<div id="MiddleColumn_internal"> <h3 style="text-align: justify;">முன்னுரை</h3> <p style="text-align: justify;">உலக சுகாதார அமைப்பின் கணிப்பின்படி உலகில் சுமார் 100 கோடி மக்களுக்கும் மேல் ஏதாவது ஒரு உடல் ஊனத்தோடு வாழ்ந்து வருகிறார்கள். அதில் சுமார் 20 கோடிக்கும் மேல் மிகுந்த சிரமத்துடன் வாழ்கிறார்கள். உலகெங்கும் உடல் ஊனத்துடன் வாழும் மக்களின் வாழ்க்கையில் பல இடர்பாடுகள் உள்ளன. நேரடியாகவும், மறைமுகமாகவும் உள்ள தாக்கங்களினால் அவர்கள் சமூக அளவிலும், பொருளாதார நிலையிலும் பல காரணங்களுக்காக பின் தங்கியே உள்ளனர்.</p> <p style="text-align: justify;">2011 ஆம் ஆண்டு உலக சுகாதார அமைப்பு, உடல் ஊனம் சார்ந்த அறிக்கை ஒன்றை வெளியிட்டது. பல முனை அம்சங்கள் கொண்ட அணுகுமுறையில் உடல் ஊனங்களைப் பற்றி அறிந்து கொள்ள இது ஒரு முதல் முயற்சியாக இருந்தது. உடல் ஊனத்தைப் பற்றி விளக்கும் போது மருத்துவ ரீதியில் அறியப்படும் உடல் ஊனத்தைத் தாண்டி, இந்த உடல் ஊனம் சார்ந்த உலக அறிக்கை, உடல் ஊனம் பற்றி நாம் விவாதிக்கும் போது மருத்துவ முறையும் சமூக முறையும், வெவ்வேறு பட்டதாகவும், ஒன்றை ஒன்று விலக்கியதாகவும் கருத முடியாது என்று தெளிவாக கூறியுள்ளது. அந்த கூற்றின் படி உடல் ஊனம் என்பது மிகவும் சிக்கலான பல முனை அம்சங்கள் கொண்ட ஒரு நிலைமையாகும். அது மிகவும் தீவிரமான ஒன்றாகும். அதனுள் அடிப்படையான உடற்கூறு அம்சங்கள் மட்டுமல்லாமல் அது செயல்படும் விதம் மற்றும் மனிதர்களால் உருவாக்கப்பட்ட சமூக மற்றும் அணுகுமுறை சூழ்நிலைகளை உள்ளடக்கியதாகும். உலக உடல் ஊனம் சார்ந்த அறிக்கையில் ஒருங்கிணைந்த செயல்பாட்டு அணுகுமுறை மேற்கொள்ளப்பட்டு, அது உடல் ஊனம், சுகாதாரம் மற்றும் செயல்பாடு சார்ந்த பன்னாட்டு வழிமுறைகளை பிரதிபலிக்கிறது.</p> <p style="text-align: justify;">1995 ஆம் ஆண்டு இந்தியாவில் மாற்றுத் திறனாளிகள் (சம வாய்ப்புக்கள், உரிமைகள் பாதுகாப்பு மற்றும் முழு பங்காற்றல்) சட்டம் இயற்றப்பட்டு ஆசிய பசிபிக் பகுதிகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு சமத்துவமும் முழு பங்கேற்பும் அளிக்கும் பிரகடனம் உறுதி செய்யப்பட்டது. அது கண் பார்வை இல்லாமை, குறைந்த பார்வை நிலைமை, தொழுநோய் சிகிச்சை பெற்று குணமடைந்தவர்கள், காது கேட்பதில் குறை உள்ளவர்கள், உடல் அசைவு பாதிக்கப்பட்டவர்கள், மூளை வளர்ச்சி குன்றியவர்கள், மூளை பாதிப்பு ஏற்பட்டவர்கள் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இது சார்ந்த சான்றிதழ் பெறுபவர்களுக்கு உடல் ஊனமுள்ளவர் என்று தெரிவிக்கப்பட்டு, அப்படிப்பட்டவர் மேற்கூறப்பட்ட ஏதாவது ஒரு குறையினால் குறைந்தது 40 சதவிகிதம் பாதிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று அங்கீகரிக்கப்பட்ட மருத்துவரிடம் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.</p> <p style="text-align: justify;">நாட்டில் ஊனமுற்றவர்களின் மொத்த அளவையும், தீவிரத்தையும் கணிப்பதற்கும், தகவல்களை சேகரிப்பதற்கும் எல்லா நிறுவனங்களும் ஒரே சீராக பின்பற்றும் வண்ணம் உடல் ஊனங்களை விளக்க வேண்டியது அவசியமாகும். தற்போது இந்தியாவில் உடல் ஊனம் பற்றிய விளக்கங்களும், சேகரிக்கப்படும் தகவல்களும் அதன் முடிவுகளும் மிகவும் மாறுபட்டவைகளாக உள்ளன. தேவையான சேவைகளை வழங்குவதற்கு உடல் ஊனம் சார்ந்த ஒருமித்த புரிந்தரிதல் வேண்டும். இது இல்லாத நிலையில் உடல் ஊனம் உள்ள பலர் அரசு தகவல் பட்டியலில் சேர்க்கப்படாமல் அவர்களுக்கு உரிய சேவைகள் கிடைப்பதில்லை. உலக நாடுகளில் உடல் ஊனம்சார் மாநாட்டில் தெரிவித்தபடியும் ஒரு குறிப்பிட்ட மருத்துவ நிலைமைப்படியும், அறிகுறியின்படியும் உடல் ஊனத்தை விளக்கக் கூடாது. ஏனென்றால், உடல் ஊனம் என்பது வலுப்பெற்று வரும் நிலைமையாகும். இந்த அடிப்படையில் 2011 உடல் ஊனம் சார்ந்த உலக அறிக்கை ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி உடல் ஊனம் என்பதை ஒரு குறிப்பிட்ட மருத்துவ நிலைமையாக மட்டும் எடுத்துக் கொள்ளாமல் அந்த உடல் ஊனம் செயல்படுவதையும், அதனால் ஏற்படும் சமுதாய சூழ்நிலைகளையும், மற்ற பாதிப்புகளையும் கணக்கில் கொண்டு விவரிக்கிறது.