<div id="Middlecolumn_internal"> <h3 style="text-align: justify;">மகளிர் சுய உதவி குழு</h3> <p style="text-align: justify;">மகளிர் சுய உதவி குழுக்கள் சிறந்த முறையில் செயல்பட்டு, குழு உறுப்பினர்களின் மாத வருமானத்தை அதிகரித்துக் கொள்ள பல்வேறு தரப்பட்ட வாழ்வாதாரத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. வாழ்வாதாரத்தை உயர்த்திக் கொள்ள இலாபம் ஈட்டக் கூடிய நல்ல தொழில்களை தெரிவு செய்து, அதனை சிறந்த முறையில் செயல்படுத்த பல்வேறு கடன் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு குழுக்களுக்கு அதன் சேமிப்பு தொகையிலிருந்தும், அரசு துறை சார்பிலும் சேமிப்பின் அடிப்படையில் வங்கி கடன்கள் வழங்கப்படுகிறது.</p> <h3 style="text-align: justify;">உள்கடன்</h3> <p style="text-align: justify;">மகளிர் சுய உதவி குழுக்களின் முக்கிய செயல்பாடுகளில் ஒன்று ‘சேமிக்கும் பழக்கம்’. ஒவ்வொரு உறுப்பினரும் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்ட தொகையை குறிப்பிட்ட காலத்தில் குழுவில் சேர்த்து வைக்க வேண்டும். அவ்வாறு சேமித்த தொகையிலிருந்து கடன் தேவைப்படும் உறுப்பினர்களுக்கு கடன் வழங்கப்படுகிறது. இந்தக் கடன் “உள்கடன்” என்று அழைக்கப்படுகிறது. இந்த உள்கடனை மாதா மாதம் தவணை தவறாமல் அதற்குரிய வட்டியுடன் திரும்ப செலுத்த வேண்டும்.</p> <h3 style="text-align: justify;">ஊக்க நிதி</h3> <p style="text-align: justify;">குழு ஆரம்பித்த 3 மாத இடைவெளியில், ஒவ்வொரு குழுவிற்கும், அரசு சார்பில் சிறந்த முறையில் செயல்பட / பராமரிக்க, ஊக்க நிதி (Seed Money) வழங்கப்படுகிறது. இந்த ஊக்க நிதியை குழுவின் வளர்ச்சிக்காகவும், தொடர்ந்து செயல்படவும், உறுப்பினர் தேவைகளுக்குக் கடன்கள் கொடுத்து, திரும்பப் பெறவும் பயன்படுத்திக் கொள்ளலாம்.</p> <h3 style="text-align: justify;">வங்கிக் கடன்கள (நேரிடைக் கடன்கள்)</h3> <p style="text-align: justify;">மகளிர் சுய உதவி குழுக்கள், குழு துவங்கிய 6 மாத காலத்திற்குப் பிறகு, கீழ்க்கண்ட 5 விதிமுறைகளைப் பின்பற்றினால், வெளிக்கடன் பெற தகுதிக் கணிப்பீடு (Rating) செய்யப்படும். தகுதிக் கணிப்பீட்டில் 75% மேல் பெற்ற குழுக்கள் வங்கிக் கடன் பெறத் தகுதி வாய்ந்தவையாகக் கருதப்படும். 75%க்குக் குறைவாக பெற்ற குழுக்கள் 3 மாத இடைவெளியில் அடுத்த தர மதிப்பீட்டில் கலந்து கொள்ளலாம்.</p> <h3 style="text-align: justify;">மகளிர் சுய உதவி குழுக்கள் கடைப்பிடிக்க வேண்டிய 5 விதிகள்</h3> <ul> <li style="text-align: justify;">குழு கூட்டங்கள் குறிப்பிட்ட நாட்களில் நடைபெற வேண்டும். அதில் 100% உறுப்பினர்கள் பங்கு பெற வேண்டும். (குறைந்தபட்சம் 90% உறுப்பினர்கள் பங்கு பெற்றிருக்க வேண்டும்).</li> <li style="text-align: justify;">சேமிப்பு தவறாமல் நடைபெற வேண்டும்.</li> <li style="text-align: justify;">சேமித்த பணத்தை உள்கடன், உறுப்பினர்களின் தேவைகளுக்குக் கொடுக்கப்பட வேண்டும்.</li> <li style="text-align: justify;">கொடுத்த கடன்களை தவணை தவறாமல் திரும்ப பெற்றிருக்க வேண்டும்.</li> <li style="text-align: justify;">கூட்ட நடவடிக்கைகள், சேமிப்புகள், கடன் கொடுத்த மற்றும் திரும்ப பெற்ற விவரங்கள் போன்ற பதிவேடுகள் (Registers) சிறந்த முறையில் பராமரிக்கப்பட்டிருக்க வேண்டும்.</li> </ul> <p style="text-align: justify;">ஆதாரம்: ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை</p> </div>