மாற்றுத் திறனாளிகளுக்கு அதிகாரம் அளித்தல் என்பது பல்வகையான நடைமுறைகளை உள்ளடக்கிய ஒரு பணி ஆகும். உடல் ஊனம் ஏற்படுவதை தடுத்தல், ஏதேனும் ஊனம் ஏற்பட்டால் அதை தொடக்கத்திலேயே கண்டறிதல், ஊனத்தைப் போக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல், கல்வி அளித்தல், தொழிற் பயிற்சி அளிப்பதன் மூலம் மறுவாழ்வு வழங்குதல், சமூகத்துடன் ஒருங்கிணைத்தல் ஆகியவையே மாற்றுத் திறனாளிகளுக்கு அதிகாரமளிப்பதில் உள்ள பல்வகை நடைமுறைகள் ஆகும். எனினும் இவை மட்டுமே மாற்றுத் திறனாளிகளுக்கு அதிகாரம் அளித்து விடாது. இதற்கான பணியில் ஈடுபட்டுள்ள தனி நபர்கள் மற்றும் அமைப்புகளின் அர்ப்பணிப்பு உணர்வுடன் கூடிய உழைப்பும் அவசியமாகும். இத்தகைய உழைப்பை அங்கீகரிக்கும் வகையிலும், மாற்றுத் திறனாளி நலனுக்காக சிறப்பாக பாடுபடும்படி மற்றவர்களை ஊக்குவிக்கும் வகையிலும் சர்வதேச மாற்றுத் திறனாளி நாள் அன்று விருதுகள் வழங்கப்படுகின்றன. சர்வதேச மாற்றுத் திறனாளிகள் ஆண்டு கடந்த 1981 ஆம் ஆண்டு சர்வதேச மாற்றுத் திறனாளிகள் ஆண்டு கடைபிடிக்கப்பட்டது. அப்போது முதல் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 3 ஆம் தேதி சர்வதேச மாற்றுத் திறனாளி நாளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. உடல் ஊனமுற்றோரின் உரிமைகள் மற்றும் அரசியல் சமுதாயம் பொருளாதாரம் கலாச்சார வாழ்க்கை ஆகிய மனித வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் மற்றவர்களுடன் உடல் ஊனமுற்றோரை ஒருங்கிணைப்பதன் மூலம் கிடைக்கும் பயன்கள் ஆகியவை உள்ளிட்ட உடல் ஊனமுற்றோரின் பிரச்சினைகளை அனைவரும் முழுமையாக புரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் தான் சர்வதேச மாற்றுத் திறனாளிகள் நாள் கொண்டாடப்படுகிறது. சமுதாயம் மற்றும் வளர்ச்சி தொடர்பான அனைத்து நடவடிக்கைகளிலும் மாற்றுத் திறனாளிகள் முழு அளவில் பங்கேற்க வேண்டும் என்பது தான் கடந்த 1982 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் பொது அவையில் நிறைவேற்றப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான உலக நடவடிக்கை திட்டத்தின் இலக்கு ஆகும். மனித சமுதாயத்தின் அனைத்து நடவடிக்கைகளிலும் மாற்றுத் திறனாளிகளை முழு அளவில் பங்கேற்க செய்ய வேண்டும் என்ற ஐ.நா.வின் உறுதிப்பாடு காரணமாக சர்வதேச கொள்கை கட்டமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டது. அதன் பின்னர் கடந்த 2006 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட மாற்றுத் திறன் கொண்ட மனிதர்களின் உரிமைகளுக்கான ஒப்பந்தத்தின் மூலம் இந்த சர்வதேச கொள்கை கட்டமைப்பு வலுப்படுத்தப்பட்டது. ஐக்கிய நாடுகள் அமைப்பு உருவாக்கிய இந்த ஒப்பந்தத்திற்கு உலக நாடுகளின் ஒப்புதலை பெறுவதற்கான கையெழுத்துகளை பெறும் இயக்கம் 30.03.2007 அன்று தொடங்கியது. அந்த இயக்கத்தின் முதல் நாள் அன்றே ஐக்கிய நாடுகள் ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டது மனித சமுதாயம் நடவடிக்கைகளில் மாற்றுத் திறனாளிகள் பங்கேற்பதற்கு வகை செய்தல், உரிமைகளை பாதுகாத்தல், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட அனைவருக்கும் சம வாய்ப்புகளை வழங்குதல் ஆகியவற்றை