<div id="MiddleColumn_internal"> <h3>அறிமுகம்</h3> <p style="text-align: justify;">அலுவலக சாதனங்கள் மற்றும் இயந்திரங்கள் அலுவலக பணியினை திறமையாகச் செய்வதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. துல்லியமான மற்றும் துரித அலுவலகப் பணியின் செயல்பாட்டுக்கு இவை பணியாளர்களுக்கு மிகவும் இன்றியமையாததாக திகழ்கின்றன. அலுவலகப் பணி பெரும்பாலும் உள் மேஜைப் பணியாகும், அலுவலகப் பணியாளர்கள் பெரும்பான்மை நேரத்தை அலுவலகத்திலேயே உட்கார்ந்து கழிக்க வேண்டியுள்ளது. இப்பணி மிகவும் வாலாயமான மற்றும் மாற்றுத்தன்மை இல்லாதது. அலுவலக சாதனங்கள், இயந்திரங்கள் மற்றும் வசதியாக வேலைசெய்யும் சூழ்நிலை இல்லாத பட்சத்தில் திறமையான செயல்பாடு என்பது சாத்தியமற்றதாகிறது. சரியான அலுவலக இயந்திரங்கள் மற்றும் சாதனங்களை பயன்படுத்துவதன் மூலம் அலுவலக வேலையை திறமையான முறையிலும் சிக்கனமாகவும் செய்ய முடிகிறது. மேலும் நல்ல தரமான சாதனங்கள் அலுவலக பணியாளர்களின் பொதுவான திறமையை மேம்படுத்துவது மட்டுமல்லாமல் அந்த அமைப்பின் நன்னம்பிக்கையை வருகை புரிவோர்களிடையே உயர்த்துகிறது. இந்நாளைய அவசர உலகில் இயந்திரமயமாக்குதல் சிறந்த இயந்திரங்களையும், சாதனங்களையும் தேர்ந்தெடுப்பதில் முக்கிய மற்றும் ஒரு அரிய பங்கினை வகிக்கிறது.</p> <h3 style="text-align: justify;">இயந்திரமயமாக்குதல் - பொருள்</h3> <p style="text-align: justify;">அலுவலக இயந்திரமயமாக்குதல் என்பது அலுவலக நிர்வாகச் செயல்பாட்டினை இயந்திரங்கள் மற்றும் கருவிகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் எளிமைப்படுத்துவதற்காகத் தான். அலுவலக இயந்திரமயமாக்குதல் அலுவலக பணியாளர்களின் சில பணிகளை ஏற்றுக் கொள்கிறது. உதாரணமாக கணிப்பொறி பணியாளர்களுக்கு உதவுவது மட்டுமல்லாமல் மனித பலத்தால் முன்பு செய்யப்பட்ட சில பணிகளையும் ஏற்றுக் கொண்டுள்ளது. அலுவலகப் பணிகளைச் செய்ய பொருத்தமான இயந்திரங்களை அறிமுகப்படுத்தும் ஒரு முறைமைப்படுத்தப்பட்ட மற்றும் திட்டமிட்ட முயற்சி என்பது, கைகளால் அல்லது எளிய கருவிகளால் செய்யக்கூடிய வேலைகளை இயந்திரங்கள் மூலம் செய்வதாகும்.</p> <p style="text-align: justify;">ஒரு பெரிய அலுவலகம் உயர்ந்த வகையான மற்றும் விலைமிக்க இயந்திரங்களான கணிப்பொறி போன்றவற்றை உபயோகப்படுத்துகிறது. மற்றபடி சிறிய அலுவலகமானது விலை மலிந்த இயந்திரங்களான தட்டச்சு இயந்திரங்கள், நகல் பொறிகள், மற்றும் கணக்கிடும் கருவிகளை உபயோகிக்கிறது. இதன் மூலமாக அலுவலகப் பணியினை திறமையாகச் செய்ய முக்கியமாகின்றது.</p> <p style="text-align: justify;">நவீன அலுவலகங்கள் செயல்பாட்டை அதிகரிக்கவும், நேரம் மற்றும் பணிக்கான செலவை குறைக்கவும், துல்லியத்தன்மையை உறுதி செய்யவும் மற்றும் மோசடிகளை அகற்றி பாதுகாப்பு அளிக்கவும் இயந்திரமாக்குதலையே விரும்புகின்றன. பொறிகள் மூலம் செய்யப்படும் பணி அழகாகவும் தெளிவாகவும் இருக்கிறது. மேலும் துரிதமான முடிவுகளுக்கும் உதவி புரிகிறது. இயந்திரங்கள் வேளை பளுவை சமாளிக்க மட்டும் நிறுவப்படுவதில்லை, விளைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களைக் கொண்டுவருவதற்கும் உதவுகிறது.</p> <p style="text-align: justify;">இயந்திர செயல்பாட்டிற்கு மாறுவதற்கு நிறைய முதலீடு தேவைப்படுகிறது. அவை இயந்திரங்கள், சாதனங்கள் மற்றும் உபகரணங்கள் போன்ற முதலின சொத்துக்களால் செய்யப்படுவதாகும். இதனால் பராமரிப்பு, இயந்திரங்கள் பழுதுபார்ப்பு, காப்பீட்டு முனைமம், இயந்திரங்களுக்கு இடவசதி, எழுதுபொழுள் போன்ற கூடுதல் செலவுகளும் ஏற்படுகின்றன. இயந்திரங்கள் சிறந்த வல்லுநர்களால் இயக்கப்படவேண்டும். மற்றபடி அவர்களுக்கு அதிக சம்பளம் கொடுப்பது செலவுகளை அதிகரிக்கிறது. கணிப்பொறி போன்ற உயர்ந்த ரக இயந்திரங்களுக்கு சிறந்த இடவசதியும் நல்ல பராமரிப்பும் தேவைப்படுவதால் செலவு அதிகமாகிறது. ஆதலால் அலுவலக செயலாக்கத்தை இயந்திரப்படுத்தும் முடிவினை உரிய செலவுகள் சார்ந்த பரிசீலனைகள் மேற்கொண்டபின்னர் செய்யவேண்டும்.</p> <h4 style="text-align: justify;">இயந்திரமயமாக்குதலின் நோக்கங்கள்</h4> <p style="text-align: justify;">இயந்திரமயமாக்குதல் கீழ்க்கண்ட நோக்கங்கள் கொண்டதாகும்.</p> <ol style="text-align: justify;"> <li><strong>வேலையைக் குறைக்கிறது :</strong> இயந்திரமயமாக்குதல் வேலையை குறைத்தலை குறிகோளாகக் கொண்டுள்ளது. இது மொத்த சம்பள பட்டியலை குறைக்கும் அல்லது அதே எண்ணிக்கையிலான ஊழியர்களை அதிக பளுவான வேலையை செய்யமுயற்சிக்கும்.</li> <li><strong>நேரத்தை மிச்சப்படுத்துகிறது:</strong> இயந்திரமயமாக்குதலின் மற்றொரு குறிக்கோள் நேரத்தை மிச்சப்படுத்துவதாகும். பல மணி நேரங்களை எடுக்கும் ஒரு வேலையினை இயந்திரங்களைக் கொண்டு மிகவும் துரிதமாக முடிக்க இயலும்.</li> <li><strong>துல்லியம்:</strong> இயந்திரங்களைக் கொண்டு செய்யும் பணி மிகவும் துல்லியமாக இருப்பதால் இது மற்றொரு நோக்கமாக அமைகிறது.