<div id="MiddleColumn_internal"> <h3 style="text-align: justify;">பி.எம். இந்தியா</h3> <p style="text-align: justify;">இந்திய பிரதமராக திரு. நரேந்திர மோடி மே 26, 2014 அன்று பதவியேற்றார். இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு பிறந்த முதல் பிரதமர் இவர் ஆவார். <span style="text-align: justify;">வரிசையில் உள்ள கடைசி நபரும் பயன்பெறும் வகையில் சேவை புரிய வேண்டும் என்ற அந்தோதையா கொள்கையைப் பிரதமர் தொடர்ந்து பின்பற்றி வருகிறார்.</span></p> <p style="text-align: justify;">ஒவ்வொரு குடிமகனும் வளர்ச்சியின் பயனை விரைவான நடவடிக்கைகள் மூலம் உறுதி செய்ய அரசு புதிய சிந்தனைகளையும் முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளது.ஆளுமை முறை தற்போது வெளிப்படையாகவும் எளிமையானதாகவும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.</p> <h3 style="text-align: justify;">முக்கிய திட்டங்கள்</h3> <p style="text-align: justify;">இதன் முதல் கட்டமாக “பிரதமர் மக்கள் நிதித் திட்டம்”, நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் நிதிநிலை முறையில் இணைக்கப்பட்டுள்ளார் என்பதை உறுதி செய்துள்ளது. பிரதமருடைய “இந்தியாவில் உற்பத்தி செய்வோம்” திட்டம், தொழில் செய்வதை எளிதாக்கியதன் மூலம் முதலீட்டாளர்கள் மற்றும் தொழில் முனைவோரிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. “உழைப்பே உயர்வு தரும்” என்ற திட்டத்தின் கீழ் உழைப்பாளர்களின் சீர்திருத்தம், உழைப்பாளர்களின் மரியாதை இரண்டும் பல்வேறு நடுத்தர மற்றும் சிறு தொழில் உழைப்பாளர்களுக்கு அதிகாரம் அளித்துள்ளது. திறமைமிகு இளைஞர்களுக்கும் இது உற்சாகம் அளித்துள்ளது.</p> <p style="text-align: justify;">முதன் முறையாக இந்திய மக்களின் நலனுக்காக இந்திய அரசு, மூன்று சமூக பாதுகாப்பு திட்டங்களை துவக்கி உள்ளது. முதியோர்களுக்கு ஓய்வூதியம் அளிப்பதிலும் ஏழைகளுக்குக் காப்பீடு வழங்குவதிலும் இத்திட்டம் முக்கியத்துவம் அளித்துள்ளது.</p> <p style="text-align: justify;">மகாத்மா காந்தியின் பிறந்த நாளை அக்டோபர் 2, 2014ம் ஆண்டு அன்று பிரதமர் “தூய்மையான இந்தியா” இயக்கத்தை நாடு முழுவதும் துவக்கி வைத்தார். இத்திட்டத்தின் அளவும் தாக்கமும் வரலாற்று முக்கியத்துவம் மிக்கதாக உள்ளது.</p> <h3 style="text-align: justify;">வெளிநாட்டு பயணங்கள்</h3> <p style="text-align: justify;">நரேந்திர மோடியின் சர்வதேசக் கொள்கை நடவடிக்கைகள் உலக அரங்கில், மிகப் பெரிய குடியாட்சியின் பங்கையும் இந்தியாவின் திறனையும் நிரூபித்துள்ளது. அனைத்து சார்க் நாடுகளின் தலைவர்கள் முன்னிலையில் இவர் பிரதமராய் பொறுப்பேற்றார். ஐக்கிய நாடுகள் சபையில் இவர் வழங்கிய உரை உலகெங்கும் பாராட்டப்பட்டது. 17 ஆண்டுகளுக்கு பிறகு நேபாளத்திற்கும், 28 ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்திரேலியாவிற்கும், 31 ஆண்டுகளுக்கு பிறகு ஃபிஜிக்கும் 34 ஆண்டுகளுக்கு பிறகு செஷல்ஸ்க்கும் பயணம் மேற்கொண்ட முதல் இந்திய பிரதமர் இவர். பதவியேற்றப்பின் நரேந்திர மோடி, ஐக்கிய நாடுகள், பிரிக்ஸ், சார்க் நாடுகள் மற்றும் ஜி20 சந்திப்பு ஆகியவற்றில் கலந்து கொண்டார். உலகளவில் பொருளாதாரம் மற்றும் அரசியல் ரீதியிலான பிரச்சினைகளில் தலையீடும், இந்தியாவின் கருத்துக்களும் பெருமளவில் பாராட்டப்பட்டன. பிரதமருடைய ஜப்பான் பயணம், இந்தியா – ஜப்பான் இடையேயான உறவில் மிக முக்கியமான அத்தியாயத்தை ஏற்படுத்தியது. இவர் மங்கோலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய பிரதமர் ஆவார். சீனாவிற்கும் தெற்கு கொரியவிற்கும் இவர் மேற்கொண்ட பயணம் வெற்றிகரமாக முதலீட்டாளர்களை இந்தியாவை நோக்கி ஈர்த்தது. அவருடைய பிரான்ஸ், ஜெர்மனி பயணங்கள் ஐரோப்பிய நாடுகளுடன் இணைந்து செயல்பட்டு வருவதை சுட்டிக் காட்டியுள்ளது.