<div id="MiddleColumn_internal"> <h3 style="text-align: justify;">பிரதான் மந்திரி முத்ரா யோஜனா திட்டம் (PMMY)</h3> <p style="text-align: justify;">சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் (MSME) வளர்ச்சிகளுக்காக இந்திய அரசால் உருவாக்கப்பட்டது தான் இந்த பிரதான் மந்திரி முத்ரா யோஜனா திட்டம் (PMMY). இது குறுந்தொழில் மேம்பாட்டு மற்றும் மறுநிதி நிறுவனம் Micro Units Development and Refinance Agency (MUDRA) மூலமாக செயல்படுத்தப்படுகிறது. முத்ரா வங்கி என்பது ஒரு தனிப்பட்ட வங்கி அல்ல. இது ஒரு அரசின் திட்டமாகும், இது அனைத்து வங்கிகளின் மூலம் செயல்படுத்தப்படுகிறது.</p> <p style="text-align: justify;">இது முற்றிலும் குறுந்தொழில் மேம்பாட்டிற்காக இந்திய அரசால் நிறுவப்பட்ட ஒரு புதிய திட்டமாகும். நிதி அமைச்சர் 2015-16 நிதியாண்டில் வெளியிட்டார். தனியார் குறுந்தொழில் நிறுவனங்களுக்கு தேவையான நிதியினை வழங்குவது இதன் முக்கிய பணியாகும். 2015-16 நிதியாண்டில் சுமார் 1.5 கோடி நிறுவனங்களுக்கு இத்திட்டத்தில் கடன் வழங்கியுள்ளனர்.</p> <h3 style="text-align: justify;">தகுதி</h3> <p style="text-align: justify;">பத்து லட்சத்திற்கும் குறைவான அளவு கடன் தேவைப்படும் பண்ணை தொழிலுக்கு சாரா உற்பத்தி நிறுவனங்கள், வர்த்தக மற்றும் சேவை நிறுவனங்களுக்கு பொதுவுடைமை வங்கிகள், தேசிய வங்கிகள் மட்டும் மாநில கூட்டுறவு வங்கிகளின் மூலமாக இந்த கடன் வழங்கப்படுகிறது.</p> <h3 style="text-align: justify;">சேவைகள்</h3> <p style="text-align: justify;">இந்த முத்ரா யோஜனா திட்டம் மூன்று வகைகளில் குறுந்தொழில் முனைவோருக்கு தங்களின் தொழிலை மேம்படுத்தவும், விரிவுபடுத்திக் கொள்ளவும் கடன்களை வழங்குகிறது. இது சிசு, கிஷோர் மற்றும் தருண் ஆகிய முறைகளில் வழங்கப்படுகிறது.</p> <p style="text-align: justify;">சிசு (SHISHU) – இத்திட்டம் மூலமாக Rs. 50000 வரை கடன் பெறலாம்.</p> <p style="text-align: justify;">கிஷோர் (KISHOR) – இத்திட்டம் மூலமாக Rs. 50000 முதல் ஐந்து லட்சம் வரை கடன் பெறலாம்.</p> <p style="text-align: justify;">தருண் (TARUN) - இத்திட்டம் மூலமாக ஐந்து லட்சம் முதல் பத்து லட்சம் வரை கடன் பெறலாம்.</p> <h3 style="text-align: justify;">இத்திட்டத்தில் யார் பயன் பெறலாம்?</h3> <p style="text-align: justify;">அனைத்து வகையான உற்பத்தி, சேவை மற்றும் வியாபாரம் செய்யும் அனைவரும் இத்திட்டத்தில் பயன் பெறலாம். உதாரணமாக, சரக்குகளை எடுத்து செல்ல வாகனம் வாங்குவதற்கு, முடி திருத்தும் நிலையம் மேம்படுத்த, பியூட்டி பார்லர் மேம்படுத்த, மோட்டார் சைக்கிள் ரிப்பேர் கடை விரிவுபடுத்துதல், சிற்றுண்டி உணவு கடைகள், தள்ளுவண்டி காய்கறி பழக்கடைகள், துணி கடைகள், பேக்கரி கடைகள் விரிவுபடுத்துதல், எஜென்சீஸ் வைத்தல், வாகனம் ஓட்டுபவர், கைவினை கலைஞர் உற்பத்தி தொழிற்சாலை அமைத்தல் என அனைத்து புதிய மற்றும் ஏற்கனவே நடைபெறும் நிறுவனங்கள் இதில் கடன் பெறலாம்.