</p> <h3 style="text-align: justify;">சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு நிலைமைகளும் பிற பிரச்சனைகளும்</h3> <p style="text-align: justify;">2011 மக்கள் கணக்கெடுப்பின்படி இந்தியாவில் 2 கோடியே 60 லட்சம் மக்களுக்கு மேல் ஏதாவது ஒரு உடல் ஊனக் குறைவால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று அறியப்பட்டுள்ளது. இது மொத்த மக்கள் தொகையில் 2.21 சதவிகிதமாகும். உடல் ஊனமுற்றவர்களின் மொத்த தொகையில் 1,49,80,000 பேர் ஆண்களாகவும், 118:20,000 பேர் பெண்களாகவும் உள்ளனர். நாட்டின் ஒட்டு மொத்தத்திற்கு உடல் ஊனக் குறைவு சதவிகிதம் ஒரு லட்சம் மக்களுக்கு 2215 ஆக கணக்கிடப்பட்டுள்ளது. இது 2013 ஆம் ஆண்டு ஆண்களில் 2405ஆகவும் பெண்களில் 2013 ஆகவும் உள்ளது.</p> <p style="text-align: justify;">2001 மக்கள் கணக்கெடுப்பில் விவரித்துள்ள ஐந்து வகையான உடல் ஊனங்களின் அடிப்படையில் எட்டு பிரிவுகளின் கீழ் தகவல்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இதில் அதிகபட்சமாக உடல் அசைவு குறைபாடுகளில் 20.28 சதவிகிதத்தினர் இருந்தனர். மற்றவர்கள் முறையே: காது கேட்பதில் குறை, (18.92%), காண்பதில் குறை (18.77%), மற்ற பிற (குறை குறிப்பிடப்படவில்லை) (18.38%), மன நிலை சார்ந்த (8.31%) மற்றும் ஒன்றுக்கும் மேற்பட்ட குறைபாடுகள் உள்ளவர்கள் (7.89%). 2001 மற்றும் 2011 மக்கள் கணக்கெடுப்பு தகவல்கள் அடிப்படையில் பார்க்கும் போது மொத்த மக்கள் தொகையில் பேச்சு மற்றும் காது கேட்பு உடல் ஊனம் அதிகரித்து வருகிறது. அது 2001 ஆம் ஆண்டு 0.16 சதவிகிதமாகவும் 0.12 சதவிகிதமாகவும் இருந்தன. 2011 ஆம் ஆண்டு 0.17 சதவிகிதமாகவும் அது 2011 ஆம் ஆண்டு பேச்சு குறைபாட்டில் 0.17 சதவிகிதமாகவும் கேட்கும் திறனில் 0.42 சதவிகிதமாகவும் உயர்ந்தது. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பில் அறியப்பட்ட உடல் ஊனமுற்றவர்களின் மொத்த எண்ணிக்கையில் பார்வை சார்ந்த குறைபாடு 48.55லிருந்து 1877 சதவிகிதமாகவும் உடல் அசைவுசார் குறைபாடு 27.87 சதவிகிதத்திலிருந்து 20.77 சதவிகிதமாகவும் 2001 நிலைமையிலிருந்து பெருமளவு குறைந்துள்ளதை காண்கிறோம். ஆனால், கேட்கும் திறன், பிற திறமைகள் மற்றம் ஒன்றுக்கும் மேற்பட்ட திறன் குறைபாடுகள் அதிகரித்துள்ளன.</p> <p style="text-align: justify;">2011 ஆம் ஆண்டு ஆண்களுக்கும் பெண்களுக்குமான உடல் ஊனங்களை ஒப்பிட்டு பார்க்கும் போது ஆண்களில் பேச்சு மற்றும் மன நலம் சார்ந்த குறைபாடுகள் அதிகரித்திருப்பதையும், காண்பது கேட்பது பிற மற்றும் ஒன்றுக்கும் மேற்பட்ட குறைபாடுகளில் ஆண்களை விட பெண்கள் அதிகமாக இருப்பது ஒரு பெரிய சுகாதார மற்றும் பாதுகாப்பு சவாலாகவும், கவலையாகவும் உள்ளது. இதை நாம் எல்லா மட்டங்களிலும் சந்திக்க வேண்டும். 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி கிராமப்புற, நகர்ப்புற பகுதிகளை ஒப்பிட்டுப் பார்க்கும் போது சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு வசதிகள் பெருமளவு உள்ள நகர்ப்புற பகுதிகளில் காணப்படும் குறைபாடுகள் கிராமப்புறங்களை விட அதிகமாக இருப்பது கவலையளிக்கிறது. நகர்ப் புறங்களில் உடல் அசைவுசார் ஊனம் தவிர மற்ற குறைபாடுகள் மிகுந்து காணப்படுவது ஒரு பெரிய சுகாதார மற்றும் பாதுகாப்பு கவலையாக உள்ளது. இதன் தகவல்கள் அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது.