நிரூபிக்கவே எண்ணுகின்றனர். வாகனம் ஓட்டும் போது பொறாமை இருக்கக் கூடாது. 50 வயதிற்கு மேற்பட்டவர்கள், அல்லது சர்க்கரை, ரத்த அழுத்தம் உள்ளவர்கள் வாகனம் ஓட்டுவதைத் தவிர்த்தல் நல்லது. இவர்களால் பிற பயணிகளுக்கு அதிக ஆபத்து இருக்கிறது. திடீரென்று இவர்களுக்கு மயக்கமோ, நெஞ்சு வலியோ, தலை சுற்றலோ வரும் பொழுது நிலை தடுமாறி விபத்துக்குள்ளாகிறார்கள்.</p> <p style="text-align: justify;">சாலை விதியை மதித்து வாகனம் ஓட்டினாலே இங்கு பிரச்சனைகள் இல்லை. ஆனால் இங்கு பெரும்பாலும் சாலை விதிகளை மீறவே செய்கின்றனர். பச்சை விளக்கு எரிவதற்கு முன்னாலேயே சில அவசரக் குடுக்கைகள் உடனே செல்ல முனைவதால் பெரும் விபத்துக்கள் ஏற்படுகின்றன.</p> <p style="text-align: justify;">குறிப்பாக, இன்று பெண்கள் இரு சக்கர வாகனத்தை ஒட்டத் தெரியாமலேயே ஓட்டுகின்றனர். இவர்களில் பலர் நடுச்சாலையில் வாகனம் ஓட்டுகின்றனர். பின்னால் வருபவர் எவராவது வாகன எச்சரிக்கை ஒலி எழுப்பினால் அவர்களுக்குக் கூட வழி விடுவதில்லை. அவ்வாறு ஒலி கொடுத்து முன்னேறிச் செல்பவர்களை இப்பெண்கள் திட்டுகின்றனர். தவிர இரு பக்கக் கண்ணாடியைப் பெரும்பாலும் பார்த்து இவர்கள் ஓட்டுவது இல்லை. சாலையில் இடது, வலது என மாறி மாறி இவர்கள் ஓட்டுவதால் பின்னால் வருபவர்களுக்குப் பெரும் பிரச்சனையாக இருக்கின்றனர். சாலையில் பெண்கள் இரு சக்கர வாகனம் ஓட்டும் போது அவர்களின் பின்னால் செல்பவர்கள் மிகக் கவனமாக தம் வாகனத்தை ஓட்டிச்செல்ல வேண்டும்.</p> <h3 style="text-align: justify;">இரு சக்கர வாகனத்தை விற்கும் போதும், வாங்கும் போது கவனிக்க வேண்டியவை</h3> <p style="text-align: justify;">நாம் ஒரு இருசக்கர வாகனத்தை விற்கிறோம் என்றால், இந்த வாகனத்தை வாங்குபவரின் விலாசம், அடையாள அட்டை நகல், ரேசன் கார்டு நகல், வாக்காளர் அடையாள அட்டை நகல் பெற்றுக் கொள்ள வேண்டும். ஏனென்றால் இவர் இந்த விலாசத்தில் தான் இருப்பவரா? அல்லது வெளி மாநிலத்தவரா? எனத் தெரிந்துவிடும். அவ்வாறு இல்லாமல் வாகனம் விற்கும் போது நம் வாகனத்தை எங்கேனும் தவறாகப் பயன்படுத்தி விட்டு, வாகன காவலரிடம் சிக்கிக் கொண்டால் நாம் மாட்டிக் கொள்ள நேரிடும்.</p> <p style="text-align: justify;">தவிர்த்து வாகனம் வாங்குபவர், வாகனம் விற்பனை செய்பவரின் அனைத்து விலாசம் உள்ளிட்ட தகவல்களையும் பெற்றுக் கொள்ள வேண்டும். சிலர் தம் இரு சக்கர வாகனத்தை எங்கேனும் இடித்து விட்டு விற்க வருவர். அப்போது குறைந்த விலைக்கு வருகிறதே வாங்கலாம் என நினைத்து வாங்கினால் பின்பு தொல்லைகள் பல வீடு தேடி வரும். 