<div id="MiddleColumn_internal"> <h3 style="text-align: justify;">அறிமுகம்</h3> <p style="text-align: justify;">எல்லா வணிக அமைப்புகளும் இலாபநோக்கு கொண்டவை. இவ்வமைப்புகளின் பங்கு மூலதனம் அவற்றின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது. அவைகளின் இலாபம் முதலீடுகளின் அடிப்படையில் பகிர்ந்தளிக்கப்படுகிறது. கூட்டுறவு என்பது இதற்கு எதிரானது ஆகும். உறுப்பினர்கள் தங்களது பொதுவான பொருளாதார நலனைப் பெருக்கிக் கொள்வதற்காக தன்னிச்சையாகச் சேரும் சங்கம். கூட்டுறவு என்பது முதலாளித்துவத்திற்கும் பொதுவுடைமைத் தத்துவத்திற்கும் இடைப்பட்டது ஆகும்.</p> <p style="text-align: justify;">சமூகத்தில் பொருளாதாரத்தில் நலிவடைந்த பல பிரிவுகள் உள்ளன. அவர்களுள் விவசாயிகளும், கைவினைஞர்களும் மற்றும் சிறு வணிகர்களும் அடங்குவர். இடைத் தரகர்கள் மற்றும் வட்டிக் கடைக்காரர்களும் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த துரதிர்ஷ்டம் பிடித்த மக்களை, கடும் வட்டி என்னும் இயந்திரத்தில் பிழிந்து கொண்டு இருந்தனர். அவர்களது முதன்மையான நோக்கம் அதிக இலாபம் ஈட்டுவதாகும். விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த பொருள்களுக்கு நல்ல விலையைப் பெற முடியவில்லை. மேலும் தங்களுக்குத் தேவையான உற்பத்தி மூலப் பொருட்களை நியாயமில்லாத அதிக விலை கொடுத்து வாங்கினர். தரகர்கள் மற்றும் இடைநிலையர்களின் கொடுமையை சகித்துக் கொண்டு இருந்தனர். இந்த சூழ்நிலையில் பொருளாதாரத்தில் நலிவடைந்தோரின் குறை தீர்க்கும் கருவியாக கூட்டுறவு இயக்கம் தோன்றியது. 'ஒவ்வொருவரும் அனைவருக்காக, அனைவரும் ஒவ்வொருவருக்காக' என்பது அதன் சித்தாந்தம்.</p> <p style="text-align: justify;">கூட்டுறவு என்னும் சொல் கோவாப் பெரரி (Co-operari) என்னும் இலத்தீன் சொல்லிலிருந்து பிறந்தது. இதன் பொருள் இணைந்து பணியாற்றுதல் என்பதாகும். பொதுநோக்கத்திற்காகப் பிறருடன் இணைந்து பணியாற்றுதல் எனக் கூட்டுறவுக்கு எளிய முறையில் பொருள் கூறலாம்.</p> <h3 style="text-align: justify;">வரலாறு (History)</h3> <p style="text-align: justify;">கூட்டுறவு இயக்கம் என்பது 150 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறு படைத்தது ஆகும். இராபர்ட் ஓவன் என்பவர் முதல் கூட்டுறவு இயக்கத்தை 1844-ஆம் ஆண்டு 28 உறுப்பினர்களுடன் இராக்குடேல் என்ற பெயரில் தொடங்கினார். இது முதன்முதலில் தொடங்கிய நுகர்வோர் கூட்டுறவு சங்கமாகும். இராபர்ட் ஓவன் என்பவர் இந்த இயக்கத்தின் தந்தையாகக் கருதப்படுகிறார்.</p> <p style="text-align: justify;">இந்தியாவில், ஏழ்மையும், கிராமப்புற கடன் சுமையும் 19-ஆம் நூற்றாண்டில் உயர்ந்த நிலையில் இருந்தன. இந்த நெருப்புக்கு எண்ணெய் இடுவது போன்று 1901-ஆம் ஆண்டு கடும் பஞ்சம் ஏற்பட்டது. இந்தப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண 1904-ஆம் ஆண்டு அரசு கூட்டுறவுச் சங்கங்களின் நோக்கம், கடன் வசதி அளிப்பதற்கு மட்டும் பயன்பட்டது. பின் 1912ஆம் ஆண்டு விரிவாக்கம் செய்யப்பட்ட கூட்டுறவு அமைப்பு, மேலாண்மை மற்றும் கட்டுப்பாடு போன்றவற்றை உள்ளடக்கியிருக்கிறது.</p> <p style="text-align: justify;">1914-ம் ஆண்டு மெக்லகான் என்பவரது தலைமையில் அரசு ஒரு செயற்குழுவை நியமித்து கூட்டுறவுச் சங்கத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்தது. அந்தக் குழுவின் ஆலோசனையின்படி கூட்டுறவை அமைக்கும் அதிகாரம் மத்திய அரசிடமிருந்து மாநில அரசுக்கு மாற்றப்பட்டது. தற்போது மாநில அரசுகள் கூட்டுறவு அமைப்புகளைத் தனி அமைச்சகத்தின் கீழ் கொண்டுவந்து நடத்தி வருகிறது.</p> <h3 style="text-align: justify;">வரைவிலக்கணம்</h3> <p style="text-align: justify;">கூட்டுறவு சங்கம் என்பது தொழிலமைப்பின் மற்றொரு வடிவம். இது கூட்டுப்பங்கு நிறுமத்தைப் போன்று கூட்டுருவாக்கப்படுகிறது. இது ஒரு ஒப்பற்ற தனித்தன்மை வாய்ந்த வடிவமைப்பாகும். இது உறுப்பினர்களுக்குச் சேவை செய்யும் நோக்கோடு தொடங்கப்பட்ட அமைப்பு ஆகும். பல்வேறு ஆசிரியர்கள், தலைவர்கள் கூட்டுறவு இயக்கத்தைப் பற்றி வழங்கிய வரைவிலக்கணங்கள் பின்வருமாறு :</p> <ul> <li style="text-align: justify;">H.C. கால்வேர்ட் அவர்களின் கூற்றுப்படி, கூட்டுறவு சங்கம் என்பது, உறுப்பினர்களின் பொருளாதார நலனைப் பெருக்கிக் கொள்வதற்காக, மனிதர் என்ற முறையில் சமத்துவ அடிப்படையில் மக்கள் அவர்களாகவே ஒன்றுபடும் அமைப்பே கூட்டுறவு என்று வரைவிலக்கணம் தந்துள்ளார்.</li> <li style="text-align: justify;">சர் ஹொரேஸ் ப்ளங்கெட் அவர்களின் கூற்றுப்படி, "கூட்டுறவு அமைப்பு, சுய உதவியை வலிமை பெற்றதாகச் செய்யும் அமைப்பே கூட்டுறவு. சீரிய வேளாண்மை, சீரிய தொழில், சீரிய வாழ்க்கை என்பவற்றைத் தவிர இது வேறல்ல” என்று வரைவிலக்கணம் தந்துள்ளார்.</li> <li style="text-align: justify;">தால்மகியின் கூற்றுப்படி, வியாபார அமைப்பின் மூலம் நலிவடைந்தவர்களின் பொருளாதார தேவையின் அடிப்படையில் ஒன்றுகூடி, தங்களுடைய நலிந்த தன்மையிலிருந்து பலம் பொருந்தியவர்களாக மாற்றிக் கொள்வதற்கு ஏற்பட்ட அமைப்பு ஆகும்.</li> <li style="text-align: justify;">இக்கூட்டுறவு சங்க சட்டம் 1912 இவ்வாறு வரையறை செய்கிறது. கூட்டுறவுச் சங்க விதிகளின் முறைப்படி அதன் விதிமுறைகளுக்கேற்ப, அதன் அங்கத்தினர்களின் நலன்களை உயர்த்துவதற்காக ஏற்படுத்தப்பட்ட ஒன்றாகும்.</li> <li style="text-align: justify;">பேராசியர் லேம்பர்ட் கூற்றுப்படி, ஒரு கூட்டுறவு அமைப்பானது பயனாளிகள் ஒன்று கூடி மக்களாட்சிச் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு, தங்களுக்கும் சமுதாயத்திற்கும், முழுமையாகச் சேவை செய்யக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்ட சட்டதிட்டங்களால் உருவாக்கப்பட்ட அமைப்பாகும்.