<div id="Middlecolumn_internal"> <p style="text-align: justify;">பொது விநியோகத் திட்டத்தில், அனைத்து மாவட்டத்திலும் போதிய நிதி வசதி மற்றும் உள் கட்டமைப்பு வசதிகளைக் கொண்டுள்ள கூட்டுறவு நிறுவனம் / நிறுவனங்கள், முதன்மைச் சங்கங்களாக செயல்பட்டு பிரதம கூட்டுறவு நிறுவனங்களால் நடத்தப்படும் நியாய விலைக் கடைகளுக்குத் தேவையான உணவுப் பொருட்களை உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையினரின் மாதாந்திர ஒதுக்கீட்டு ஆணையின்படி, தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழக கிடங்குகளிலிருந்து எடுத்து நியாய விலைக் கடைகளுக்கு நகர்வு செய்து வருகின்றன. நியாய விலைக் கடைகளின் மூலம் விநியோகம் செய்யப்படும் உணவுப் பொருட்களுக்கு அரசால் அனுமதிக்கப்படும் விளிம்புத் தொகையை முதன்மைச் சங்கங்களும், இணைப்புச் சங்கங்களும், 40:60 என்ற விகிதத்தில் பங்கிட்டுக்கொள்கின்றன.</p> <h3 style="text-align: justify;">சிறப்பு பொது விநியோகத் திட்டம்</h3> <p style="text-align: justify;">வெளிச்சந்தையில் அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் கட்டுப்படுத்தும் பொருட்டு துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, பாமாயில், ஆகிய பொருட்களை நியாய விலை கடைகள் மூலம் குறைந்த விலையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்க அரசால் முடிவெடுக்கப்பட்டு 14.4.2007 முதல் சென்னையிலும் 1.5.2007 முதல் இதர மாவட்டங்களிலும் செயல்படுத்தப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.</p> <h3 style="text-align: justify;">நியாயவிலைக் கடை மூலம் கட்டுப்பாடற்ற பொருட்கள் விற்பனை</h3> <p style="text-align: justify;">நியாய விலைக்கடைகளில் பொது விநியோகத்திட்டத்தின் கீழ் விற்பனை செய்யும் அத்தியாவசியப் பண்டங்கள் மற்றும் சிறப்பு திட்டத்தின் கீழ் நுகர்பொருள் வாணிபக்கழகத்திலிருந்து பெறப்பட்டு விற்பனை செய்யும் கோதுமை, அரிசி போன்ற பண்டங்களைத் தவிர தேயிலை, சோப்பு மற்றும் காதிப்பொருட்களும் நியாய விலைக்கடையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அப்பொருட்களை நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலைகளிலிருந்து அல்லது பதிவாளரால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திடமிருந்து மட்டுமே வாங்க வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் தனியாரிடமிருந்தோ, பதிவாளரால் அங்கீகரிக்கப்படாத நிறுவனங்களிடமிருந்தோ கட்டுப்பாடற்ற பொருட்களை கொள்முதல் செய்து நியாய விலைக்கடையில் விற்பனை செய்யக் கூடாது.</p> <p style="text-align: justify;">தரமான கட்டுப்பாடற்ற பொருட்கள் நகர்ப்புற மற்றும் கிராமப்புற நுகர்வோருக்கு, குறிப்பாக ஏழைகளுக்கு நியாயமான விலையில் கிடைக்கச் செய்யும் வகையில், நியாயவிலை கடைகளில் விற்பனை செய்யக்கூடிய கட்டுப்பாடற்ற பொருட்களுக்கு 2008 ஆம் ஆண்டு முதல் பதிவாளரால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பல்வேறு சுற்றறிக்கைகளின் மூலம் நியாயவிலை கடைகளில் கீழ்கண்ட கட்டுப்பாடற்ற பொருட்கள் விற்பனைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளன.