திருநங்கைகள் கடந்து வந்த பாதை உலகில் திருநங்கைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு இருக்கும் நிலையில், மக்களிடையே திருநங்கைகளும் ஒரு மானிடப் பிறப்பு தான் என்ற உணர்வு அடிக்கடி மறந்து விடுகிறது. அவர்களும் நம்மை போல் ஒருவர் தான் என்ற எண்ணம் எப்பொழுதும் நம்மை விட்டு நீங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். சமீபத்தில், திருநங்கைகள் ஒன்று கூடி சென்னையில் ஓர் கூட்டம் கூடினர். அக்கூட்டத்தில் அவர்கள் படும் துன்பத்தை மிகவும் துயரத்தோடு வெளிப்படுத்தினர். மக்களிடத்தில் நிலவும் உயர்வு, தாழ்வு ; ஏழை, பணக்காரர் என்ற அடிப்படையில் இருக்கும் வேற்றுமைகள் ஒரு பக்கம் இருந்தாலும், சற்று வேதனை அளிக்கும் மிகப் பெரிய வேற்றுமை, திருநங்கைகளாகிய தங்களிடம் காட்டும் வேற்றுமை என தெரிவித்தனர். தங்களுக்கென தனி பொது கழிப்பிடம் இல்லாதவை முதல், ஆண் பெண் வரிசையில் திருநங்கைகளுக்கான வரிசை இல்லாதது வரை பல பிரச்சனைகள் அவர்களை ஆட்டிப்படைத்துக் கொண்டு இருந்தன. இப்படி பல கூட்டங்களில் அவர்கள் தங்களின் குரலை உயர்திக் கொண்டிருக்கும் பொழுது, ஆகஸ்ட் மாதம், 2014 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் இருந்து ஓர் நற்செய்தி அமலுக்கு வந்தது. மூன்றாவது பாலினம் உச்ச நீதிமன்றம், திருநங்கைகளை மூன்றாவது பாலினமாக சட்டபூர்வமாக அறிவித்தது. சந்தோஷத்தில் மிதந்த திருநங்கைகள் கண்ணீர் மல்க கொண்டாடி மகிழ்ந்தனர். மேலும் அவர்களுடைய படிப்பும், வேலை வாய்ப்பும் OBC பிரிவின் கீழ் கருதப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. மகிழ்ச்சியில் இருந்த திருநங்கைகளில் ஒருவர், தாங்கள் இந்நாளை சுதந்திர தினமாகக் கருதுகிறோம் என்று புன்னகையுடன் கூறினார். மேலும், தங்களில் பலர் தகவல் தொழில்நுட்பத் துறை, அழகு நிலையங்கள், ஊடகங்கள் போன்ற பல துறைகளில் தங்களின் திறமையை வெளிக்காட்டி வெற்றிப் பாதையை நோக்கி சென்று கொண்டிருந்தாலும், சில திருநங்கைகளின் மிக மோசமான் நடவடிக்கைகளால், மற்ற திருநங்கைகளையும் தவறாக நினைப்பதற்கான சந்தர்ப்பமும் சூழ்நிலையும் உருவாக்கி விட்டதை நினைத்தால் மிகவும் வேதனை அளிக்கிறது என்று கூறினார். திருநங்கைகள், அவர்களுக்கு கிடைத்த அங்கீகாரத்தை மிகவும் சரியான முறையில் பயன்படுத்தி மற்றவர்களுக்கு எந்த விதத்திலும் தொந்தரவு கொடுக்காமல் இருக்கும்படி அவர்களது நடவடிக்கை அமையுமாறு பார்த்துக் கொள்ள வேண்டியது அவர்களது கடமையாகும். திருநங்கைகள் அல்லாது மற்ற இரண்டு பாலினமும் அவரவர் நடவடிக்கைகளில் நூறு சதவீதம் துய்மையான தங்கம் என்று கூற இயலாது, ஆனால், பல இன்னல்களுக்குப் பின் திருநங்கைகளுக்குக் கிடைத்த இந்த சட்டபூர்வமான சுதந்திரத்தை அனைவரும் ஒன்று கூடி பாதுகாக்க வேண்டும் என்பதே அனைவரது நோக்கமாக இருக்க வேண்டும். ரேவதி ராம்குமார்