</li> <li><strong>சலிப்பை அகற்றுகிறது:</strong> ஒரே மாதிரியான பணிகள் திரும்பத் திரும்பச் செய்யப்படும் பொழுது சலிப்பை ஏற்படுத்துகின்றது. அவ்வமயம் அலுவலகக் கருவிகள் பயன்படுத்தப்படுவதால் சலிப்பு நீங்குகிறது.</li> <li><strong>தரப்படுத்துதல்</strong> : வேலை நடைமுறைகளை தரப்படுத்துதல் அலுவலக கருவிகளின் உதவியால் சிறப்பாக அடைய இயலுகிறது.</li> <li><strong>மோசடிகளைக் குறைக்கிறது</strong>: இயந்திரமயமாக்குதல் மூலமாக அலுவலகப் பணிகளில் ஏற்படும் மோசடிகளைக் குறைக்க இயல்கிறது.</li> <li><strong>விவரங்களையும் உண்மைகளையும் சேமிக்கிறது :</strong> கணிப்பொறி போன்ற கருவிகள் விவரங்களையும், உண்மைகளையும் வருங்கால உபயோகத்துக்காக சேமித்துவைக்கிறது.</li> <li><strong>உண்மைகளையும், விவரங்களையும் விவரித்துச் சொல்கிறது </strong>கணிப்பொறி போன்ற இயந்திரங்கள் சாத்தியங்களையும், விவரங்களையும் துரிதமான முடிவுகளை எடுக்கவும், கட்டுப்படுத்தவும் வழிவகுக்கிறது.</li> </ol> <h4 style="text-align: justify;">இயந்திரமயமாக்குதலின் நன்மைகள்</h4> <p style="text-align: justify;">நவீன அலுவலக நிர்வாக செயல்பாட்டில் இயந்திரமயமாக்குதல் ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது. கீழ்க்கண்டவை இதன் நன்மைகள் ஆகும்.</p> <ol style="text-align: justify;"> <li><strong>நல்ல தரமான பணி:</strong> கருவிகள் வேலையின் தரத்தை உயர்த்தி, முறையான பணி செயல்பாட்டிற்கு உதவுகிறது.</li> <li><strong>குறைந்த செயல்பாட்டுச் செலவு:</strong> ஒரு மணி நேரத்திற்கான செயல்பாட்டுச் செலவு இயந்திரமயமாக்குதல் மூலமாக குறைகிறது. ஆனால் இதற்கு ஆரம்ப கட்டத்தில் பெரிய அளவிளான தொடக்க முதலீடு தேவைப்படுகிறது. நீண்டகால முதலீடு நீண்டகாலம் பயன்தரும் வகையில் அமைகிறது.</li> <li><strong>அதிக திறமை அலுவலகக் கருவிகள்</strong> அனைத்து விதமான அலுவலக பணிகளுக்கும் துரிதம் மற்றும் திறமையை அளிக்கிறது. ஆள்பலத்தால் செய்ய பல மணி நேரம் எடுக்கும் பணிகளை குறைந்த நேரத்தில் கருவிகளைக் கொண்டு முடிக்கலாம். முன்னேறும் திறன் மூலமாக இலாபம் அதிகரிப்பது மட்டுமல்லாமல் அமைப்போடு இணைந்து இருப்பவர்களின் மனதில் ஒரு நல்ல எண்ணத்தை உருவாக்குகிறது.</li> <li><strong>சிறந்த துல்லியம் :</strong> கருவிகள் மூலமாகச் செய்யும் பணிகள் நல்ல துல்லியத் தன்மையை உறுதி செய்கிறது. தகவலுக்கான சாத்தியங்கள் அகற்றப்படுகின்றன. ஆதலால் பணி தடையில்லாமல் சீராக செல்கிறது. தடைகளும் தாமதங்களும் குறைக்கப்படுகின்றன.</li> <li><strong>கட்டுப்படுத்தும் வசதி :</strong> இயந்திரங்கள் மூலமாக மேலாளர்கள் தங்கள் கட்டுப்பாட்டை கீழ்ப் பணியாளர்களிடம் சிறந்த முறையில் செய்ய இயல்கிறது. உதாரணமாக உள்வரும் அட்டைகள் மூலமாக பணியாளர்களின் உரியவருகை (அணுகு) நேரங்கள் கண்காணிக்கப்படுகிறது.</li> <li><strong>அலுவலக நடைமுறையைத் தரப்படுத்துவதற்கு உதவுதல் :</strong> இயந்திரமயமாக்குதல் மூலமாக அலுவலக வாலாயங்களையும் நடைமுறைகளையும் தரப்படுத்த இயல்கிறது. இதன் மூலமாக சிறந்த ஒருங்கிணைப்பு உருவாகிறது.</li> <li><strong>சலிப்பிலிருந்து விடுபட இயல்கிறது:</strong> இயந்திரமயமாக்குதல் ஒரே மாதிரியான செயல்பாட்டைக் குறைக்கிறது. அவை ஆர்வமின்மையும் நேரத்தை அதிகமாக செலவழிக்கும் பணிகளை உள்ளடக்கியது. இவற்றின் மூலமாக அலுவலக வேலையாட்கள் ஒரே மாதிரியான செயல்பாட்டை செய்வது குறைகிறது.</li> </ol> <h4 style="text-align: justify;">இயந்திரமயமாக்குதலின் குறைபாடுகள்</h4> <p style="text-align: justify;">இயந்திரமயமாக்குதல் பல்வேறு நன்மைகளை அளித்தாலும் பல குறைபாடுகளையும் கொண்டுள்ளது. அவை கீழ்க்கண்டவாறு உள்ளன.</p> <ol style="text-align: justify;"> <li><strong>பொருத்துவதில் அதிகச் செலவு :</strong> பெரும்பாலான நவீனக் கருவிகளுக்கு அதிக முதலீடு தேவைப்படுகிறது. ஆதலால் சிறிய நிறுவனங்கள் அதிகமான கட்டுப்பாடுகளின் நன்மைகளைப் பெறமுடியாது.</li> <li><strong>அதிக செயல்பாட்டுச் செலவு:</strong> சில கருவிகளையும் இயந்திரங்களையும் செயல்படுத்துவதற்கு அதிக செலவாகிறது.</li> <li><strong>பழுது பார்ப்பதில் அதிக செலவு :</strong> இயந்திரங்கள் செயலிழக்கும் போது அவற்றை சீராக்கிப் பொருத்துவதற்கு அதிக செலவாகிறது. மேலும் வேலையின் ஓட்டம் தடைபடுகிறது.</li> <li><strong>ஒரே மாதிரியான செயல்பாட்டினால் ஏற்படும் பிரச்சினை:</strong> அலுவலக கருவிகளால் வேற்றுமை தன்மையில்லாத செயல்பாடுகள் உருவாகின்றன. இது ஒரு பிரச்சனையாகும். (உ.ம்) உற்பத்தி துறையில் கருவிகளைப் பயன்படுத்துவதால் ஆட்கள் அப்புறப்படுத்தப்படுகிறார்கள். எனவே ஒரே மாதிரியான செயல்பாடு புழக்கத்தில் வருகிறது. இது ஒரு பெரும் பிரச்சினையாக அமைகிறது. கருவிகளுக்கு புத்தாக்க உணர்வும் தன்னார்வ முயற்சியும் கிடையாது. இது ஒரு குறைபாடாகும்.