பெண்கள் உரிமை ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் மனித உரிமை நாளும், பெண்கள் வலிமை நாளும் கொண்டாடப்பட்டு வருகிறது. உரிமை என்பது உறுதி செய்யப்பட்ட சுதந்திரமாகும். ஆனால் பெரும்பாலானோருக்கு என்னென்ன உரிமை பெற்றிருக்கிறார்கள் என்பது கூட தெரிவதில்லை. அதிலும் பெரும்பாலான பெண்கள் படிப்பறிவு இல்லாததால் அவர்களுடைய உரிமையினை நிலைநாட்டுவதில்லை. சமுதாயம் என்பது பல சிறு குழுக்கள் கொண்ட ஒரு கூட்டமைப்பாகும். சமூக விஞ்ஞானி ரோஸ்கோ பவுண்ட் என்பவர், ‘பல குழுக்களை நடுநிலை குலையாது பாதுகாத்தல் அவசியம்’ என்கிறார். பல சமூக குழுக்களில் பெண்கள், குழந்தைகள், மூத்த குடிமக்கள், ஊனமுற்றோர், மற்றும் பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பாதுகாக்கப்பட வேண்டியவராவர். ஒவ்வொரு நாகரீக சமுதாயமும் மனித உரிமையினை காக்க வேண்டியது கடமையாகும். இன்னொரு சமூக விஞ்ஞானி ராபர்ட் இங்கர்சால், ‘ஒரு சமுதாயத்தில் பிரபலமான சாதனை படைக்கும் மனிதர்கள் உருவாக வேண்டுமென்றால் அந்த சமுதாயம் பெண்களுக்கு சுதந்திரம் கொடுத்த சமூகமாக இருக்க வேண்டும்.’ ஆண்களும் பெண்களும் சமுதாயம் என்ற அழகு கட்டிடத்தினை தாங்கிப் பிடிக்கும் பலமான தூண்களாகும். ஆனால் சமீப கால சம்பவங்கள் பெண்களை தரம் தாழ்த்தி அழகு பார்க்கும் ஒரு நிலையாக உள்ளது. பெண்கள் உடல்வாகு இலகுவானது தான். ஏனென்றால் அவர்கள் குழந்தை பெற்கும் திறனும், குழந்தையினை பாலூட்டி வளர்க்கும் சக்தியும் கொண்டதால் வலிமை இழந்தவர்களாக காட்சி தருகிறார்கள். மிகவும் வலிமை மிகுந்த ஆடவர் பெண்களை காட்டில் புள்ளி மான்களை வேட்டையாடும் வலிமையான புலிகள் போன்று இருக்கிறார்கள். ஆனால் நாகரீக உலகம் அவர்களை மென்மைப்படுத்த வேண்டும். ஆணாதிக்க சமுதாயம் ஆசியாவிலும், தென் அமெரிக்காவிலும் இன்னும் ஆணாதிக்க சமுதாயம் தான் நடந்து கொண்டு இருக்கிறது. ஆணாதிக்க சமூகத்தில் கணவர்கள் மனைவிமார்களை கொடுமைப்படுத்தும் சம்பவங்களும், ஆண்கள் பெண்களை பாலியல் தொந்தரவு செய்வதும், ஆண்கள் சிறார்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதும், இளம் சிறுமிகளை அவர்கள் விருப்பத்திற்கு மாறாக திருமணம் செய்து கொடுப்பதும், அத்துடன் தேவதாசி முறையும், விதவைத் திருமண மறுப்பும், பலதார மணமும் நடந்து கொண்டு தான் உள்ளது. ஆகவே அரசும், அரசு சாரா தொண்டு நிறுவனங்களும் மக்களுடைய, அதுவும் குறிப்பாக நலிந்த சமூகத்தினரின் உரிமைகள் என்னன்ன என்பதினை போதிக்க வேண்டும் என்பது அவசியமான ஒன்றாகும். இரண்டாம் உலகப் போரில் பாதிக்கப்பட்டோர் பெரும்பாலானோர் பெண்களும், குழந்தைகளும், மூத்த குடிமக்களாவோர் ஆவர். ஆகவே பெண்களின் நலன் ஐ.நா. சபையின் பட்டயத்தில் 1945 ஆம் வருடம் அதிகமாக காணப்பட்டது. 