<div id="Middlecolumn_internal"> <p style="text-align: justify;">தமிழகத்தில் பின்தங்கிய 5 மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்ட தேசிய வளர்ச்சி மற்றும் புனரமைப்புத் திட்டம் மத்திய திட்டக் குழுவிலிருந்து மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்திற்கு 2006-07 முதல் மாற்றப்பட்டது. பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் இத்திட்டத்தை பிற்படுத்தப்பட்ட பகுதிகளுக்கான மானிய நிதி என மாற்றியமைத்தது.</p> <h3>செயல்படுத்தப்படும் மாவட்டங்கள்</h3> <p style="text-align: justify;">இத்திட்டம், தற்போது தமிழ்நாட்டில் கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, நாகப்பட்டினம், திண்டுக்கல் மற்றும் சிவகங்கை ஆகிய 6 மாவட்டங்களில் செயல்படுத்தப்படுகிறது.</p> <h3>நோக்கம்</h3> <ul> <li style="text-align: justify;">உள்ளாட்சி அமைப்புகளின் திட்டமிடல், செயல்படுத்துதல் மற்றும் கண்காணித்தல் ஆகியவற்றை மேம்படுத்துதல், அவைகளுக்கு ஒப்படைக்கப்பட்ட முக்கிய கடமைகளை நிறைவேற்றுதலில் திறனை மேம்படுத்த உதவுதல் மற்றும் வளர்ச்சியில் ஏற்றத் தாழ்வுகளை களைதல் ஆகியவை இத்திட்டத்தின் முக்கிய நோக்கங்களாகும்.</li> <li style="text-align: justify;">தற்போதுள்ள திட்டங்களின் செயல்பாடுகளால் வளர்ச்சியில் முழுமை பெறாத பகுதிகளுக்கு ஏற்றவாறு இது வடிவமைக்கப்பட்டுள்ளது.</li> </ul> <h3>நிதியின் பயன்பாடு</h3> <p style="text-align: justify;">தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் தொடர்புடைய அலுவலர்களுக்கு பொறுப்புணர்வு மற்றும் வெளிப்படையான தன்மையை ஏற்படுத்தும் வகையில் திட்டமிடல், செயலாக்கம், கண்காணித்தல், கணக்குகளை பராமரித்தல் ஆகியவற்றிற்கான திறனை மேம்படுத்த பயிற்சி அளித்தல்.</p> <p style="text-align: justify;">ஊராட்சிகள் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள், தங்கள் பகுதிகளில் உள்ள அடிப்படை வசதிகளில் நிலவும் ஏற்றத் தாழ்வுகளை களையும் விதமாக ஒருங்கிணைந்த வளர்ச்சித் திட்டத்தை செயல்படுத்தும் வகையில் வரையறுக்கப்படாத மானியத்தை வழங்குதல்.</p> <p style="text-align: justify;"><strong>திட்டம் தயாரித்தல்:</strong> ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஒதுக்கீட்டிற்கேற்ப திட்டப் பணிகளை உள்ளாட்சி அமைப்புகள் தேர்வு செய்கிறது. மாவட்ட அளவில் மொத்த ஒதுக்கீட்டுக்கான திட்டங்களுக்கு மாவட்ட திட்டக்குழு பரிந்துரை செய்கிறது.</p> <p style="text-align: justify;"><strong>கண்காணிப்பு:</strong> மாவட்டத்திலுள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, இத்திட்டத்தினை கண்காணிக்கும் அமைப்பாகும்.</p> <p style="text-align: justify;"><strong>திட்டத்தில் பயன்பெற மற்றும் திட்டத்தைப் பற்றிய இதர விவரங்களை பெற அணுக வேண்டிய அலுவலர்கள்</strong></p> <ul> <li style="text-align: justify;">மாநில அளவில்: ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி ஆணையர், சென்னை-15</li> <li style="text-align: justify;">மாவட்ட அளவில்: மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை</li> <li style="text-align: justify;">வட்டார அளவில்: வட்டார வளர்ச்சி அலுவலர் (வட்டார ஊராட்சி)</li> </ul> <p style="text-align: justify;">ஆதாரம்: தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம்</p> </div>