</li> <li><strong>அலுவலக பணியாளர்களுக்கு பயிற்சியளிப்பதில் பிரச்சினை :</strong> அலுவலக பணியாளர்களுக்கு அலுவலக கருவிகளை உபயோகிக்க பயிற்சி அளித்தல் வேண்டும். வசதியான கருவிகள் இருக்கும் இடத்தில் இப்பயிற்சி கூடுதல் செலவை நிறுவனத்துக்கு அளிக்கிறது.</li> <li><strong> அலுவலகப் பணியாளர்களின் தனிமை :</strong> கணிப்பொறி போன்ற உயர்ந்த ரக கருவிகளை அறிமுகப்படுத்தும்போது பணியாளர்கள் எதிராகவே செயல்படுகின்றனர். இது நம் நாட்டில் உள்ள ஒரு பொது அனுபவமாகும். ஆதலால் ஒரு அமைப்பின் தொழில் அமைதி பாதிக்கப்படும்.</li> <li><strong>கருவிகளை உபயோகிக்காமல் இருத்தல் :</strong> பல விலைமதிப்பு மிக்க கருவிகள் தினந்தோறும் உபயோகிக்கப்படுவதில்லை. அவை சில நேரங்களில் மட்டுமே பயன்படுகின்றன. அதே போல சில இயந்திரங்கள் தொடர்ச்சியாக செழிப்பான வியாபார காலங்களிலேயே பயன்படுகின்றன. எவ்வாறாயினும், ஒரு பலனுள்ள முதலீட்டிற்கு அவ்வியந்திரம் தொடர்ந்து பயன்படுத்தப்பட வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஒரு கருவியை உரித்தான முதலீட்டாக்க தினந்தோறும் தொடர்ச்சியாக பயன்படுத்தத் தேவையில்லை.</li> <li><strong>அலுவலக முறையில் குறைந்த நெகிழ்வுத் தன்மை:</strong> இயந்திரமயமாக்குதல் குறைந்த நெகிழ்வுத் தன்மைக்கு வழி வகுக்கிறது. உதாரணமாக கணக்கிடும் முறையை இயந்திரமயமாக்குவதன் மூலம் பல கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டி உள்ளது. இது இயந்திரமயமாக்கலுக்கு முன்பு இவ்வாறு இல்லாமல் இருந்தது.</li> <li><strong>பயனற்றுப் போகும் ஆபத்து :</strong> பல கருவிகள் பயனற்றுப் போகும் ஆபத்து பெரும்பான்மையாக உள்ளது. கருவியும் அதன் முறையும் காலப் போக்கில் பயனற்றுப் போகும் நிலை உள்ளது. இதை தவிர்க்க உலகளாவிய நிலையில் பயன்படும் கருவிகளை மட்டுமே வாங்க வேண்டும்.</li> <li><strong>அதிகமான பணியாளர்கள் :</strong> பல கருவிகளுக்கு பயிற்சி பெற்ற வல்லுநர்களே தேவைப்படுகின்றனர். அவர்கள் இல்லாத பட்சத்தில் வேலை குவிந்துவிடுகின்றது. இதைத் தவிர்க்க இரண்டு இயக்குவிப்பவர்களை பயிற்சி அளிப்பதன் மூலமாக ஒருவர் இல்லாத பட்சத்தில் மற்றொருவர் சமாளிப்பார்.</li> <li>இயந்திரங்களின் ஆதிக்கம் : ஒரு அமைப்பின் பணியாளர்கள் இயந்திரங்களுக்கு துணைப் பணியாளர்களாக இருத்தல் கூடாது. செய்யும் வேலையின் திறனை விட கருவிகளை மிகவும் முக்கியத்துவமாக கருதும் ஒரு சூழ்நிலையை தவிர்க்க போதிய கவனம் செலுத்துதல் வேண்டும்.</li> </ol> <h3 style="text-align: justify;">அலுவலக சாதனங்களைத் தேர்ந்தெடுக்கும் போது பின்பற்ற வேண்டிய தத்துவங்கள்</h3> <p style="text-align: justify;">ஒரு கருவிக்கு ஒரு குறிப்பிட்ட செயலை செய்ய வேண்டிய கட்டாயம் இருக்கும் பொழுது அடுத்த கட்ட நடவடிக்கை அதில் சிறந்த கருவியை வாங்க வேண்டும் என்று தீர்மானித்து அக்காரணத்தை நிறைவேற்றுவதாகும். பல இயந்திரங்களும், கருவிகளும் சந்தையில் கிடைப்பதால் அவற்றில் சரியான ஒன்றை மிகுந்த கவனத்துடன் தேர்ந்தெடுத்தல் வேண்டும். சரியான தேர்ந்தெடுப்பு இல்லையென்றால் அது மிகவும் செலவு மிகுந்ததாகவும், தொந்தரவு தரக்கூடிய வகையிலும் அமைந்துவிடும். கீழ்க்காணும் தத்துவங்களை அலுவலக இயந்திரங்கள் மற்றும் கருவிகளை தேர்ந்தெடுக்கும்பொழுது பின்பற்றுவது மிகுந்த பயனளிக்கும்.</p> <h4 style="text-align: justify;">செலவுத்தத்துவம்</h4> <p style="text-align: justify;">நாம் வாங்கும் கருவியோ அல்லது இயந்திரமோ குறைந்த விலை உடையதாக சூழ்நிலைக்கேற்ப இருத்தல் வேண்டும். ஒரு இயந்திரத்தின் விலை இரண்டு வடிவங்களை உள்ளடக்கியது. அவை தொடக்கச் செலவு மற்றும் செயல்பாட்டுச் செலவுகளாகும். ஒரு இயந்திரம் விலை உயர்ந்ததாக இருந்தால் அதன் செயல்பாட்டுச் செலவு குறையும். ஆதலால் அவ்வாறான கருவிகளைத் தேர்ந்தெடுக்கலாம். ஆனால் எக்காரணத்தைக் கொண்டும் தரத்தை தியாகம் செய்ய இயலாது.</p> <h4 style="text-align: justify;">தரத்தத்துவம்</h4> <p style="text-align: justify;">இயந்திரங்கள் மற்றும் கருவிகள் மிகுந்த தரமிக்கவையாக இருத்தல் வேண்டும். அப்பொழுது தான் பணியின் தரம் உயர்வாக இருக்கும்.</p> <h4 style="text-align: justify;">மிகுந்த பலனளிக்கும் தத்துவம்</h4> <p style="text-align: justify;">அலுவலக இயந்திரங்கள் கட்டாயமாக மிகுந்த அளவு பலனை அளித்தல் வேண்டும். ஏனென்றால் அவைகளுக்காக அதிக செலவு செய்யப்படுகிறது.</p> <h4 style="text-align: justify;">பொருந்தும் தத்துவம்</h4> <p style="text-align: justify;">அலுவலக கருவிகள் எந்த காரணங்களுக்காகவும், செயல்பாட்டுகளுக்காகவும் வாங்கப்பட்டனவோ அந்த நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் செயலாற்ற வேண்டும். அவைகளை வெறும் அந்தஸ்து காரணத்திற்காக வாங்க வேண்டிய கட்டாயம் இல்லை.