1946 ஆம் ஆண்டு உலக பெண்களின் அரசியல், பொருளாதாரம், சிவில், சமூக மற்றும் கல்வி போன்றவற்றின் நிலை பற்றி அறிய ஒரு கமிசன் அமைக்கப்பட்டது. அதன் பலனாக 1948 ஆம் ஆண்டு மனித உரிமை பற்றிய சர்வதேச அறிவிப்பு வெளியானது. அதில் மனிதராக பிறந்தவர் அனைவரும் சுதந்திரப் பறவை மற்றும் சம உரிமை கொண்டவர்கள் என்றும் கூறப்பட்டது. பெண்களை பாலியல் குற்றங்களில் தள்ளும் பழக்கமுள்ள அந்நாளில் 1949 ஆம் ஆண்டு பெண்களை பாலியல் குற்றத்தில் ஈடுபடுத்துவது குற்றம் என்றும், அவ்வாறு தொழிலில் ஈடுபட்டவர்களை நல்வழிப்படுத்துவது அரசின் கடமை என்று அறிவிக்கப்பட்டது. 1952 ஆம் ஆண்டு பெண்களுக்கு அரசியல் உரிமை கொடுத்து அவர்கள் ஓட்டுப் போடும் வாய்ப்பும் வழங்கி, பெண்களை ஓட்டுப் போடாமல் தடுப்பது குற்றம் என்றும் அறிவிக்கப்பட்டது. வெளிநாட்டு பெண்களை மணம் முடித்து அவர்களை கணவர்மார்கள் தங்களுடைய தாய்நாட்டிற்கு அழைத்து செல்ல முடியாத நிலையினை 1957 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட கமிசன் அவர்களுக்கு கணவர் நாட்டு குடிமக்கள் என்று அறிவிப்பு செய்தது. 1967 மற்றும் 1979 ஆண்டுகளில் அமைக்கப்பட்ட கமிசன்கள் பெண்கள் என்பதால் ஒதுக்குவது குற்றம் என்று அறிவிப்பு செய்ததோடு அவர்களுடைய சுய கௌரவத்தினை பாதிக்கும் செயலாக அறிவிப்பு செய்தது. 1993 ஆம் ஆண்டு ஐ.நா.சபை உறுப்பு நாடுகள் அனைத்தும் பெண்களுக்கு எதிரான பொது இடத்திலோ அல்லது தனிமையிலோ வன்முறையில் ஈடுபடுவது குற்றமாக அறிவிக்க வகை செய்தது. இதில் ஒரு ஆச்சரியப்பட விஷயம் என்னவென்றால் கற்காலத்தில் ஸ்கன்டிநேவியன் நாட்டில் எடுக்கப்பட்ட ஆறு பெண்களின் மண்டை ஓடுகளில் ஒரு ஓட்டில் அடிபட்ட காயம் இருந்திருக்கிறது. இது எதனைக் காட்டுகிறது என்றால் காலங்காலமாக பெண்களுக்கு எதிரான வன்முறை நடந்து கொண்டு தான் வந்துள்ளது. ஏன் இன்றைய தமிழக முதல்வர் அவர்களை 1989ஆம் ஆண்டு சட்ட சபையிலேயே அந்நாள் மந்திரிகளும் ஆளும் கட்சி எம்.எல்.ஏக்களும் இரக்கமின்றி தாக்கிய நிகழ்ச்சி தொலைக்காட்சியில் ஆயிரக்கணக்கானோர் அதிர்ச்சியுடன் பார்த்த வன்முறை சம்பவங்களும் அரங்கேறிக் கொண்டு தான் இருக்கின்றன. 1995ஆம் ஆண்டு பீஜிங் நகரில் கூடிய கூட்டத்தில் ஆண், பெண் ஆகியோரின் அனைத்து வேறுபாட்டினையும் களைந்து அறிவிப்பு வெளியானது. இந்திய நாட்டின் அரசியல் சட்டம் 1951 பகுதி இரண்டில் பெண்களுக்கான சமத்துவ உரிமையினை உறுதி செய்தது. அதில் சதி தடுப்புச் சட்டம், சீதன ஒழிப்புச் சட்டம், பாலியல் தொழில் ஒழிப்புச் சட்டம் போன்றவை முக்கியமானவையாகும். அரசியல் சட்டம் பகுதி நான்கில் டிரெக்டிவ் ப்ரின்ச்பில் ஆப் ஸ்டேட் பாலிசி என்ற அரசின் கொள்கையினை வழி செலுத்தும் நெறிகள் என்ற பகுதியில் வேலையில் பெண்களுக்கு ஆண்களுக்கு நிகரான ஊதியம், கருவுற்ற நேரத்தில் பெண்களுக்கான சலுகைகள், பெண்களை மதிக்கும் விதமான அறிவுப்புகள் மற்றும் பெண்களுக்கு அவமான