</li> </ul> <h3>கூட்டுறவு அமைப்பின் இயல்புகள்</h3> <p style="text-align: justify;">உறுப்பினர்களின் நலனைப் பாதுகாக்க கீழ்காணும் தத்துவங்களின் அடிப்படையில் பணிபுரிகிறது. கூட்டுறவு அமைப்பின் சிறப்பியல்புகளை கீழ்கண்டவாறு அறிந்து கொள்ளலாம்.</p> <p style="text-align: justify;"><strong>தன்னிச்சையாகச் சேரும் சங்கம் (Voluntary Organisation)</strong></p> <p style="text-align: justify;">பலர் தன்னிச்சையாகச் சேர்ந்து உருவாக்கும் அமைப்பே கூட்டுறவுச் சங்கமாகும். இவ்வமைப்பில் உறுப்பினராகச் சேருமாறு ஒருவரை கட்டாயப்படுத்த முடியாது. ஒரு நபர் எப்போது வேண்டுமானாலும் இச்சங்கத்தில் சேரலாம். அதுபோலவே விரும்பும்போது அவர் அதிலிருந்து விலகலாம்.</p> <p style="text-align: justify;"><strong>சமத்துவம் (Equality)</strong></p> <p style="text-align: justify;">கூட்டுறவு சங்கத்தில் எல்லா உறுப்பினர்களும் சரி சமம். எல்லா உறுப்பினர்களுக்கும் சம உரிமை உண்டு. அதிகமான முதலீடு ஒருவர் அளிக்கும் காரணத்தால் அதிக உரிமை அவருக்குக் கிடையாது.</p> <p style="text-align: justify;"><strong>மக்களாட்சி முறையில் மேலாண்மை (Democratic Managements)</strong></p> <p style="text-align: justify;">கூட்டுறவு சங்கத்தின் மேலாண்மை மக்களாட்சி அடிப்படையில் அமைந்திருக்கிறது. உறுப்பினர் மூலதனப் பங்குத் தொகையாக எவ்வளவு செலுத்தியிருந்தாலும் அவருக்கு ஒரு வாக்கு மட்டுமே உண்டு. ஆளுக்கொரு வாக்கு என்ற சமத்துவ அடிப்படையில், மக்களாட்சி முறையில் இச்சங்கம் அமைக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் ஆண்டுப் பொதுக்கூட்டம் நடத்தப்படுகிறது. உறுப்பினர்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்து மேலாண்மை செய்யும் பொறுப்பை ஒப்படைக்கின்றனர்.</p> <p style="text-align: justify;"><strong>வளங்களின் இணைப்பு (Combination of Resources)</strong></p> <p style="text-align: justify;">இந்த அமைப்பில் எல்லா உறுப்பினர்களின் சொந்த வளங்களும் ஒருங்கிணைக்கப்படுகிறது. அவர்கள் எல்லா உறுப்பினர்களின் நலனுக்காகவும் அவற்றைப் பயன்படுத்துகின்றனர்.</p> <p style="text-align: justify;"><strong>ஒருமுனைப்படுத்திய முயற்சி (Concentrated effort)</strong></p> <p style="text-align: justify;">இந்த அமைப்பில் எல்லாத் தனி நபர்களும் இணைந்து பணியாற்றுகின்றனர். கூட்டுறவு அமைப்பின் முக்கிய கோட்பாடு ஒவ்வொருவரும் அனைவருக்காக, அனைவரும் ஒவ்வொருக்காக.</p> <p style="text-align: justify;"><strong>சேவையின் தத்துவம் (Spirit of service)</strong></p> <p style="text-align: justify;">கூட்டுறவு அமைப்பின் முதன்மை நோக்கம் சேவை புரிவது, இலாபம் ஈட்டுவது இரண்டாவது நோக்கமாகும். உறுப்பினர்களுக்குத் தேவையான சேவையை உறுப்பினர்களுக்கு அளிக்கிறது. கடன் வசதி அளித்தல், வீடு கட்டுவதற்குக் கடன் வழங்கல், விதைகள், உரங்கள் அளித்தல் போன்ற சேவைகள் இந்தச் சங்கங்களால் வழங்கப்படுகிறன்றன.</p> <p style="text-align: justify;"><strong>பன்மர் உறுப்பினராதல் (Plural membership)</strong></p> <p style="text-align: justify;">பன்மர் இணைந்து உருவாக்கும் சங்கம் கூட்டுறவு அமைப்பு. ஒரு அமைப்பை உருவாக்கக் குறைந்தபட்சம் 25 நபர்கள் தேவை. அதிக பட்சம் அதில் எத்தனை பேர் உறுப்பினராகலாம் என்பதற்கு வரையறை ஏதும் இல்லை.</p> <p style="text-align: justify;"><strong>சட்டத் தகைமை (Legal Capacity)</strong></p> <p style="text-align: justify;">கூட்டுறவில் உறுப்பினர்கள் ஒப்பந்தங்கள் செய்து கொள்வதற்குரிய சட்டத் தகுதி பெற்றிருக்க வேண்டும். சங்கத்தின் சட்டதிட்டங்கள், விதிகள், ஒழுங்கு முறைகள் ஆகியவற்றை ஒப்புக்கொண்டு கட்டுப்பட வேண்டும். கூட்டுறவு சங்கத்தை அமைக்கும் உறுப்பினர்களின் சட்டத் தகுதி என்பது அவர்கள் வயது உரிமை பெற்றவராக (Major) இருப்பதாகும்.</p> <p style="text-align: justify;"><strong> உறுப்பினராவதற்குத் தடையில்லா வாய்ப்பு (Open membership)</strong></p> <p style="text-align: justify;">பொதுவான பொருளாதார நோக்கமுள்ள ஆண், பெண் எவரும் இவ்வமைப்பில் உறுப்பினராகச் சேரலாம். சாதி, சமய பாகுபாடுகள் ஏதுமின்றி எவரும் உறுப்பினராகலாம். பெரிய பணக்காரரும், வறிய ஏழையும் அதில் உறுப்பினராகலாம். கல்லாமை உறுப்பினராவதற்கு தடையாக இருப்பதில்லை.</p> <p style="text-align: justify;"><strong> நிதி (Finance)</strong></p> <p style="text-align: justify;">கூட்டுறவுச் சங்கத்தின் முதல் சம் மதிப்புடைய பங்குகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இந்தச் சங்கமும் தனது பங்கு முதலை உறுப்பினர்களிடமிருந்து திரட்டுகிறது. பங்குகளின் முகமதிப்பு மிகக் குறைவானதாக இருக்கும். ஒரு நபர் இச்சங்கத்தின் பங்குகளை வாங்குவதன் மூலம் உறுப்பினராகலாம்.</p> <p style="text-align: justify;"><strong>முதலுக்குச் சொற்ப வருவாய் (Limited return on capital)</strong></p> <p style="text-align: justify;">கூட்டுறவுச் சங்கம் பணத்திற்கு குறைந்த முக்கியத்துவமே தருகிறது. ஈட்டும் லாபம் எவ்வளவாக இருந்தாலும் முதல் மீது அது அளிக்கும் ஆதாயம் ஒன்பது விழுக்காடு ஆகும். செல்வந்தர்களின் கை ஓங்குவதற்கு இது தடையாக இருக்கிறது.</p> <p style="text-align: justify;"><strong>உள்ளூர் உறுப்பினர்கள் (Local membership)</strong></p> <p style="text-align: justify;">பொதுவாக உள்ளூரில் வசிப்பவர்களே கூட்டுறவுச் சங்கத்தில் உறுப்பினராக இருப்பர். இதற்குக் காரணம் அவர்களிடையே பொதுவான பொருளாதாரச் சிக்கல்கள் இருப்பதற்கு வாய்ப்புண்டு. அவர்கள் ஒருவரை ஒருவர் தெரிந்துவைத்திருப்பர்.</p> <p style="text-align: justify;"><strong>அரசியல் செல்வாக்கு இல்லை (No political influence)</strong></p> <p style="text-align: justify;">ஒரு கூட்டுறவு சங்கத்தில் அரசியல்வாதி உறுப்பினராகலாம். ஆனால் அரசியல் அங்கு நுழைவதில்லை. அரசியல் சார்பற்ற அமைப்பாக இச்சங்கம் விளங்குகிறது.