<div id="MiddleColumn_internal"> <h3 style="text-align: justify;">அறிமுகம்</h3> <p style="text-align: justify;">வேளாண்மைப் பொறியியல் துறை ஒரு தலைமைப் பொறியாளரின்கீழ் சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்குகிறது. பொது நிர்வாகம், பணியாளர் நலன், துறையின் செயல்பாட்டினை திட்டமிடுதல் மற்றும் நெறிப்படுத்துதல், வரவு செலவு திட்டம், கணக்குகள், தணிக்கை, துறையின் திட்டங்களை உருவாக்குதல் மற்றும் செயல்படுத்துதல் உள்ளிட்ட பணிகளை நிர்வகிக்கும் பொறுப்பு தலைமைப் பொறியாளரைச் சாரும். மேலும், மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்படுத்தும் நதிப்பள்ளத்தாக்குத் திட்டம், பாசனப்பகுதி மேம்பாட்டுத் திட்டம் மற்றும் மலைப்பகுதி மேம்பாட்டுத் திட்டம் ஆகிய திட்டங்களை நிர்வகிக்கத் தனியே ஒரு தலைமைப் பொறியாளர், நதிப்பள்ளத்தாக்குத்திட்டம், சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறார்.</p> <h3 style="text-align: justify;">மண்டல மற்றும் மாவட்ட நிர்வாகம்</h3> <p style="text-align: justify;">வேளாண்மைப் பொறியியல் துறையினை சிறப்பாக நிர்வகிக்கும் பொருட்டு, மாநிலத்தில் 11 மண்டலங்கள் உருவாக்கப்பட்டு, ஒவ்வொரு மண்டலமும் ஒரு கண்காணிப்புப் பொறியாளர் அவர்களின் தலைமையில் இயங்கி வருகிறது. மாவட்ட அளவில் வேளாண்மைப் பொறியியல் திட்டங்கள் செயற் பொறியாளர் தலைமையில் செயல்படுத்தப்படுகிறது. வருவாய் கோட்ட அளவில் ஒரு உதவி செயற் பொறியாளர் தலைமையில் வேளாண்மைப் பொறியியல் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு நிர்வகிக்கப்படுகிறது.</p> <h3 style="text-align: justify;">சிறப்பு திட்டங்கள்</h3> <ul> <li style="text-align: justify;">நதிப்பள்ளத்தாக்குத் திட்டம்,</li> <li style="text-align: justify;">மலைப்பகுதி மேம்பாட்டுத்திட்டம் மற்றும் பாசனப்பகுதி மேம்பாடு திட்டம்</li> </ul> <p style="text-align: justify;">ஆகிய சிறப்புத் திட்டங்களை செயல்படுத்திட தனியே செயற் பொறியாளர்கள் கோட்ட அலுவலர்களாக அந்தந்த மாவட்டங்களில் நியமிக்கப்பட்டு உள்ளனர்.</p> <h3 style="text-align: justify;">வேளாண்மை பொறியியல் பயிற்சி நிலையம்</h3> <p style="text-align: justify;">வேளாண்மைப் பொறியியல் துறையில் பணிபுரியும் பொறியாளர்கள் மற்றும் களப்பணியாளர்களுக்கு துறையின் பல்வேறு புதிய தொழில் நுட்பங்களிலும் பயிற்சி அளித்திட வேளாண்மைப் பொறியியல் பயிற்சி நிலையம் ஒன்று திருச்சியில் இயங்கி வருகிறது. இப்பயிற்சி நிலையம் செயற் பொறியாளரின் தலைமையில் இயங்கி வருகிறது.