Accessibility options
Accessibility options
Government of India
Contributor : Mariyappan23/09/2021
Skip the lengthy reading. Click on 'Summarize Content' for a brief summary powered by Vikas AI.
புதிய வரி விதிப்பு முறையை பொதுமக்கள் புரிந்து கொள்வதற்கு சற்று காலம் ஆகலாம். தினசரி பயன்பாட்டுக்கான பொருட்களின் மீதான குறைந்த வரி விதிப்பு விகிதங்களுக்கும் எப்போதாவது பயன்படுத்தும் பொருட்களின் மீதான அதிகமான வரிவிதிப்பு விகிதங்களுக்கும் இடையிலான சம நிலையைத் தெளிவாகப் புரிந்து கொள்வதற்கு நுகர்வோருக்கு நாள்களாகும். சரக்குகள் மற்றும் சேவைகள் வரி அமைப்பை உருவாக்க முற்பட்டவை என்று எந்த ஒரு தனிப்பட்ட அரசியல் கட்சியையும் குறிப்பிட முடியாது. இதை நடைமுறைப்படுத்தும் முறைமையில் அவைகள் வேறுபட்டே இருக்கின்றன. முந்தைய பிரதமமந்தரி நரசிம்மராவின் கீழ் பணிபுரிந்த பொருளாதாரச் சீர்திருத்தங்களுக்கான சிற்பியும் முன்னாள் பிரதமமந்திரியுமான டாக்டர் மன்மோகன்சிங்குக்கே ஜி.எஸ்.டி உருவாக்கப்பட்டதற்கான அங்கீகாரத்தைத் தரலாம். முந்தைய அரசுகள் இரண்டும் மற்றும் தற்போதைய அரசும் சில ஷரத்துகள் மீது மாறுபட்ட கருத்துகளைக் கொண்டு உள்ளன. ஜி.எஸ்.டி வரலாற்றை இப்போது நாம் பார்ப்போம்.
சரக்குகள் மற்றும் சேவைகள் வரியானது (ஜி.எஸ்.டி) பிரதானமாக மத்திய, மாநில அரசுகள் விதிக்கும் பல்வேறு விதிகளுக்கு மாற்றாக அமைகின்றது. அரசியலமைப்பு 122வது திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து அரசியலமைப்பு (நூற்றி இருபத்து இரண்டாவது திருத்தம்) சட்டம், 2016 இயற்றப்பட்டது. இதன் மூலமாகவே ஜி.எஸ்.டி அமல்படுத்தப்பட்டது. ஜி.எஸ்.டியை ஜி.எஸ்.டி கவுன்சில் நிர்வகிக்கும். இந்தக் கவுன்சிலின் தலைவராக மத்திய நிதி அமைச்சர் இருப்பார். ஜி.எஸ்.டி வரிவிதிப்பின் கீழ் சரக்குகள் மற்றும் சேவைகளுக்கு 0.25%, 5%, 12%, 18%, 28% என்ற விகிதத்தின்படி வரி விதிக்கப்படும். பட்டை தீட்டிய மற்றும் ஓரளவு பட்டை தீட்டப்பட்ட விலைமதிப்புள்ள கற்களுக்கு விசேஷ வரி விகிதமாக 0.25% வரி விதிக்கப்பட்டுள்ளது. தங்கத்திற்கு வரி விகிதம் 3% என விதிக்கப்பட்டுள்ளது.
அனைத்து வர்த்தக நடவடிக்கைகளிலும் ஜி.எஸ்.டி வரி விதிக்கப்படும். அதாவது விற்பனை, பரிமாற்றம், கொள்முதல், குத்தகை அல்லது சரக்குகள் மற்றும்/அல்லது சேவைகள் இறக்குமதி என அனைத்துக்கும் வரி உண்டு. இந்தியா இரட்டை ஜி.எஸ்.டி வரி விதிப்பு மாதிரியை கடைபிடிக்கும். இதன் அர்த்தம் என்னவென்றால், மத்திய அரசு மற்றும் மாநில அரசு இரண்டுமே வரியை விதிக்கும்; பரிமாற்றம் நிகழும் மாநிலத்தில் உள்ள அரசு மாநில ஜி.எஸ்.டி வரியை விதிக்கும். மாநிலங்களுக்கு இடையிலான பரிமாற்றங்கள், சரக்குகள் அல்லது சேவைகளை இறக்குமதி செய்தல் ஆகியவற்றுக்கு மத்திய அரசு ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி வரியை (ஐ.ஜி.எஸ்.டி) விதிக்கும்.
