தொழிலாளர் சீர்திருத்தங்கள்: இந்தியாவில் தற்காலிக, இணையவழி பணியாளர் பிரிவினருக்கான முறைப்படுத்துதல் தொழிலாளர் சட்டத்தின் கீழ் தற்காலிக மற்றும் இணையவழி பணியாளர் முறைபடி அங்கீகரிக்கப்பட்டுள்ளனர். ஆயுள் காப்பீடு, சுகாதாரம் மற்றும் மகப்பேறு பயன்கள், ஓய்வூதியம், விபத்துக் காப்பீடு, குழந்தைகள் காப்பகம் உள்ளிட்ட சமூகப் பாதுகாப்பு பயன்கள் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. சமூகப் பாதுகாப்பு நிதிக்கு பங்களிப்பு மற்றும் பணியாளர்களின் குறைகளுக்கு தீர்வு காண்பதற்கான மையம் அரசால் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பணியாளரும் இ-ஸ்ரம் தளத்தில் ஆதாருடன் கூடிய அடையாள தனித்துவமிக்க எண்ணைப் பெற்று அதன் மூலம் அத்தளத்தில் பல்வேறு பயன்களைப் பெற்று வருகின்றனர். இந்தியாவில் தற்காலிக மற்றும் இணையவழி பணியாளர் பிரிவினர் விரைவாக அதிகரித்து வருவது புதிய பொருளாதார சூழலுக்கு முக்கிய பங்களிப்பாக உருவெடுத்துள்ளது. இளைஞர்கள் பங்கேற்பு, மின்னணு முறையை கடைப்பிடித்தல் மற்றும் விரைவான நகர்ப்புறமயமாக்கல் ஆகியவை இதற்கு வழிவகுக்கிறது. தற்காலிக மற்றும் இணையவழி பணியாளர்கள், அரசின் இ-ஸ்ரம் தளத்தில் தாங்களாகவே பதிவு செய்து கொள்ள முடியும். முன்னதாக தற்காலிக மற்றும் இணையவழி பணியாளர்களுக்கு முறையான தொழிலாளர்கள் சட்டங்கள் கிடையாது. அதனால், குறைதீர்ப்புக்கான வழிவகைகள் இல்லாமல் இருந்தது. சமூகப் பாதுகாப்பு விதி மூலம் தொழிலாளர்களின் குறைகளுக்கு உரிய நேரத்தில் தீர்வுகாண அரசு கட்டணமில்லா தொலைபேசி எண், அழைப்பு மையம் ஆகியவற்றை அமைக்க முடியும். புதிய சீர்திருத்தங்கள் மூலம் இத்தகைய பணியாளர்களுக்கு சட்ட அங்கீகாரமும், ஆதரவும் கிடைக்கிறது. அத்துடன் நலத்திட்ட உதவிகளையும் பெற முடியும். மேலும் தகவல்களுக்கு https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2025/dec/doc2025129723601.pdf இணைப்பைப் பார்க்கவும். ஆதாரம்: பத்திரிகை தகவல் மையம்