</p> <p style="text-align: justify;"><strong>டிராக்டர் பணிமனைகள்</strong></p> <p style="text-align: justify;">இத்துறையிலுள்ள இயந்திரங்களின் பராமரிப்புப் பணிகள், பழுதுபார்த்தல், ஆகியவற்றை மேற்கொள்ள தமிழ்நாட்டில் திருச்சி, திருவாரூர், மதுரை, திருநெல்வேலி, கோயம்புத்தூர் மற்றும் வேலூர் ஆகிய ஆறு இடங்களில் டிராக்டர் பணிமனைகள் உள்ளன. ஒவ்வொரு பணிமனையும் ஒரு உதவி செயற் பொறியாளர் தலைமையில் இயங்கி வருகிறது.</p> <p style="text-align: justify;"><strong>மத்திய பண்டகசாலை</strong></p> <p style="text-align: justify;">இயந்திரங்களுக்கான எரிபொருள், மசகு எண்ணெய், உதிரி பாகங்கள் போன்றவற்றை ஒட்டுமொத்தமாக வாங்கி மாவட்டங்களுக்கு வழங்கிடும் பொருட்டு ஒரு மத்திய பண்டகசாலை செயற்பொறியாளரின் தலைமையில் சென்னையில் இயங்கி வருகிறது</p> <h3 style="text-align: justify;">வேளாண் பொறியியல் துறை</h3> <ul> <li style="text-align: justify;">வேளாண் பொறியியல் துறை தமிழ்நாடு அரசின் ஒரு சேவைத் துறை ஆகும். இத்துறை மாநிலத்தின் இயற்கை வளப் பாதுகாப்பு (மண்வளம் மற்றும் நீர்வளப் பாதுகாப்பு), இவைகளின் மேம்பாடு மற்றும் மேலாண்மையில் முக்கிய பங்காற்றுகிறது.</li> <li style="text-align: justify;">தமிழ்நாட்டின் மண்வளம் மற்றும் நீர்வளப் பாதுகாப்பு, நீர் சேகரிப்புப் பணிகள், மற்றும் நீர்த் தேக்கம், நில மேம்பாடு, நீர்வடிப்பகுதி மேம்பாடு போன்றவற்றிற்கு தொடர்புடைய நில பயன்பாட்டுப் பணிகள், நதிநீர் பள்ளத்தாக்கு திட்டப் பணிகள், ஆற்றுப் படுகைகள் சார்ந்த நீர்ப்பிடிப்புப் பணிகள் போன்றவற்றைச் செயற்படுத்துகிறது.</li> <li style="text-align: justify;">தொலையுணர்வு நுட்பங்களை பயன்படுத்தி தமிழ்நாட்டின் ஆற்றுப் படுகைகளின் நிலையை மதிப்பிடும் பணிகளைக் மேற்கொள்கிறது.</li> <li style="text-align: justify;">காற்று அரிப்பினால் பாதிக்கப்பட்ட நிலப்பகுதிகள், வறண்ட நிலங்கள், மலை இடுக்குகளில் நீர் வழிந்தோடியதால் பாதிக்கப் பட்டப் பகுதிகள், வளமற்ற நிலங்கள், உப்புத் தன்மை மற்றும் அமிலத் தன்மை உடைய நிலப்பகுதிகளை பாதுகாத்து, இயல்பு நிலைக்குக் கொண்டு வரவும், அவற்றின் மேம்பாடு சார்ந்த பணிகளுக்கும் பொறுப்பேற்கிறது.</li> <li style="text-align: justify;">கிழக்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் உள்ள பழங்குடி இன மக்களின் நலன் கருதி, மண் பாதுகாப்பு மற்றும் நீர்த்தேக்கம் மற்றும் நீர்ப் பாசனத்திற்கான தடுப்பணைகள் ஆகிய கட்டுமானப் பணிகளை மேற்கொள்கிறது.</li> <li style="text-align: justify;">மாநிலம் முழுவதும் நிலத்தடி நீர் குளங்கள், நீர்த்தேக்க அணைகள் கட்டுமானம், நிலத்தடி நீர் அதிகரித்தல், மண் அரிப்பைக் கட்டுப்படுத்துதல், திடீர் வெள்ளத் தடுப்பு, வண்டல் மண் சேர்மானங்களைக் குறைத்தல் தொடர்பான பணிகளையும் மேற்கொண்டு வருகிறது.