ஜி.எஸ்.டி என்பது நுகர்வு அடிப்படையிலான வரியாகும். எனவே சரக்குகள் அல்லது சேவைகள் எந்த மாநிலத்தில் நுகர்வோரால் பயன்படுத்தப்படுகின்றதோ அந்த மாநிலத்துக்கு வரிகள் செலுத்தப்படும். அந்தப் பொருட்கள் உற்பத்தி ஆகும் மாநிலத்திற்கு வரிகள் கிடைக்காது. ஐ.ஜி.எஸ்.டி வரி வசூலிப்பதில் மாநில அரசுக்கு உரிமை இல்லை. மத்திய அரசு தாம் நேரடியாக வசூலித்த வரியில் இருந்து மாநிலங்களுக்கு உரிய பங்கினை அளித்து விடும். முந்தைய வரிவிதிப்பு முறையின் கீழ் ஒரு மாநிலமானது ஒற்றை அரசாங்க முறையில் வரி வருவாயை வசூலித்து வந்தது.
ஜி.எஸ்.டி அமல்படுத்தப்படுவதால் ஏற்படக்கூடிய பாதிப்பால் மாநிலங்களுக்கு உருவாகக்கூடிய வருவாய் இழப்பை ஈடு செய்ய வழி வகைகள் உள்ளன. பெட்ரோலியம் மற்றும் பெட்ரோலியப் பொருட்களின் மீது ஜி.எஸ்.டி விதிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு இருப்பதால் இது சாத்தியமாகும். ஜி.எஸ்.டி அமல் செய்யப்பட்ட நாளில் இருந்து ஐந்து ஆண்டு காலகட்டத்துக்குள் மாநிலங்களுக்கு வருவாய் இழப்பு ஏதாவது ஏற்பட்டால் அதற்கான இழப்பீடு வழங்கப்படும் என மத்திய அரசு உறுதி அளித்துள்ளது. ஜி.எஸ்.டி-யின் முதன்மை தாக்கத்தில் ஒன்றாக இந்தியாவில் டீசல், பெட்ரோல் விலைகள் தினமும் அறிவிக்கப்படுகின்றன.
முன்மொழியப்பட்டுள்ள ஜி.எஸ்.டி சட்டத்தை நிர்வகிப்பதற்காக 21 நபர் கொண்ட தேர்வுக்குழு உருவாக்கப்பட்டுள்ளது. மாநில மற்றும் யூனியன் பிரதேச ஜி.எஸ்.டி சட்டங்கள் ஜம்முகாஷ்மீர் நீங்கலாக அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இயற்றப்பட்டுள்ளன. ஜூலை 1, 2017 முதல் வரிவிதிப்பு முறையானது சிரமம் இன்றி செயல்பட இந்த நடவடிக்கைகள் வழி வகுத்துள்ளன.
பத்திரங்களை விற்பதற்கும் வாங்குவதற்கும் ஜி.எஸ்.டி வரி விதிக்கப்படமாட்டாது. அவை வழக்கம்போல் பத்திரங்கள் பரிமாற்ற வரிக்கு (எஸ்.டி.டி) உட்பட்டே இருக்கும்.
இணையான செயல்பாடாக 'சரக்குகள் மற்றும் சேவைகள் வரி” நெட்வொர்க் (ஜி.எஸ்.டி.என்) உருவாக்கப்பட்டுள்ளது. இது இலாபம் கருதாத அமைப்பாகச் செயல்படும். பங்குதாரர்கள், அரசு, வரி செலுத்துவோர் என தொடர்புடைய அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் ஒரு ஒற்றை போர்ட்டலாக இந்த மேடை உருவாக்கப்பட்டு உள்ளது. இந்தப் போர்ட்டலை மத்திய அரசு அணுகிப் பயன்படுத்த முடியும். ஒவ்வொரு பரிமாற்றத்தையும் அதன் இறுதிநிலை வரை அரசால் தடம் அறிய முடியும். வரி செலுத்துவோர் வருமான வரித்தாக்கல் செய்ய இது ஏதுவாக இருக்கும். ஆவணங்களைப் பராமரிக்கவும் உதவும். ஐ.டி. நெட்வொர்க்கைத் தனியார் நிறுவனங்கள் வளர்த்தெடுக்கும். இது பிறகு மத்திய அரசுடன் இணைக்கப்படும். இதற்கான பங்கும் ஈவும் முறைப்படித் தரப்படும். இதில் மத்திய அரசு 24.5% பங்குகளை வைத்திருக்கும். மாநில அரசு 24.5% பங்குகளை வைத்திருக்கும். மீதியுள்ள பங்குகள் தனியார் வங்கி நிறுவனங்கள் பெற்றிருக்கும்.