</p> <p style="text-align: justify;">பண்ணை தொழில் சார்ந்த மாட்டு பண்ணை, கோழி பண்ணை, விவசாயம், காளான் வளர்ப்பு, ஆட்டு பண்ணை போன்ற தொழில்களுக்கு கடன் கிடையாது. ஏற்கனவே முதலீடு செய்து நடத்தும் தொழில்களுக்கு கடன் தர வங்கிகள் முன் வருவதில்லை. அந்த தொழிலை விரிவுபடுத்துவதற்கோ அல்லது வியாபாரத்திற்கு தேவையான சரக்குகளை வாங்குவதற்கு மட்டுமே கடன் கிடைக்க வாய்ப்புள்ளது. கடன் பணமாக கிடைக்காது. பொருள், இயந்திரம், உபகரண பொருட்கள், சரக்கு வண்டி என அனைத்திற்கும் அதன் விற்பனையாளரின் விலைபட்டியல் (Quotation) கொடுக்க வேண்டும். அதன் அடிபடையில் கடன் கிடைக்கும். உங்களின் சரியான தொழில் கடன் தேவையை நீங்கள் நிரூபிக்கும் பட்சத்தில் கடன் வழங்க வங்கி மேலாளர் இறுதி முடிவு எடுப்பார். சொந்த செலவு, வீட்டு செலவு, கல்யாண செலவு போன்றவற்றிக்கு இத்திட்டத்தில் கடன் கிடைக்க வாய்ப்பில்லை. கல்வி கடன் தனிநபர் கடன் தனிநபர் வாகன கடன் இதில் வராது.</p> <h3 style="text-align: justify;">இத்திட்டத்தில் பயன்பெற நீங்கள் செய்ய வேண்டியவை</h3> <p style="text-align: justify;">இதில் கடன் பெற உங்கள் அருகில் உள்ள வங்கிக் கிளைக்கு சென்று விண்ணப்பப் படிவம் பெறலாம். மேலும் <a title="புதிய சாளரத்தில் திறக்கும் ஒரு வெளி இணையதளம்" href="https://www.mudra.org.in/Home/PMMYBankersKit" target="_blank" rel="noopener">PMMY APPLICATION FORM</a> என்ற இணையத்தின் மூலமாகவும் உங்கள் வங்கிகளுக்கு ஏற்ப விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்யலாம். வயது வரம்பு 18 வயது முடிந்திருக்க வேண்டும். இத்திட்டத்தில் மூன்று பிரிவுகளில் கடன் பெறலாம். அதற்கான தகுதியை வங்கி மேலாளர் உங்கள் தொழிலைக் கொண்டு முடிவு செய்வார். இத்திட்டத்தில் எந்தவித அரசு மானியமும் கிடையாது. இது முழுக்க முழுக்க ஒரு தொழில் கடன் திட்டம் மட்டுமே. இந்த வகை கடனுக்கு 12% வரை வட்டி நிர்ணயிக்கப்படும். நீங்கள் வாங்கும் கடனை 5 வருடம் வரை திருப்பி செலுத்தலாம். கடனை EMI மூலம் வங்கி கணக்கிட்டு அறிவிக்கும். நீங்கள் கடனை சரியாக திரும்ப செலுத்தும் பட்சத்தில், தொழில் நன்றாக நடக்கும் போது மேற்கொண்டு அதனை அபிவிருத்தி அல்லது நடைமுறை மூலதனம் பெற வங்கிகள் தொடர்ந்து கடன் வழங்கும். ஏற்கனவே தொழில் நடத்துவதற்கும் இக்கடன் திட்டம் உண்டு. ஆனால் அவர்களின் மீது எந்த வங்கியிலும் வாராக் கடன் அல்லது செக் ரிட்டன் கணக்காக இருக்கக் கூடாது.</p> <p style="text-align: justify;">இந்த கடனை பெற எந்தவித சொத்து பிணையம் (SECURITY) மற்றும் தனிநபர் ஜாமீன் தேவையில்லை. கடன் பத்து லட்சம் வரை பெறலாம். ஒரு வங்கியின் கிளை ஆண்டுக்கு 25 குறைந்த பட்சம் நபர்களுக்கு இத்திட்டத்தில் கடன் வழங்க வேண்டும். அதிகபட்சம் எத்தனை பேருக்கு வேண்டுமானாலும் வழங்கலாம். உங்கள் தொழில் நன்றாக நடக்கும் பட்சத்தில் உங்களுக்கு வங்கி அதிகமான கடன் கொடுக்க வாய்ப்புள்ளது. அனைத்து வங்கிகளிலும் நீங்கள் கடன் பெறலாம். உங்களுக்கு எந்த வங்கியில் கணக்கு உள்ளதோ அந்த வங்கியிலேயே முயற்சிக்கவும். விலைப் பட்டியலுடன் நீங்கள் எந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் வாங்க கடன் பெறலாம். இந்த கடன் திட்டத்திற்கு கால நிர்ணயம் இல்லை, வருடம் முழுவதும் வங்கிகள் கடன் வழங்கும்.