</li> <li style="text-align: justify;">குளத்து நீர்ப் பாசனப் பகுதி, ஆற்று நீர்ப் பாசனப் பகுதி, கிணற்று நீர்ப் பாசனப் பகுதிகள் சார்ந்த அனைத்து நீர் மேலாண்மைத் திட்டங்களில் முக்கிய பங்காற்றுகிறது.</li> <li style="text-align: justify;">அனைத்து நதி மற்றும் ஆற்றுப் பாசனப் பகுதி மேம்பாட்டுத் திட்டங்களின் கீழுள்ள மதகுகளின் கீழ்வரும் விவசாயப் பண்ணைகளின் மேம்பாடு, நவீனமயமாக்கல் மற்றும் தரநிர்ணய திட்டங்களை ஏற்படுத்தி வருகிறது.</li> <li style="text-align: justify;">சுழற்சிமுறை நீர் வழங்கல் திட்டத்தை ஒவ்வொரு மதகிற்கும் உருவாக்கி அதனைப் பயன்பாட்டிற்கும் கொண்டு வருகிறது.</li> <li style="text-align: justify;">அனைத்து மதகுகளிலும் நீர்ப்பாசன விவசாயிகள் சபை ஒன்றினை அமைத்து, அதன் வாயிலாக சுழற்சிமுறை நீர் வழங்கல் திட்டத்தை எவ்வித முரண்பாடுமில்லாமல் நிர்வகிக்கவும், பாதுகாக்கவும் விவசாயிகளை ஊக்குவிக்கிறது.</li> <li style="text-align: justify;">நிலத்தடி நீர் மேம்பாட்டின் பொருட்டு ஆழ்துளைக் கிணறுகள் அமைக்க, சுழல்விசைத் துளைக்கருவிகள், பெர்குஷன் துளைக்கருவிகள், சிறு விசைத் துளைக்கருவிகள், கைத்துளைக்கருவிகள், நீள் துளைக் கருவிகள், பாறை தகர்க்கும் கருவிகள், நில அறிவியல் ஆய்வு உபகரணங்கள் மற்றும் கருவிகளை (Sinking Tubewells, Filter point Tubewells) அரசின் விதிமுறைகளுக்கேற்ப வேளாண் பணிகளுக்காக விவசாயிகள் மற்றும் பொது மக்களுக்கு வாடகைக்கு அளிக்கும் திட்டத்தையும் சிறுபாசனத்திட்டத்தின் மூலம் செயல்படுத்தி வருகிறது.</li> <li style="text-align: justify;">சொட்டுநீர் மற்றும் நீர் தெளிப்பு போன்ற மேம்படுத்தபட்ட நீர்ப் பாசன முறைகளை விவசாயிகளிடம் அறிமுகம் செய்து அவற்றின் பயன்பாட்டை பரவலாக்க ஊக்கப்படுத்தி வருகிறது.</li> <li style="text-align: justify;">விவசாயிகளின் விருப்பத்திற்கு ஏற்ப மண் தள்ளும் இயந்திரம் (நிலச் சமன் பொறி), மற்றும் உழுவை இயந்திரம் ஆகியவற்றை, நிலத்தை சமன் செய்யவும், இயந்திரம் மூலம் உழுது பயிரிடும் பணிகளுக்கும் மற்றும் கதிர் அறுவடை இயந்திரம், நெல் நாற்று நடும் கருவி ஆகியவற்றை விவசாயிகளுக்கு வாடகை மூலம் அளிக்கும் திட்டம் செயற்படுத்தப்பட்டு வருகிறது.</li> <li style="text-align: justify;">பல்வேறு வேளாண்-தட்பவெப்ப பகுதிகளுக்குப் பொருத்தமான வேளாண் இயந்திரங்கள், கருவிகள் மற்றும் கைக்கருவிகளை அடையாளம் காண்கிறது. தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்படும் அக்கருவிகள், வேளாண் பொறியியல் துறையால் தகவமைப்பு ஆராய்ச்சி சோதனைகள் செய்யப்பட்டு, அதன் முடிவுகள் மீண்டும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழத்திற்கு அளிக்கப்படுகிறது.