பைமானா தளம் மத்திய அரசின் உள்கட்டமைப்புத் திட்டங்களை நிகழ்நேரத்தில் திறம்படக் கண்காணிக்கும் நோக்கில் 'பைமானா' [PAIMANA (Project Assessment, Infrastructure Monitoring and Analytics for Nation-Building)] எனப்படும் தேசியக் கட்டமைப்பிற்கான திட்ட மதிப்பீடு, உள்கட்டமைப்புக் கண்காணிப்பு, பகுப்பாய்வு இணையதளம் 2025 செப்டம்பர் 25 அன்று தொடங்கப்பட்டு வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மத்திய புள்ளியியல், திட்ட அமலாக்க அமைச்சகத்தால் [Ministry of Statistics and Programme Implementation (MoSPI)] உருவாக்கப்பட்டுள்ள இத்தளம், 150 கோடி ரூபாய் அல்லது அதற்கும் அதிக மதிப்பிலான மத்திய அரசுத் துறைகளின் உள்கட்டமைப்புத் திட்டங்களை ஒருங்கிணைந்த முறையில் கண்காணிக்கிறது. இதற்கு முன்னதாகப் பயன்பாட்டில் இருந்த கண்காணிப்பு அமைப்புகளுக்கு மாற்றாகக் கொண்டுவரப்பட்ட இத்தளத்தில், உள்கட்டமைப்புத் திட்டங்களின் மத்தியக் களஞ்சியமாக இதனை விரிவுபடுத்தும் வகையில் பைமானா-சிஆர்ஐபி என்ற புதிய பிரிவு 2026 ஜூலை 8 அன்று இணைக்கப்பட்டது. தற்போது 20-க்கும் மேற்பட்ட மத்திய அமைச்சகங்கள், அரசுத் துறைகள், திட்ட அமலாக்க முகமைகள் இத்தளத்தின் மூலம் திட்டப் பணிகளின் விவரங்களைத் தொடர்ச்சியாகப் பதிவேற்றம் செய்து வருகின்றன. உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கான செயல்திறன் கண்காணிப்பு நாட்டின் உள்கட்டமைப்புத் திட்டங்களின் செயல்திறனைத் துல்லியமாகக் கண்காணிப்பதற்காக 2026 ஏப்ரல் 16 அன்று பிரத்தியேகச் செயல்திறன் கண்காணிப்புத் தகவல் பலகை தொடங்கப்பட்டது. இத்தகவல் பலகையானது சிவில் விமானப் போக்குவரத்து, சாலைகள், மின்சாரம், துறைமுகங்கள், கப்பல் & நீர்வழிகள், தொலைத்தொடர்பு, ரயில்வே ஆகிய 6 முக்கிய உள்கட்டமைப்புத் துறைகளின் கீழ் 165 செயல்திறன் அம்சங்களைக் கொண்டு தீவிரக் கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்கிறது. இக்கண்காணிப்பு முறையானது வெறும் உற்பத்தித் திறனை மட்டும் கணக்கிடாமல், உள்கட்டமைப்பு வசதிகளின் பயன்பாடு, தரம், நிதியாதாரங்கள், மக்களின் அணுகல் தன்மை ஆகியவற்றை விரிவாக மதிப்பீடு செய்து, ஆதாரங்களின் அடிப்படையில் கொள்கை முடிவுகளை எடுக்கப் பெரிதும் உதவுகிறது. உள்கட்டமைப்புத் திட்டங்களில் முன்னேற்றம் 2026 ஜூன் நிலவரப்படி, 17 மத்திய அமைச்சகங்கள், துறைகளின் கீழ் 40.54 லட்சம் கோடி ரூபாய் திருத்தப்பட்ட மதிப்பில் 1,847 உள்கட்டமைப்புத் திட்டங்கள் இத்தளத்தின் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. இத்திட்டங்களுக்காக இதுவரை 21.97 லட்சம் கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இவற்றுள் 709 திட்டங்களில் 80 சதவீதப் பணிகள் முடிக்கப்பட்டு நிறைவடையும் தருவாயில் உள்ளன. தற்போது நடைபெற்று வரும் பணிகளில் போக்குவரத்து, தளவாடத் துறையானது 22.32 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான 1,341 திட்டங்களுடன் முதலிடத்தில் உள்ளது. இவற்றுள் 1,000 கோடி ரூபாய்க்கும் அதிக மதிப்பைக் கொண்ட 769 மிகப்பெரிய திட்டங்களும் அடங்கும். உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கு பைமானாவின் முக்கியப் பங்கு மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் அமைச்சகம் 9.89 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் 1,022 திட்டங்களையும், ரயில்வே அமைச்சகம் 8.69 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் 255 திட்டங்களையும் இத்தளத்தின் மூலம் முன்னெடுத்து வருகின்றன. மேலும் பெட்ரோலியம் & இயற்கை எரிவாயு அமைச்சகம், மின்சார அமைச்சகம், வீட்டுவசதி, நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம், ஜல் சக்தி அமைச்சகம் ஆகியவையும் திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றன. உள்கட்டமைப்புத் திட்டங்களின் தொடர்ச்சியான கண்காணிப்பு நடவடிக்கைகள் மூலம் வெளிப்படைத்தன்மை, செயல்திறன், பொறுப்புடைமை ஆகியவை உறுதி செய்யப்பட்டு, தற்சார்பு இந்தியாவின் உள்கட்டமைப்பு வளர்ச்சியை விரைவுபடுத்துவதில் பைமானா இணையதளம் மிக முக்கியப் பங்காற்றி வருகிறது. மேலும் தகவல்களுக்கு https://paimana-proj.mospi.gov.in/ இணைப்பைப் பார்க்கவும். ஆதாரம்: பத்திரிகை தகவல் மையம்