<div id="Middlecolumn_internal"> <h3 style="text-align: justify;">நோக்கம்</h3> <p style="text-align: justify;">பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்களுக்கு தேவைப்படும் பராமரிப்பு மற்றும் அவர்களின் நல வாழ்விற்காக பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நலச் சட்டம் 2007 இயற்றப்பட்டு, அதற்கிணங்க தமிழ்நாடு பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு விதிகள் 2009 வகுக்கப்பட்டுள்ளன.</p> <p style="text-align: justify;">பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் தங்களை பராமரித்துக் கொள்ள போதுமான பொருளாதார வசதி இல்லாத நிலையிலும் மற்றும் சொத்துக்கள் எதுவும் இல்லாத பொழுதும், உரிய பராமரிப்பு கிடைக்கவில்லையெனில் இச்சட்டத்தின் கீழ் அவர்களின் மகன்கள், மகள்கள், பேரன்கள், பேத்திகள் ஆகியோரிடமிருந்து பராமரிப்புத் தொகை பெறலாம்.</p> <p style="text-align: justify;">பெற்றெடுத்த தாய் தந்தை மட்டுமல்லாது மாற்றாந் தாய் – தந்தை, வளர்ப்புத் தாய் – தந்தை ஆகியோரும் இச்சட்டத்தின் கீழ் பராமரிப்புத் தொகை கோரலாம். பிள்ளைகள் இல்லாத மூத்த குடிமக்கள் தனது சொத்தை அனுபவித்துக் கொண்டிருப்பவர் அல்லது தனது காலத்திற்குப் பிறகு தனது சொத்தை அடைய இருப்பவர் ஆகியோர் மீதும் பராமரிப்புத் தொகை கோரி மனு செய்யலாம்.</p> <h3 style="text-align: justify;">மனு செய்தல் முறை</h3> <p style="text-align: justify;">இச்சட்டத்தின் கீழ் பராமரிப்பு உதவித் தொகை கோரி மனு அளிக்க நீதி மன்றத்திற்குச் செல்ல வேண்டியது இல்லை. கோட்டாட்சியர் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள தீர்ப்பாயத்தில் மனுவினை தாக்கல் செய்யலாம். இதற்கென தீர்ப்பாயங்கள் உட்கோட்ட அளவில் அமைக்கப்பட்டுள்ளன. இத்தீர்ப்பாயங்கள் ஓர் உரிமையியல் நீதிமன்றத்திற்கு உள்ள அனைத்து அதிகாரங்களையும் பெற்றிருக்கின்றன.</p> <h3 style="text-align: justify;">விண்ணப்பிக்கும் முறை</h3> <p style="text-align: justify;">பெற்றோர்களோ அல்லது மூத்த குடிமக்களோ தங்கள் இயலாமையின் காரணமாக நேரடியாகச் சென்று தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்ய இயலவில்லை என்றால் தங்களுக்கு பதிலாக வேறொருவரையோ அல்லது ஒரு தொண்டு நிறுவனத்தின் மூலமாகவோ மனு தாக்கல் செய்யலாம்.</p> <h3 style="text-align: justify;">வழங்கப்படும் உதவிகள்</h3> <p style="text-align: justify;">இச்சட்டத்தின் கீழ் பெற்றோர்களுக்கு தீர்ப்பாயத்தால் வாழ்க்கை பொருளுதவிக்கு வகை செய்யும் ஆணைகளின் பேரில் தேவையான உணவு, உடை, இருப்பிடம், மருத்துவ வசதி மற்றும் சிகிச்சை அளிப்பதற்காக மாதம் ரூ. 10000-த்திற்கு மிகாத வகையில் பாரமரிப்புத் தொகை பெற்றுத் தர வழி வகை செய்யப்படும்.</p> <h3 style="text-align: justify;">பராமரிப்புத் தொகை வழங்கப்படாத பட்சத்தில் வழங்கப்படும் தண்டைகள்</h3> <ul style="text-align: justify;"> <li>தீர்ப்பாயத்தினால் பிறப்பிக்கப்பட்ட ஆணைக்கிணங்க பிள்ளைகளோ அல்லது உறவினர்களோ தகுந்த காரணமின்றி செயல்படவில்லை எனில் ஒரு மாதத்திற்கான சிறைத் தண்டனையோ அல்லது பணம் செலுத்தும் வகையில் சிறைத் தண்டனையோ எது அதிகமோ அந்தக் காலம் வரை தண்டனை வழங்கப்படும்.</li> <li>மூத்த குடிமக்களை ஆதரவற்ற நிலையில் விட்டுச் சென்றால், அம்மூத்த குடிமக்களை பராமரிக்கத் தவறியவர்களுக்கு மூன்று மாத சிறை தண்டனை அல்லது ரூ. 5000 அபராதம் அல்லது இரண்டும் சேர்ந்து தண்டனையாக வழங்கப்படும்</li> </ul> <p style="text-align: justify;">ஆதாரம்: தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு முற்றம் நாளிதழ்</p> </div>