</p> <ul style="text-align: justify;"> <li>மளிகைப் பொருட்கள் மற்றும் சுவையூட்டுப் பொருட்கள்,</li> <li>எண்ணெய் பொருட்கள் குடிநீர்மங்கள்,</li> <li>அழகுசாதனப் பொருட்கள்,</li> <li>பிஸ்கட்ஸ்,</li> <li>துப்புரவுப் பொருட்கள்,</li> <li>பூஜைப் பொருட்கள்</li> <li>வலிநிவாரணிகள்,</li> <li>எழுது பொருட்கள்,</li> <li>கொசுவிரட்டிகள்,</li> <li>அனைத்து காதிப் பொருட்கள்,</li> <li>அழுகக்கூடிய பொருட்கள் - காய்கறிகள்,</li> <li>திருச்செங்கோடு / ஈரோடு வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கங்களின் அரிசி, நல்லெண்ணெய், <span style="text-align: justify;">மஞ்சள் தூள் மற்றும் </span></li> <li>கூட்டுறவு விற்பனைச் சங்கங்களின் அரிசி போன்றவைகள்.</li> </ul> <h3 style="text-align: justify;">நியாய விலைக் கடைகளில் கட்டாயமாக வைக்கப்பட வேண்டிய அறிவிப்புப் பலகைகள்</h3> <p style="text-align: justify;">அரசாணை எண் 162.கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை நாள் 12.6.1997 இன்படி நியாய விலைக் கடைகளில் கீழ்குறிப்பிட்ட அறிவிப்புப் பலகைகள் கட்டாயமாக வைக்கப்படவேண்டும்.</p> <ul style="text-align: justify;"> <li>வேலை நேரம் குறித்த பலகை</li> <li>அத்தியாவசியப் பண்டங்கள் வழங்கல் அளவு குறித்த பலகை</li> <li>மாத ஒதுக்கீட்டு விவரம்</li> <li>பொருள் வாரியான நுகர்வு விவரம்</li> <li>பொருட்களின் விலை மற்றும் இருப்பு விவரம்</li> </ul> <h3 style="text-align: justify;">நியாய விலைக் கடை குறித்தான புகார் அனுப்பப்பட வேண்டிய அலுவலர்கள் / அலுவலகம்</h3> <ul style="text-align: justify;"> <li>மாவட்ட வழங்கல் அலுவலர்</li> <li>வட்ட வழங்கல் அலுவலர்</li> <li>மண்டல இணைப்பதிவாளர் துணைப்பதிவாளர் (பொவிதி)</li> <li>மாவட்ட ஆட்சித் தலைவர்</li> <li>உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை, ஆணையர்</li> <li>கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை, அரசுச்செயலர்</li> </ul> <p style="text-align: justify;">மேலும் அத்தியாவசிய பொருட்களின் மாதிரி ஒவ்வொரு நியாய விலைக் கடையிலும் குடும்ப அட்டைதாரர்கள் பார்வைக்கு வைக்க வேண்டும். நியாய விலைக் கடைகளில் பராமரிக்கப்பட வேண்டிய பதிவேடுகள்</p> <ol style="text-align: justify;"> <li>"அ" பதிவேடு (A Register)</li> <li>சரக்குப்பதிவேடு (Stock Register)</li> <li>வழங்கல் பதிவேடு (Drawal Register)</li> <li>தினசரி விற்பனைச் சிட்டா (Daily Sales Chitta)</li> <li>ஆய்வுக்குறிப்பு பதிவேடு (Inspection Register)</li> <li>விற்பனை ரசீது புத்தகம் (Sales Bill Book)</li> <li>காலிக் கோணி இருப்புப் பதிவேடு (Empty Gunnies Register)</li> </ol> <p style="text-align: justify;">மேற்சொன்னபடி பதிவேடுகள் ஒழுங்காகப் பேணப்பட்டு வருவதை அலுவலர் உறுதி செய்துகொள்ளவேண்டும்.