</p> <p style="text-align: justify;"><strong>மாநில அரசுக் கட்டுப்பாடு (State Control)</strong></p> <p style="text-align: justify;">நமது நாட்டில் கூட்டுறவுச் சங்கங்கள் தன்னிச்சையான அமைப்பாக இருந்தாலும், அதைத் தோற்றுவிப்பதிலும் அவற்றை நடத்துவதிலும் இந்திய அரசு அதிக அக்கறை காட்டுகிறது. அரசின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு சங்கம் நடத்தப்படுகிறதா என்பதை கண்காணிக்கிறது. ஒவ்வொரு சங்கமும் ஆண்டு அறிக்கைகளையும், ஆண்டு கணக்குகளையும் அரசுக்கு சமர்ப்பிக்க வேண்டும். வைப்புகள் மற்றும் கடன் பற்றிய விபரங்கள் தவறாமல் வெளியிடப்பட வேண்டும்.</p> <p style="text-align: justify;"><strong>உபரிப் பகிர்வு (Distribution surplus)</strong></p> <p style="text-align: justify;">"கூட்டுறவு சங்கம் தனது ஆண்டு இலாபத்தை உறுப்பினர்களின் பங்களிப்பு அடிப்படையில் பகிர்ந்தளிக்கப் படுவதல்லாமல் பங்கு முதல் அடிப்படையில் பகிர்ந்தளிப்பதில்லை. கூட்டுறவு சங்கங்களின் சட்டம் 1983 பிரிவு 72 (1) (a) - யின்படி சட்டபூர்வ ஒதுக்கீடுகள் போக ஆண்டுக்கு உறுப்பினர்களுக்கு 14 விழுக்காட்டுக்கு மிகாமல் செலுத்தப்பட்ட பங்கு முதலுக்கு பங்காதாயம் வழங்க சட்டம் அனுமதிக்கிறது. உறுப்பினர்கள் சங்கத்தை எந்த அளவுக்குப் பயன்படுத்திக் கொள்கிறார்களோ அந்த அடிப்படையில் மேலூதியம் வழங்கப்படுகிறது. இதற்கு பகிர்வு நீதி என்று பெயர்.”</p> <p style="text-align: justify;"><strong>பதிவு (Registration)</strong></p> <p style="text-align: justify;">பதிவு என்பது எல்லாக் கூட்டுறவுச் சங்கங்களுக்கும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு சங்கமும் இந்தியக் கூட்டுறவுச் சங்க சட்டம் 1912ன்படியோ அல்லது மாநில அரசின் சங்க விதிகளின்படியோ கட்டாயம் பதிவு செய்தல் வேண்டும். பதிவுறாச் சங்கம் கூட்டுறவு என்ற பதத்தைத் தன் பெயரில் பயன்படுத்துவது கிடையாது.</p> <p style="text-align: justify;"><strong>சட்ட உரு (Separate legal entity)</strong></p> <p style="text-align: justify;">ஒரு கூட்டுறவு அமைப்பைப் பதிவு செய்தவுடன் அது தனி ஆளுமையை (Legal entity) பெறுகிறது. அது தன் பெயரிலேயே சொத்துக்கள் வாங்கலாம், ஒப்பந்தங்களிலும் ஈடுபடலாம், வழக்காடலாம், வழக்குகள் தொடுக்கப்படலாம்.</p> <p style="text-align: justify;"><strong>பொறுப்பு (Liability)</strong></p> <p style="text-align: justify;">கிராமப்புறங்களில் உள்ள கூட்டுறவுச் சங்கங்களில் உறுப்பினர்களின் பொறுப்பு வரையறுத்ததாகவும் இருக்கலாம், வரையறாப் பொறுப்பாகவும் இருக்கலாம். உறுப்பினர் இடும் பங்கு, முதல் அளவிற்கு அவர்கள் பொறுப்பு பெரும்பாலும் வரையறுத்ததாக இருப்பதுவே வழக்கம்.</p> <p style="text-align: justify;"><strong>பரஸ்பர உதவி (Mutual help)</strong></p> <p style="text-align: justify;">சங்கத்திலுள்ள ஒவ்வொரு உறுப்பினரும் பரஸ்பரம் உதவி செய்ய வேண்டும் என்பது கூட்டுறவு அமைப்பின் அடிப்படை தத்துவம். ஒவ்வொரு உறுப்பினரும் தனக்கும் உதவி செய்துகொண்டு பிறருக்கும் உதவி செய்ய வேண்டும்.</p> <p style="text-align: justify;"><strong>சட்டமுறை தணிக்கை (Statutory Audit)</strong></p> <p style="text-align: justify;">கூட்டுறவுத் தணிக்கை துறையைச் சார்ந்த அலுவலர்கள் ஒவ்வொரு ஆண்டும் கூட்டுறவுச் சங்கங்களைத் தணிக்கை செய்கின்றனர்.</p> <p style="text-align: justify;"><strong>ரொக்க வியாபாரம் (Cash Trading)</strong></p> <p style="text-align: justify;">இச்சங்கங்களில் கடன் நடவடிக்கைகள் அனுமதிக்கப்படுவதில்லை. எல்லா வியாபாரமும் ரொக்கத்தன்மை அடிப்படையில் நடத்தப்படுகிறது. அனைத்து பெறுதல், செலுத்துதல்களும் ரொக்கமாக நடைபெறுகின்றன. இதன் விளைவாக வாராக்கடன் தவிர்க்கப்படுகிறது.</p> <p style="text-align: justify;"><strong>பங்குகளை மாற்ற இயலாமை (No share transfer)</strong></p> <p style="text-align: justify;">பலர் தன்னிச்சையாக சேர்ந்து உருவாக்கும் அமைப்பே கூட்டுறவு ஆகும். உறுப்பினர் விரும்பும் எந்த நேரத்திலும் சங்கத்தில் சேரலாம் அல்லது விலகலாம். ஆனால் ஒரு உறுப்பினர் தனது உரிமையை அடுத்தவருக்கு மாற்றித்தர இயலாது. ஆனால் விலகும் உறுப்பினருக்கு பங்கு முதல் தொகையை சங்கம் திருப்பியளிக்கும்.</p> <p style="text-align: justify;"><strong>ஊக வணிகம் இல்லை (No Speculation)</strong></p> <p style="text-align: justify;">கூட்டுறவு அமைப்பின் பங்குப் பட்டியல் புதிய உறுப்பினர்களுக்காக எப்போதும் திறந்தே இருக்கும். மேலும் பங்குகள் முகமதிப்பாலேயே விற்கப்படுகின்றன. அதனால் ஊக வணிகம் என்பது இவ்வமைப்பில் இல்லை.</p> <p style="text-align: justify;"><strong>சட்ட ஆளுமை (Corporate status)</strong></p> <p style="text-align: justify;">ஒரு கூட்டுறவுச் சங்கம் பதிவு செய்தவுடன் அது சட்ட ஆளுமை கூட்டுருவாக்கம் பெறுகிறது. அதன் உறுப்பினர்களிடமிருந்து தனித்த சட்டத் தோற்றம், பொது முத்திரை மற்றும் நிலையான உரிமையிறக்கம் பெற்றிருக்கிறது.</p> <p style="text-align: justify;"><strong>முறையான பயிற்சி (Proper Training)</strong></p> <p style="text-align: justify;">கூட்டுறவு அமைப்பின் வெற்றி உறுப்பினர்களின் அறிவுடை நிலையை நம்பி இருக்கிறது. சங்கங்களின் நோக்கத்தை புரிந்துகொள்வதற்காக உறுப்பினர்களுக்குத் தேவையான பயிற்சி அளிக்கப்படுகிறது.</p> <h3>நன்மைகள் (Merits)</h3> <p style="text-align: justify;">கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் பல நன்மைகள் கிடைக்கின்றன. அவைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.