</p> <h4 style="text-align: justify;">ஏற்றுக்கொள்ளும் மற்றும் பல பயன்பாட்டுத்தத்துவம்</h4> <p style="text-align: justify;">இயந்திரங்களை நிறுவும் பொழுது அவை பல பயன்பாடுகளுக்கு உதவும் வண்ணம் அமைத்தல் வேண்டும். இதன் மூலமாக வீணாக இருக்கும் நேரம் (Idle time) குறைக்கப்படுகிறது. மேலும் இயந்திரங்கள் அதிக நேரம் இயக்கப்படுகின்றன. இதன் உட்பொருள் என்னவென்றால் இயந்திரங்கள் எடை குறைவாக இருக்க வேண்டும். அப்பொழுதுதான் அவைகளை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு சுலபமாக நகர்த்த இயலும்,</p> <h4 style="text-align: justify;">தரப்படுத்தும் தத்துவம்</h4> <p style="text-align: justify;">ஒரே மாதிரியான கருவிகளையும், இயந்திரங்களையும் வாங்க வேண்டும். தரப்படுத்துதல் மூலமாக பின்வரும் பயன்கள் நிறுவனத்துக்குக் கிடைக்கின்றது.</p> <ol style="text-align: justify;"> <li>அதிக கொள்முதல் மூலமாக குறைந்த விலைகள்</li> <li>இயந்திரங்களின் ஓரிரு தயாரிப்புகளை (brand) மட்டுமே பழுதுபார்ப்பதால் பராமரிப்புச் செலவு குறைகிறது.</li> <li>இயக்குபவர்களுக்கு எளிய மற்றும் சுலபமான பயிற்சி அளித்தல்.</li> <li>ஓரிரு தயாரிப்புகளில் உள்ள இயந்திரங்களில் மட்டுமே படிவங்களை பொருத்துவதால் படிவக்கொள்முதல் எளிதாகிறது.</li> <li>இயந்திரங்களின் மீதான தேய்மானத்தைக் கணக்கிடுவது எளிதாகிறது.</li> <li>பல்வேறு பணியாளர் தொகுதிகளில் உள்ள பணிப் பங்கேற்பை கணக்கெடுக்க நிர்வாகத்துக்கு உதவிசெய்தல்.</li> </ol> <h4 style="text-align: justify;">முழுவதுமாக உபயோகிக்கும் தத்துவம்</h4> <p style="text-align: justify;">இயந்திரங்களை முழு உபயோகத்துக்கு உட்படுத்த வேண்டும். அவைகளை வாங்கும் பொழுது பயன்படும் அளவுக்கும் செலவுக்கும் ஒரு தொடர்பை ஏற்படுத்தி ஆராய வேண்டும்.</p> <h4 style="text-align: justify;">உழைக்கும் திறன் தத்துவம்</h4> <p style="text-align: justify;">ஒரு இயந்திரம் நீண்ட நாள் உழைக்கக்கூடியதாக இருத்தல் வேண்டும். அவைகளுக்கு அதிக ஆயுள் மட்டுமல்லாமல் அடிக்கடி பழுதாகாமல் இருத்தல் வேண்டும்.</p> <h4 style="text-align: justify;">போதுமான அளவு தத்துவம்</h4> <p style="text-align: justify;">ஒரு துறைக்கு தேவையான கருவிகள் போதுமளவுக்கு கொள்முதல் செய்யப்பட வேண்டும். ஒரு கருவியை ஒரு துறையிலிருந்து மற்றொரு துறைக்கு அடிக்கடி மாற்றம் செய்வது அதிக பிரச்சினைகளை கொண்டு சேர்க்கும்.</p> <h4 style="text-align: justify;">குறைந்த கொள்ளளவுத்தத்துவம்</h4> <p style="text-align: justify;">நவீன அலுவலகங்களில் பயன்படுத்தப்படும் இயந்திரங்கள் குறைந்த அளவு இடம், மேசை மற்றும் அலமாரிகளை மட்டுமே ஆக்ரமிக்க வேண்டும். இதில் மேசையளவும் அறை அளவும் அடங்கும். பெரிய மற்றும் அதிக எடையுள்ள இயந்திரங்கள் மிகுதியான இடத்தை அடைப்பதால் இது மேலும் நிறுவனத்தின் மறைமுக செலவை அதிகரிக்கிறது.</p> <p style="text-align: justify;">நேரம் மற்றும் உழைப்பை சேமிக்கும் சாதனங்களின் வகைகள்</p> <p style="text-align: justify;">நவீன அலுவலகத்தில் பயன்படுத்தப்படும் இயந்திரங்கள் மிகுந்த அளவில் உள்ளன. இவ்வியந்திரங்களை கீழ்க்காணும் வகையில் பலபிரிவுகளாக பகுக்கப்படுகின்றன.</p> <ol style="text-align: justify;"> <li>தொடர்பு இயந்திரங்கள் : தொலைபேசி, கைபேசி, உள் தொடர்பு முறை மற்றும் சொல்வதை பதியும் பொறி</li> <li>படியெடுக்கும் இயந்திரங்கள் : தட்டச்சு இயந்திரம், படியெடுக்கும் கருவி, முகவரி பதிக்கும் பொறி, புகைப்படக் கருவி.</li> <li><strong>கணக்குப் பதியும், அட்டவணை படுத்தும் மற்றும் கணக்கிடும் கருவிகள் :</strong> கூட்டும் பொறி, கணக்கீட்டுப் பொறி, ரொக்கப் பதிவேடு, விலைப்பட்டியல் இயந்திரம். கணக்குப் பதிவியல் பொறி, அட்டவணையிடும் கருவி மற்றும் கணிப்பொறி ஆகும்.</li> <li>இதர இயந்திரங்கள் அஞ்சல் வில்லை பதிக்கும் பொறி, நேரத்தை பதியும் பொறி, சம்பளப் பட்டியல் இயந்திரம், தபால் வில்லை ஒட்டும் இயந்திரம் மற்றும் கணக்கிடும் பொறிகள் போன்றவை.</li> </ol> <h3>தொடர்புகொள்ளும் இயந்திரங்கள்</h3> <p style="text-align: justify;"><strong>தொலைபேசி </strong></p> <p style="text-align: justify;">ஒவ்வொரு பெரிய வியாபார ஸ்தாபனங்களிலும் தொலைபேசி உள்முறையிலும் மற்றும் இதர அமைப்புகளுடனும் இணைக்கப்பட்டுள்ளது. இவ்வசதியால் ஒரு நிறுவனத்திற்கு வெளியுலகத்துடன் ஒரு சரியான தகவல் தொடர்பு முறை ஏற்படுகிறது. பெரிய நிறுவனங்களில், பயிற்சி பெற்ற தொலைபேசி இயக்குபவர்கள் மூலமாக, தொலைபேசியில் வருகின்ற அழைப்புக்களை பெறுவதும், உள்ளேயிருக்கின்றவர்களை, வெளியே இருக்கின்றவர்களோடு இணைக்கும் தொடர்புப் பணியும் நடைபெறுகிறது.</p> <p style="text-align: justify;">கைப்பேசி</p> <p style="text-align: justify;">மாறும் உலகில் மாறும் சூழ்நிலைக்கேற்ப தொடர்பு கொள்ளுவது மிகவும் அவசியமான ஒன்றாக அமைந்து விடுகிறது. கைப்பேசி இந்தத் தேவையை முழுவதுமாக தீர்த்து வைக்கிறது. யார் வேண்டுமானாலும் உலகின் எந்த மூலைக்கு வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளலாம். மேலும் வணிகங்கள் கைப்பேசியுடன் நெருங்கிய உபயோகிப்பாளர் குழு (closed user group) வசதியுடன் இணைப்பு கொடுப்பதால் சில பணியாளர்கள் ஒருவருடன் ஒருவர் அக்குழுவில் குறைந்த செலவில் தொடர்புகொள்ள இயல்கிறது.