</p> <p style="text-align: justify;">மேலும் 'அ' பதிவேட்டில் ஒவ்வொரு மாதமும் அந்தந்த நியாய விலைக் கடைக்கான அத்தியாவசியப் பொருட்களின் தேவை அளவு வட்ட வழங்கல் அலுவலரால் குறிக்கப்பட்டு சான்று செய்வதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.</p> <h3 style="text-align: justify;">மாவட்ட அலுவலர்கள் கவனத்திற்கு</h3> <p style="text-align: justify;">பொது விநியோகத்திட்டம் கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு தேவையான அளவு உணவுப் பொருட்கள் சென்றடைவதை உறுதி செய்யும் சமூக திட்டம். இது அரசால் உருவாக்கப்பட்ட திட்டமாகும். எனவே, பொதுவிநியோகத் திட்டத்தில் உள்ள குறைபாடுகள் மற்றும் முறைகேடுகளை களைந்து பொது விநியோகத் திட்டத்தின் பலன் ஏழை எளிய மக்களுக்கு சென்றடைவதை தாங்கள் கண்காணித்து கொள்ளவேண்டும்.</p> <p style="text-align: justify;">நியாய விலைக் கடைகள் தொடர்பாக பொதுவாக கீழ்க்காணும் குறைகள் தங்கள் கவனத்திற்கு வரப்பெறின் அக்குறைகளை உடனுக்குடன் களைய ஆவன செய்ய வேண்டும்.</p> <ol style="text-align: justify;"> <li>குறிப்பிட்ட நேரத்தில் கடைகள் திறக்கப்படாமை,</li> <li>பணி நேரங்களில் கடைப் பணியாளர்கள் பணிக்கு வருகை புரியாமை,</li> <li>விநியோகம் செய்யப்படும் பொருட்களின் இருப்பு விநியோக அளவு மற்றும் விவரம் குறித்தான விளம்பரப்பலகைகள் வைக்கப்படாமை,</li> <li>அனைத்துக் கடைகளிலும் அனைத்துப் பொருட்களும் போதுமான அளவு இருப்பு வைக்க வேண்டும் என இருந்தும் இருப்பின்மை காணப்படுதல்,</li> <li>விநியோகிக்கப்படும் அத்தியாவசியப் பொருட்களின் எடை அளவு சரியின்மை,</li> <li>பொருட்கள் இருப்பு உள்ள போதும், இருப்பு இல்லை எனக் கூறி குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியோகம் செய்யாமல் இருத்தல்,</li> <li>போலி குடும்ப அட்டைகள் காணப்படுதல்,</li> <li>தொடர்ந்து உபயோகப்படுத்தாத குடும்ப அட்டைகளுக்கு போலியாக விற்பனை பட்டியல் தயாரித்தல்,</li> <li>மண்ணெண்ணெய் இருப்பு வைக்க போதுமான எண்ணிக்கையில், மண்ணெண்ணெய் பேரல் இல்லாமை,</li> <li>கடைகள் சுத்தமாக பராமரிக்கப்படாமை,</li> <li>சுமைதூக்கும் தொழிலாளிகள் மற்றும் பணியாளர்கள் முறையாக பொருட்களை கையாளாமையால் ஏற்படும் பொருள்சேதாரம்,</li> <li>பட்டியல் எழுத்தர் / விற்பனையாளர்களின் மறைமுக ஆதரவுடன் அங்கீகரிக்கப்படாத நபர்கள் கடையில் இருப்பது,</li> <li>குடும்ப அட்டைதாரர்களிடம் நியாய விலைக் கடைப் பணியாளர்கள் மரியாதையுடனும், கனிவுடனும் பேசி நடந்து கொள்ளாமல் இருப்பது,</li> <li>அத்தியாவசியப் பொருட்களை சரியாக அடுக்கி வைக்காமல் ஏற்படும் சேதாரம் மற்றும் பொருட்களின் தரம் கெட்டுப்போவது,</li> <li>மண்ணெண்ணெய் பேரல்களுடன் இதர அத்தியாவசியப் பொருட்களை அருகருகே வைத்து பொருட்களின் தரம் கெட்டுப்போவது.</li> </ol> <p style="text-align: justify;">மேற்சொன்ன குறைகளைக் களைய தேவையான நடவடிக்கைகளை தாங்கள் எடுக்க வேண்டும். மேலும், பொதுவிநியோகத் திட்ட துறை அலுவலர்கள், மாவட்ட வழங்கல் பணியில் இருக்கும் அலுவலர்கள் மற்றும் உயர் அலுவலர்களின் ஆய்வு அறிக்கைகள் வரும்பொழுது, அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள தவறுகளைக் களையவும் தாங்கள் நடவடிக்கைகள் எடுக்கவேண்டும்.