</p> <ul> <li style="text-align: justify;">அமைப்பது எளிது (Easy formation) : கூட்டுறவுச் சங்கங்களை அமைப்பது எளிது. செலவும் அதிகமில்லை. பதிவு நடைமுறையும் எளிமையானது ஆகும்.</li> <li style="text-align: justify;">வரையறா உறுப்பினர்கள் (Unlimited membership) : அதிகபட்ச உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கு வரையறை இல்லை. ஒவ்வொரு உறுப்பினரும் தன் விருப்பப்படி சேரவோ அல்லது விலகவோ சுதந்திரம் உண்டு.</li> <li style="text-align: justify;">மக்களாட்சி மேலாண்மை (Democratic management) : கூட்டுறவு அமைப்பின் மேலாண்மை மக்களாட்சி முறையில் அமைந்துள்ளது. எவ்வளவு முதலீடு செய்திருப்பினும் உறுப்பினர்களுக்கு சமமான வாக்குரிமை உண்டு. ஆளுக்கொரு வாக்கு என்ற தத்துவம் கடைபிடிக்கப்படுகிறது. பெருமளவில் பங்குகளை வைத்துள்ளவர்களின் கைகளில் அச்சங்கங்கள் கட்டுண்டு கிடப்பதில்லை.</li> <li style="text-align: justify;">வரையறு பொறுப்பு (Limited liability) : உறுப்பினர்களின் பொறுப்பு அவர்கள் வைத்துள்ள பங்குகளின் பெயரளவு மதிப்பு வரை என வரையறுக்கப்பட்டுள்ளது. உறுப்பினர்களின் தனிப்பட்ட சொத்துக்களை நிறுமக் கடன்களுக்காக இழக்க வேண்டிய அவசியமில்லை.</li> <li style="text-align: justify;">நிலையான தன்மை (Stability) : பதிவு செய்வதால் கூட்டுறவுச் சங்கங்களும் நிரந்தரமான சட்டத் தோற்றம் பெற்றிருக்கின்றன. உறுப்பினர்களின் இறப்பு, மன சமநிலையற்ற நிலை, மற்றும் நொடிப்பு நிலை ஆகியவற்றால் இவ்வமைப்பு பாதிக்கப்படுவதில்லை. இது நீடித்த வாழ்வு உடையது.</li> <li style="text-align: justify;">மேலாண்மையில் சிக்கனம் (Economy in Management) : பொதுவாக இவ்வமைப்பில் அதன் உறுப்பினர்களே சங்கத்தை மேலாண்மை செய்கின்றனர். இயக்குநரவைக் குழுவிலுள்ள உறுப்பினர்கள் கெளரவ சேவையை அளிக்கின்றனர். விளம்பரச் செலவுகளும் மிகக் குறைவு.</li> <li style="text-align: justify;">மலிவான சேவை (Cheaper Service) : இச்சங்கம் நல்ல சேவைகளை மலிவான செலவில் அளிக்கிறது. சேவை என்பது முதன்மை நோக்கம். இலாபம் ஈட்டுவது இரண்டாம் பட்சமாகும்.</li> <li style="text-align: justify;">வரிச் சலுகைகள் (Tax concession) : கூட்டுறவு நிறுவனங்களின் வருவாய்க்கு வருமான வரி விதிக்கப்படுவதில்லை. வருமான வரி, முத்திரைக் கட்டணம், பதிவுக் கட்டணம் ஆகியவற்றிலிருந்து விலக்களிக்கப்படுகிறது.</li> <li style="text-align: justify;">சமூகப் பயன் (Social Benefits) : கூட்டுறவு அமைப்பு என்பது போட்டியில்லா நிறுவனமாகும். தனிமனித சுதந்திரம், சமூக நீதி மற்றும் பரஸ்பர கூட்டுறவை இது வளர்க்கிறது.</li> <li style="text-align: justify;">சேமிப்பு வழக்கம் (Savings habit) : உறுப்பினர்களிடையே சேமிப்பு பழக்கம் தனக்குத்தானே உதவி, சமூக நீதி ஆகிய நல்ல நெறிகளை இது வளர்க்கிறது.</li> <li style="text-align: justify;">அரசின் ஆதரவு (State Patronege) : சமுதாய மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள மக்களைக் கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் உயர்த்துவது அரசின் நோக்கம் ஆகும். இந்த நோக்கங்களை நிறைவேற்ற தாரளாமாக நிதி உதவி நலிவடைந்தோருக்கு அளிக்கிறது. அரசு அளிக்கும் இந்த ஆதரவு கூட்டுறவு அமைப்புக்கு ஒரு வரமாகும்.</li> <li style="text-align: justify;">இடைநிலையரைத் தவிர்த்தல் (Eleminating milddlemen) : பல இடைநிலையர்கள் உற்பத்தியாளருக்கும் நுகர்வோருக்கும் இடையில் உள்ளனர். ஒவ்வொருவரும் இலாபம் ஈட்டுகின்றனர். உற்பத்தியாளர் விலைக்கும், நுகர்வோர் விலைக்கும் உள்ள வேறுபாட்டை கூட்டுறவுச் சங்கம் குறைக்கிறது.</li> <li style="text-align: justify;">விலை வீழ்ச்சி (Fall in Prices) : இன்றியமையாத பொருள்கள் உறுப்பினர்களுக்கு மலிவு விலையில் அளிக்கப்படுகிறது. இதன் விளைவாகச் சந்தையில் விலை நிலவரம் குறைகிறது.</li> <li style="text-align: justify;">வேலைவாய்ப்பு (Employment) : மாநில அரசின் உதவியுடன் கூட்டுறவுத் துறை வியாபாரமும் தொழிற்சாலைகளும் செழிப்பாக வளருகின்றன. இதன் விளைவாக வேலைவாய்ப்புக்கு சந்தையில் இடமளிக்கிறது. எடுத்துக்காட்டாக பல கூட்டுறவு சர்க்கரை ஆலைகள், கூட்டுறவு நூற்பாலைகள் மூலம் பலருக்கு வேலைவாய்ப்பை அளிக்கிறது.</li> <li style="text-align: justify;">அரசின் உதவி (Government Help) : கூட்டுறவு அமைப்பு தொடங்கிய காலத்திலிருந்து அது அரசின் ஆதரவில் பராமரிக்கப்படுகிறது. இந்தியாவில் கூட்டுறவு மாநில அரசின் ஆதரவினாலும், உதவியாலும் வளர்கிறது.</li> </ul> <h3>குறைபாடுகள் (Demerits)</h3> <p style="text-align: justify;">கூட்டுறவு அமைப்பின் மூலம் நன்மைகள் இவ்வளவு இருந்தும் கூட்டுறவின் வளர்ச்சி திருப்திகரமாகவும், உற்சாகப்படுத்துவதாகவும் இல்லை. இது போதிய பலமின்மையாலும், குறைபாடுகளாலும் சிரமப்படுகிறது. பின்வருபவை கூட்டுறவுச் சங்கத்தின் குறைபாடுகளாகும்:</p> <p style="text-align: justify;"><strong>திறமையற்ற மேலாண்மை (Inefficient Management)</strong></p> <p style="text-align: justify;">கூட்டுறவுச் சங்கங்களிலுள்ள உறுப்பினர்கள் அமைப்பை மேலாண்மை செய்யப் போதுமான திறமையும் அனுபவமும் இல்லாதவர்களாக இருக்கிறார்கள். மேலாண்மையைத் திறம்படச் செய்ய ஆர்வமில்லாதவர்களாக இருக்கிறார்கள். திறமையுள்ள, அனுபவமிக்க நபர்களை பணியில் அமர்த்த இயலாது.</p> <p style="text-align: justify;"><strong>வரையறு முதல் (Limited Capital)</strong></p> <p style="text-align: justify;">குறைந்த வளங்கள் உள்ள மனிதர்களால் கூட்டுறவுச் சங்கங்கங்கள் வழக்கமாக அமைக்கப்படுகின்றன. ஒரு நபர் ஒரு வாக்கு முறை உறுப்பினர்கள் அதிக முதலீடு செய்வதை தடைசெய்கிறது. இதனால் இவ்வமைப்பு குறைந்த முதலீடுகளால் சிரமப்படுகிறது. பேரளவுத் தொழில் செய்யப் போதுமான முதல் தொகை இவ்வமைப்பால் திரட்ட முடிவதில்லை.