ஜி.எஸ்.டி சட்டத்தின்படி இது செப்டம்பர் 2, 2017க்குள் அமலாக்கப்பட வேண்டும். கருணைக்கால எல்லையான செப்டம்பர் 12, 2017க்குப் பிறகு முந்தைய வரிகள் அனைத்தும் இரத்தாகிவிடும். அதனால் மத்திய அரசு ஜி.எஸ்.டியை ஜூலை 1, 2017இல் அறிமுகப்படுத்த விரும்பியது. அனைத்து மறைமுக வரிகளும் நீக்கப்பட்டு அதற்குப் பதிலாக ஒரே சீரான ஒற்றை வரி விதிக்கப்படும். எனவேதான் நள்ளிரவு வெளிச்சத்தை அரசு ஏற்படுத்தியது. ஜூலை 1, 2017இல் ஜி.எஸ்.டி அறிமுகப்படுத்தப்படும் என்ற உறுதிமொழியையும் அரசு நிறைவேற்றியது. நாடாளுமன்றத்தில் சிறப்பு நள்ளிரவு அமர்வு நடைபெற்றது. உலகமே இந்த வரலாற்று நிகழ்வைப் பார்த்தது.
சில வரிவிதிப்பு விகிதங்கள் குறித்து மாற்றுக் கருத்துகள் உள்ளன. அதேபோன்று மிக விரைவாக ஜி . எஸ் . டி யை அமல் படுத்தியது குறித்தும் விமர்சனங்கள் உள்ளன. புதிய வரி விதிப்பு முறையை உள்வாங்கி தனது செயல்முறைகளை மறுவடிவமைப்பு செய்ய இன்னமும் தாங்கள் தயாராகவில்லை என்பதைத் தொழில் உலகம் தெரிந்து வைத்திருந்தது.
எந்த ஒரு புதிய சட்டமும் தொடக்கத்தில் சந்தேகத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தவே செய்யும். ஒட்டுமொத்த தேசமும் ஜி.எஸ்.டி-யை இந்த முறையிலேயே எதிர்கொண்டது. குடிமக்கள் திடீரென தங்கள் பில்களின் தொகையானது அதிகரித்துள்ளதைப் பார்த்தார்கள். பயன்படுத்தப்படும் இடத்தை மையமாகக் கொண்ட வரிவிதிப்புக்கு நாடு தற்போது மாறி உள்ளது என்பதை குடிமக்கள் இப்பொழுது வரையிலும் புரிந்து கொள்ளவில்லை. இது ஒரு நுகர்வை மையப்படுத்திய வரியாகும். நுகர்வு எங்கெல்லாம் நடக்கிறதோ அங்கு வரி விதிக்கப்படுகின்றது. தமிழ் நாடு அல்லது மகாராஷ்டிரம் அல்லது ஆந்திரப்பிரதேசத்தில் உற்பத்தி செய்யப்படும் ஒரு சரக்கு உதாரணமாக தில்லியில் வாங்கி பயன்படுத்தப்பட்டால், சண்டிகரில் அல்லது ஜெய்ப்பூரில் அல்லது லக்னெளவில் வாங்கி பயன்படுத்தப்பட்டால் அங்குதான் அந்தச் சரக்குக்கு வரி விதிக்கப்படும்.