</p> <p style="text-align: justify;">ஆய்வு அறிக்கையில் குறிப்பிடப்படும் தொகை மற்றும் அபராத தொகைகளை வசூல் செய்வதுடன் அரசுக்கு செலுத்த வேண்டிய தொகையையும் வசூலித்து செலுத்த வேண்டும்.</p> <p style="text-align: justify;">பொது விதியோகத்திட்டம் அரசின் திட்டம் என்பதால் அதனை நிறைவேற்றுவதில் ஏற்படும் தவறுகள், குறைகள் முற்றிலுமாக தவிர்க்கப்பட வேண்டும். கடுங்குறைகள் காணப்பட்டால் சம்பந்தப்பட்டப் பணியாளர்கள் மீது கடுமையாக ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்வது அவசியம்.</p> <h3 style="text-align: justify;">காலிக்கோணிகள் விற்பனை</h3> <p style="text-align: justify;">தங்கள் சங்கத்துடன் இணைக்கப்பட்டுள்ள அங்காடிகளில் சேரும் காலிக்கோணிப்பைகளுக்கு முறையாகக் கணக்கு பராமரிக்கப்பட வேண்டும். அவற்றை மாதந்தோறும் ஏலவிற்பனை செய்ய உரிய ஆணை வழங்கப்பட்டுள்ளது. இவை விற்பனை செய்வதற்கு குறைந்தபட்ச விலை மாதந்தோறும் மாவட்ட காலிக்கோணிப்பை விலை நிர்ணய குழு நிர்ணயிக்கும். இதனைத் தொடர்ந்து இந்த விலைக்குக் குறையாமல் மாநில அளவில் ஒப்பந்தப்புள்ளி பெற்று ஏல முறையில், தமிழ்நாடு ஒளிவு மறைவற்ற ஒப்பந்தப்புள்ளி சட்டம் மற்றும் விதிகளுக்குட்பட்டு, காலிகோணிகளை விற்பனை செய்ய, மாநில அளவிலான காலிக்கோ பைகள் விற்பனை குழு அமைத்து, பதிவாளர் கடிதம் நக.86417/12 பொவிதி (பொது) - நாள்.08.10.2012 மூலம் ஆணையிடப்பட்டு அதன்படி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கழிவுசாக் என்று எதையும் தள்ளுபடி செய்யக்கூடாது. விற்பனைவரி, கூடுதல் வரி ஆகியவை தனியே ஏலம் எடுப்பவரிடமிருந்து வசூலிக்க வேண்டும்.</p> <h3 style="text-align: justify;">கூட்டுறவு நியாய விலைக் கடைப் பணியாளர்களின் ஊதிய விவரம்</h3> <p style="text-align: justify;">அரசாணை நிலை எண்.185 கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை நாள் 29.12.2010இல் கூட்டுறவு நியாய விலைக் கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்களுக்கு ஊதிய விகிதங்கள் 01.01.2010 முதல் திருத்தி அமைத்து ஆணையிடப்பட்டுள்ளது</p> <p style="text-align: justify;">அதன் விபரம் பின்வருமாறு:-</p> <p style="text-align: justify;">விற்பணையாளர்</p> <ul style="text-align: justify;"> <li>ஓராண்டுவரை தொகுப்பூதியம் ரூ-4000/- விற்பனையாளர் ஓராண்டுக்கு பின் ஊதிய விகிதம் ரூ.3300-8000</li> </ul> <p style="text-align: justify;">கட்டுநர்</p> <ul style="text-align: justify;"> <li>ஓராண்டுவரை தொகுப்பூதியம் ரூ.3500/-</li> <li>ஓராண்டுக்கு பின் ஊதிய விகிதம் ரூ.3000-7000</li> </ul> <p style="text-align: justify;">அடிப்படை ஊதியத்தில் ஆண்டு தோறும் 2.5 சதவீதம் ஊதிய உயர்வு வழங்கப்படுகிறது. விலைப்படிகள் மற்றும் இதரபடிகள் மேற்சொன்ன அரசாணையில் குறிப்பிட்டுள்ளபடி வழங்கப்பட்டு வருகிறது.