</p> <p style="text-align: justify;">உடல் ஊனக் குறைபாடு என்பது மிகவும் மாறுபட்டதாகும். ஆகவே, சுகாதார பாதுகாப்பு பிரச்சனைகளை பட்டியலிடுவது கடினமாகும். மக்கள் கூறும் பிரச்சனைகளை நாம் கூர்ந்து கவனிக்கும் போது அவர்களுடைய சுகாதார நிலைமைகள் சில அவர்களுடைய உடல் ஊனத்தை நேரடியாகக் கொண்டவையாகவும், பிற பிரச்சனைகள் சமுதாய சூழ்நிலை சார்ந்தவைகளாகவும் காணப்படுகின்றன. உடல் ஊனமுற்றவர்களுக்கு குறிப்பிட்ட சுகாதார தேவைகள் உள்ளன என்பதை எல்லோரும் ஒப்புக் கொள்வர். ஆனாலும், அவர்களின் ஒட்டு மொத்த சுகாதார மற்றும் பாதுகாப்பு நிலைமைகளை நாம் தொடர்ந்து ஆய்வு செய்ய வேண்டும். உடல் ஊனமுற்றவர்களுக்கு தேசிய மற்றும் பன்னாட்டு அமைப்புகளில் அடிப்படை சுகாதார வசதி மற்றும் பாதுகாப்பு வழங்குவதில் தீவிர நாட்டம் இருந்தாலும் அவர்களின் உண்மையான பூர்த்தி பெறாத சுகாதார மற்றும் பாதுகாப்பு தேவைகளை நாம் சரியாக புரிந்து கொள்ள வேண்டும்.</p> <p style="text-align: justify;">சுகாதார பிரச்சினைகளை பொறுத்தமட்டில், பொதுவாக, மக்கள் தனியார் துறையில் மருத்துவ சேவைகளின் விலை உயர்வினாலும் போதிய அளவு பொது சுகாதார சேவைகள் இல்லாததினாலும் மருத்துவ சேவை பெறுவதில் தடைகளை காண்கிறார்கள். மக்கள் தொகையில் பெரும்பான்மையானவர்கள் தங்கள் சொந்த நிதியிலிருந்துதான் அடிப்படை சுகாதார வசதிகளை பெற வேண்டியுள்ளது. இதுவே, உடல் ஊனமுற்றவர்களின் நிலையில் விலை உயர்ந்த மருத்துவ சேவைகளை பெறுவதில் ஒரு பெரிய பாரமாக மட்டுமல்லாமல் தொடர்ந்து சிகிச்சை பெற வேண்டிய நிலையும் உள்ளது. மற்ற பிற தடைகள் என்ன என்று பார்த்தால் மிகப் பெரிய சவால்களாக உடல் ஊனமுற்றவர்கள் கருதுவது போக்குவரத்து, மருத்துவ சாதனங்கள் இல்லாமை, போதுமான அளவு தண்ணீர் மற்றும் மருத்துவ சேவை துப்புரவு வசதிகள் இல்லாமை, உடல் ஊனமுற்றவர்களுக்கு மருத்துவ சேவை பெறவும், மருந்துகளை பெறவும் தனிப் பகுதி இல்லாமை போன்ற உள் கட்டமைப்பு வசதி குறைவுகளாலும் 1995 ஆம் ஆண்டு பொதுப் பணித் துறை சட்டம் இயற்றிய பின்னும் 2004 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகும் அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் பொது கட்டிடங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கேற்ற சரிவுப் பாதைகள் அமைக்க வழிவகை செய்யப்பட்டன. ஆனாலும், இவைகளை மாநிலங்களும், உள்ளாட்சி அமைப்புகளும் செயல்படுத்துவதை மாநில அரசுகளும், மத்திய அரசும் கண்காணிக்க வேண்டும். மேலும், மாற்றுத் திறனாளிகள் மருத்துவ சிகிச்சை பெற மருத்துவ பணியாளர்களை அணுகும் போது பல வகையான பழகும் முறைத் தடைகளை எதிர் கொள்கிறார்கள். அவர்களை புறக்கணிப்பதாகவும், அக்கறை இல்லாமல் இருப்பதாகவும் மருத்துவ பணியாளர்கள் மீது குறை கூறுகிறார்கள். இவைகளில் மாற்றுத் திறனாளிகள் உடல் நல சிகிச்சைகள் பெறுவதில் பின்னடைவு ஏற்பட்டு மன உளைச்சலால் மருத்துவத் துறை மீதே நம்பிக்கையின்மை ஏற்படுகிறது. இதனால், பல நிகழ்வுகளில் மாற்றுத் திறனாளிகள் சிகிச்சை பெற முன் வருவதில்லை. இந்த நிகழ்வுகளும் பதிவு செய்யப்படுவதில்லை. இதனால், தனி நபர் ஒருவர் பாதிக்கப்படுவதில்லாமல் அவர்களின் குடும்பமே பாதிக்கப்படுகிறது. இது போலவே, சமூக மற்றும் சூழ்நிலை தடைகள் தொடர்பு உள்ள மன நல பிரச்சனைகளையும் நாம் கவனிக்க வேண்டும்.</p> <p style="text-align: justify;">இந்தியாவில் பெண்கள் ஏற்கனவே பல நிலைகளில் மறுக்கப்படுகிறார்கள். மருத்துவ சேவைகள் துறையில் இது மிகவும் மோசமாக உள்ளது. எல்லா வயது மாற்றுத் திறனாளி பெண்களும் தந்தையர்களின் மன ஓட்டம் காரணமாக ஒதுக்கப்படுவதும், பாலியல் பாகுபாடுகளையும் எதிர்கொள்கிறார்கள். உடல் ஊனமுற்ற பல பெண்கள் பாலியல் கொடுமைக்கும் மற்ற கொடுமைகளுக்கும் ஆளாகின்றனர். அது மட்டுமில்லாமல் பல கட்டங்களில் அவர்கள் ஒதுக்கப்படுகிறார்கள். மாற்றுத் திறனாளி பெண்களின் பாலியல் மற்றும் மகப்பேறு பிரச்சனைகள் மிக முக்கியமானது. ஆனால், போதிய அணுகுமுறை இல்லாத காரணத்தினால் அவர்களுக்கு இது சார்ந்த மருத்துவ சேவைகள் கிடைப்பதில்லை. சமூக அளவில் ஒதுக்கப்பட்டுள்ள நிலையிலும், தங்களுடைய குடும்பங்களின் அணுகு முறைகளாலும் இந்த பிரச்சனைகளை எழுப்பி மருத்துவ சேவைகளை பெற அவர்களால் முடிவதில்லை. திட்டக் கமிஷன் (இப்போது நிதி ஆயோக்) தனது