நவம்பர் 8, 2016இல் அறிவிக்கப்பட்ட பணமதிப்பு நீக்கம் தேசத்துக்கு முதல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது என்றால், ஜூலை 1, 2017இல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி) மக்களுக்கு ஆச்சரியத்தோடு அதிர்ச்சியையும் அளித்துள்ளது. ஆனால் அரசாங்கத்தின் நோக்கங்கள் நியாயமாகவும் தெளிவாகவும் உள்ளன. ''ஒரே தேசம் ஒரே வரி” என்பதே அரசின் நோக்கமாகும். சந்தைகளை ஒருங்கிணைத்தல், சர்வதேசத் தரக்கட்டுப்பாடுகளுக்கு ஏற்ப உயர்தல் ஆகியவற்றின் மூலம் உலகளாவிய சந்தைகளில் இந்தியா திறம்பட போட்டியைச் சமாளிக்க முடியும்.
கறுப்புப் பணத்தின் மீதான இரண்டாவது துல்லியமான தாக்குதலாக ஜி.எஸ்.டி இருக்கிறது. ஏனெனில் ஒவ்வொரு வர்த்தகரும் பதிவு செய்தாக வேண்டும்; ஜி.எஸ்.டி.ஐ.என் (பதிவு எண்) பெற்றாக வேண்டும். மேலும் மாதாந்திர அல்லது காலாண்டுக்கான வரி வசூல் அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். ஒவ்வொரு வர்த்தகரின் கணக்கும் இப்போது சட்டரீதியானதாக மட்டுமல்லாமல் கட்டாயமானதாகவும் மாறி உள்ளது.
1. நாடு முழுவதும் அமலில் உள்ள சுமார் 15 முதல் 20 வரையிலான வரிகளை ஒரே ஒற்றை வரிக்குள் உள்ளடக்கும் வகையில் வரி விதிப்பதை ஜி.எஸ்.டி நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தியா முழுவதிலும் சந்தைகளை ஒருங்கிணைத்தல், நாடு முழுவதும் சரக்குகளுக்கு சீரான ஒரே விலை என்பதும் நோக்கங்கள் ஆகும். இதனால் சில சரக்குகள் விலை அதிகமானதாகவும் சில சரக்குகள் விலை மலிவானதாகவும் மாறும் வாய்ப்பு இருந்தபோதிலும் இவையே நோக்கங்களாகச் சொல்லப்பட்டன.
2. ஜி.எஸ்.டி ஒரு எளிமையான வரியாக இருக்கிறது. ஆனால் இதனை நடைமுறைப்படுத்துவது என்பது சிக்கலானதாக உள்ளது. பல்வேறு சரக்குகளுக்கு ஜி.எஸ்.டியில் ஐந்து அடுக்கு வரிவிதிப்பு முறை உள்ளது. இதனால் சொகுசுப் பொருட்கள் விலை உயர்ந்தவையாக மாறும். பெருந்திரளான மக்கள் பயன்படுத்தும் பொருட்களின் விலையானது குறைவானதாக மாறும். இது ஒன்றும் புதிய விஷயம் அல்ல. தங்களுடைய பொருட்கள் சர்வதேசப் போட்டியை திறம்பட எதிர்கொள்ளும் வகையில் உலகில் பல நாடுகள் ஏற்கனவே இதனை நடைமுறைப்படுத்தி இருக்கின்றன.
ஒரே ஒரு விதிவிலக்கு என்னவென்றால் சொகுசுப் பொருட்களுக்கான வரி அதிகபட்ச வரிவிதிப்பு அடுக்கான 28%இல் உள்ளது. இது உலகத்திலேயே அதிகமான வரியாகும். அமெரிக்க மற்றும் இங்கிலாந்து ஆகிய இரு நாடுகளில்கூட 17%க்கு மேல் ஜி.எஸ்.டி வரி இல்லை.