</p> <p style="text-align: justify;"><strong>தக்க தூண்டுகோல் இல்லாமை (Lack of Motivation)</strong></p> <p style="text-align: justify;">இலாப நோக்கு இல்லாமையும் குறைந்தபட்ச 9 விழுக்காடு பங்காதாயமும் மேலாண்மையின் பொறுப்புக் குறைய காரணமாகிறது. பணியாளர்கள் குறைந்த ஊதியம் பெறுவதால் கடின உழைப்பில் ஆர்வம் காட்டுவதில்லை.</p> <p style="text-align: justify;"><strong>ஒற்றுமையின்மை (Lack of Cooperation)</strong></p> <p style="text-align: justify;">சில வேளைகளில் உறுப்பினர்கள் அவர்களுக்குள் ஒற்றுமையாய் இருப்பதில்லை. இதனால் கூட்டுறவு அமைப்பின் வியாபாரம் பாதிக்கப்படுகிறது.</p> <p style="text-align: justify;"><strong>அசைக்க முடியாத மனிதர்களின் அதிகாரம் (Domination of vested members)</strong></p> <p style="text-align: justify;">அரசியல் சார்பில்லாத கூட்டுறவுச் சங்கத்தில் சில உறுப்பினர்களின் அரசியல் செல்வாக்கோடு அமைப்பை மேலாண்மை செய்கின்றனர். அவர்கள் இவ்வமைப்பை சொந்த சொத்து போல் சுரண்டும் வாய்ப்பு உண்டு.</p> <p style="text-align: justify;"><strong>உரிமையை மாற்ற இயலாமை (Non - transferability of interest)</strong></p> <p style="text-align: justify;">கூட்டுறவுச் சங்கத்தின் பங்குகள் மாற்றியல்பு கொண்டவை அல்ல. சங்கத்திலிருந்து விலக விரும்புவோர் பங்குகளை சங்கத்தில் திருப்பிக் கொடுத்து பங்கு முதல் தொகையைத் திரும்பப் பெறலாம்.</p> <p style="text-align: justify;"><strong>இரகசியம் காவாமை (Lack of Seerecy)</strong></p> <p style="text-align: justify;">கூட்டுறவுச் சங்கத்தின் நடவடிக்கைகள் சங்கக் கூட்டங்களில் விவாதிக்கப்படுகிறது. ஒவ்வொரு உறுப்பினரும் சங்க ஏடுகளை பார்வையிடவும் சுதந்திரம் உண்டு. இதனால் செயல்முறை இரகசியங்கள் மறைக்காப்பாக வைத்திருக்க இயலாது.</p> <p style="text-align: justify;"><strong>அ</strong><strong><strong>தி</strong>கமான அரசு தலையீடு (Excessive Government Control)</strong></p> <p style="text-align: justify;">கூட்டுறவு அமைப்பின் தினசரி நடவடிக்கைகள் அரசின் சட்டப்படியும் கட்டுப்பாட்டுக்குட்பட்டும் நடத்தப்படுகின்றன. கூட்டுறவு சங்க பதிவாளரிடம் அறிக்கைகளை சமர்ப்பிக்க வேண்டும். காலம் தாழ்த்தும் நடைமுறைகளும், நெகிழ்வுத் தன்மையின்மை, தூண்டுகோலின்மையும் அமைப்பின் முன்னேற்றத்தைக் கட்டுப்படுத்துகின்றன.</p> <p style="text-align: justify;"><strong>கடன் வசதியின்மை (No credit facilities)</strong></p> <p style="text-align: justify;">உறுப்பினர்களுக்கு நுகர்வோர் கூட்டுறவு சங்கத்தில் கடன் வசதியளிப்பதில்லை. சரக்குகளை ரொக்கம் கொடுத்து வாங்க உறுப்பினர்கள் விரும்புவதில்லை.</p> <p style="text-align: justify;"><strong>அரசியல் போட்டியாளர்கள் (Political rivalries)</strong></p> <p style="text-align: justify;">இயக்குனர்களும், செயற்குழு உறுப்பினர்களும் பொதுவாக திறமை, பொது அறிவு, நேர்மை இதன் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவதில்லை. அவர்கள் சாதி, சமய, அரசியல் தொடர்பின்படி தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். பெரும்பாலான கூட்டுறவுச் சங்கங்களின் தோல்விக்கு அவர்களே பொறுப்பேற்கிறார்கள்.</p> <h3>கூட்டுறவுச் சங்கத்தை தோற்றுவித்தல்</h3> <p style="text-align: justify;">கூட்டுறவுச் சங்கம் சங்க சட்டம் 1912ன்படி அல்லது மாநில கூட்டுறவு சட்டத்தின்படி ஒரு சங்கம் பதிவு செய்யப்பட வேண்டும். ஒரு ஊரைச் சேர்ந்த பொதுநலன் உள்ள எவரேனும் 25 நபர்கள் கூடிக் கூட்டுறவுச் சங்கத்தைத் தோற்றுவிக்கலாம். கூட்டுறவுச் சங்கப் பதிவாளரிடம் சங்கம் அமைக்க இருக்கும் விருப்பத்தை விண்ணப்பப் படிவம் மூலம் தெரிவிக்க வேண்டும். அந்த விண்ணப்பப் படிவத்திற்கு அமைப்பு முறையேடு (Memorandum of Association) என்று பெயர்.</p> <p style="text-align: justify;">அதில் சங்கத்தின் பெயரும், விலாசமும், நோக்கங்களும், முதல், உறுப்பினர்களின் பொறுப்பு ஆகியவை குறிப்பிட வேண்டும். விண்ணப்பத்துடன் சங்கத்தின் துணை விதிகளையும் கட்டுப்பாடுகள் ஆகியவையும் இணைத்திருக்க வேண்டும்.</p> <p style="text-align: justify;">மேலாண்மை செய்யும் முறை, கூட்ட நடைமுறைகள் தீர்மானங்கள் ஆகியவை துணை விதிகளில் குறிப்பிடப்பட வேண்டும். பதிவாளர் பத்திரங்களை முறையாகப் பரிசீலித்து அவை சட்டப்படி உள்ளனவா என்பதை ஆய்வு செய்வார். பிறகு அதில் அவர் முழு திருப்தியடைந்தவுடன், சங்கத்தினுடைய பதிவேடுகளில் பதிவு செய்து கூட்டுருவாக்க பதிவுச் சான்றிதழைக் கொடுப்பார். இச்சான்றிதழைக் கொடுத்தபின், அந்தச் சங்கம் சட்ட உருவைப் பெற்று தனி ஆளுமையைப் பெறுகிறது.</p> <h3 style="text-align: justify;">கூட்டுறவு அமைப்பின் வகைகள் (Types of co-operatives)</h3> <p style="text-align: justify;">கூட்டுறவின் எல்லை மிகவும் விரிவடைந்துள்ளது. எங்கெல்லாம் வியாபார இடைநிலையர் இருக்கின்றார்களோ அங்கெல்லாம் மக்கள் சுரண்டப்படுவது நடைபெறுவதால் கூட்டுறவு இயக்கம் தோன்ற ஆரம்பிக்கிறது. இதன் விளைவாக பல்வேறு வகையான கூட்டுறவுகள் தொடர்கின்றன</p> <p style="text-align: justify;"><strong>நாணய சங்கங்கள்</strong></p> <p style="text-align: justify;">இது எளிய மக்களால் தன்னிச்சையாக இணைந்து உருவாக்கப்பட்ட அமைப்பாகும். இது உறுப்பினர்களுக்கு குறுகிய கால நிதியுதவி அளிக்கும் நோக்குடன் அமைக்கப்பட்டது. இந்த வழிகளில் உறுப்பினர்களை கடும் வட்டிக்குப் பணம்தரும் கடனீந்தோரிடமிருந்து உறுப்பினர்களைக் காக்கிறது. இந்த சங்கங்கள் இரு வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன.</p> <p style="text-align: justify;"><strong>வேளாண்மை கடன் சங்கங்கள்</strong></p> <p style="text-align: justify;">ஒரு கிராமத்திலுள்ள விவசாயிகளால் பொதுவாக அமைக்கப்படும் கடன் சங்கமாகும். விவசாயம் சார்ந்த உற்பத்தி மற்றும் உற்பத்தி சாரா நோக்கங்களுக்காக உறுப்பினர்களுக்குக் கடன் வசதியளிக்கிறது. இச்சங்கங்கள் ஊரக நாணயச் சங்கங்கள் (அ) பிரதம நாணயச் சங்கங்கள் என்று அழைக்கப்படுகின்றன.