</p> <p style="text-align: justify;">ஆஸ்திரேலிய பிரதமர் திரு. டோனி அபாட், சீனா அதிபர் திரு. ஸீ ஜின்பிங்க், இலங்கை அதிபர் மைத்திரி பால சிரிசேனா, ரஷ்ய அதிபர் விளாடிமீர் புதின் ஆகியோர் இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்டனர். இதன் மூலம் இந்தியாவிற்கும் இந்நாடுகளுக்கும் இடையேயான ஒத்துழைப்பில் பெரிய அளவில் மாற்றம் ஏற்பட்டது. இந்தியா – அமெரிக்க இடையேயான உறவின் வரலாற்றில் முதன் முறையாக அமெரிக்க அதிபர் திரு. பராக் ஒபாமா இந்தியா குடியரசு தினம் – 2015 கொண்டாட்டங்களில் தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டார்.</p> <h3 style="text-align: justify;"><span style="text-align: justify;">சர்வதேச யோகா தினம்</span></h3> <p style="text-align: justify;">சர்வதேச யோகா தினத்தைக் குறிக்கும் வகையில் ஆண்டில் ஒரு நாள் அனுசரிக்கப்படவேண்டும் என்ற நரேந்திர மோடியின் கோரிக்கை ஐக்கிய நாடுகள் அளவில் பெருமளவில் வரவேற்பைப் பெற்றது. முதன் முறையாக உலகளவில் மொத்தம் 177 நாடுகள் ஒன்றிணைந்து ஜூன் 21ம் நாளை சர்வதேச “ஐக்கிய நாடுகள் சபையில் சர்வதேச யோகா” தினம் அனுசரிப்பதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.</p> <h3 style="text-align: justify;">அரசியல் ஈடுபாடு</h3> <p style="text-align: justify;">நரேந்திர மோடி குஜராத் மாநிலத்தில் ஒரு சிறிய நகரத்தில் செப்டம்பர் 17, 1950 ஆம் ஆண்டு பிறந்தார். சுமாரான வசதியும், சாதாரணப் பின்னணியும் கொண்ட குடும்பத்தில் மோடி பிறந்திருந்தாலும் அவருடையது அன்பான குடும்பம். அவருடைய இளம் வயதில் பல்வேறு சிரமங்களை சந்தித்திருந்ததால் அவருக்கு உழைப்பின் முக்கியத்துவம் தெரிந்திருந்தது. பொது மக்கள் தவிர்க்கக்கூடிய சிரமங்களை அவருக்கு எடுத்துரைத்தது. இதுவே அவர் சிறு வயதில் இருந்து மக்கள் மற்றும் நாட்டின் சேவைக்காக தன்னை அர்பணித்து கொள்வதற்கு தூண்டு கோலாக இருந்தது. தேசிய வளர்ச்சிக்கு தன்னை அர்பணித்துக் கொள்ளும் வகையில் ராஷ்டிரீய சுவயம்சேவக் சங் என்ற ஆர்.எஸ்.எஸ். தேசிய அமைப்புடன் இவர் முதலில் பணியாற்றினார். பிறகு, தன்னை அரசியலில் இணைத்துக் கொண்ட அவர் பாரதீய ஜனதா கட்சியில் சேர்ந்தார். இவர் தேசிய மற்றும் மாநில அளவில் இந்த அமைப்பிற்காகப் பணியாற்றினார்.</p> <p style="text-align: justify;">அவருடைய மாநிலமான குஜராத்தில் முதலமைச்சராக 2001 ஆம் ஆண்டு பதவியேற்றார். தொடர்ந்து நான்கு முறை இம்மாநிலத்தின் முதலமைச்சராக இருந்தார். நில நடுக்கத்தின் பாதிப்பிலிருந்து மீண்டுவரும் நிலையில் இருந்த குஜராத் மாநிலத்தை, இந்தியாவின் வளர்ச்சிக்காக வலிமையான பங்களிப்பை வழங்கும் வகையில் இவர் இம்மாநிலத்தை மாற்றினார்.</p> <h3 style="text-align: justify;">மக்கள் தொடர்பு</h3> <p style="text-align: justify;">மக்களின் தலைவரான நரேந்திர மோடி மக்கள் பிரச்சினைகளை சரி செய்யவும் அவர்களின் நலனை மேம்படுத்தவும் தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ளார். மக்களுடன் இருப்பது, அவர்களுடைய மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வது, அவர்களின் துயரங்களை நீக்குவது ஆகியவற்றைத் தவிர வேறு எதுவும் அவருக்கு திருப்தி அளிக்காது. அவர் மக்களுடன் நேரடியாக இணைந்திருப்பதைத் தவிர இணைய தளத்திலும் வலுவான மக்கள் தொடர்பை கொண்டுள்ளார். இந்தியாவின் தொழில்நுட்ப விரும்பியாக அறியப்படும் தலைவர் இவர். மக்களை இணையதளம் மூலம் சென்றடைந்து அவர்களின் வாழ்க்கையில் மாற்றத்தை கொண்டுவரவே தொழில்நுட்பத்தை பயன் படுத்துகிறார். பேஸ்புக், டுவிட்டர், கூகுள் பிளஸ், இன்ஸ்டாகிராம், சவுண்டு கிளவுட், லிங்கிடு-இன், வைபோ மற்றும் பிற சமூக வலைத்தளங்களை வெகுவாக பயன்படுத்துகிறார்.</p> <p style="text-align: justify;">அரசியலைத் தவிர எழுதுவதிலும் நரேந்திர மோடி ஆர்வம் கொண்டுள்ளார். பல்வேறு புத்தகங்களையும், கவிதைகளையும் அவர் எழுதியுள்ளார்.</p> <p style="text-align: justify;">ஆதாரம்: <a class="external-link ext-link-icon" href="http://www.pmindia.gov.in/ta/" target="_blank" rel="noopener">http://www.pmindia.gov.in/ta/</a></p> </div>