பன்னிரண்டாவது ஐந்தாண்டு திட்டத்தில் மாற்றுத் திறனாளி பெண்களின் உடல் நலப் பிரச்சினைகளை ஆராய்ந்து அவர்கள் பல வகையில் ஒதுக்கப்படுவதால் அவர்கள் மருத்துவ சிகிச்சை பெறுவதில் உள்ள தடங்கல்கள் அறியப்பட்டுள்ளன. மாற்றுத் திறனாளிகளின் உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் மாநாட்டின் 25வது ஷரத்து உடல் ஊனமுற்றவர்கள் எந்தவொரு பாகுபாடும் இல்லாமல் மிக உயர்ந்த அளவு மருத்துவ வசதிகளை பெற வேண்டும் என்பதை உறுதி செய்துள்ளது. ஆகவே, எந்தவொரு தடங்கலும் இல்லாமல் இவர்களுக்கு மருத்துவ சேவை அளிப்பது ஒவ்வொரு நாட்டின் கடமையாகும். 2011 உடல் ஊனமுற்றவர்களின் உரிமைகளுக்கான உலக அறிக்கையில் உலகளவில் மாற்றுத் திறனாளிகளுக்கு உடல் நல நலிவும், குறைந்த கல்வியும், பொருளாதார நடவடிக்கைகளில் குறைந்த ஈடுபாடும், குறைபாடுகள் இல்லாதவர்களை விட மிக அதிகமான ஏழ்மையும் இருப்பது சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. இதற்கு ஒரு காரணம் மாற்றுத் திறனாளிகளுக்கு சுகாதாரம், கல்வி, வேலைவாய்ப்பு, போக்குவரத்து மற்றும் தகவல்கள் பெறுவதில் உள்ள பல தடைகளாகும். இந்த அடிப்படையில் மாற்றுத் திறனாளிகளை பாதுகாக்க மத்திய அரசு ஒரு தேசிய கொள்கையையும், திட்டத்தையும் வகுத்தது.</p> <h3 style="text-align: justify;">தேசிய கொள்கையும், திட்டங்களும்</h3> <p style="text-align: justify;">மத்திய அரசின் மாற்றுத் திறனாளிகளுக்கான துறை நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் அரசியலமைப்பு சட்டத்தின் ஏழாவது ஷெட்யூலில் காணப்படும் மாநிலங்களுக்கான இரண்டாவது பட்டியல் மற்றும் மத்திய அரசின் மாநிலங்களுக்கான கூட்டு படிவத்தின் மூன்றாவது பட்டியலில் உள்ள தேசிய கொள்கையையும், திட்டங்களையும் கவனிக்கிறது. மற்றத் துறைகளுக்கு ஒதுக்கப்பட்டவைகள் போக மீதமுள்ள, மாற்றுத் திறனாளிகள் மற்றும் வேலையில் ஈடுபடுத்த முடியாதவர்களுக்கான சேவைகள், சமூக பாதுகாப்பு மற்றும் சமூக காப்பீடு திட்டங்களை இந்தத் துறை செயல்படுத்துகிறது. மாற்றுத் திறனாளிகளுக்கான எல்லா வகையான கொள்கைகளையும், திட்டமிடுதல்களையும், அவைகளை ஒருங்கிணைத்து நிர்வகிப்பதிலும் முக்கிய பொறுப்பை மாற்றுத் திறனாளிகளுக்கான துறைக்கு இந்திய அரசு ஒப்படைத்துள்ளது. ஆனால், இந்த திட்டங்களின் ஒட்டு மொத்த மேலாண்மை கண்காணிப்பும் அந்தந்த அமைச்சகங்களுக்கும், மாநில அரசுகளுக்கும், யூனியன் பிரதேச நிர்வாகிகளுக்கும் அளிக்கப்பட்டுள்ளது. மாற்றுத் திறனாளிகளின் மறு சீரமைப்பு, அவர்களுக்கு சமூக, கல்வி மற்றும் பொருளாதார அதிகாரமளித்தல் ஆகிய சிறப்பு திட்டங்களில், அதாவது, உபகரணங்கள், உதவித் தொகைகள், தங்கியிருந்து படிக்கும் பள்ளிகள், திறன்சார் பயிற்சிகள், சலுகைக் கடன்கள், சுய வேலைப்பாட்டிற்கு மானியம், மறு சீரமைப்பு அமைக்கும் அலுவல்களுக்கு கல்வியும், பயிற்சியும் அளித்தல் ஆகிய பொறுப்புக்கள் இந்த துறைக்கு அளிக்கப்பட்டுள்ளது.</p> <p style="text-align: justify;">மாற்றுத் திறனாளிகளுக்கான சேவைகள் வழங்குவதற்கு பல துறைகள் செயல்பட்டு வருகின்றன. அவைகளாவன, தேசிய மாற்றுத் திறனாளிகள் நிதி மற்றும் வளர்ச்சி வாரியம், கான்பூரிலுள்ள செயற்கை உடல் பாகங்கள் தயாரிப்பு வாரியம், புது தில்லியில் உள்ள தீன்தயாள் உபாத்யாயா உடல் ஊனமுற்றவர்களுக்கான நிறுவனம், கொல்கத்தாவில் உள்ள முடநீக்கியல் குறைகள் உள்ளவர்களுக்கான தேசிய நிறுவனம், டெஹ்ரடுனில் உள்ள கண் பார்வை குறைபாடுகள் உள்ளவர்களுக்கான தேசிய நிறுவனம், செகந்திராபாத்திலுள்ள மன நலக் குறைபாடுகள் உள்ளவர்களுக்கான தேசிய நிறுவனம், மும்பையிலுள்ள காது கேட்கும் குறைபாடுகள் உள்ளவர்களுக்கான அலி ஆவார்ஜங் தேசிய நிறுவனம், கட்டக்கில் உள்ள மறுசீரமைப்பு பயிற்சி தேசிய நிறுவனம், சென்னையிலுள்ள பல தரப்பட்ட உடல் ஊனமுள்ளவர்களுக்கு அதிகாரமளிக்கும் தேசிய நிறுவனம் மற்றும் புது தில்லியிலுள்ள இந்திய சைகை மொழி ஆய்வு மற்றும் பயிற்சி மையம் ஆகியவைகளாகும்.