</p> <p style="text-align: justify;"><strong>ஊரக நாணயச் சங்கங்கள் (Rural Credit Societies)</strong></p> <p style="text-align: justify;">இது கிராமங்களில் தோற்றுவிக்கப்படும். இதற்குரிய பங்கு முதல் பங்குகள் வெளியிடுவதன் மூலமாகவும், உறுப்பினர் மற்றும் உறுப்பினரல்லாதவரின் வைப்பும் பெற்றும் திரட்டப்படுகிறது. சிறு விவசாயிகளுக்கும், நடுத்தர விவசாயிகளுக்கும் உற்பத்தி சார்ந்த காரணங்களுக்காக கடன் வசதி அளிக்கின்றன. இந்த பிரதமச் சங்கங்கள் கிராம் அளவில் அதிகமாக நடத்தப்படுகிறது. இவை உறுப்பினர்களிடையே சேமிப்புப் பழக்கத்தையும், ஊரகச் சேமிப்புகளை திரட்டிக் கொடுத்து நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவி புரிந்து வருகின்றன. உறுப்பினர்களின் பொறுப்பு வரையறாப் பொறுப்பாகும்.</p> <p style="text-align: justify;"><strong>வேளாண்மைச் சாரா கடன் சங்கங்கள் (Non - Agricultural Credit Societies)</strong></p> <p style="text-align: justify;">வேளாண்மைச் சாரா கடன் சங்கங்கள் ஊரக மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள மக்களால் அமைக்கப்படுகிறது. இதன் நோக்கம் உறுப்பினர்களுக்கு உற்பத்திச் சார்ந்த நோக்கங்களுக்கு உதவி புரிவதாகும். அவை மூன்று வகைகளாகப் பிரிக்கப்படும்.</p> <p style="text-align: justify;"><strong>நகர வங்கி (Urban Banks)</strong></p> <p style="text-align: justify;">இது நகர்ப்புறங்களில் அமைந்திருக்கும். அதனால் இந்த அமைப்புக்கு நகரக் கடன் சங்கங்கள் என்று பெயர். இதன் உறுப்பினர்களின் பொறுப்பு வரையறுக்கப்பட்டது ஆகும். இது உறுப்பினர்களிடமிருந்தும் வைப்புத் தொகை திரட்டுகிறது. இந்த நிதியின் மூலம் உறுப்பினர்களுக்கு குறைந்த வட்டியில் கடனுதவி அளிக்கிறது. இது வணிக வங்கியைப் போன்றே வங்கித் தொழிலையும் செய்கிறது.</p> <p style="text-align: justify;"><strong>பணியாளர் கடன் சங்கங்கள் (Employees' Credit Societies)</strong></p> <p style="text-align: justify;">இது குறைந்த வளங்களுடைய மக்களால் அமைக்கப்படுவது. இதன் முக்கிய நோக்கம் உறுப்பினர்களுக்கு நிதி உதவியளிப்பதாகும். இது உறுப்பினர்களிடையே சிக்கனம், மற்றும் சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கிறது. தொழிலமைப்பிலுள்ள பணியாளர்களால் இந்த சங்கம் உருவாக்கப்பட்டு நீண்ட கால கடன் வசதி குறைந்த வட்டியில் வழங்குகின்றனர்.</p> <p style="text-align: justify;"><strong>தொழிலாளர் கடன் சங்கங்கள் (Workers Credit Societies)</strong></p> <p style="text-align: justify;">ஒரு தொழிற்சாலையிலுள்ள திறமையான, நடுத்தரமான திறமையுள்ள தொழிலாளர்களால் இவ்வமைப்பு உருவாக்கப்படுகிறது. இது உறுப்பினர்களுக்கு குறைந்த கால கடன் வசதி, ஏலம் விடுதல் மூலம் நிதி உதவியும் அளிக்கிறது. கடன் தொகைகள் சமமாக்கப்பட்ட மாதாந்திர தவணை மூலம் வட்டியுடன் வசூலிக்கப்படுகிறது.</p> <p style="text-align: justify;"><strong>நாணயம் சாரா சங்கங்கள் (Non - Credit Societies)</strong></p> <p style="text-align: justify;">இந்த சங்கங்கள் பொருளாதார பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வாகும். இது பொருளாதார பிரச்சனையுள்ள மக்களால் அமைக்கப்படுவது. இது பின்வரும் இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்படும்.</p> <p style="text-align: justify;"><strong>வேளாண்மைச் சாரா கடன் சங்கங்கள் (Agricultural Non- Credit Societies)</strong></p> <p style="text-align: justify;">இந்த சங்கங்கள் உறுப்பினர்களின் குறைந்த வளத்தை வைத்துக்கொண்டு குறைந்த வட்டியில் கடன்பெறச் செய்கிறது. இது உறுப்பினர்களின் பொருட்களுக்கு சந்தையிடவும், பண்ணை செய்யவும், தொழில் சேவைகளையும் செய்கின்றது. பின் வருபவை இதன் வகைகளாகும்.</p> <p style="text-align: justify;"><strong>கூட்டுறவு சந்தையிடுதல் சங்கம் (Co-operative Marketing Societies)</strong></p> <p style="text-align: justify;">கூட்டுறவு சந்தையிடுதல் சங்கம் உறுப்பினர்கள் உற்பத்தி செய்த பொருட்களுக்கு நியாயமான விலை கிடைக்க உதவி புரிகிறது. இச்சங்கங்கள் உறுப்பினர்கள் உற்பத்தி செய்த பொருட்களை வாங்கி, சந்தையில் நல்ல விலை கிடைக்கும்போது விற்பனை செய்கின்றன.</p> <p style="text-align: justify;">சில வேளைகளில் உறுப்பினர்களின் உற்பத்திப்பொருட்களை கழிவு அடிப்படையில் விற்பனை செய்து தருகிறது. இந்த சங்கம் உறுப்பினர்களுக்கு முன்பண வசதியும், கடனும் அளிக்கிறது. இடைத் தரகர்களை நீக்கி உறுப்பினர்களின் உற்பத்திப்பொருட்களுக்கு நல்ல விலை கிடைக்கச் செய்கிறது.</p> <p style="text-align: justify;"><strong>கூட்டுறவு பண்ணை சேவை சங்கம் (Co-operative Farming societies)</strong></p> <p style="text-align: justify;">இது நில உரிமையாளர்களாலும், விவசாயிகளாலும் நடத்தப்படும் சங்கமாகும். அதிக அளவில் பண்ணை சேவை செய்வதன் மூலம் குறைந்த செலவில் அதிக பொருட்களை உற்பத்தி செய்யும் பயன்களைப் பெறுகிறது. விவசாய விளைச்சல் குறைந்தபோதும் உறுப்பினர்களின் பிரச்சனைகளைத் தீர்க்கிறது.</p> <p style="text-align: justify;"><strong>தொழிற்சாலை கூட்டுறவு சங்கம் (Industrial Cooperative)</strong></p> <p style="text-align: justify;">இந்த சங்கங்கள் சிறு தொழில் செய்யும் உற்பத்தியாளர்களால் நடத்தப்படுகிறது. கூட்டுறவு முறையில் சிறு தொழில் மற்றும் குடிசைத் தொழில் அமைக்க இந்த சங்கம் மிகுந்த உதவி புரிகின்றது. உற்பத்திப் பொருட்களின் தரத்தை உயர்த்தும் மூலப்பொருட்களைப் பெற இந்த சங்கங்கள் மிகுந்த உதவிபுரிகின்றன.