காரியங்களிருந்து விலக்கம் போன்ற நடவடிக்கைகள் போன்றன செயல்படுத்தப்பட்டன. அதிலும் மனித உரிமையைக் காப்பதிலும், பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுப்பதிலும் இந்திய நாட்டு நீதி மன்றங்களின் பல்வேறு தீர்ப்புகள் மெச்சத் தகுந்தது என்றால் மறுக்க முடியாதது ஆகும். உதாரணங்கள் கைதிகளுக்கு கை விலங்கு இடுவது தடுக்கப்பட்டுள்ளது இரவு நேரத்தில் ஆண்கள் இல்லாத வேலையில் வீடுகளில் சோதனை இடுவது தடுக்கப்பட்டுள்ளது. பெண்களை காவல் நிலையத்திற்கு அழைத்து விசாரணை செய்வது தடுக்கப்பட்டுள்ளது. உண்மை இல்லாத கைது போன்ற நடவடிக்கையில் பாதிக்கப்பட்டோருக்கு நிதி உதவி அளிப்பது. பாலியல் கொடுமை மனித உரிமைக்கு எதிரான குற்றம் என்று அறிவித்தல். சிறுமியர் திருமணம் தடுக்கப்பட்டுள்ளது. இஸ்லாமியப் பெண்களுக்கு ஜீவனாம்சம் அளிக்கப்பட்டுள்ளது. தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினருக்கு எதிரான வன்முறை சட்டத்திற்கு வழிவகை செய்தது. தேசிய மனித உரிமை கமிசன் அமைப்பதிற்கு வழி வகுத்தது. தகவல் உரிமை சட்டம் இயற்றி சாதாரண குடிமகன் தகவல் பெற சட்டம் இயற்ற வழி வகுத்தது. வறுமை கோட்டிற்குக் கீழ் உள்ள மக்களுக்கு அரசு உணவு வழங்க வேண்டும் என ஆணையிட்டது. பிரிடிஸ் காலனி போலீஸின் புரையோடிய சட்டங்களை திருத்த போலீஸ் சீர்திருத்த கொண்டு வர ஆணைப் பிறப்பித்தது. சமூகத்தில் பெண்களுக்கு வலிமை சேர்த்தல் ஒவ்வொரு மார்ச் 8 ஆம் தேதியும் பெண்களுக்கு வலிமை சேர்க்கும் நாளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்திய தேசம் 1857 ஆம் ஆண்டு முதலாவது விடுதலைப் போரினைக் கண்டது. அதே வருடத்தில் நியூயார்க் நகரில் மார்ச் மாதம் எட்டாம் நாள் ஆயிரக்கணக்கான வேலை பார்க்கும் பெண்கள் தங்களுக்கு ஆண்களுக்கு நிகரான சம்பளம் கொடுக்க வேண்டும் என்று போராட்டம் செய்து போலீஸாரால் ஓட, ஓட விரட்டி அடிக்கப்பட்டனர். அந்த நாளை குறிக்கக் கூடிய தினமே பெண்கள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால் பெண்களுக்கு நிகரான ஊதியம் அமெரிக்காவில் 2008 ஆம் ஆண்டு பாரக் ஒபாமா ஜனாதிபதியான பின்பு தான் வழங்கப்பட்டது என்றால் ஆச்சரியமாகத் தெரியவில்லையா? அப்படிப்பட்ட ஆணாதிக்க மிக்க உலகில் பெண்கள் உலா வருகின்றனர். பெரும்பாலும் பெண்கள் புகுந்த வீட்டிதால் கொடுமையினை அனுபவிக்கின்றனர். இன்றைய உலகில் பெரும்பாலான பெண்கள் வறுமையில் வாடுகின்றனர். உலக விலைவாசி உயர்வில் ஒரு வேலை உணவு உண்பது என்பதே பெண்களுக்கு அரிதாக இருக்கும் போது அவர்கள் பெற்ற பிள்ளைகளுக்கு எப்படி பாலூட்ட முடியும் என்பதினை சோமாலிய, மொசாம்பிக், நைஜீரியா போன்ற நாடுகளில் பெண்கள் நிலையும், குழந்தைகள் நிலையினையும் தொலைக்காட்சிகள் படம் பிடித்து காட்டுகின்றன. உலகில் படிக்காதவர்களில் மூன்றில் இரண்டு பங்கு பெண்கள், எச்,ஐ.