</p> <p style="text-align: justify;">மாற்றுத் திறனாளிகள் சட்டம் 1995ன் கீழ் வரும் முக்கிய செயல்பாடுகள் ஒட்டு மொத்த பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு அம்சங்களாவன:</p> <ol style="text-align: justify;"> <li>குறைபாடுகளை குறைக்கும் ஆய்வுகளை மேற்கொள்ளுதல். குறைபாடுகளை குறைக்கும் பல்வேறு முயற்சிகளை மேற்கொள்ளுதல்; ஆண்டுக்கு ஒரு முறையாவது எல்லா குழந்தைகளையும் பரிசோதித்து யாருக்காவது ஏதாவது குறைபாடு ஏற்படுவதற்கான சாத்தியக் கூறுகள் இருக்கின்றனவா என்பதை கண்டுபிடித்தல்; ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள பணியாளர்களுக்கு தக்க பயிற்சிகளை அளித்தல்; மகப்பேறு காலத்திற்கு முந்தைய, மகப்பேறு கால மற்றும் குழந்தை பிறப்பிற்கு பின்பான தாய் சேய் நல வசதிகளை வழங்குதல்.</li> <li>எந்தெந்த பதவிக்கு மாற்றுத் திறனாளிகளை பணியமர்த்த முடியும் என்பதை அடையாளம் காணுதல்; இதை அவ்வப்போது ஆய்வு செய்து புதுப்பித்தல்; மாற்றுத் திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு உத்திரவாதம் செய்தல்; மாற்றுத் திறனாளிகளுக்கு பயிற்சி மற்றும் நல்வாழ்வு வழங்கும் திட்டங்களை உருவாக்குவதல்; உச்ச வரம்பு வயதை தளர்த்துதல்; வேலை வாய்ப்பை ஒழுங்குபடுத்துதல்; மாற்றுத் திறனாளிகள் வேலை செய்யும் இடத்தில் அவர்களுக்கு சுகாதார மற்றும் பாதுகாப்பு சூழ்நிலையை ஏற்படுத்துதல். மாற்றுத் திறனாளிகளுக்கு 5 சதவிகித வேலை வாய்ப்பை உறுதி செய்தல்.</li> <li>மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி பொருட்களையும், உபகரணங்களையும் வழங்குதல்; சலுகை விலையில் வீடுகளை வழங்குதல்; தொழில் துவங்க உதவி, மாற்றுத் திறனாளிகளுக்கு மனமகிழ் மன்றங்களை அமைத்தல்; சிறப்புப் பள்ளிகளை அமைத்தல்; ஆய்வு மையங்களை அமைத்தல்; மாற்றுத் திறனாளிகள் தொழில் துவங்கவும், தொழில் கூடங்களை அமைக்கவும் உதவி செய்தல்.</li> <li>சாலை, ரயில் மற்றும் விமானப் போக்குவரத்து வசதிகளை மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் அனைத்து மாற்றுத் திறனாளிகளுக்கும் அமைத்தல். சாலை பாதுகாப்பு வழி காட்டிகள். பொதுக் கட்டிடங்களில் சரிவு பாதைகள் அமைத்தல். கண் பார்வையற்றவர்களுக்கு பிரெய்ல் வசதிகள், காது கேட்காதவர்களுக்கு மின் தூக்கி போன்றவற்றில் அறிவிப்புகள். மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், இதர மருத்துவ நிலையங்கள், மறுவாழ்வு மையங்கள் ஆகியவற்றில் சரிவு பாதை அமைத்தல்.</li> <li>உடல் ஊனங்கள் ஏற்படாமல் தடுக்க ஆய்வுகளை மேற்கொள்ள வைத்தல் மற்றும் அவற்றிற்கு நிதி வசதி செய்தல்; மறு வாழ்வு அமைத்தல் மற்றும் சமூகம் சார்ந்த மறுவாழ்வு ஏற்படுத்துதல்; மாற்றுத் திறனாளிகளுக்கு துணை புரியும் கருவிகளை உருவாக்குதல் மற்றும் அதை பயன்படுத்தும் மன நிலையை ஏற்படுத்துதல்; மாற்றுத் திறனாளிகள் பணி செய்யக் கூடிய வேலைவாய்ப்புகளை அடையாளம் கண்டறிதல்; அலுவலகங்கள் மற்றும் தொழில் கூடங்களில் உள்ள உள் கட்டமைப்பில் மாறுதல்களைச் செய்தல்; மாற்றுத் திறனாளிகளின் சிறப்புக் கல்வி, மறுவாழ்வு அளித்தல் மற்றும் மனித வள மேம்பாட்டிற்கான ஆய்வுகளை மேற்கொள்ள பல்கலைக்கழகங்கள், மற்ற உயர் கல்வி நிலையங்கள், தொழில்முறை அமைப்புகள், அரசு அல்லாத ஆய்வுக் கூடங்கள் ஆகியவற்றிற்கு நிதி உதவி அளித்தல்.</li> <li>அனைத்து மாற்றுத் திறனாளிகளுக்கும் சமூக பாதுகாப்பு மறுவாழ்வு அளித்தல், அரசு அல்லாத அமைப்புகளுக்கு நிதி உதவி அளித்தல், மாற்றுத் திறனாளி பணியாளர்களுக்கு காப்பீட்டு திட்டங்கள் வழங்குதல், மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு நிலையங்களில் பதிவு செய்தவர்கள் ஆண்டு கடந்தும் பணி கிடைக்கவில்லை என்றால் அவர்களுக்கு வேலையில்லா மானியம் அளித்தல்.