சாதி முறை இந்தியச் சமுதாயத்தின் அழிவுக்கும் இழிவுக்கும் காரணமாக அமைவது சாதி முறையாகும். சாதி முறை, இந்தியச் சமுதாய மக்களைப் பல்வேறு குழுக்களாகவும் பிரிவுகளாகவும் பகுக்கிறது. கலாச்சாரமும் நாகரீகமும் வளர்ந்த போதிலும் சாதி முறை நமது சமுதாயத்தில் பெரும்பங்கு வகிக்கிறது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் (SC/ST) என்ற சொற்கள், அரசு ஆவணங்களைப் பொறுத்தவரை, முன்னாளைய தீண்டத் தகாதவரையும், பழங்குடியினரையும் குறிக்கும் சொற்களாகும். 2008ஆம் ஆண்டு, ஆதிதிராவிடர்களுக்கான தேசியக்குழு ‘தலித்’ என்ற சொல், ‘ஆதிதிராவிடர்’ என்ற சொல்லுக்கு மாற்றுச் சொல்லாகப் பயன்படுத்தப்படுவதைக் கவனித்து, அந்தந்த மாநில அரசின் அரசாங்க ஆவணங்களில் ‘தலித்’ என்ற சொல் பயன்படுத்தப்படுவது, அரசியலமைப்புக்கு மாறாக இருப்பதால், அச்சொல்லைப் பயன்படுத்துவதை நிறுத்துமாறும் இனி வருங்காலங்களில் ‘தலித்’ என்ற சொல்லுக்குப் பதிலாக ‘ஆதிதிராவிடர்’ (Sheduled Caste) என்ற சொல்லைப் பயன்படுத்துமாறும் பரிந்துரைத்தது. பழங்காலத்தில் இருந்தே சாதிப்பாகுபாடுகள் இருந்து வந்திருக்கின்றன. உயர்ந்த சாதி, தாழ்ந்த சாதி என்ற பாகுபாடு மக்களின் மூலத்தைக் கொண்டு உருவாகுவது என்று ஒரு கருத்தும், நால்வர்ணப் பாகுபாட்டினால் அவரவர் தொழிலையும் செயலையும் அடிப்படையாகக் கொண்டு, சாதிவேறுபாடுகள் தோன்றின என்று ஒரு கருத்தும் நிலவி வருகிறது. மேலும், பழங்காலத்திலிருந்தே, உயர் சாதியினரின் பேச்சுக்கு சமூகத்தில் ஒரு மதிப்பிருந்தது. அது தாழ்ந்த சாதியினரை அடக்கியாளவும், தன்னலத்திற்காக அவர்களைத் தவறாகப் பயன்படுத்திக் கொள்ளவும் வழிவகுத்தது. தீண்டத் தகாதவர் எனக் கூறப்படும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர், இந்திய மக்கள் தொகையில் ஆறில் ஒரு பங்கு அல்லது 160 மில்லியன் அளவில் இருக்கின்றார்கள். இவர்கள் மற்றவர்களால் வேறுபடுத்திப் பார்க்கப்படுவதையும், ஒதுக்கி வைக்கப்படும் நிலையினையும் பொறுத்துக் கொண்டுள்ளனர். இந்தச் சாதி முறையின் கொடுமைகளில் சில தீண்டாமை (Untouchability) - சாதிய அடிப்படையில் பல கிராமங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. அவர்களையும், உயர் சாதியினரையும் பிரிக்கும் எல்லையினைத் தாழ்த்தப்பட்டோர் தாண்டிச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. உயர் சாதியினர் பயன்படுத்தும் கிணறுகளை தாழ்த்தப்பட்ட சாதியினர் பயன்படுத்தக்கூடாது. மேலும் உயர் சாதியினர் தேநீர் அருந்தும் தேநீர் கடையில், அவர்கள் தேநீர் அருந்த அனுமதி இல்லை. வேறுபாடு (Discrimination) - மின்சாரம், கழிப்பிட வசதி, நீர்வசதி போன்றன தாழ்த்தப்பட்டோர் குடியிருப்புகளுக்குக் கிடைத்தாலும், உயரிய மக்களுக்குக் கிடைக்கும் மேம்பட்ட கல்வி, குடியிருப்பு, மருத்துவ வசதிகள் போன்றன அவர்களுக்கு மறுக்கப்பட்டுள்ளது. வேலைப்பாகுபாடு (Division of labour) - கழிப்பிடங்களைத் தூய்மைபடுத்ததல், தோட்ட வேலை, தோல் தொழில், தெருக்களைச் சுத்தம் செய்தல் போன்ற வேலைகளே தாழ்த்தப்பட்டவர்களுக்குத் தரப்படுகின்றன. அடிமைத்தனம் (Slavery) - கடன், பரம்பரை வழக்கம் போன்றவற்றின் பெயரால் தாழ்த்தப்பட்டோரின் உழைப்பு சுரண்டப்படுகிறது. அவர்கள் உழைப்பாளிகளாகவும். வீட்டு வேலை செய்பவர்களாகவும், உயர்சாதியினரிடம் பரம்பரை பரம்பரையாக அடிமைத் தொழில் செய்து வருகின்றனர். இந்திய அரசாங்கம் தீண்டாமையை ஒழிக்க பல சட்டங்களை உருவாக்கியுள்ளது. மேலும் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்த, பலப்படுத்த பல சீரமைப்புத் திட்டங்களைக் கொண்டுள்ளது. அவற்றுள் சில: அரசாங்க உத்திரவாதத்துடன் கூடிய அடிப்படை மனித உரிமைகள் தீண்டாமை ஒழிப்பு 1950 ஆதிதிராவிட மற்றும் பழங்குடியினர் (கொடுமைகளைத் தடுத்தல்) சட்டம் 1989 கல்வி நிறுவனங்கள், வேலை வாய்ப்பு போன்றவற்றில் இட ஒதுக்கீடு ஆதிதிராவிட மற்றும் பழங்குடியினரின் நலனுக்கான நலத்துறை, தேசியக் குழுக்களை நிறுவுதல் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கைகள் சமுதாயத்தின் நலிவடைந்த பிரிவினருக்குச் சிறிதளவு நிவாரணத்தைப் பெற்றுத் தந்தது. நகரங்களில் நல்ல விளைவுகளும் ஓரளவு முன்னேற்றமும் ஏற்பட்டுள்ளது. ஆயினும் நாட்டுப் புறங்களிலும், கிராமப்புறங்களிலும் வசிக்கும் தாழ்த்தப்பட்ட மக்கள் இப்போதும் இனவேறுபாட்டினால் துன்புறுகின்றார்கள். சாதி, இன வேறுபாடுகளைக் களையும் பயணத்தில் நாம் இன்னும் வெகுதூரம் செல்லவேண்டும். நமது எண்ணங்களிலும் முயற்சிகளிலும் ஏற்படும் மாற்றமே தாழ்த்தப்பட்டவர்களின் துன்பத்திற்கு நிரந்தரத் தீர்வைத் தந்து அனைவரும் சமம் என்ற நிலையை ஏற்படுத்தும். மூலம்: http://www.articlesbase.com http://en.wikipedia.org