</p> <p style="text-align: justify;"><strong>உள் தகவல் தொடர்பு சாதனம் (Intercom) </strong></p> <p style="text-align: justify;">உள்தொடர்பு முறை பொதுவாக போதுமான தொலைபேசி விரிவாக்கம் இல்லாத பட்சத்தில் மிகவும் உதவுகிறது. பொதுவாக இம்முறை தானியங்கி பொத்தான்கள் மூலமாக செயல்படுகிறது. இதனால் இதை உபயோகிப்பவர்கள் அலுவலகத்திற்கு உள்ளே எந்த துறைக்கு வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளலாம். ஒரு அதிகாரி அவருடைய பணியாளரை அழைக்கவும் அல்லது ஒருவருக்கொருவர் துரிதமாகவும், அவ்வப்போது தொடர்பு கொள்ளவும் வழிவகுக்கிறது. உள் தகவல்தொடர்புமுறை சாதனங்களில் பல வகைகள் உள்ளன. அவைகள் பொத்தான்களை அழுத்துவதன் மூலம் தொடர்பு கொள்ள முடிகிறது. உள் தகவல் முறையில் எளிதானது ஒரு வழி சாதனம். இதன் மூலமாக அழைப்பவர் மட்டுமே பேச இயலும் அழைப்பவருடைய நுண்பேசி (மைக்ரோ.போனை) கட்டிடத்தில் பல இடங்களில் பொருத்தப்படுகிறது. அழைப்புப் பொத்தான் பொருத்திய இரு வழி தொடர்பினை அனுமதிக்கும் இயந்திரங்கள் இரண்டு தொலைபேசி கருவிகளைப் போன்றது. இரு வழி உள் தொடர்பு முறை ஒரு மதிப்பு மிக்க நேர மிச்சமாக்கி, ஏனென்றால் அலுவலகத்திற்குள்ளேயே ஒருவருக்கொருவர் ஒரே இடத்தில் இருந்தே எங்கும் செல்லாமல் உடனடிக் கலந்தாய்வு மேற்கொள்ள உதவிபுரிகிறது.</p> <p style="text-align: justify;"><strong>சொல்வதைப் பதியும் பொறி </strong></p> <p style="text-align: justify;">பொதுவாக சுருக்கெழுத்தரிடம் தான் கடிதங்கள் சொல்லப்படுகின்றன. இதற்கு அதிகாரியும் சுருக்கெழுத்தரும் ஒரே இடத்தில் இருக்க வேண்டும். பல காரணங்களால் இது அனைத்து நேரங்களிலும் சாத்தியமானதல்ல. ஆதலால் அதிகாரி அவர் சொல்ல வேண்டுவதை சொல்வதைப் பதியும் பொறியில் பதித்துவிட்டு மீதி பணியை தட்டெழுத்தரிடம் விட்டுவிடலாம். இக்கருவிக்கு சொல்வதைப் பதியும் பொறி என்று பெயர். இப்பொறி பின்னர் தட்டெழுத்தரால் இயக்கப்பட்டு தகவல் செய்தியாக மாற்றப்படுகிறது.</p> <h3 style="text-align: justify;">நகலெடுக்கும் அல்லது படியெடுக்கும் பொறிகள்</h3> <p style="text-align: justify;"><strong>தட்டச்சு இயந்திரம்(Typewriter) </strong></p> <p style="text-align: justify;">தட்டச்சு இயந்திரம், ஒரு பழமையான அலுவலக இயந்திரமாகும். இது இன்னமும் சில அலுவலகங்களில் உள்ளது. இவ்வியந்திரம் செய்தியை ஒரு தாளில் தருகிறது. மற்றபடி அச்சு போலவே உள்ளது. இவை மூன்று வகைப்படுகின்றன. மின்தட்டச்சுப்பொறி, தானியங்கி தட்டச்சுப் மற்றும் மின்னணுத் தட்டச்சுப்பொறி.</p> <p style="text-align: justify;">அ) மின்தட்டச்சுப் பொறி : மின்தட்டச்சுப் பொறி தரமான தட்டச்சுப்பொறிகளாகும். இது மின்சார மோட்டார் மூலமாக இயக்கப்படுகிறது. விரல்கள் தொட்டவுடன் அதன் பொத்தான்கள் இயக்கப்பட்டு அவற்றின் அச்சுகள் சீராகவும், நேர்த்தியாகவும் பதியப்படுகின்றன.</p> <p style="text-align: justify;">ஆ) தானியங்கி தட்டச்சுப் பொறி : இவை மின்சாரத்தால் இயக்கப்படுகின்றன மற்றும் ஒரே மாதிரியான நகல்களை தயாரிக்க துரிதமாக உதவுகிறது.</p> <p style="text-align: justify;">இ) மின்னணு தட்டச்சுப்பொறிகள்: இப்பொறி வசதிமிக்க மைக்ரோ-ப்ராசசிங் தொழில்நுட்பத்தை சார்ந்தது. ஒவ்வொரு மின்னணு தட்டச்சுப் பொறியிலும் தகவலை சேமிக்கும் வசதி உள்ளது. இதன் மூலமாக பல தகவல்களை நினைவில் கொண்டு மீண்டும் அச்சடிக்க உதவுகிறது. ஒரு தானியங்கி பொத்தானை அழுத்துவதன் மூலம் இப்பணி செய்யப்படுகிறது.</p> <p style="text-align: justify;"><strong>படியெடுக்கும் பொறி </strong></p> <p style="text-align: justify;">படியெடுக்கும் முறை என்பது ஒரு மூல நகல் வாயிலாக அதிக அளவிலான நகல்களை எடுக்க முடிகிறது. இது அச்சிடுவதற்கு ஒரு பதிலாளியாக திகழ்கிறது. படியெடுக்கும் பொறியில் இரண்டு வகைகள் உள்ளன.</p> <p style="text-align: justify;"><strong>ஆஃப்செட் லித்தோ கிராஃப் </strong></p> <p style="text-align: justify;">இம்முறையில் உலோக தகடுகளைக் கொண்டு மூல நகல் தயாரிக்கப்படுகிறது. பின்னர் அது சுழற்சி முறையில் நகலெடுக்கும் கருவியில் அதிக வேகத்தில் பயன்படுத்தப்படுகிறது. இம்முறை திரும்ப திரும்பப் பயன்படுத்தப்பட்டு ஆயிரக் கணக்கில் நகல்களை எடுக்கவும், கோடு வரைதல்கள் செய்யவும், எந்த வகை தாளிலும் திரும்பப் பெறவும் இயல்கிறது.</p> <p style="text-align: justify;"><strong>அச்சுவகை படியெடுக்கும் கருவி</strong></p> <p style="text-align: justify;">இக்கருவிகள் திரும்பவும் அச்சு இயந்திரங்களாக பழைய வகை அச்சிட்டாளர்களால் உபயோகப்படுத்தப்படுகின்றன. அச்சுக்களைக் கோர்க்கும் செயல்பாடு மிகுந்த நேரத்தை செலவழிப்பதுடன் மிகுந்த திறமை நிறைந்ததுமாகும். ஒருமுறை ஒரு தகவலை அச்சடிக்க கோர்வை தயாரான பின்பு அது மிகவும் தரம் வாய்ந்ததாகவும் நெடு நாளைக்கு பயன்படும்படியும் உள்ளது. இது பொதுவாக கீழ்க்காணும் காரணங்களுக்கு உகந்ததாக உள்ளது.