முன்னுரை வரதட்சணை என்பது சமுதாயத் தீமைகளுள் ஒன்றாகும். இந்தியச் சமுதாயத்தில் பெண்களுக்கு இழைக்கப்பட்ட, இழைக்கப்படுகின்ற கற்பனைக்கு எட்டாத கொடுமை வரதட்சணை எனும் கொடுமை. சமுதாயத்தில் எல்லா நிலைகளிலும் உள்ள பெண்களின் வாழ்க்கையையும், உயிரையும் பறிக்கிறது. ஆயினும், வறுமையில் வாடுபவர்கள், போதிய விழிப்புணர்வு இல்லாமையாலும், கல்வியறிவு இல்லாமையாலும் வரதட்சணைக் கொடுமைக்கு அதிகமாக ஆளாகின்றனர். மகனுக்குத் தருகின்ற முக்கியத்துவமும், சமூக மதிப்பும், மகளுக்குத் தராததற்கு அடிப்படைக் காரணமாக இவ்வரதட்சணைக் கொடுமை அமைகிறது. சமுதாயத்தில் பெண்களைப் பாரமாகப் பார்க்கும் மனப்பாங்கினைப் பல நிலைகளில் காண முடிகிறது. மேலும், கல்வி கற்றல் மற்றும் வசதி வாய்ப்புகளில் இரண்டாம் தரமான வாய்ப்பே பெண்களுக்குத் தரப்படுகிறது. இன்றைய அரசாங்கம் வரதட்சணையை ஒழிக்க மட்டுமன்றி, பெண்களின் நிலையையும் உயர்த்தப் பல திட்டங்களையும் சட்டங்களையும் இயற்றியுள்ளது. இனி, சூழலைப் புரிந்து அதற்கேற்ப நடந்து கொள்ளுதல் மக்களிடம் உள்ளது. தேவையான மாற்றங்களை ஏற்படுத்தி படிப்படியாக முயற்சி செய்து, வரதட்சணை வாங்குவதையும், கொடுப்பதையும் நிறுத்துவது நம் கையில் தான் உள்ளது. நாம், நமது பெண் குழந்தைகளை முதலில் மதித்துப் போற்றினால் தான், அப்பெண் குழந்தைகள் வளரும் போது அவர்களுடைய மதிப்பை மற்றவர்கள் அறிவார்கள் என்பதை நாம் உணர வேண்டும். பின்பற்றப்பட வேண்டிய சில நடவடிக்கைகள் / செயல்கள் உங்கள் பெண்களுக்குக் கல்வியறிவு கொடுங்கள் தங்களுடைய தொழிலை அவர்களே தேர்ந்தெடுக்க ஊக்கமளியுங்கள் சுதந்திரமாகவும், பொறுப்புடனும் இருக்க உங்கள் மகளுக்குக் கற்றுக் கொடுங்கள் எந்த விதமான வேறுபாடும் காட்டாமல் ஆணுக்கு இணையாகப் பெண்ணையும் நடத்துங்கள் வரதட்சணை தருவதையோ பெறுவதையோ ஒருபோதும் ஆதரிக்காதீர்கள் எண்ணங்களை மாற்றுங்கள் மேலே குறிப்பிடப்பட்ட நடவடிக்கைகள் கிழே குறிப்பிடப்பட்டவர்களின் எண்ணங்களில் மாறுதலை ஏற்படுத்தும்: கணவன் பின்னாளில் பார்த்துக் கொள்வான் என்ற நம்பிக்கையில் தன் மகளின் கல்விக்கு அதிக முக்கியத்துவம் தராத பெற்றோர். வறுமையின் காரணமாகத் தம் பெண் குழந்தைகளை வேலைக்கு அனுப்பி அதன் மூலம் வரும் பணத்தில் அவளுக்கு வரதட்சணையாகத் தர வேண்டிய பணத்தின் ஒரு பகுதியைச் சேமிக்க நினைக்கும் பெற்றோர். தம் பெண் குழந்தைகளை முறையாகப் பள்ளிக்கு அனுப்பினாலும் அவர்களது தொழில் அல்லது வேலை குறித்து அதிகம் கவலைப்படாத நடுத்தர மற்றும் உயர்தரப் பெற்றோர். வலிமையான உயர்ந்த பரிசு கல்வியும் சுதந்திரமும் மட்டுமே உங்கள் மகளுக்கு நீங்கள் கொடுக்கும் வலிமையான உயர்ந்த பரிசாகும். கல்வியும் சுதந்திரமும் தான் பெண்ணுக்கு பொருளாதார மேம்பாட்டைத் தரும் என்பதை உணருங்கள். குடும்ப வளர்ச்சிக்கு உதவும் பெண்ணாக இருக்கும் அவளுக்கு முறையாகச் சேர வேண்டிய மதிப்பையும், உரிய இடத்தையும், எல்லா உரிமைகளையும், பெற்றுத் தருவது கல்வியும் பொருளாதாரச் சுதந்திரமுமே என்பதை நன்கு புரிந்து கொள்ளுங்கள். எனவே, சிறந்த கல்வியும், பொருத்தமான தொழிலைத் தேர்வு செய்துக்கொள்ள நீங்கள் தரும் ஊக்கமும் ஒத்துழைப்பும் தான், உங்கள் செல்ல மகளுக்கு நீங்கள் தரும் வரதட்சணை என்பதை நன்கு நினைவில் கொள்ளுங்கள். மூலம்: India parenting website தொடர்புடைய வளங்கள் Dowry Prohibition Act 1961