</li> </ol> <p style="text-align: justify;">மாற்றுத் திறனாளிகளின் சேவைக்காக சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் மற்றும் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகங்கள், பல திட்டங்களை துவக்கியுள்ளன. அதில், 1985ல் துவங்கப்பட்ட மாவட்ட மறுவாழ்வு மைய திட்டத்தின் கீழ் நான்கு வட்டார பயிற்சி மையங்கள், மும்பை, சென்னை, கட்டாக் மற்றும் லக்னெள இதில் செயல்பட்டு வருகின்றன. அங்கு, கிராம நிலை அலுவலர்கள், மாவட்ட மறுவாழ்வு மைய அலுவலர்கள், மாநில அரசு ஊழியர்களுக்கு அணுகுமுறைக் கல்வி மற்றும் பயிற்சி, சேவைகள் சம்மந்தமான ஆய்வுகள் மற்றும் மலிவான உபகரணங்களை வழங்குதல் ஆகியவைகள் மேற்கொள்ளப்படும். இந்தத் திட்டங்களுக்கு பயன்படுவதற்கான பயிற்சி பொருட்கள் மற்றும் ஆவணங்கள் ஆகியவைகளை தயாரிப்பதோடு வட்டார மறுவாழ்வு பயிற்சி மையங்கள் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த தேவையான விளம்பர புத்தகங்கள், சுவரொட்டிகள், ஒலி ஒளி பொருட்கள், திரைப்படங்கள் மற்றும் பாரம்பரிய தகவல் பரிமாற்றப் பொருட்கள், ஆகியவைகளை மாற்றுத் திறன் மற்றும் மறுவாழ்வு தேசிய தகவல் மையம், உடல் ஊனமுற்றவர்களுக்கான தேசிய நல கவுன்சில் மற்றும் இவைகளைப் போன்ற தேசிய அளவிலான நிறுவனங்களுக்கு தயாரிக்கப்படுகின்றன. 2000மாவது ஆண்டில் மாற்றுத் திறனாளிகள் மறுவாழ்வு மையம் துவக்கப்பட்டது. மாற்றுத் திறனாளிகள் சட்டத்தை (1995) செயல்படுத்தவும் அவர்களுக்கு மறுவாழ்வு சேவைகள் வழங்கவும் இந்த முயற்சி எடுக்கப்பட்டது. அடித்தளத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு முழுமையான சேவைகளை வழங்க மாவட்ட மாற்றுத் திறனாளிகள் மறுவாழ்வு மையத்தை அமைக்க அரசு முடிவு செய்தது. விழிப்புணர்வு ஏற்படுத்துதல், ஆய்வுகளை மேற்கொள்ளுதல், உடல் ஊனங்களை அடையாளம் கண்டு ஆரம்பத்திலேயே நிவாரணங்களை மேற்கொள்ளுதல், தகவல்களை பரிந்துரைத்தல் அவர்களுக்கு வேண்டிய உபகரணங்களுக்கான கணிப்பை மேற்கொள்ளுதல், இந்த உபகரணங்களை அளித்து பொறுத்துதல், அதை அவர்கள் உபயோகப்படுத்துவதை கண்காணித்தல், அந்த உபகரணங்களை பழுது பார்த்தல், இயன்முறை பயிற்சி, தொழிற்சார் இயன்முறைப் பயிற்சி, பேச்சுப் பயிற்சி, அரசு மற்ற நிறுவனங்களுக்கு பரிந்துரைத்து அறுவை சிகிச்சை மூலம் மறு சீரமைப்பு முயற்சிகள், உடல் ஊனம் சார்ந்த சான்றிதழ்களை வழங்குதல், பேருந்து அட்டைகளை வழங்குதல், வங்கிக் கடன் வழங்குதல் மற்றும் தடங்கல் இல்லா சூழ்நிலை உருவாக்குதல் ஆகியவைகள் இந்த சேவைகளில் அடங்கும்.</p> <p style="text-align: justify;"><strong>2006 மாற்றுத் திறனாளிகளின் தேசிய கொள்கை என்பது இந்திய அரசின் மிக முக்கியமான வரவேற்கத்தக்க ஒரு நிகழ்வாகும். அதன் முக்கிய அம்சங்கள் பின்வருவன</strong></p> <p style="text-align: justify;">மாற்றுத் திறனாளி மகளிர்</p> <ul style="text-align: justify;"> <li>மாற்றுத் திறனாளி மகளிர்க்கு குறுகிய கால தங்குமிடம் அளித்தல், வேலை செய்யும் மாற்றுத் திறனாளி மகளிர்க்கு தங்கும் விடுதிகளும், வயதான மாற்றுத் திறனாளி பெண்களுக்கு தங்கும் விடுதிகள் அளித்தல்.</li> <li>மாற்றுத் திறனாளி மகளிர் தங்களுடைய குழந்தைகளை வளர்ப்பதில் சிரமங்கள் மேற்கொள்கின்றனர். அது போன்றவர்களுக்கு அரசு நிதி உதவி அளித்து குழந்தைகளைப் பார்த்துக் கொள்ள உதவி செய்யும். இது இரண்டு குழந்தைகளுக்கு மட்டும் இரண்டு ஆண்டுகளுக்கு வழங்கப்படும்.</li> </ul> <h3 style="text-align: justify;">மாற்றுத் திறனாளி குழந்தைகள்</h3> <p style="text-align: justify;">மாற்றுத் திறனாளி குழந்தைகள் மிகவும் நலிந்தவர்கள் ஆவர். அவர்களுக்கு சிறப்பு கவனம் தேவை. அவர்களுக்கு அரசு</p> <ul style="text-align: justify;"> <li>மாற்றுத் திறனாளி குழந்தைகளின் பராமரிப்பு உரிமைகள், பாதுகாப்பு ஆகியவற்றை அளித்தல்.</li> <li>மாற்றுத் திறனாளி குழந்தைகள் கண்ணியத்துடனும் சமத்துவத்துடனும் வளர்ச்சி பெற உரிமைகளுக்கான சுமுகமான சூழ்நிலையை நிர்ணயித்து பல சட்டங்களில் வழங்கப்பட்டுள்ள உரிமைகளும் மற்றவர்களுக்கு இணையான வாய்ப்புகளையும் முழு பங்கேற்பையும் அளித்தல்.