<div id="Middlecolumn_internal"> <h3 style="text-align: justify;">பெருங்கடன்கள்</h3> <p style="text-align: justify;"><strong>ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளுக்கான பெருங்கடன்கள் திட்டம்</strong></p> <p style="text-align: justify;">இந்தத் திட்டம் உறுப்பினர்கள் மற்றும் குழுக்களின் வங்கிகளின் நேரிடைக் கடன்களுக்கும், அதிகமாகத் தேவைப்படும் கடன் தொகையை பூர்த்தி செய்யவும் உதவும். அதாவது ஊராட்சி அளவிலான கூட்டமைப்பின் மூலம் மகளிர் சுய உதவி குழுக்களுக்குக் கொடுக்கப்படும் கூடுதல் கடன்.</p> <p style="text-align: justify;">நமது மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம், சுய உதவி குழுக்களின் உறுப்பினர்கள் மற்றும் கூட்டு தொழில் முனைவோர்களுக்கு வங்கிகளிடமிருந்து கிடைக்கும் நேரிடைக் கடன்கள் போதுமானதாக இல்லை என்பதை அறிந்து, அவர்கள் மறுபடியும் அதிக வட்டிக்கு வெளிக் கடன்கள் வாங்குவதை தடுக்கவும், வங்கிகளிடமிருந்தே ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளின் மூலம் மகளிர் சுய உதவி குழுக்களுக்குக் கூடுதல் கடன் வழங்கும் திட்டம்தான் பெருங்கடன் திட்டம்.</p> <p style="text-align: justify;">இந்தத் திட்டத்தை, 2009ல் நமது மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம், சென்னையில் உள்ள மாநில வங்கியாளர்கள் குழுமத்திற்கு சமர்பித்து, அதை தமிழ்நாட்டில் உள்ள எல்லா வங்கிகளும் செயல்படுத்த அறிவுறுத்தியது. அதனை மாநில வங்கியாளர்கள் குழுமம், வங்கியாளர்களின் கூட்டத்தில் பரிசீலனை செய்து, தமிழகத்தில் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு, ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள் மூலம் கூடுதல் கடன் வழங்க பரிந்துரை செய்தது. அதனை வங்கிகள் ஏற்று 2010ம் ஆண்டு முதல் பெருங்கடன்களை வழங்கி வருகிறது.</p> <h3 style="text-align: justify;">பெருங்கடன் பெறத் தகுதிகள்</h3> <p style="text-align: justify;">ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு (PLF) தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம் மற்றும் புதுவாழ்வு திட்டத்தால் அங்கீகரிக்கப் பட்டிருக்க வேண்டும்.</p> <p style="text-align: justify;">ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, தமிழ்நாடு அரசு சங்கங்கள் பதிவுத் துறை சட்டம் 1975ன் கீழ் பதிவு செய்திருக்க வேண்டும். வருடா வருடம் புதுப்பித்திருக்க வேண்டும்.</p> <p style="text-align: justify;">கூட்டமைப்பு துவக்கப்பட்டு குறைந்தது ஆறு மாதமாகியிருக்க வேண்டும்.</p> <p style="text-align: justify;">கூட்டமைப்பு தர மதிப்பீட்டில் குறைந்தது A (80% மேல்) (அ) B (60% - 80%க்குள்) தகுதி பெற்றிருக்க வேண்டும்.</p> <p style="text-align: justify;">கூட்டமைப்பு முதல் தர மதிப்பீடு செய்யப்பட்டு, வங்கிக் கடனுக்கு தகுதி வாய்ந்த மகளிர் சுய உதவி குழுக்களை அங்கத்தினர்களாகக் கொண்டதாக இருக்க வேண்டும். குறைந்தபட்சம் 10 குழுக்களைக் கொண்ட அமைப்பாக இருக்க வேண்டும்.</p> <h3 style="text-align: justify;">கடன் மதிப்பீடு</h3> <p style="text-align: justify;">கூட்டமைப்பு தம்மிடம் அங்கத்தினராக உள்ள சுய உதவி குழுக்களின் கூடுதல் கடன் தேவைகளை அறிந்து, அதனை கூட்டமைப்பின் வருடாந்திர கடன் திட்டத்தில் சேர்த்திருக்க வேண்டும்.</p> <p style="text-align: justify;">காலத்திற்கேற்ப சிறப்புக் கடன் தேவைகளை கடன் திட்டத்தில் சேர்த்திருக்க வேண்டும்.</p> <p style="text-align: justify;">குறித்த காலத்தில் தவணை கட்டத் தவறிய மகளிர் சுய உதவி குழுக்கள் கூட்டமைப்பின் கடன் திட்ட அறிக்கையில் இடம் பெற்றிருக்கக் கூடாது. அதாவது வங்கிக் கடன்கள் பெற்று தவணை தவறாமல் செலுத்திய அல்லது நிலுவை இல்லாமல் தவணைகளை செலுத்தி வரும் சுய உதவி குழுக்கள் மட்டும் கூட்டமைப்பின் பெருங்கடன் பெறும் திட்டத்தில் இடம் பெற்றிருக்க வேண்டும்.</p> <h3 style="text-align: justify;">கடன் தேவைக்கான காரணங்கள்</h3> <p style="text-align: justify;">கடன் தேவைக்கான காரணங்கள் குழு மற்றும் கூட்டமைப்பின் முடிவிற்கு உட்பட்டது.</p> <p style="text-align: justify;">குழு உறுப்பினர்களின் பொதுவான தேவைகள், கூட்டுத் தொழில், தனிநபர் தேவைகளைப் பூர்த்தி செய்வதாக இருக்க வேண்டும்.</p> <p style="text-align: justify;">பொதுவாக கடன் திட்டம், பொருளாதாரக் கடன்கள் (80%) மற்றும் மற்ற தேவைகளுக்கு (20%) கொண்டதாக இருக்க வேண்டும்.</p> <p style="text-align: justify;">ஆதாரம்: தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம்</p> </div>