18 வயதிற்குக் குறைவானவர்கள் வாகனம் ஓட்டுவது சட்டப்படி குற்றம் என சட்டம் இருந்தும் பல வீடுகளில் 18 வயது நிரம்பாத இளஞ்சிறார்கள் இரு சக்கர வாகனம் ஓட்டுவதை பெற்றோர்கள் ஊக்குவிக்கிறார்கள். இதனால் ஓட்டுநர் உரிமம் பெறாத இவர்கள் வாகனம் ஓட்டும் போது சாலையில் பிறருக்கு தொந்தரவு ஏற்படும். இவர்கள் பாதிக்கப்படுவதோடு பிறரையும் பாதிப்படையச் செய்வர்.</p> <h3 style="text-align: justify;">இருசக்கர வாகன ஓட்டுனர்கள் கவனத்திற்கு</h3> <ol> <li style="text-align: justify;">அலைபேசி பேசிக் கொண்டு வாகனம் ஓட்டுவதைத் தவிர்க்க வேண்டும். இதனால் பின்னால் வரும் வாகனங்கள் ஒலி எழுப்புவதைக் கேட்க முடியாமல் போகும்.</li> <li style="text-align: justify;">சாலையில் செல்லும் போது சமிக்ஞை (சிக்னல்) விழுந்தால் (சடன் பிரேக்) உடனடியாக வண்டியை நிறுத்தாதீர்கள். அவ்வாறு செய்தால் பின்னால் வரும் வாகனம் உங்கள் மீது இடித்து விடும்.</li> <li style="text-align: justify;">நடுரோட்டில் வாகனம் ஓட்ட வேண்டாம். அவ்வாறு போவதால் பெரும் வாகனங்கள் செல்வது கவனம்.</li> <li style="text-align: justify;">எவரேனும் உங்களுக்குப் பின்னால் வருபவர்கள் (Horn) ஒலி எழுப்பினால் வழி விடுங்கள்.</li> <li style="text-align: justify;">உங்கள் வாகனத்தின் பக்கக் கண்ணாடியைப் (side mirror) பார்க்காமல் இடது, வலது புறம் திரும்பாதீர்கள்.</li> <li style="text-align: justify;">பகலிலேயே வாகன விளக்கு (light) எரியாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.</li> <li style="text-align: justify;">உங்களுக்கு முன்பு செல்லும் வாகனத்தை முந்த வேண்டும் என்றால் முதலில் வாகன ஒலி எழுப்பி, பின்பு வாகன வேகத்தைக் கூட்டி வலது புறமாக முந்துங்கள்.</li> <li style="text-align: justify;">கண்டிப்பாக தலைக்கவசம் அணிந்து ஓட்டுங்கள்.</li> <li style="text-align: justify;">மது அருந்தி விட்டு வாகனத்தை ஒட்டாதீர்கள்.</li> <li style="text-align: justify;">வாகனம் ஓட்டும் போது உங்களுக்கு முன்பு, பின்பு, வலது, இடது புறங்களில் வரும் வாகனத்தைக் கவனித்துக் கொண்டே வாகனத்தை ஒட்டுங்கள்.</li> <li style="text-align: justify;">இரு சக்கர வாகனம் ஓட்டுபவர்கள் மேற்கூறிய அறிவுரைகளைப் படிப்பதோடு நிறுத்தி விடாமல், இதை உங்கள் வாழ்வில் தினந்தோறும் கடைபிடித்தால் உங்களுக்கு மட்டுமல்ல, பிற வாகன ஓட்டுனர்களுக்கும் இது பயனாக அமையும்.</li> </ol> <p style="text-align: justify;"><strong>ஆதாரம்: </strong>சிறகு தமிழ் வார இதழ்</p> </div>