குழந்தைகள் தெரிந்து கொள்ள வேண்டியவை ஒவ்வொரு குழந்தையும் தன்னைத் தானே பாதுகாத்துக் கொள்ள ஒரு திட்டத்தை வழங்குவதன் மூலம் சுய பாதுகாப்பு கல்வி என்ற கோட்பாடானது ஒவ்வொரு குழந்தையும் எல்லா நேரத்திலும் பாதுகாப்பாக உணர வேண்டும் என்ற அடிப்படை உரிமையைப் பாதுகாக்கிறது. நெருப்போடு விளையாடக் கூடாது, சாலையைக் கடக்கும் போது இருபுறமும் கவனிக்க வேண்டும் என்பது போல பாதுகாப்பு விதிகளைப் போன்றது தான் சுய பாதுகாப்புத் திட்டமும். தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ளும் ஆற்றலை குழந்தைகளுக்குத் தருவதோடு மட்டுமல்லாமல் அவர்களுடைய பாதுகாப்புக்கு பொறுப்பு வகிக்கும் சமூகம், பெற்றோர், கல்வியாளர் மற்றும் அரசு இவர்களின் திறனுக்கும் வலுவூட்டுகிறது. சுய பாதுகாப்பு என்றால் என்ன? குழந்தைகளை கொடுமையிலிருந்து, குறிப்பாக பாலியல் கொடுமையிலிருந்து, பாதுகாப்பதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு பாடத்திட்டம் ஆகும். குழந்தைகளுக்கு அவரவர் வயதிற்குப் பொருத்தமான தகவல்கள், திறன்கள் மற்றும் சுயமதிப்பைத் தருவதன் மூலம் தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ளும் ஆற்றலை சுய பாதுகாப்பு அவர்களுக்கு அளிக்கிறது. குழந்தைகளுக்கு தமது உடல் தமக்கு மட்டுமே சொந்தம் என்றும் தமக்குப் பிடிக்காத அல்லது புரியாத வகையில் தமது உடலைத் தொட யாருக்கும் உரிமை இல்லை என்றும் கற்றுத் தருகிறது. குழந்தைகள் கோபம், பயம் போன்ற உணர்ச்சிகளைப் புரிந்து கொண்டு அவற்றை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்துவது மூலம் தங்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள உதவுகிறது. குழந்தைகள் தங்கள் மீது நம்பிக்கை கொள்ள கற்றுத் தருவதன் மூலம் அடுத்தவரது உரிமைகளுக்கு பங்கம் ஏற்படுத்தாமலும், அதே சமயத்தில் தயக்கமின்றி தங்களுடைய உரிமையை நிலைநாட்டிக்கொள்ளும் வகையிலும் நடந்து கொள்ளவும் உதவுகிறது. குடும்பம், பள்ளி, சமூகம், நண்பர்கள் என்று ஒவ்வொரு குழந்தையின் உதவி மற்றும் ஆதரவு அமைப்பையும் சீராகக் கட்டமைக்க சுய பாதுகாப்பு உதவுகிறது. ஒவ்வொரு குழந்தையும் தனது சுயமதிப்பை வளர்த்துக் கொள்வதன் மூலம் நம்பிக்கை திறன்களை நடைமுறைப்படுத்தி தங்களை பாதுகாத்துக் கொள்ள ஆற்றல் அளிக்கிறது. மற்றவர்களின் உணர்ச்சிகளைப் புரிந்து கொள்ளும் திறனை சுயபாதுகாப்பு வளர்க்கிறது. முறைகேடான பாலியல் தொடுதல்களுக்கு பாலியல் குற்றவாளிகள் மட்டுமே பொறுப்பு, அது குழந்தையின் தவறல்ல என்று சுய பாதுகாப்பு கற்றுத் தருகிறது. குழந்தையை தொட்டுத் தான் கொடுமையிழைக்க முடியும் என்பது சரியல்ல என்று புரிந்து கொள்வது முக்கியம்; தொடாமல் செய்யும் செயல்களும் அதில் அடக்கம். இந்த விதிகளை உங்கள் குழந்தைக்கு கற்றுக் கொடுங்கள். அடுத்தவர்களுடைய தனிப்பட்ட உடல் உறுப்புகளைத் தொடுவது சரியல்ல. உன் முன்னால் வேறு ஒருவர் அவருடைய தனிப்பட்ட உடல் உறுப்புகளைத் தானே தொட்டுக் கொள்வது சரியல்ல. ஒருவர் உன்னை அவருடைய தனிப்பட்ட உடல் உறுப்புகளைத் தொடச் சொல்வது சரியல்ல. உன் உடைகளைக் களைந்துவிட்டு உன்னை ஒருவர் நிழல்படமோ வீடியோவோ எடுப்பது சரியல்ல. உடைகள் இல்லாமல் மற்றவர்கள் இருக்கும் படங்களையோ வீடியோவையோ வேறு