</p> <h3 style="text-align: justify;">நிர்வாக செயல்பாடுகள்</h3> <ol style="text-align: justify;"> <li>தராசு எடைக்கற்கள் மற்றும் அளவைகள் ஆண்டுதோறும் தொழிலாளர் நலத்துறையின் முத்திரை இடப்பட்டு வைக்கப்பட்டுள்ளதை தாங்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும்.</li> <li>தேவையான அளவிற்கு சரக்குகளை பெற்றுவைக்கவும், சரக்குகள் இருப்பு இல்லை என்ற நிலையை தவிர்க்கவும், வரவு வந்த சரக்கை விநியோகத் திட்டப்படி நுகர்வோருக்கு விநியோகம் செய்வதும் தங்களுடைய முக்கிய பொறுப்பாகும்.</li> <li>ஒவ்வொரு மாத இறுதியிலும் அங்காடியில் இருப்பை சரிபார்ப்பதும், விற்பனையாளர் பொறுப்பு பதிவேட்டை சரிபார்ப்பதும் மிக அவசியம். இவை சங்கப் பணியாளர்களால் தவறாமல் செய்து முடிக்கப்படுவதை தாங்கள் கண்காணிக்க வேண்டும்.</li> <li>பொருட்களின் விற்பனைத் தொகையை விற்பனையாளர் அன்றாடம் சங்கத்தில் செலுத்தச் செய்வதும், சங்கம் அதனை மத்திய வங்கியின் பொது விநியோக திட்ட காசுக்கடனில் தவறாமல் செலுத்தச் செய்வதும் மிகவும் முக்கியமானது. தாங்கள் இதனை அவ்வப்போது கண்காணித்து சரிபார்த்துக் கொள்ள வேண்டும். இதில் சங்கப் பணியாளர்கள் தவறு செய்தால் அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.</li> <li>பொது விநியோகத் திட்ட பொருட்களை போலி பில் மூலமோ, அல்லது வேறு வகையிலோ முறையற்ற விற்பனை செய்து, துறை அலுவலரோ வேறு ஆய்வு அலுவலர்களோ, குடிமைப் பொருள் வழங்கல் குற்றபுலனாய்வு துறையினரோ கண்டுபிடித்து கடும் நடவடிக்கை எடுக்க நேரிடும் பட்சத்தில் சங்கத் தலைமை பொறுப்பில் உள்ளவரும் நடவடிக்கைக்கு உள்ளாக நேரிடும். எனவே, இவ்வினத்தில் தாங்கள் வெகு எச்சரிக்கையாக செயல்படு மிக அவசியமாகும். மேற்சொன்ன நடைமுறைகள் யாவும் அவ்வப்போது பதிவாளர் / உண பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையரின் சுற்றறிக் மூலமாக மாற்றியமைக்கும் பட்சத்தில் மாறுதலுக்கு உட்பட்டவையாகும். எனவே மாவட்ட ஆட்சித் தலைவர், மண்டல இணைப்பதிவாளர், சரகத்துணைப்பதிவாளர் துணைப்பதிவாளர் (பொது விநியோகத் திட்டம்) மற்றும் மாவட்ட வட்ட வழங்கள் அலுவலர்களோடு அடிக்கடி தொடர்பு கொண்டு தங்கள் சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளவும், நிர்வாகத்தை மேம்படுத்திக் கொள்ளவும் வேண்டும்.</li> <li>சங்கத்தின் பிற பணியாளர்களுக்கு கடமையும் பொறுப்புகளும் நிர்ணயம் செய் போன்று, பொது விநியோகத் திட்ட பணியாளர்களுக்கும் கடமைகளும் பொறுப்புக நிர்வாகக் குழுவால் நிர்ணயம் செய்யப்பட்டு அவை பணியாளர்களுக்கு சார்வு செய்வேண்டும்.</li> <li>விற்பனையாளர்களுக்கு பொறுப்பு பதிவேடு (Liability Register) பேணப்பட வேண்டுப் அப்பொறுப்புப் பதிவேட்டின்படி, ஒவ்வொரு மாத இறுதியிலும் அந்தந்த விற்பனையா பணியிலிருக்கும் அங்காடியில் பொருட்களின் இருப்பு சரியாக உள்ளதா என்பதை சங் செயலர் அல்லது பொது விநியோகத்தை கண்காணிக்கும் எழுத்தர் சரிபார்த்து நிர்வாகுழுவிற்கு அறிக்கை அளிக்க வேண்டும்.</li> </ol> <p style="text-align: justify;">ஆதாரம்: தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியம், சென்னை</p> </div>