உயிரி பன்முகத்தன்மைச் சட்டம் 2002: முக்கிய நிறுவனங்கள் நியமிக்கப்பட்ட களஞ்சியங்களாக அறிவிப்பு தேசிய பல்லுயிர் ஆணையம் (National Biodiversity Authority), சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்துடன் (Ministry of Environment, Forest and Climate Change) கலந்தாலோசித்து, உயிரி பன்முகத்தன்மைச் சட்டம் 2002-இன் (Biological Diversity Act, 2002) 39 ஆம் பிரிவின் கீழ் இரண்டு நிறுவனங்களை நியமிக்கப்பட்ட களஞ்சியங்களாக அறிவிக்க வழிவகை செய்துள்ளது. இந்தக் களஞ்சியங்கள், சான்று மாதிரிகள் உட்பட உயிரியல் பொருட்களின் பாதுகாப்பிற்கு ஆதரவளிப்பதுடன், புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட உயிரினங்கள் மற்றும் ஆராய்ச்சி மற்றும் வணிக நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படும் உயிரியல் வளங்கள் குறித்த ஆவணப்படுத்தலையும் வலுப்படுத்தும். பல்வேறு வகையான உயிரியல் வளங்களுக்கான களஞ்சியங்களாக நிறுவனங்களை நியமிக்க சட்டத்தின் 39வது பிரிவு, மத்திய அரசுக்கு அதிகாரம் அளிக்கிறது. இந்தக் களஞ்சியங்கள் உயிரியல் பொருட்களின் பாதுகாப்பான பராமரிப்பிற்குப் பொறுப்பு வகிக்கின்றன. மேலும் ஒரு புதிய வகை உயிரினத்தைக் கண்டுபிடிக்கும் நபர், நியமிக்கப்பட்ட களஞ்சியத்திற்கு அறிவித்து, அதற்கான சான்று மாதிரிகளைச் சமர்ப்பிக்க வேண்டும். இந்தச் செயல்முறையை எளிதாக்குவதற்காக, களஞ்சியங்களாக நியமனம் கோரும் நிறுவனங்களுக்கான தகுதிகளை விவரிக்கும் வழிகாட்டுதல்களை தேசிய பல்லுயிர் ஆணையம் வெளியிட்டுள்ளது. நிறுவனங்களிடமிருந்து பெறப்படும் முன்மொழிவுகள் ஆணையத்தால் பரிசீலிக்கப்பட்டு, அறிவிப்புக்காக அமைச்சகத்திற்குப் பரிந்துரைக்கப்படுகின்றன. இந்தச் சூழலில், கொச்சியில் உள்ள கடல்வாழ் உயிரினங்கள் மற்றும் சூழலியல் மையத்தின் [Centre for Marine Living Resources and Ecology (CMLRE), Kochi] பவசாகரா மையத்திலிருந்தும் (Referral Centre Bhavasagara), புனேவில் உள்ள அகர்கர் ஆராய்ச்சி நிறுவனத்திடமிருந்தும் (Agharkar Research Institute, Pune), அதன் நுண்ணுயிரிகள் சேகரிப்பு மற்றும் தேசிய பூஞ்சை வளர்ப்பு சேகரிப்பு ஆகியவற்றுக்காக முன்மொழிவுகள் பெறப்பட்டன. இந்த முன்மொழிவுகள் ஒரு நிபுணர் குழுவால் முறையாகப் பரிசீலிக்கப்பட்டு, பரிந்துரைக்கப்பட்ட வழிகாட்டுதல்களுக்கு இணங்க அறிவிக்கைக்காகப் பரிந்துரைக்கப்பட்டன. இதுவரை, சட்டத்தின் 39-வது பிரிவின் கீழ் 18 நிறுவனங்கள் தேசிய களஞ்சியங்களாக நியமிக்கப்பட்டுள்ளன. இந்த இரண்டு நிறுவனங்களின் சேர்க்கையுடன், களஞ்சியங்களின் தேசிய வலையமைப்பு மேலும் வலுப்படுத்தப்பட்டு, உயிரியல் வளங்களின் பாதுகாப்பு மற்றும் முறையான ஆவணப்படுத்தல் மேம்படுத்தப்படுகிறது. இது, உயிரியல் பொருட்கள் பொருத்தமான அறிவியல் சூழல்களில் பாதுகாக்கப்படுவதையும், வெளிப்படையான மற்றும் பொறுப்பான முறையில் ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கத்திற்காக அவை அணுகக்கூடியதாக மாற்றப்படுவதையும் உறுதி செய்யும். மேலும் தகவல்களுக்கு https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2249905®=3&lang=2 இணைப்பைப் பார்க்கவும். ஆதாரம்: பத்திரிகை தகவல் மையம்