</p> <h3 style="text-align: justify;">கணக்குப்பதியும், அட்டவணைப் படுத்தும் மற்றும் கணக்கீட்டுக் கருவிகள்</h3> <p style="text-align: justify;"><strong>கூட்டல் கருவிகள் </strong></p> <p style="text-align: justify;">கூட்டும் கருவிகள் ஆள்பலம் மூலமோ அல்லது மின்சாரத்தாலோ இயக்கப்படுகின்றன. பெரும்பாலான இயந்திரங்களில் ஒரு தாள் உருண்டை உள்ளது. அதில் படங்கள் தட்டச்சு செய்யப்படுகின்றன. இதற்கு TalyRol என்று பெயர். இது கூட்டல், பெருக்கல், கழித்தல் மற்றும் வகுக்கும் பணியினை மின்சக்தி அல்லது ஆள்பலம் மூலம் செய்கிறது.</p> <p style="text-align: justify;"><strong>கணக்கிடும் பொறிகள் </strong></p> <p style="text-align: justify;">அன்றாட மற்றும் களைப்பை மிகுதியாக்கும் பணியிலிருந்து விடுவிக்கும் ஒரு சிறந்த கருவியாக கணக்கிடும் பொறி அமைகிறது. இது வணிக விருத்திக்கு மிகுந்த பங்கு ஆற்றுகிறது. இப்பொறி மூலமாக பணியாளர்களை குறைத்து, பணித்திறமையை அதிகரிக்கச் செய்யலாம்.</p> <p style="text-align: justify;">இப்பொறி மூலம் கூட்டல், கழித்தல், பெருக்கல் மற்றும் வகுத்தல் செயல்பாடுகளை திறமையாக செய்ய முடிகிறது. இது மிக துரிதமாக செயல்படுவதுடன், எந்த சத்தமும் இல்லாமல் இயக்கப்படுகிறது. ஆனால் இது மிகவும் விலை மிகுந்தது.</p> <h3 style="text-align: justify;">ரொக்கப்பதிவேடு மற்றும் நாணயங்களைக் கையாளும் பொறி</h3> <p style="text-align: justify;">ரொக்கப்பதிவேடு இரசீதுகளை அச்சடிக்கவும், கணக்கு சீட்டுகள் மற்றும் விற்பனை ஆய்வுக்கு உதவுகிறது. இவ்வகைப் பொறி மூலமாக வியாபார ரொக்க நிகழ்வுகளை நாடாவில் பதிவு செய்து, அச்சிட்ட சீட்டுக்களை தயாரிக்கிறது. இப்பொறி பொத்தான்களால் இணைக்கப்பட்டு மின்சாரத்தால் இயக்கப்படுகிறது.</p> <p style="text-align: justify;"><strong>நாணயத்தைக் கையாளும் இயந்திரம்</strong></p> <p style="text-align: justify;">சில்லறை அங்காடிகள், இரயில்வே பயணச் சீட்டுகளை பதியும் அலுவலகங்கள் போன்ற இடங்களில் நாணயங்களை கையாளும் பொறிகள் தேவைப்படுகின்றன. இதன் மூலமாக நாணயங்களை பதிவு செய்து, வரிசைப்படுத்தி, தேக்கி மற்றும் பல எண்ணிக்கையில் உள்ள நாணயங்களை தகுந்தவாறு தேவைப்படும் போது திருப்பியளிக்கிறது. வாடிக்கையாளர்களுக்கு தேவைப்படும் மீதி தொகையை அளித்து அனைத்து வகையான ரொக்க இரசீதுகளையும் ரொக்கப் பதிவேட்டில் பதிவுசெய்யலாம்.</p> <p style="text-align: justify;"><strong>பட்டியலிடும் பொறிகள்</strong></p> <p style="text-align: justify;">பட்டியலிடும் பொறிகள் விலைப்பட்டியல், கப்பல் இரசீது மற்றும் ரொக்க நினைவூட்டி போன்றவைகளைப் பதிவு செய்ய உதவுகிறது. இப்பொறியில் அனைத்து வகையான தள்ளுபடிகள், கழிவுகள், கூட்டல், கழித்தல் மொத்தம் போன்ற அனைத்து செயல்பாடுகளும் உள்ளன. தாள்களும், படியெடுக்கும் தாள்களும் உள்ளே செலுத்தப்பட்டு தானியங்கியால் பொருத்தப்படுகின்றன.</p> <p style="text-align: justify;"><strong>கணக்குப் பதியும் பொறி </strong></p> <p style="text-align: justify;">கணக்குப் பதியும் பொறிகள், தட்டச்சுப் பொறிகளோடு ஒப்பிட்டுப் பார்க்கப்படுகின்றன. இந்த கருவிகள் மூலமாக</p> <ol style="text-align: justify;"> <li>குறிப்பேடுகள், ரொக்க கையேடு மற்றும் பேரேடு பதிவு செய்தல்</li> <li>காசோலைகள், சம்பளப் பட்டியல், ரொக்க இரசீதுகள் மற்றும் செலுத்தும் பட்டியல்களை தயார்செய்தல்</li> <li>கணக்குகளை சரிப்பார்த்து, பேரேட்டில் பதிவு செய்தல் மற்றும் ரொக்க ஏட்டின் மீதியை சரிப்பார்த்தல் போன்றவை கையாளப்படுகின்றன.</li> </ol> <p style="text-align: justify;"><strong>அட்டவணைப் படுத்தும் பொறிகள் </strong></p> <p style="text-align: justify;">இவை கூட்டும் இயந்திரங்கள் மற்றும் பிரித்து வகைப்படுத்தும் சாதனங்களின் கலப்பு இயந்திரம் ஆகும். இதில் இரு செயல்பாடுகள் உள்ளன. தகவலை பல பிரிவுகளக பிரித்து சேகரிப்பது மற்றும் மொத்த ரொக்க விற்பனையை கணக்கீடு செய்வது. புள்ளியியல் விவரங்களை அட்டவணைப்படுத்த இப்பொறி அட்டைகளை துளையிட்டு, அடுக்கி தாள்களில் குறுக்கும் நெடுக்குமாக அச்சிடுகிறது. அதிக அளவிலான தகவல்களை தினந்தோறும் பெறும் அலுவலகங்களுக்கு இம்முறையிலான தானியங்கி அட்டவணைப்படுத்தும் இயந்திரங்கள் மிகுந்த அளவில் பயன்படுகின்றன.</p> <h3 style="text-align: justify;">மின்னணு கணிப்பொறி</h3> <p style="text-align: justify;">நீண்ட பட்டியலில் உள்ள அலுவலக கருவிகளுக்கு இந்த இயந்திரம் ஒரு புதிய வரவாகும். இது ஒரு பொதுப்படையான கருவியாகும். இதன் மூலமாக பல அலுவலக செயல்பாடுகளை அதிவிரைவாக செய்யமுடியும். இந்த மின்னணு சாதனம் மூலமாக விவரங்களை அதிவிரைவாக மின்னணு மூலமாக பதனிடமுடிகிறது.