<div id="MiddleColumn_internal"> <h3 style="text-align: justify;">அறிமுகம்</h3> <p style="text-align: justify;">தமிழக அரசின் சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறையின் கீழ் ஆதரவற்ற பெண்கள் திருமணம் செய்து கொள்ள உதவும் மங்கள மாலைத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.</p> <h3 style="text-align: justify;">திட்ட விபரம்</h3> <p style="text-align: justify;">சமூக நல இயக்குநரகத்தினர் கீழ் உள்ள குழந்தைகள் இல்லங்களிலும், சேவை இல்லங்களிலும் ஆதரவற்ற பெண்களுக்கும், ஆதரவற்ற பெண் குழந்தைகளுக்கும் புகலிடம் அளிக்கப்பட்டு வருகிறது. இப்பெண் குழந்தைகள் பள்ளிப் படிப்பை முடித்து திருமண வயதை அடையும் பொழுது திருமணம் செய்வித்து அவர்களது குடும்ப வாழ்க்கை நிம்மதியாக அமையும் வகையில் ஆதரவு அளித்து உதவுவது அவசியமாகும்.</p> <p style="text-align: justify;">இந்த ஆதரவற்ற ஏழைப் பெண்கள், தகுந்த துணையைத் தேர்ந்தெடுக்க உதவிடும் வகையில் அவர்களுக்கு ஆதரவான சேவைகள் அளிக்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டம் ஆதரவற்ற பெண்களுக்கு பொருத்தமான மணமகன் அமைவதற்கு உதவி புரிவதோடு அப்பெண்கள் தவறான நபர்களிடம் சிக்கிக் கொள்வதையும் தடுக்கிறது.</p> <p style="text-align: justify;">தாய், தந்தை இருவரும் இல்லாத ஆதரவற்ற 18 வயது நிரம்பிய பெண்களுக்கும் இத்திட்டம் பொருந்தும்.</p> <h3 style="text-align: justify;">விண்ணப்பிக்கும் முறை</h3> <p style="text-align: justify;">இந்த ஆதரவற்ற பெண்கள் திருமணம் செய்து கொள்ள விரும்பினால் மாவட்டத்தில் உள்ள மாவட்ட சமூக நல அலுவலகத்தை தொடர்பு கொண்டு தங்களைப் பற்றிய விவரங்களை படிவத்தில் பூர்த்தி செய்து இரண்டு புகைப்பட நகல்களுடன் தங்கள் பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம்.</p> <p style="text-align: justify;">அவர்கள் தங்களைப் பற்றிய விவரங்கள் மற்றும் தாங்கள் எதிர்பார்க்கும் மணமகனுக்கு இருக்க வேண்டிய கல்வித் தகுதி, வேலை மற்றும் குடும்பப் பின்னணி குறித்த விவரங்களையும் தெரிவிக்கலாம். இவ்வாறு பதிவு செய்து கொண்ட பின் அவர்களுக்கு பதிவு எண்கள் வழங்கப்படும். பதிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களின் விவரங்கள் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் ரகசியமாகப் பராமரிக்கப்படும்.</p> <p style="text-align: justify;">ஆதரவற்ற பெண்களை திருமணம் செய்து கொள்ள விரும்பும் மணமகன்கள் த<span style="color: #4d5156; font-family: arial, sans-serif; font-size: 14px; text-align: left; background-color: #ffffff;">ன்</span>குறிப்பு படிவத்தில் நேரடியாக தங்கள் பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம்.</p> <h3 style="text-align: justify;">செயல்பாடு</h3> <p style="text-align: justify;">மேற்படி விவரங்கள் மாவட்ட சமூக நல அலுவலரின் நேரடி கண்காணிப்பின் கீழ் அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப தேர்ந்தெடுக்கப்பட்டு உரியவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும். மணமகளின் விருப்பத்திற்கு ஏற்றார் போல் அமையப் பெறும் மணமகன் குறித்த முன் விவரங்கள், நடத்தை மற்றும் முன் சம்பவங்கள் குறித்த விவரங்கள் அனைத்து காவல் நிலையங்கள் மூலம் சரி பார்க்கப்படும். அனைத்து விவரங்களும் சரி பார்க்கப்பட்ட பின்னர் இரு தரப்பினருக்கும் தெரிவிக்கப்பட்டு இருவருக்கும் இசைவான ஒரு நன்னாளில் திருமணம் நடத்தப் பெறுவது கண்காணிக்கப்படும். இத்திட்டத்தினை செயல்படுத்தும் ஒருங்கிணைப்பாளராக மாவட்ட சமூக நல அலுவலர் இருப்பார். இத்திட்டத்தின் கீழ் நடைபெறும் அனைத்து திருமணங்களும் திருமண பதிவுச் சட்டத்தினர் கீழ் கட்டாயமாகப் பதிவு செய்யப்படும். இத்திருமணத்திற்கு ஏற்கெனவே நடைமுறையில் உள்ள அன்னை தெரசா ஆதரவற்ற பெண்கள் திருமண நிதி உதவித் திட்டத்தின் கீழ் தாலிக்கு தங்கம் 4 கிராம் மற்றும் மணமகளின் கல்வித் தகுதிக்கு ஏற்றாற்போல அளிக்கப்படும் உதவித் தொகையான ரூ. 25,000 மற்றும் ரூ. 50,000 நிதி உதவியும் வழங்கப்படும்.</p> </div>