</li> <li>மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கு வேண்டிய தனிச்சிறப்பு மறுவாழ்வு சேவைகளை உள்ளடக்கிய கல்வி, சுகாதாரம் மற்றும் தொழில் முறை பயிற்சிகளும், வாய்ப்புகளையும் உறுதி செய்வது</li> <li>மாற்றுத் திறனாளி குழந்தைகளின் வளர்ச்சிக்கான உரிமைகள் மற்றும் அவர்களின் சிறப்புத் தேவைகள், பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றை உறுதி செய்தல்.</li> </ul> <p style="text-align: justify;"><strong>உடல்</strong><strong> </strong><strong>ஊனங்கள்</strong><strong> </strong><strong>வராமல்</strong><strong> </strong><strong>தடுத்தல்</strong><strong>, </strong><strong>ஆரம்பத்திலேயே</strong><strong> </strong><strong>கண்டுபிடித்தல்</strong><strong> </strong><strong>மற்றும்</strong><strong> </strong><strong>சீர் செய்யும்</strong><strong> </strong><strong>சிகிச்சைகள் </strong></p> <ul style="text-align: justify;"> <li>கருவுற்ற தாய்மார்களுக்கும், சிறு குழந்தைகளுக்கும் தேசிய வட்டார மற்றும் உள்ளூர் அளவில் தடுப்பூசி திட்டங்கள்.</li> </ul> <ul style="text-align: justify;"> <li>உடல் ஊனங்கள் வராமல் தடுக்க பயிற்சி வழிமுறைகள் மற்றும் வசதிகள், மருத்துவ துறை மருத்துவ பணியாளர்களுக்கும் அங்கன்வாடி பணியாளர்களுக்கும் உடல் ஊனங்களை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை அளிக்கும் முறைகளில் பயிற்சி அளித்தல்.</li> </ul> <ul style="text-align: justify;"> <li>உடல் ஊனங்கள் மேலும் தீவிரமாகாமலும் ஒன்றிலிருந்து மற்றொரு உடல் ஊனம் ஏற்படாமலும் தடுக்கும் தகுந்த நடவடிக்கைகளை தற்போது உள்ள மருத்துவ சேவை வழங்கும் முறையிலேயே உருவாக்குவது.</li> </ul> <ul style="text-align: justify;"> <li>குழந்தை பிறப்பு வாய்ப்புள்ள வயதுள்ள இளம் பெண்களுக்கும் தாய்மார்களுக்கும், மகப்பேறு அடைந்த மகளிருக்கும் சத்துணவு மருத்துவ கண்காணிப்பு துப்புரவு சார்ந்த விழிப்புணர்வுகளை ஏற்படுத்துதல் ஆகியவற்றிற்கு கவனம் செலுத்தப்படும். இந்த விழிப்புணர்வு நடவடிக்கைகள் பள்ளியிலேயே அளிக்கப்படும் வண்ணம் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.</li> </ul> <h3 style="text-align: justify;">மறுவாழ்வுக்கான திட்டங்கள்</h3> <ul style="text-align: justify;"> <li>உண்மையான மறுவாழ்வு சேவைகளை வழங்க மாநில அளவிலான மையங்கள் அமைக்கப்படும். அதில் மனிதவள மேம்பாடு, ஆய்வுகள் மற்றும் நீண்ட கால சிறப்பு மறுவாழ்வு திட்டங்கள் செயல்படுத்தப்படும்.</li> </ul> <ul style="text-align: justify;"> <li>தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் ஈடுபாட்டோடு மாவட்ட அளவிலான பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்களின் கீழ் தீவிரமாக மனநோய் பாதித்தவர்களுக்கு மன நோய் சிகிச்சை சேவை மையங்கள் அமைக்கப்படும். சமூக மற்றும் குடும்ப ஆதரவற்ற மன நலம் பாதித்தவர்களுக்கு மற்ற குடும்பங்கள் பொறுப்பெடுத்து நலனளிக்கும் அமைப்புகள் ஊக்குவிக்கப்படும்.</li> </ul> <p style="text-align: justify;">இந்திய அரசு 12வது ஐந்தாண்டு திட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு பயனளிக்க தகவல் தொழில்நுட்பம், சிவில் விமான போக்குவரத்து, சுகாதாரம் மற்றும் குடும்ப நலம், மனித வள மேம்பாடு, தொழிலாளர் நலம் மற்றும் மேம்பாடு, ரயில்வே, ஊரக வளர்ச்சி மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாடு அமைச்சகங்கள் மேற்கொள்ளக்கூடிய திட்டங்களை வகுத்துள்ளது. இதைப் போல், மாநில அரசுகளும் மேற்கொள்ள பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.