</p> <p style="text-align: justify;">இது முழுமையான செயல்பாட்டு முறையை, தானே சமாளிக்கும் ஆற்றலுடையது மற்றும் தானாகவே ஒரு செயல்பாட்டு முறையிலிருந்து மற்றொரு செயல்பாட்டுக்கு வரிசைப்படி மாறக்கூடியது. மேலும் மாற்று செயல்பாட்டு முறைகளை தானாகவே விவரங்கள் பெற்றதன் அடிப்படையிலும் முந்தைய செயல்பாட்டு அனுபவத்தின் அடிப்படையிலும் தேர்ந்தெடுக்கிறது. மின்னணு கணிப்பொறியானது மனித மூளையின் மறு பிரதி. இது தவறுகளுக்கான வாய்ப்பைக் குறைக்கிறது. மேலும் இது ஒரு ஒருங்கிணைக்கப்பட்ட அணுகுமுறையை அமைப்பிலுள்ள பல்வேறு செயல்பாட்டு முறைமைகளுக்கு வழங்குகிறது. கணிப்பொறியின் விவரங்களை பதனம் செய்ய உபயோகிப்பது மின்னணு விவரப்பதனமாகும்.</p> <p style="text-align: justify;">கணிப்பொறி இரண்டு வகைப்படுகின்றன. ஒன்று அனலாக் கணிப்பொறி மற்றொன்று டிஜிட்டல் கணிப்பொறி, அனலாக் கணிப்பொறிகள் விஞ்ஞான மற்றும் ஆராய்ச்சி விவரங்களை பதனம் செய்கிறது. டிஜிட்டல் கணிப்பொறி மூலம் விவரங்களை ஒரு நொடியில் ஒரு பில்லியனில் கணித்துத்தருகிறது.</p> <h4 style="text-align: justify;">கணிப்பொறியின் பணிகள்</h4> <p style="text-align: justify;">ஒரு கணிப்பொறி கீழ்க்காணும் பணிகளை செய்கிறது.</p> <ul style="text-align: justify;"> <li>இது நிகழ்ச்சி நிரல் மூலமாக ஆலோசனைகளைப் பெற்று, அவற்றை தேக்கி வைத்து தேவைப்படும்போது அவ்விவரங்களை அளிக்கிறது</li> <li>இது கணக்குச் சம்பந்தப்பட்ட அனைத்து செயல்பாடுகளையும் கணிக்கிறது.</li> <li>இது விவரங்களை சேமித்து வைக்கும் இடமாக விளங்குகிறது மற்றும் தேவைப்படும் பொழுது அளித்து உதவுகிறது.</li> <li>விவரங்களை தேவைப்படும் வகையில் வரிசைப்படி ஒழுங்குபடுத்துகிறது. பல்வேறு வகையான செயல்பாடுகளை மதிப்பீடு செய்ய இயல்கிறது.</li> <li>கணிப்பொறியில் ஏற்றப்படுகிற விவரங்களை சரிபார்த்து அதில் ஏதாவது தவறுகள் இருந்தால் அவற்றைச் சுட்டிக்காட்டுகிறது.</li> </ul> <h4 style="text-align: justify;">கணிப்பொறியின் நன்மைகள்</h4> <ul style="text-align: justify;"> <li>கணிப்பொறிகள் அதிக அளவிலான விவரங்களை சேமித்து வைக்கிறது.</li> <li>விவரங்கள் மிகவும் துரிதமான வகையில் பதனம் செய்யப்படுகின்றன.</li> <li>கணிப்பொறி, பணியாளர்களை அதிக வேலை பளுவிலிருந்து விடுவிடுத்துவிடுகிறது.</li> <li>கணிப்பொறி மறைமுகமாக பணத்தை சேமிக்க உதவுகிறது. ஏனென்றால் அது சரக்கிருப்புகளை கட்டுப்பாடு செய்வது மற்றும் சரக்கிருப்பு மதிப்பீட்டுக்கு உதவுகிறது.</li> <li>கணிப்பொறிகள் ஒருங்கிணைப்புக்கு உதவி செய்கிறது. ஏனென்றால் ஒரு வணிகத்தின் மொத்த விவரமும் அதில் சேமிக்கப்பட்டுள்ளது. அவை அமைப்பின் பல்வேறு கிளைகளில் உள்ள சரக்கிருப்பு நிலைகளை உடனுக்குடன் தெரிவிக்கிறது.</li> <li>கணிப்பொறிகள் மேலாண்மை முடிவுகளை எடுக்க பெரிதும் உதவி புரிகிறது. செயல்பாடுகளை மதிப்பீடு செய்வதன் மூலம் இது சாத்தியப்படுகிறது.</li> </ul> <h4 style="text-align: justify;">கணிப்பொறியின் தீமைகள்</h4> <ul style="text-align: justify;"> <li>கணிப்பொறியை நிறுவுவதற்கு இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு ஆயத்தப் பணி தேவைப்படுகிறது.</li> <li>நிறுவுவதற்கும், பராமரிப்பதற்கும் கணினி ஒரு விலை மிகுந்த சாதனமாகும். இது பெரிய அளவில் உள்ள நிறுவனங்கள் மட்டுமே பயன்படுத்துகின்றனர்.</li> <li>கணினியை இயக்க பயிற்சி பெற்ற பணியாளர்கள் மட்டுமே தேவைப்படுகின்றனர். இதனால் சம்பளச் செலவு அதிகரிக்கின்றது.</li> <li>பராமரிப்புச் செலவு மிகவும் அதிகம். கணிப்பொறி பழுதடைந்தால் அலுவலகத்தின் ஒட்டு மொத்தப்பணியும் தடம்புரளும்.</li> <li>கணிப்பொறி நிறுவுவதற்கு பணியாளர்களிடம் அதிக எதிர்ப்பு இருக்கிறது, ஏனென்றால் அது அவர்களுடைய பணிப்பாதுகாப்பைக் குறைக்கும் என்ற பயஉணர்வு இருக்கிறது. கணிப்பொறிகள் பெரிய தொழில் நிறுவனங்களிலும், அரசுத் துறைகளான இரயில்வே, காவல்துறை போன்றவற்றிலும் மற்றும் கல்வி நிறுவனங்களிலும், ஆராய்ச்சி நிலையங்களிலும், விமானங்களிலும் மிகுந்த அளவு பயன்படுகிறது. கணிப் பொறிகள் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த நேர அட்டவணைகள் தயாரிக்கவும், ஊதிய பட்டியல்களை தயாரிக்கவும், சரக்குகளை மதிப்பீடு செய்யவும், பதிவேடுகள் தினந்தோறும் பராமரிக்கவும், காப்பீட்டு மதிப்பீடுகளை செய்யவும் மற்றும் பல பணிகளுக்கும் உதவுகிறது.</li> </ul> <h3 style="text-align: justify;">மனை அணையங்கள்</h3> <p style="text-align: justify;">வேலை செய்வதில் சிக்கனத்தை கடைப்பிடிப்பதில் மனை அணையங்கள் உதவ வேண்டும். சுவற்றில் கட்டப்பட்ட அலமாரிகள் மூலமாக தேவைப்படும் பொருட்களை தேக்கி வைப்பதால் பணியாளர்கள் அவ்வப்பொழுது எழுந்து நடமாட வேண்டிய அவசியமில்லை. அவ்வகைமனை அணையங்களுக்கு முக்கியத்துவம் அளித்தல் வேண்டும்.</p> <p style="text-align: justify;">தேர்ந்தெடுத்த மனை அணையங்கள் அலுவலகத்தின் பல்வேறு உபயோகத்திற்கு பலனளிக்கக் கூடிய வகையில் இருத்தல் வேண்டும். இதன் மூலம் பல்நோக்கு மனையணையங்களை கொள்முதல் செய்யும் பணி தரப்படுத்தப்பட்டு பல வேலைக்கு ஒரே மனை அணையத்தைப் பயன்படுத்தும் திறன் வளர்க்கப்படுகிறது.