மானஸ்: போதைப்பொருட்களுக்கு எதிரான டிஜிட்டல் பாதுகாப்புக் கவசம் போதைப்பொருள் பயன்பாடு, கடத்தல் ஆகியவை சமூகத்திற்கும், பொது சுகாதாரத்திற்கும் பெரும் சவாலாக கருதப்படுகிறது. தனிநபர்களை மட்டுமல்லாது, குடும்பங்கள், சமூக அமைப்பு, பொது பாதுகாப்பையும் இது பாதிக்கிறது. போதைப்பொருள் தொடர்பான தகவல்களை தெரிவிக்கவும், தேவையான உதவிகளை எளிதில் பெறவும் பொதுமக்களுக்கு நம்பகமான தளம் தேவை என்பதை உணர்ந்த மத்திய அரசு, உள்துறை அமைச்சகத்தின் போதைப்பொருள் தடுப்புப் அமைப்பின் கீழ், டிஜிட்டல் இந்தியா நிறுவனத்தின் ஒத்துழைப்புடன், கடந்த 2024 ஜூலை 18 அன்று தேசிய போதைப்பொருள் தடுப்பு உதவி மையமான மானஸ் தளத்தை அறிமுகப்படுத்தியது. முக்கிய அம்சங்கள் மானஸ் தளம், போதைப்பொருள் தொடர்பான சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்து பொதுமக்கள் தங்களது அடையாளத்தை வெளிப்படுத்தாமல் தகவல் அளிக்க வழிவகுக்கிறது. போதைப்பழக்கத்தால் பாதிக்கப்பட்டவர்கள் ஆலோசனை, மறுவாழ்வுக்கான உதவிகளையும் இதன் மூலம் பெறலாம். தேசிய உதவி எண் ‘1933’, அதிகாரப்பூர்வ இணையதளம், மின்னஞ்சல், உமாங் செயலி ஆகியவற்றின் வாயிலாக இந்த சேவைகளை எந்த நேரத்திலும் பெற முடியும். இதன்மூலம், போதைப்பொருள் கடத்தல், விற்பனை, சட்டவிரோதமாக போதைப்பொருள்கள் சாகுபடி செய்வது தொடர்பான தகவல்கள் சம்பந்தப்பட்ட அமைப்புகளுக்கு உடனடியாக அனுப்பப்படுகின்றன. இந்தத் தளம் சமூக நீதி, அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் உதவி மையத்துடன் இணைக்கப்பட்டுள்ளதால், ஆலோசனைகள் விரைவாக வழங்கப்படுகின்றன. இதில் பல்வேறு இந்திய மொழிகளில் சேவை, தானியங்கி குரல் வழிகாட்டி, உரையாடல் வசதி போன்ற கூடுதல் அம்சங்களும் படிப்படியாக அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. பொதுமக்களின் பங்கு மானஸ் அறிமுகமான பிறகு, போதைப்பொருள் தொடர்பான தகவல்களை பகிர்வதில் பொதுமக்களின் பங்களிப்பு அதிகரித்துள்ளது. சட்ட அமலாக்க அமைப்புகளிடையேயான தகவல் பரிமாற்றம் மேம்பட்டுள்ளது. ஆலோசனை, மறுவாழ்வு சேவைகளை அணுகுவோரின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது. தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட இந்தத் தளம், போதைப்பொருள் இல்லாத இந்தியாவை நோக்கிய பயணத்தில் பொதுமக்களின் பங்களிப்பை வலுப்படுத்தும் முக்கிய முயற்சியாக விளங்குகிறது. மேலும் தகவல்களுக்கு https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2280204®=6&lang=11 இணைப்பைப் பார்க்கவும். ஆதாரம்: பத்திரிகை தகவல் மையம்