ஜி. எஸ் . டி யின் கருத்துருவாக்கம் வித்தியாசமானதாகும். உற்பத்தி செய்யும் இடத்தில் வரி விதிக்கும் முறையாக இது இல்லை. இது பொருட்கள் பயன்படுத்தும் இடத்தில் வரி விதிக்கும் முறையாக உள்ளது. மேலும் தெளிவாகக் கூற வேண்டும் என்றால் இது நுகர்வு வரியாகும். ஒரு பொருளானது தமிழ்நாட்டில் உற்பத்தி ஆகிறது என்றால், அப்பொருள் நாடு முழுவதும் பயணம் செய்து தில்லியை அடைகிறது. அங்கு அப்பொருளை வாங்கும் நுகர்வோர் அல்லது வாங்குபவர் அப்பொருளுக்கான வரியைச் செலுத்துகிறார். இந்த வரியின் மீது மத்திய அரசு, மாநில அரசு இரண்டுக்கும் பங்கு இருக்கிறது. ஒரு உணவகத்தில் விதிக்கப்படும் வரி 18% என்றால் அதில் 9% வரியானது சி.ஜி.எஸ்.டி மூலமாக மத்திய அரசுக்குச் செல்லும். மீதி 9% வரியானது எஸ்.ஜி.எஸ்.டி மூலமாக மாநில அரசுக்குச் செல்லும். இது நுகர்வோர் வாங்கும் பொருட்களுக்கான பில்களில் தெளிவாகக் காட்டப்படும்.
மது அருந்துவதும் உணவு விடுதிகளில் உண்பதும் செலவு அதிகமான ஒரு செயலாக மாறி உள்ளன. விமானத்தில் பயணம் செய்வதை தவிர்த்துவிட முடியுமா என்ற சிந்தனையானது தோன்றும் வகையில் விமானக் கட்டணம் உயர்ந்துள்ளது. ஏ.சி, குளிர்சாதனப்பெட்டி, வாஷிங் மெஷின் போன்ற பொருட்கள் விலை உயர்ந்தவைகளாக மாறிவிட்டன. சுமார் 1200 பொருட்களுக்கு ஜி.எஸ்.டி வரிவிதிப்பு முறையால் 18% வரி விதிக்கப்பட்டுள்ளது. பொதுவான பலதரப்பட்ட நுகர்வுப்பொருள்கள் இப்பிரிவில் அடங்குகின்றன. இந்தப் பிரிவில்தான் 81% நுகர்வுப் பொருள்கள் உள்ளன.
குறைவான ஜி.எஸ்.டி வரி விகிதமானது விலைவாசியைக் குறைக்கும் என எதிர்பார்த்தாலும் குறுகிய காலத்துக்குள் பொருளாதார வளர்ச்சி குறிப்பிடத்தக்க நிலையை எட்டும் என்று கூறுவதற்கு இல்லை. ஆனால் மத்திய காலகட்டத்துக்குள் நாட்டுக்கும் அரசுக்கும் பலன்களை இது அளிக்கும் என்று நிதிசார் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். பெரும்பான்மையான சரக்குகளுக்கு ஜி.எஸ்.டி வரி விகிதங்கள் குறைவாக நிர்ணயம் செய்யப்பட்டு இருப்பதால் விலைவாசி குறையும் என பல பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்து இருக்கின்றனர். நாடு ஜி.எஸ்.டி வரிவிதிப்பு முறைக்கு மாறுவதால் உற்பத்திப்பிரிவுகளும் தொழிற்சாலைகளும் தங்களது வர்த்தகத்தை மறுசீரமைப்பு செய்ய வேண்டிய நிலையில் இருப்பதே தற்போது இந்தியாவுக்கான பெரும் சவாலாக உள்ளது. ஜி.எஸ்.டி. ஐ.என் மூலம் பதிவு செய்ய வேண்டிய கட்டாயம் இருப்பதால், அதிக எண்ணிக்கையில் சிறிய கம்பெனிகள் கூட இந்த வரிவிதிப்பு முறைக்குள் வர வேண்டிய தேவை உள்ளது.
விலைவாசிகுறையும் என்று எதிர்பார்த்தாலும்கூட, அடுத்து வரும் கொள்கைப் பரிசீலனையில் பாரத ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களைக் குறைக்கும் அளவிற்கு ஜி.எஸ்.டி தாக்கத்தை ஏற்படுத்தாது என பொருளாதார நிபுணர்கள் நம்புகின்றனர். முதன்மைப் பொருளாதார அதிகாரி சுனில் சின்ஹா பாரத ரிசர்வ் வங்கி மழைக்கால சூழலை மதிப்பிடும், புதிய வரி விதிப்பு முறை செயல் படும் விதமும் கவனத்தில் கொள்ளப்படும் என கூறியிருப்பதாக ஊடகங்கள் மேற்கோள் காட்டி உள்ளன.