</p> <h3 style="text-align: justify;">கடன் வழங்கும் வங்கிகள்</h3> <p style="text-align: justify;">27 பொதுத்துறை வங்கிகள்</p> <p style="text-align: justify;">17 தனியார் துறை <span style="text-align: justify;">வங்கிகள்</span></p> <p style="text-align: justify;"><span style="text-align: justify;"> </span>31 மண்டல கிராம வங்கிகள் (RRBs)</p> <p style="text-align: justify;">4 கூட்டுறவு <span style="text-align: justify;">வங்கிகள்</span></p> <p style="text-align: justify;">36 நுண் நிதி நிறுவனங்கள் (MFIs)</p> <p style="text-align: justify;">25 வங்கி சாரா நிதி நிறுவனங்கள் (NBFCs)</p> <p style="text-align: justify;">அருகில் உள்ள வங்கிகளில் இதற்கான விண்ணப்பங்கள் கிடைக்கும். விண்ணப்பத்தில் கீழ்க்கண்ட விபரங்கள் அவசியம் நிரப்பப்பட வேண்டும்.</p> <ul> <li style="text-align: justify;">அடையாள சான்று (வாக்காளர் அட்டை, ஓட்டுநர் உரிமம், பான் கார்டு, ஆதார் அட்டை, பாஸ்போர்ட்)</li> <li style="text-align: justify;">இருப்பிட சான்று (லேட்டஸ்ட் தொலைபேசி ரசீது, மின்சார கட்டண ரசீது, வீட்டு வரி ரசீது)</li> <li style="text-align: justify;">லேட்டஸ்ட் புகைப்படம்</li> <li style="text-align: justify;">இயந்திரம் மற்றும் இதர உபகரணங்கள் வாங்குவதற்கான ரசீது</li> <li style="text-align: justify;">சப்லேயர் விபரங்கள்</li> <li style="text-align: justify;">தொழிற்சாலை இருக்கும் இடம் மற்றும் லைசென்ஸ்</li> <li style="text-align: justify;">சாதி சான்று</li> </ul> <p style="text-align: justify;">மேற்கண்ட விபரங்கள் தவிர சில வங்கிகள் அவர்களின் விதிமுறைகளுக்கு ஏற்ப இன்னும் சில தேவையான சான்றிதழ்களை பெறலாம். கடன் திருப்பி செலுத்தும் காலம் ஐந்து ஆண்டுகள் வரை நீடிக்கபட்டுள்ளது.</p> <h3 style="text-align: justify;">முத்ரா அட்டை</h3> <p style="text-align: justify;">முத்ரா கடன் கிடைத்தவுடன் பயனாளிக்கு அதற்கான முத்ரா அட்டை வழங்கப்படும். இந்த அட்டையை மூலப் பொருட்கள் வாங்கும் போது கிரெடிட் கார்டு போல பயன்படுத்தலாம். இந்த கார்டு மூலமாக கடன் தொகையில் 10% அதிகபட்சம் Rs. 10000 வரை பயன்படுத்தலாம்.</p> <h3 style="text-align: justify;">கடன் மறுக்கும் பட்சத்தில்</h3> <p style="text-align: justify;">நீங்கள் வங்கியின் உயர் அதிகாரியை அணுகலாம். வங்கியின் உதவி பொது மேலாளர் மற்றும் இந்தத் திட்டத்தில் வரும் குறைகளை விசாரிக்க உள்ள அதிகாரிகளை அணுகலாம். உங்கள் மாவட்ட முத்ரா வங்கியின் அலுவலகத்தினை அணுகலாம்.</p> <h3 style="text-align: justify;">முக்கிய குறிப்பு</h3> <p style="text-align: justify;">வங்கியின் மேலாளரை அனுமதி பெற்று பின் பார்க்கவும். மாலை 4 மணிக்கு அனுமதி பெற்று பார்த்தல் நன்று. மேலாளரை பார்க்கும் போது அனைத்து நகல்களுடன் பார்ப்பது நலம். கடன் தேவைக்கு சரியான விளக்கம் தர வேண்டும். மேலாளரின் முடிவே இறுதியானது. மேலும் விவரங்களுக்கு <a title="புதிய சாளரத்தில் திறக்கும் ஒரு வெளி இணையதளம்" href="https://www.mudra.org.in/" target="_blank" rel="noopener">www.mudra.org.in</a> என்ற இணையதளத்தில் பார்க்கவும். நோடல் அதிகாரிகளின் பெயர், முகவரி மற்றும் தொடர்பு எங்கள் அனைத்தும் மேற்கண்ட இணையதளத்தில் உள்ளது.</p> <p style="text-align: justify;">ஆதாரம்: மைக்ரோ அலகுகள் அபிவிருத்தி மற்றும் ரிஃபைனான்ஸ் ஏஜென்சி லிமிடெட்</p> </div>