</p> <p style="text-align: justify;">மாற்றுத் திறனாளிகளின் உரிமைகளை பாதுகாக்கும் பல்வேறு சட்ட வடிவங்களைப் பற்றிய தகவல்களும் இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாற்றுத் திறனாளிகள் சார்ந்த தற்போதைய சட்டங்களான மாற்றுத் திறனாளிகள் (சம வாய்ப்புகள் உரிமைகள் பாதுகாப்பு மற்றும் முழு பங்கேற்பு) சட்டம் 1995 ஆட்டிசம், மூளை நரம்பு தளர்ச்சி, மூளை நரம்பு வளர்ச்சி குறைவு மற்றும் ஒன்றுக்கும் மேற்பட்ட குறைபாடுகள் உள்ளவர்களுக்கான தேசிய அறக்கட்டளை சட்டம் 1999, இந்திய மறுவாழ்வு கவுன்சில் 1992, மனநல சட்டம் 1987, கல்விக்கான உரிமை சட்டம் 2009, குழந்தைகள் சார் உரிமைகள் பாதுகாப்பு சட்டம் 2005, மகளிருக்கான தேசிய கமின் சட்டம், 1990, தொழிற்கூடங்களில் பயிற்சி சட்டம் 2005, குற்றவியல் முறை நீதிமன்றம் 1973 ஆகியன.</p> <p style="text-align: justify;">மேற்கூறப்பட்ட அனைத்து முயற்சிகளுக்குப் பின்னும் ஒரு முற்போக்கான சிறப்பான அமைப்பை ஏற்படுத்துவதில் நாம் இன்னும் வெகுதூரம் பயணிக்க வேண்டியுள்ளது. மாற்றுத் திறனாளிகள் பற்றிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு பங்கு பெற்ற 42 சதவிகித நாடுகளில் மறுவாழ்வு கொள்கைகள் இன்னமும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. 50 சதவிகித நாடுகளில் மாற்றுத் திறனாளிகளின் மறுவாழ்வு சார்ந்த சட்டங்கள் இயற்றப்படவில்லை மற்றும் 40 சதவிகித நாடுகளில் மறுவாழ்வு திட்டங்கள் அமைக்கப்படவில்லை. நல்ல சட்டங்களையும், கொள்கைகளையும் இயற்றிய நாடுகளில் மறுவாழ்வு செயல் திட்டங்கள் பின் தங்கியே உள்ளன. இதற்கான அமைப்பு சார்ந்த கண்டறிப்பட்ட தடைகள்: முனைப்பான திட்டமிடுதல் இல்லாமை, போதிய வளங்களும் சுகாதார உள் கட்டமைப்பு வசதிகளும் இல்லாமை, இவைகளை செயல்படுத்தும் ஒருங்கிணைக்கும் மற்றும் கண்காணிக்கும் அமைப்புகள் இல்லாமை, போதுமான சுகாதார தகவல் மற்றும் தொடர்பு அணுகுமுறைகள் சார் அமைப்புகள் இல்லாமை.</p> <p style="text-align: justify;">மிகவும் சிக்கலான பரிந்துரை முறைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளோடு நெருங்கி பழகும் அமைப்பு இல்லாமையுமாகும். ஆகவே, இதற்கு தேசிய மறுவாழ்வு திட்டங்களும் ஒரு அமைப்போடு மற்ற அமைப்புகள் இணைந்து செயல்படும் நிலைமையும் உருவாக்கப்பட வேண்டும்.</p> <p style="text-align: justify;">வளரும் நாடுகளில் மாற்றுத் திறனாளிகள் அனைவருக்கும் உள்ளடக்கிய கொள்கைகளையும், திட்டங்களையும் வடிவமைக்க இந்தியா முனைந்துள்ளது. இதனை வளரும் நாடுகளில் மாற்றுத் திறனாளிகளுக்கான உரிமைகளை நிலைநாட்டும் உரிமைகளை பரிந்துரை செய்வதில் ஆதரவு பெற்றுள்ளது. இந்திய பிரதமரும், தன்னுடைய வெகுஜன “மனதின் குரல்" என்ற ஒலிபரப்பு மூலம் இந்த பிரச்சனைகளைப் பற்றி பேசியிருக்கிறார். ஆனாலும், மாற்றுத் திறனாளிகளுக்கு நல்ல செயல் திட்டங்களை செயல்படுத்தி அவர்களுக்கு நியாயம் வழங்கும் வண்ணமும் அனைவரையும் உள்ளடக்கிய சமுதாயத்தை உருவாக்கவும் நாம் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியுள்ளது. இந்தியாவில் மாற்றுத் திறனாளிகளின் மொத்த அளவையும், தீவிரத்தையும் நாம் தெள்ளத் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். இது அல்லாத பட்சத்தில் சரியான தகவல்களை சேகரிப்பதும் நல்ல அணுகுமுறையை ஏற்படுத்துவதும் பெரிய சவாலாகும். இந்த பிரச்சனையை அணுக இந்தியா ஒருங்கிணைந்த மற்றும் பல முனை அணுகுமுறையை மேற்கொள்ள வேண்டும். இந்த பிரச்சனைக்காக செயல்படும் அனைத்து துறைகளின் அமைப்புகளையும் சிறப்பாக ஒருங்கிணைக்க வேண்டும். சமூக பாகுபாட்டையும் சேவைகளை பெறுவதில் உள்ள தடைகளையும் நீக்கவும் உள்ளூர் அரசு துறைகளும், சமூக அமைப்புகளும் இணைந்து செயலாற்ற வேண்டும். மாற்றுத் திறனாளிகளுக்குள்ள ஊனத்தை வராமல் தடுக்கவும், அவர்களுக்கு உரிய குறிப்பிட்ட சேவைகளை வழங்கவும் எல்லா சேவை வழங்கு நிலையங்களிலும் பயிற்சி பெற்றவர்களை நியமிக்க வேண்டும். தேவையான அனைவருக்கும், சமூக பாதுகாப்பு திட்டங்கள் மூலம் சுகாதார வசதிகளும், பாதுகாப்பும் அளிக்க வேண்டும்.</p> <p style="text-align: justify;">ஆதாரம்: சஷி ராணி, உதவிப் பேராசிரியர், பல்கலைக்கழகத்தின் சமூகபணித் துறை, தில்லி – திட்டம் மாத இதழ்</p> </div>