</p> <p style="text-align: justify;"><strong>வேளாண்மை சாரா கடன் சாரா சங்கங்கள் (Non-Agricultural Non - Credit Societies)</strong></p> <p style="text-align: justify;">இந்தச் சங்கங்கள் நடுத்தர மற்றும் பின்தங்கிய வருவாய் உள்ள மக்களுக்கு உதவி புரிய தொடங்கப்பட்டதாகும். இதன் முதன்மை நோக்கம் பலவகையான சேவைகள் உறுப்பினர்களுக்கு குறைந்த செலவில் செய்து தருவதாகும். அதன் பல்வேறு வகைகளாவன.</p> <p style="text-align: justify;"><strong>நுகர்வோர் கூட்டுறவு (Consumer Co-Operatives)</strong></p> <p style="text-align: justify;">இந்த சங்கம் ஒரு குறிப்பிட்ட பகுதியிலுள்ள நுகர்வோர்களால் இன்றியமையாத பொருட்கள் நியாயமான விலையில் கிடைக்க நடத்தப்படுவதாகும். இதற்கு நுகர்வோர் கூட்டுறவுப் பண்டகசாலை என்று பெயர். இது இடைநிலையர்களைத் தவிர்க்கிறது. இந்த சங்கம் தேவையான பொருட்களை உற்பத்தியாளர்களிடமிருந்தும் மொத்த வியாபாரிகளிடமிருந்தும் அதிக அளவில் கொள்முதல் செய்து உறுப்பினர்களுக்கும், உறுப்பினரல்லாதவர்களுக்கும் நியாயமான விலையில் விற்பனை செய்கிறது.</p> <p style="text-align: justify;"><strong>உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் (Manufacturers Co-operatives)</strong></p> <p style="text-align: justify;">ஒரே நகரத்திலுள்ள உற்பத்தியாளர்களால் ஒரேவகையான தொழிற்சாலையை நடத்துபவர்களால் அமைக்கப்படுவது ஆகும். இது உறுப்பினர்களுக்குத் தேவையான இன்றியமையாத மூலப்பொருட்களையும், அரசின் உதவியையும் வரிச்சலுகைகளையும், பணியாட்களையும் பெற்றுத்தர உதவிபுரிகிறது. செங்கல் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம், துணிவகைகள் மில் உரிமையாளர் கூட்டுறவுச் சங்கம் ஆகியவை எடுத்துக்காட்டுகளாகும்.</p> <p style="text-align: justify;"><strong>கூட்டுறவு வீட்டு வசதி சங்கம் (Housing Co-operatives)</strong></p> <p style="text-align: justify;">ஒவ்வொரு நபருக்கும் சொந்த வீடு தேவை என்பது இருக்கும். சொந்த வீடு கட்டும் விருப்பமும், அதற்குத் தேவையான போதுமான நிதி வசதியில்லாதவர்களால் இந்த கூட்டுறவு வீட்டு வசதி கடன் சங்கம் தொடங்கப்படுகிறது. இது உறுப்பினர்கள் வீடு கட்ட, குறைந்த வட்டிக்கு நிதி உதவி அளிக்கிறது. கடன் தொகைகளை வட்டியுடன் சுலபத் தவணைகளில் திரும்பப் பெறுகிறது.</p> <p style="text-align: justify;"><strong>கூட்டுறவு பண்ட கசாலை (Co-Operative Warehouses)</strong></p> <p style="text-align: justify;">இது அதிகமாக கிராமப்புறங்களில் காணப்படும். விவசாயப் பொருட்களை சேமித்து வைக்கும் வசதியை உறுப்பினர்களுக்கு அளிக்கிறது. மேலும் முற்றுப்பெற்ற பொருட்கள் சந்தையில் நல்ல விலை கிடைக்கும்வரை சேமித்து வைக்க உதவுகிறது.</p> <p style="text-align: justify;"><strong>கூட்டுறவு சிறப்பங்காடிகள் (Co-Operative Super Markets)</strong></p> <p style="text-align: justify;">இந்தப் பதம் அடிப்படையில் இந்தியாவில் பயன்படுத்தப் படுவதாகும். ஆனால் இது ஆங்கிலத்தில் தோற்றம் பெற்ற பெயர் சிறப்பங்காடிகள் (Super Markets) ஆகும். இது பேரளவில் நடத்தப்படும் சில்லரை வியாபார அமைப்பாகும். நாள்தோறும் பயன்படுத்தப்படும் வீட்டுப் பொருட்கள் பல துறைகளில் விற்பாண்மையர் உதவியின்றி விற்கப்படுகிறது. இது பொதுவாக நிறுமத்தைப் போன்று இலாப நோக்குடன் அமைக்கப்படுவது. இது மாநகரங்களிலும், பெரு நகரங்களிலும் வழக்கமாகத் தொடங்கப்படும். அதிக முதலீடுகள் செய்யப்படுவதால் அதற்குத் தகுந்த விற்பனை அளவும் இலாபமும் கிடைக்க வேண்டும். இந்தியாவில் முதல் சிறப்பங்காடி புது டில்லியில் தொடங்கப்பட்டது.</p> <p style="text-align: justify;">கூட்டுறவு சிறப்பங்காடிகளில் மளிகைப் பொருட்கள், மற்றும் பல்வகைப் பொருட்கள் விற்கப்படும். மற்ற துறைகளில் துணி, காலணிகள், எழுதுபொருள், பாதணிகள் மற்றும் வீட்டுப் பொருட்கள் அவற்றின் விலைகளுடன் இணைக்கப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும். பொருட்களின் விலைகள் நியாயமானது. ஒரே விலை. பேரம் பேச இயலாது. உறுப்பினர் வாங்கும் பொருட்களை அவரவர் இல்லங்களில் சேர்ப்பிக்கும் பொறுப்பையும் ஏற்றுக்கொள்கின்றன. ரொக்க விற்பனை மட்டும் செய்யப்படுகிறது. சிலசமயங்களில் கடன் அட்டை (Credit Cards) களும் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.</p> <p style="text-align: justify;">MM. ஜிம்மர் மேன் அவர்கள் சிறப்பங்காடிகள் பற்றி வரையறை செய்யும்போது, சில்லரை விற்பனை செய்யும் துறைவாரி அமைப்பு, நான்கு அடிப்படை துறைகளைக் கொண்டது. அதாவது மளிகைப்பொருள் சுயசேவைப் பிரிவு, மாமிசப் பிரிவு, பால்பண்ணைப் பொருட்கள் மற்றும் வீட்டுக்குத் தேவையான பொருட்கள் விற்பனை செய்யுமிடம் சலுகை அடிப்படையில் துறைகளை குத்தகைக்கு ஏற்று நடத்துமிடம்.</p> <p style="text-align: justify;"><strong>சிறப்பியல்புகள்</strong></p> <ol style="text-align: justify;"> <li>பேரளவு சில்லறை விற்பனை செய்யும் அமைப்பு</li> <li>பலவகையான பொருட்கள் கிடைக்குமிடம்</li> <li>சுயசேவைப்பிரிவு முறையில் நடத்தப்படுகிறது.</li> <li>சுயசேவைப்பிரிவில் விற்பாண்மையர் தேவை ஏற்படுவதில்லை.</li> <li>இதன் தோற்றம் பல துறைகளைக் கொண்டதாகும்.</li> <li>ரொக்க விற்பனை அடிப்படையில் வியாபாரம் செய்யப்படும்.</li> <li>பொருட்கள் சுத்தம் செய்யப்பட்டு, பல கட்டுமங்களில் விற்கப்படுகின்றன.</li> <li>பொருட்களில் கலப்படம் தவிர்க்கப்படுகிறது.</li> <li>சரியான அளவைகளில் பொருட்கள் விற்கப்படுவதால் நுகர்வோர்கள் குறைந்த நிறுவையால் ஏமாற்றப்படுவதில்லை.</li> <li>அரிதான பொருட்கள்கூட இங்கு விற்பனை செய்யப்படுகிறது.</li> </ol> <p style="text-align: justify;"><strong>கூட்டுறவுச் சிறப்பங்காடிகள் நுகர்வோருக்கு பல வழிகளில் கீழ்க்கண்டவாறு உதவுகின்றன. </strong></p> <p style="text-align: justify;"><strong>பயன்கள்</strong></p> <ul> <li style="text-align: justify;">அன்றாடம் பயன்படுத்தப்படும் பொருட்கள் நுகர்வோர்களுக்கு ஒரே இடத்தில் கிடைக்கின்றன.