ஒருவர் காண்பித்து உன்னைப் பார்க்கச் சொல்வது சரியல்ல. வெவ்வேறு விதமான தொடுதல்களைப் பற்றி குழந்தைகளுடன் பேசுங்கள். மூன்று விதமான தொடுதல்கள் உள்ளன என்பதைப் பற்றி அவர்களுக்குக் கற்றுத் தாருங்கள். பாதுகாப்பான தொடுதல் பாதுகாப்பற்ற தொடுதல் குழப்பத்தைத் தரும் தொடுதல் பாதுகாப்பான தொடுதல் ஒரு குழந்தையானது அன்பு, ஆதரவு, அக்கறை, ஊட்டம், உதவி இவற்றை உணரச் செய்யும் தொடுதல்கள் பாதுகாப்பான தொடுதல்கள். இவை பெற்றுக் கொள்பவரை சிறுமைப்படுத்துவதோ அவரிடம் இருந்து எதையாவது அபகரித்துக் கொள்வதோ இல்லை. இது போன்ற தொடுதல்களைத் தான் எல்லா மனிதர்களும் பெற வேண்டும். பாதுகாப்பற்ற தொடுதல் இது போன்ற தொடுதல்கள் பெறுபவரைக் காயப்படுத்துகிற அல்லது வருத்தமூட்டுகிற, உணர்வுகளைத் தூண்டும்; வலி எற்படுத்தும், அல்லது பெறுபவரின் (குழந்தைகளின்) உணர்வுக்கு மதிப்பளிக்காது. இந்தத் தொடுதல் தனக்குப் பிடிக்கவில்லை என்பது குழந்தைக்கு மிகவும் தெளிவாகத் தெரிந்திருக்கும். இந்தத் தொடுதல் மூலம் தன்னை பிறர் தமது சுயநலனுக்காகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள், வற்புறுத்தி இணங்க வைக்கிறார்கள், கொடுமைப்படுத்துகிறார்கள், பயமூட்டுகிறார்கள் என்பதை குழந்தை தெளிவாக உணர்ந்துள்ளது. குழப்பமூட்டும் தொடுதல் தொடப்படுபவருக்கு அசௌகரியம், மன அமைதியின்மை, குழப்பம், நடப்பது சரியா தவறா என்று சரியாகத் தெரியாத நிலை போன்றவற்றை இவ்வகைத் தொடுதல் ஏற்படுத்துகிறது. தன்னைத் தொடுபவர் குறித்தும் தொடுதல் குறித்தும் குழந்தையிடத்தில் குழப்பமான எண்ணங்களையும் உணர்வுகளையும் தூண்டுகிறது. எதற்காக இப்படித் தொடுகிறார் என்று தெளிவாகத் தெரியாமல் இருக்கலாம் அல்லது அந்தத் தொடுதல் இதற்கு முன் குழந்தை அறிந்திராத வகையில் அமையலாம். சில சமயங்களில் குழந்தையின் பாலியல் உணர்வுகளைத் தூண்டக்கூ.டிய தொடுதல். மேலும், அந்த அனுபவத்தை ரகசியமாக வைத்துக் கொள்ள சொல்வதன் வாயிலாக, அல்லது அடுத்தவர் முன்னிலையில் அளவுக்கதிகமான நெருக்கமான அக்கறையை குழந்தைக்கு அளிப்பது போன்ற கவனிப்பு ஆகியன குழந்தையின் மனதுக்கு மகிழ்ச்சியை அளித்தாலும் அதே சமயத்தில் மிகுந்த கலக்கத்தை ஊட்டுவதாகவும் அமையலாம். எனவே, மனதுக்கு மகிழ்ச்சியூட்டும் தொடுதல்களும் கவனிப்பும் கூட எப்போதுமே பாதுகாப்பானவையாகவோ நல்லவையாகவோ இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. தொடுதலின் இயல்பை எது தீர்மானிக்கிறது? ஒரு குறிப்பிட்ட தொடுதலும் கவனிப்பும் பாதுகாப்பானதா, பாதுகாப்பற்றதா அல்லது குழப்பமானதா என்பதை அந்தத் தொடுதலைப் பெறுபவரின் அனுபவம் தான் நிர்ணயிக்கிறது. மாறாக குழந்தையைத் தொடுகிற அல்லது குழந்தைக்குக் கவனத்தை அளிக்கின்ற நபரின் உள்நோக்கம் அதை நிர்ணயிப்பதில்லை. குறிப்பிட்ட தொடுதல் அல்லது கவனித்தலின் மூலம் ஆதரவு, பாசம் போன்றவற்றைத் தெரிவிக்க அந்த மனிதர் முயன்றிருக்கலாம். ஆனால், தொடுதலைப் பெறுபவர் அதை எப்படிப் புரிந்து கொள்கிறார் அல்லது உணர்கிறார் என்பதை பொறுத்து தான் அந்தச் செய்தியின் தன்மை அமைகிறது. பெரியவர்களுக்கு இதை நிர்ணயிக்கும் கட்டுப்படுத்தும் உரிமைஇல்லை. பெரியவர்களுடைய உள்நோக்கம் என்பது இங்கு முக்கியமானது அல்ல. ஆதாரம்: துளிர் அறக்கட்டளை