ஜி.எஸ்.டியானது குறுகிய காலத்துக்குள் ஐந்து பெரும் தாக்கங்களை ஏற்படுத்தும் என பொருளாதார நிபுணர்களும் தொழில் உலகத்தினரும் கூறுகின்றனர்.
புதிய வரி விதிப்பு முறையானது பல நிறுவனங்களையும் தங்களது செயல்முறைகளை மறுவடிவாக்கம் செய்ய நிர்ப்பந்திக்கிறது. வரி விதிப்பில் இருந்து தப்ப முடியாதவாறு ஜி.எஸ்.டி முறையானது இருப்பதால் இப்போது நிறுவனங்கள் வியாபாரிகளையும் விநியோகஸ்தர்களையும் இன்வாய்ஸ் சமர்ப்பிக்குமாறு வலியுறுத்துகின்றன. விநியோகச் சங்கிலித் தொடரை முறையாகப் பராமரிப்பதால் பெரிய நிறுவனங்கள் இதனால் பயன் அடையும். மேலும் செலுத்திய உள்ளீட்டு வரிகளுக்கு அவை சலுகைகளை வழங்க முடியும். ஆனால் சிறிய நிறுவனங்கள் அதிக அளவில் செலவழிக்க முடியாது. ஜி.எஸ்.டிக்கு ஏற்ப அவர்கள் செயல்படுவது என்பது அதிக அளவு செலவை உண்டாக்கும். ''கலால்வரி விலக்கு அளிக்கப்பட்ட மண்டலங்களில் இருக்கின்ற உற்பத்திப் பிரிவுகளைத் தொடர்ந்து பல நிறுவனங்களிலும் தாக்கம் பலவிதமாக இருக்கும். ஜி.எஸ்.டி-யை அமல்படுத்துவது என்பது விநியோகச் சங்கிலித் தொடரில் செலவை மிச்சப்படுத்துவதாக அமையும். மேலும் ஒருங்கிணைக்கப்படாத வர்த்தகம் இனி ஒருங்கிணைக்கப்பட்ட வர்த்தகமாக மாறும்”, என வெளிநாட்டு கம்பெனி ஜெஃப்பெரீஸ் கூறி உள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
குறுகிய காலத்திற்கே சிரமம்; ஆனால் நீண்ட காலத்திற்கு நன்மை. இது நாடு ஒரு புதிய வரிவிதிப்பு அமைப்புக்கு மாறுவதால் ஏற்படும் நிலையாகும். இந்நிலை இயல்பானதுதான்.
ஆதாரம்: திட்டம் மாத இதழ்
பொருளாதாரத்தின் மீதும், சாதாரண மனிதனின் மீதும் GST ஏற்படுத்தும் தாக்கம் பற்றி இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.
நெறியற்ற முறையில் இலாபம் ஈட்டுதல் – ஜி.எஸ்.டியை நடைமுறைப்படுத்துவதில் உள்ள சவால் பற்றி விவரிக்கப்பட்டுள்ளன.
ஜி. எஸ்.டி -இன் இயல்புகளும் ஆதாயங்களும் பற்றி இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.
சரக்கு மற்றும் சேவைவரி பின்னமைப்பு (GSTN) பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.
சரக்கு மற்றும் சேவை வரி பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.
இந்தியாவின் பொருள்கள் மற்றும் சேவை வரி பற்றி இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.
Contributor : Mariyappan23/09/2021
Skip the lengthy reading. Click on 'Summarize Content' for a brief summary powered by Vikas AI.
19
பொருளாதாரத்தின் மீதும், சாதாரண மனிதனின் மீதும் GST ஏற்படுத்தும் தாக்கம் பற்றி இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.
நெறியற்ற முறையில் இலாபம் ஈட்டுதல் – ஜி.எஸ்.டியை நடைமுறைப்படுத்துவதில் உள்ள சவால் பற்றி விவரிக்கப்பட்டுள்ளன.
ஜி. எஸ்.டி -இன் இயல்புகளும் ஆதாயங்களும் பற்றி இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.
சரக்கு மற்றும் சேவைவரி பின்னமைப்பு (GSTN) பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.
சரக்கு மற்றும் சேவை வரி பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.
இந்தியாவின் பொருள்கள் மற்றும் சேவை வரி பற்றி இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.