</p> <h4 style="text-align: justify;">மனை அணையங்களின் வகைகள்</h4> <p style="text-align: justify;">ஒவ்வொரு வகை அலுவலகத்திற்கும் பல வகையான மனை அணையங்கள் தேவைப்படுகின்றன. மனை அணையங்கள் அவற்றின் புறத் தோற்றம் அதாவது நாற்காலிகள், மேஜைகள் என்று பகுக்கப்படுகின்றன.</p> <p style="text-align: justify;">மற்றொரு பாகுபாடு தேவையின் ரீதியாக உள்ளது (உம்) அதிகாரியின் மனை அணையங்கள், சிறப்புத் தேவை மனை அணையங்கள், கட்டப்பட்ட மனை அணையங்கள், பொது வேலைக்கான மனை அணையங்கள் போன்றவையாகும்.</p> <p style="text-align: justify;"><strong>வேலை மேசை</strong></p> <p style="text-align: justify;">ஒரு அலுவலக பணியாளரின் செயல்பாட்டை தீர்மானிப்பது அவர் உபயோகப்படுத்துகின்ற வேலை மேசையாகும். ஆதலால் அலுவலகப் பணியாளர்களுக்கு சரியாக வேலை செய்ய அவர்களுக்குத் தகுந்த வேலை மேசையை அளிக்க வேண்டும். வேலை மேசையினுடைய முக்கியப் பணியானது எழுதுவதற்கு சரியான இடத்தை கொடுப்பது, சரி செய்வது, அடுக்குவது மற்றும் கூடுமான வரையில் சரிப்பார்ப்பதாகும். கூடுமான வரையில் தேர்ந்தெடுக்கப்படும் வேலை மேசைகள் பல வகையான உபயோகத்திற்கு உதவும் வகையில் இருத்தல் வேண்டும். பல வகையான பணியாளர்களுக்கு அவர்களுடைய பணியின் தன்மை மற்றும் அந்தஸ்த்திற்குத்தகுந்த வேலை மேசைகள் உள்ளன.</p> <p style="text-align: justify;">அ) மேலதிகாரியின் வேலை மேசை : இம்மேசை தனிப்பட்டவரின் விருப்பத்தை மனதில் கொண்டு வடிவமைக்கப் பட்டுள்ளன. மேலும் அவை அந்நிறுவனத்தின் காட்சிப் பொருளாக அமைகிறது. இவைகள் விருந்தினர்களின் எண்ணத்தைக் கவரும் வகையில் உள்ளது. மேலதிகாரியின் மேசை இருவர் அமரும் வகையில் அமைந்துள்ளது மற்றும் கூர்மையான முனைகளும் மூலைகளும் தவிர்க்கப்படுகின்றன. மேசை மேல்புறம் கண்ணாடியால் மூடப்பட்டுள்ளது.</p> <p style="text-align: justify;">ஆ) பொது உபயோக வேலை மேசை : இது ஒரு பொது உபயோக தனியாள் உபயோகிக்கும் மேசை. இதில் விரிவான வடிவமைப்பு எதுவும் இல்லை.</p> <p style="text-align: justify;">இ) கணினி மேசை : கணிணி மேசைகள் பெரும்பாலும் ஒருவர் அல்லது இருவர் உபயோகிக்கும் வகையில் உள்ளது. கணினியை வைக்கவும் கணினியின் விசைப்பலகையை வைக்கவும் இதில் இடமுண்டு.</p> <p style="text-align: justify;"><strong>நாற்காலிகள்</strong></p> <p style="text-align: justify;">நவீன அலுவலகங்களில் பயன்டுத்தப்படும் நாற்காலிகளில் சுழலும் நாற்காலிகள், மர இருக்கை நாற்காலிகள் மற்றும் கணிணி இயக்குபவரின் நாற்காலிகள் அடங்கும். உரிய வகையான நாற்காலிகளை அலுவலக பணியாளர்களுக்கு அளிப்பதன் மூலம் அவர்கள் மிகுந்த வசதியை பெறுகின்றனர். ஏனென்றால் பெரும்பாலான நேரம் அவர்கள் அலுவலகத்திலேயே கழிக்கின்றனர். சரியான நாற்காலிகள் தரப்படாமல் இருந்தால் அவர்களுடைய உடல் நலம் பாதித்து சோர்வடைகின்றனர். இது அவர்களுடைய திறமையை குறைக்கிறது. நாற்காலியின் உயரம், பின்பகுதியின் வளைவு, இருக்கையின் வடிவம் போன்றவை உபயோகிப்பவருக்கு சரியான வகையில் வசதிக் குறைவில்லாமல் அமைய வேண்டும். கணிணி இயக்குபவர்களுக்கு தரப்படும் நாற்காலியின் பின்புறம் சரிசெய்து கொள்ளும் படியிருந்தால்தான் வேலையை திறமையாக செய்ய இயலும்.</p> <h4 style="text-align: justify;">பொருத்துதல்கள் மற்றும் துணைக்கருவிகள்</h4> <p style="text-align: justify;">பொதுவாக அலுவலக பொருத்துதல்களில் மேஜை விளக்கு, தொலைபேசி தாங்கி, குப்பைக் கூடை, அப்புறப்படுத்தும் இயந்திரங்கள் போன்றவையாகும். அவ்வாறான பொருட்களை தேர்ந்தெடுக்கும் போது அதன் நிறத்தை கவனத்தில் கொள்ள வேண்டும். ஏனென்றால் அதனுடைய நிறம் அவ்வலுவலகத்தினுடைய அமைதிச் சூழலை குலைக்கக்கூடாது. பணியாளர்களுக்கு அவர்களுடைய பணியினை திறமையாக செய்ய சில துணைக்கருவிகளை அளிக்க வேண்டும். அவை பேனா தாங்கிகள், அடுக்கும் தட்டுகள், பெட்டிகள், அறைகள் போன்றவையாகும்.</p> <p style="text-align: justify;">நவீன அலுவலகங்களில் பயன்படுத்தும் இயந்திரங்களைக் கீழ்க்கண்டவாறு வகைப்படுத்தலாம்.</p> <p style="text-align: justify;">அறிவுறுத்தும் கருவிகள்((எ.டு) தொலைபேசி, கைப்பேசி), படியெடுக்கும் கருவிகள், தட்டச்சு, முகவரியிடும் கருவி, நகலிடும் கருவி, கணக்குப்பதியும் கருவி, அட்டவணையிடும் மற்றும் கணக்கிடும் கருவிகள், முத்திரையிடும் கருவி, நேரப்பதிவுப் பொறி, சம்பளப்பட்டியல் பொறி, உறையிடும் கருவி.</p> <p style="text-align: justify;">மனையணையங்கள் பணியாளர்கள் பணிபுரியும் அலுவலகச் சூழ்நிலையின் ஒரு அவசியமான பகுதி. மனையணையங்களைத் தேர்ந்தெடுக்கும் போது கவனிக்கவேண்டியவை : நிதி, நீடித்து உழைக்கும் தன்மை, இட சேமிப்பு வசதி, தோற்றம், சுகாதாரம், நல்ல வடிவம், உழைப்பு, சேமிப்பு, அனைத்து நோக்கத்திற்கும் ஏற்றதாக இருத்தல்.</p> <p style="text-align: justify;">ஆதாரம்: தேசிய திறந்த நிலைப் பள்ளி நிறுவனம்</p> </div>