</li> <li style="text-align: justify;">அறுவடை மற்றும் சேமிப்பின்போது உணவு தானியங்களின் இழப்பைத் தடுக்கவும், விரைவில் அழியக் கூடிய பொருட்களின் உற்பத்தித் தரத்தைப் பாதுகாக்கவும் அறுவடை பின்சார் தொழில் நுட்பங்களை செயற்படுத்தி வருகிறது.</li> <li style="text-align: justify;">மண் மற்றும் நீர் வளங்கள், மற்றும் அறுவடை பின்சார் தொழில்நுட்ப பயன்பாட்டின் மூலம் மேம்படுத்தப்பட்ட பயிர் உற்பத்தி நுட்பங்களை “சிறு பண்ணை மேலாண்மை தொழில்நுட்பங்கள்” (Small Farm Management Technologies) வாயிலாக நிலத்தடி நீர் குளங்கள் உள்ளப் பகுதிகளில் விரிவுபடுத்தி வருகிறது.</li> <li style="text-align: justify;">வேளாண் பொறியியல் துறை, ஊராட்சி ஒன்றியங்களுக்குச் சொந்தமான நீர்ப் பாசனக் குளங்களிலும் நவீனமயமாக்கல் மற்றும் பண்ணை மேம்பாட்டுப் பணிகளைச் செயற்படுத்தி வருகிறது.</li> <li style="text-align: justify;">வேளாண் பொறியியல் துறை, விவசாயப் பண்ணை இளைஞர்களுக்கு மேம்படுத்தப்பட்ட வேளாண் நடைமுறைகளான இயந்திரமயமாக்கல், நீர் மேலாண்மை மற்றும் செயலாக்கம் போன்றவற்றில் பயிற்சியளித்து வருகிறது.</li> <li style="text-align: justify;">வேளாண் பொறியியல் துறை, விவசாயிகளுடன் அதிகம் தொடர்புள்ள அனைத்து ஆற்று நீர் மற்றும் குளத்து நீர்ப் பாசனப் பகுதிகளிலும் வாய்க்கால் பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டு, விவசாயிகளுக்கு பராமரிப்புப் பணியில் தொழில்நுட்ப உதவிகளை அளித்து வருகிறது.</li> <li style="text-align: justify;">வேளாண் பொறியியல் துறை, நிலத்தடி நீர் குளங்கள் பராமரிப்பு, புதிய விவசாய குளங்கள் உருவாக்கம் போன்ற வறட்சி நிவாரணப் பணிகள் (வேலைவாய்ப்பை உருவாக்கும் பணிகள்) மற்றும் இயற்கை சீற்றங்களின் போது அரசு நிர்ணயிக்கின்ற வெள்ள நிவாரணப் பணிகள் போன்றவற்றை செய்துவருகிறது.</li> <li style="text-align: justify;">வேளாண் பொறியியல் துறை, புதுப்பிக்கத்தக்க ஆற்றல்கள் மீது புதிய தொழில்நுட்பங்களை புகுத்தி, உற்பத்தித் தரத்தை மேம்படுத்தி, நியாயமான சந்தை விலையை பெற, குறிப்பாக சூரிய ஆற்றலில் இயங்கும் விசை உந்தி (Solar Powered Pumps) பயன்படுத்துதல், பொருட்களை உலர்த்துதல் போன்ற விவசாய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.</li> </ul> <p style="text-align: justify;">ஆதாரம்: வேளாண்மைப் பொறியியல் துறை</p> </div>