வி. போன்ற நோயால் பாதிக்கப்பட்டோர் பெரும்பாலும் பெண்கள் தான். அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க மறுக்கும் மருத்துவமனைகளும் உண்டு. ராஜஸ்தான் மாநிலத்தில் மூன்று மில்லியன் பெண் குழந்தைகள் பள்ளிகூடத்திலிருந்து நின்று விட்டன. காரணமென்ன என்று ஆராய்ந்தால் பள்ளிக்கூடத்தில் தனியான கழிவறை இல்லை என்பது தான். ஆகவே பெண்கள் பொருளாதாரத்தில் முன்னேற மைக்ரோ பினான்ஸ் என்ற சிறு பொருளுதவி தொழில் தொடங்க மகளிர் சுய உதவி குழுக்கள் போன்ற உதவி செய்தால் பெண்கள் பொருளாதாரத்தில் முன்னேற முடியும். இன்று இந்திய நாட்டில் பஞ்சாயத் ராஜ் என்ற மூன்றடுக்கு தேர்தல் முறையும் அதில் பெண்களுக்கான முப்பது சதவீத ஒதுக்கீடு மூலம் 80000 மகளிர் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அதே போன்று பிற்பட்டோருக்கும் மகளிரில் ஒதுக்கீடு செய்து சட்டமன்றம் மற்றும் மக்களவையிலும் ஒதுக்கீடு செய்து பெண்கள் குரல் அதிகமாக இந்திய ஜனநாயகத்தில் ஒலிக்க வழி வகை செய்ய வேண்டும். ஆனால் அவர்களுக்கு கல்வியும் உரிய உரிமையும் கொடுத்தால் அவர்கள் ஆண்களை மிஞ்சுபவர்களாக இருக்கின்றார்கள் பல உதாரணங்களால் நிரூபிக்க முடியும். பெண்களின் வலிமை - உதாரணங்கள் இன்று உலகின் முக்கிய நாடுகளான ஜெர்மனி, தென் கொரியா, பிரேசில், கொசோவோ, ஐயெர்லண்ட், செர்பியா, மாளவி, பங்களாதேஷ் போன்ற நாடுகளில் பெண் அதிபர்கள் உள்ளனர். உலகின் உயர்ந்த விருதான நோபல் பரிசினை 40 பெண்கள் பெற்றுள்ளனர். இந்த வருடம் அமைதிக்கான நோபல் பரிசினை கூட்டாக எமனை சார்ந்த தவக்கல் என்ற பெண்மணியும், கென்யாவினைச் சார்ந்த மதாயும் கூட்டாகப் பெற்றுள்ளனர். பர்மாவில் 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறை சென்றாலும் போராடி ஜனநாயகத்திற்கு நோபல் பரிசு பெற்ற ஆங் சன் சூ கி வழி வகுத்துள்ளார். தலையில் துப்பாக்கி குண்டு பாய்ந்தாலும் பரவாயில்லை என்று பெண் கல்விக்காக குரல் பாகிஸ்தானை சார்ந்த மலாலா கொடுத்துள்ளார். விண்வெளி பயணத்தில் ஆண் துணையில்லாது விண்கலத்தின் தலைமைப் பொறுப்பினை ஏற்று திரும்பி இருக்கிறார் சுனித வில்லியம். லண்டன் ஒலிம்பிக்கில் மெடல் வாங்கி திரும்பி இருக்கிறார்கள் மேரி கொமும் மற்றும் சைனா நேஹ்வாலும், அண்டை நாட்டின் வாலாட்டத்தினை 1971 ஆண்டு போரில் ஒடுக்கியும், தேசிய ஒருமைப்பாட்டினை காளிஸ்த்தான் தீவிரவாதிகளை ஒடுக்கி தன் உயிர் போனாலும் பரவாயில்லை என்று உலகிற்கு காட்டிய இந்திரா காந்தியாலும், வல்லரசு அமெரிக்காவில் இந்திய வம்சா வழி பொருளாதார நிபுணராக பொறுப்பேற்றிருக்கும் இந்திரா நூயி ஆணாதிக்க மிக்க தமிழகத்தில் சிறை சென்றாலும் மூன்றாவது முறையாக அரியணை ஏறிய தமிழக முதல்வர் ஆகியோராலும் பெண்கள் முன்னேற முடியும் என்று உலகிற்கு காட்டப்பட்டுள்ளது. ஆதாரம்: முஹம்மத் அலி ஐ.பி.எஸ். (பதிவர்)