</li> <li style="text-align: justify;">கூட்டுறவு சிறப்பங்காடிகளின் இலாபங்கள் குறைந்த விலையில் விற்பதன் மூலம் பகிர்ந்தளிக்கப்படுகிறது.</li> <li style="text-align: justify;">சிறப்பங்காடிகள் பெரிய இடங்களில் நடைபெறுவதால் அங்காடியில் பல இடங்களுக்குச் சென்று ஓய்வுடன் அவர்கள் விருப்பப்படி தேர்வு செய்து கொள்முதல் செய்யலாம்.</li> <li style="text-align: justify;">பல நுகர்வோர்கள் சிறப்பங்காடிகளுக்கு வருவதால் அதிகமான விற்பனை செய்ய முடிகிறது.</li> <li style="text-align: justify;">நிலையான விலைகள் பொருட்களுடன் இணைத்து வைக்கப்பட்டுள்ளன. தீமைகள் விற்பனையாளர் இல்லை. அதனால் நுகர்வோருக்குத் தேவையான வழிகாட்டுதல்கள் கிடைப்பதில்லை.</li> <li style="text-align: justify;">மாநகரங்களிலும், பெருநகரங்களிலும் இது நடத்தப்படுவதால் பேரளவு முதலீடு இதற்குத் தேவைப்படுகிறது.</li> <li style="text-align: justify;">சுய சேவைப்பிரிவில் நுகர்வோர்களே பொருட்களை கையாள்கிறார்கள். இதனால் பொருட்களும், கட்டுமங்களும் சேதமுற வாய்ப்புண்டு.</li> <li style="text-align: justify;">தமிழக அரசு, மக்கள் நலம் கருதி மேலும் பல நகரங்களில் கூட்டுறவுச் சிறப்பங்காடிகளைத் துவக்க திட்டமிட்டிருக்கிறது. தமிழ்நாட்டிலுள்ள சில கூட்டுறவு சிறப்பங்காடிகள் சென்னையிலுள்ள காமதேனு சிறப்பங்காடி, கோவை மற்றும் திருச்சியிலுள்ள சிந்தாமணி கூட்டுறவு சிறப்பங்காடி, வேலூரிலுள்ள கற்பகம் சிறப்பங்காடி, சேலத்திலுள்ள பொன்னி கூட்டுறவு சிறப்பங்காடி.</li> </ul> <h3 style="text-align: justify;">கூட்டுறவு சங்கத்திற்கும், கூட்டுப்பங்கு நிறுமத்திற்கும் உள்ள வேறுபாடுகள்</h3> <p style="text-align: justify;">கூட்டுறவு சங்கத்திற்கும், கூட்டுப்பங்கு நிறுமத்திற்கும் பல ஒற்றுமைகள் இருக்கின்றன. இரண்டு அமைப்புகளும் பங்குகள் விற்பனை செய்வதன் மூலம் முதல் தொகை திரட்டுகிறது. இரண்டுமே சட்ட உரு பெற்றுள்ளன. இவற்றிற்கிடையே இந்த ஒற்றுமைகள் இருப்பினும் அவை இரண்டும் மிக்க வேறுபட்ட தொழிலமைப்புகளாகும்.</p> <h3 style="text-align: justify;">இந்தியாவில் கூட்டுறவு இயக்கம்</h3> <p style="text-align: justify;">கூட்டுறவு என்னும் கருத்து நமது நாட்டுக்கு புதுமையானது அல்ல. பழங்காலம் தொட்டு நமது ஊரகப் பொருளாதாரம் நாட்டுப்புறங்களிலுள்ள மக்கள் ஒன்றுபட்டு வாழவேண்டும் என்ற அடிப்படையிலேயே எழுந்தது. ஊரில் நடைபெறும் அனைத்துச் செயல்களிலும் ஊரக மக்கள் கூட்டுறவு உணர்வோடுதான் பங்கெடுத்து வந்திருக்கிறார்கள். சாணக்கியரின் அர்த்தசாஸ்திரத்திலும் நமது நாட்டில் அன்று நிலவிய கூட்டுறவு உணர்வு பற்றி ஆங்காங்கு சொல்லப்பட்டுள்ளது.</p> <p style="text-align: justify;">(பிரிட்டிஷ்காரர்கள்) வெள்ளையர்கள் நமது நாட்டில் ஆட்சி செலுத்தத் துவங்கிய நாள் தொட்டு, நமது பண்டைய ஊரக மேலாண்மை முறை மங்கி மடியத் தொடங்கியது. ஆனால் நவீன கூட்டுறவு இயக்கம் 1904-ம் ஆண்டில் நமது நாட்டில் தோற்றம் பெற்றது. அன்று நாட்டுப் புறங்களிலும், நகரங்களிலும் வாழ்ந்து கொண்டிருந்த உழவர்கள், கைவினைஞர், தொழிலாளிகள் போன்றோர் வட்டிக்கடைக்காரர்களின் கொடும்பிடியில் அகப்பட்டு அவதியுற்றனர். ஊரகக் கடன் சுமை கொடும் நஞ்சுபோல் ஏறிக்கொண்டிருந்தது. உழவர்கள் சொல்ல இயலாத் துயர்பட்டு வந்தனர். வேளாண்மை நலிவுற்று வந்தது.</p> <p style="text-align: justify;">ஜெர்மனி நாட்டில் கடன் கொடுப்போரின் கொடும்பிடியிலிருக்கும் ஊரக மக்களை உய்வித்து வெற்றிவாகை சூடிய கூட்டுறவு ஊரக நாணயச் சங்கங்களை ஏன் நமது நாட்டிலும் துவங்கி நம் மக்கள் படும் துயர் துடைக்கக்கூடாது எனக் கருதிய தமிழக அரசு அதன் ஐ.சி.எஸ்(I.C,S) அலுவலரான திரு. பிரடரிக் நிக்கல்சன் (Frederic Nicholson) என்பவரை அந்நாட்டுக்கு அனுப்பி அங்கு இயங்கிவந்த கூட்டுறவு ஊரக வங்கிகளின் அமைப்பு, செயல்முறை, அவற்றை நமது நாட்டில் துவக்குவதற்கான சாத்தியக் கூறுகள் ஆகிய செய்திகளை ஆய்ந்தறிந்து வருமாறு செய்தது. இந்தியாவிலும் அத்தகைய ஊரக நாணயச் சங்கங்களைத் துவக்கலாம் எனப் பரிந்துரைத்து 1895-ம் ஆண்டு அவர் அறிக்கை சமர்ப்பித்தார்.</p> <p style="text-align: justify;">இதன் பயனாக மைய அரசு 1904-ம் ஆண்டு நாணயக் கூட்டுறவுச் சங்க சட்டம் இயற்றிக் கூட்டுறவு இயக்கத்துக்கு நமது நாட்டில் அடித்தளம் போட்டது. ஊரக மக்களுக்கு குறைந்த வட்டிக்குக் கடன் கொடுக்கும் நோக்கத்தோடு நாணயக் கூட்டுறவுச் சங்கங்கள் பல இச்சட்டத்தின்கீழ் துவக்கப்பட்டன. நாணயச் சங்கங்கள் தவிர, பிறவகைக் கூட்டுறவுச் சங்கங்கள் அமைக்கவும், கூட்டுறவு மைய வங்கிகள், மாநிலக் கூட்டுறவு வங்கி போன்றவை நிறுவவும் இச்சட்டம் வழிவகை செய்யவில்லை. எனவே இந்திய அரசு கூட்டுறவுச் சங்கச் சட்டம் என்ற விரிவான சட்டத்தை 1912-ம் ஆண்டு இயற்றி வெவ்வேறு வகையான கூட்டுறவுச் சங்கங்களையும், கூட்டுறவு இணையங்களையும் துவக்குவதற்கு வகை செய்தது.</p> <p style="text-align: justify;">1919- ம் ஆண்டு கூட்டுறவு என்னும் பொருள் மாநில அரசின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட பொருளாக மாறியதை அடுத்து, பல மாநில அரசுகள் அந்தந்த மாநிலங்களில் இயங்கும் கூட்டுறவுச் சங்கங்களை ஒழுங்குபடுத்தும் நோக்கத்தோடு தனித்தனியாகக் கூட்டுறவுச் சட்டங்கள் இயற்றிக் கொண்டன. அன்றைய தமிழக அரசும் தமிழ்நாட்டுக் கூட்டுறவுச் சட்டத்தை 1932-ம் ஆண்டு இயற்றியது. இச்சட்டத்தை 1961-ம் ஆண்டு மாற்றியமைத்தது. இன்று தமிழகத்தில் இயங்கிவரும் கூட்டுறவுச் சங்கங்களைக் கட்டுப்படுத்தி வருவது அதன் 1961-ம் ஆண்டு கூட்டுறவுச் சங்க சட்டமாகும்.</p> <p style="text-align: justify;">ஆதாரம்: தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் ஆராய்ச்சி மையம்</p> </div>