செய்வதற்கு இந்தியா உறுதிபூண்டது. மாற்றுத் திறனாளிகளின் நலனைப் பொறுத்த வரை இந்தியா ஒரு வித்தியாசமான நாடு ஆகும். இந்தியாவில் தான் பெரும்பாலான மக்கள் கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். அவர்கள் சுகாதாரம் மற்றும் மறுவாழ்வு சேவைகளை பெறுவது என்பது பெரும் சவாலாகவே உள்ளது. இதை உணர்ந்த இந்திய அரசு, மத்திய அமைச்சகங்களின் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்கள் மூலமாகவும், குடிமக்கள் சமுதாய அமைப்புகளுடன் இணைந்தும் செயல்படுத்தப்படும் திட்டங்களின் மூலமாக இதுவரை சென்றடையாத மக்களை அரசின் பல்வேறு சேவைகள் சென்றடைவதை உறுதி செய்வதற்காக பல்வேறு முன் முயற்சிகளை மேற்கொண்டது. தேசிய விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 3 ஆம் தேதியன்று சர்வதேச மாற்றுத் திறனாளிகள் நாள் கொண்டாடப்படும் போது, மாற்றுத் திறன் கொண்டவர்களுக்கு அதிகாரமளிப்பதற்காக பாடுபட்டோருக்கு மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை மூலம் விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்த விருதுகள் முதன் முதலில் கடந்த 1969 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டன. அப்போது மாற்றுத் திறனாளிகளுக்கு வேலை வழங்கும் சிறந்த நிறுவனங்கள் / தனி நபர்களுக்கும், மாற்றுத் திறன் கொண்ட சிறந்த பணியாளருக்கும் விருதுகள் வழங்கப்பட்டன. எனினும் மாறிவரும் சூழலை கருத்தில் கொண்டு தேசிய விருதுகள் திட்டம் மறுஆய்வு செய்யப்பட்டது. அவ்வப்போது ஏற்படும் தேவைகளுக்கு ஏற்ப புதுப்புது பிரிவுகளில் விருதுகள் அறிமுகம் செய்யப்பட்டன. இன்றைய நிலையில் மாற்றுத் திறன் கொண்டவர்களுக்கு அதிகாரம் அளித்தலுக்கான தேசிய விருதுகள் திட்டத்தின்படி 13 பிரிவுகளாக மொத்தம் 63 விருதுகள் வழங்கப்படுகின்றன. விருதுகள் மாற்றுத் திறன் கொண்ட சிறந்த பணியாளர்கள் / சுய வேலை செய்வோர் மாற்றுத் திறன் கொண்டவர்களுக்கு வேலை வழங்குவோர் மற்றும் வேலை பெற்றுத் தரும் அதிகாரிகள் / முகமைகள் மாற்றுத் திறன் கொண்டவர்களின் நலனுக்காக பாடுபடும் சிறந்த நிறுவனம் மற்றும் தனி நபர் சிறந்த முன் மாதிரி மாற்றுத் திறனாளிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நோக்குடன் மேற்கொள்ளப்பட்ட சிறந்த பயன்பாட்டு ஆராய்ச்சி / கண்டுபிடிப்பு / பொருள் மாற்றுத் திறனாளிகளின் முன்னேற்றத்திற்காக தடையற்ற சூழலை உருவாக்கும் பணியில் சிறப்பாக செயல்படுதல் மாற்றுத் திறன் கொண்டவர்களுக்கு மறுவாழ்வு வழங்குவதில் சிறந்து விளங்கும் மாவட்டம் தேசிய நம்பிக்கைக்கான சிறந்த உள்ளூர் தேசிய உடல் ஊனமுற்றோர் நிதி மற்றும் மேம்பாட்டு கழகத்தின் உதவிகளை மாற்றுத் திறன் கொண்டவர்களுக்கு சிறப்பான முறையில் கொண்டு செல்லும் மாநில முகமை படைப்புத் திறனில் சிறந்து விளங்கும் வயதுக்கு வந்த மாற்றுத் திறனாளிகள் படைப்புத் திறனில் சிறந்து விளங்கும் மாற்றுத் திறன் கொண்ட குழந்தைகள் சிறந்த பிரெய்லி அச்சகம் எளிதில் அணுகக் கூடிய இணையதளம் மத்திய சமுக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் இணையதளம் மற்றும் நாடு முழுவதும் உள்ள பிராந்திய மொழி செய்தித்தாள்களில் விளம்பரம் அளிப்பதன் மூலமும் நாடு முழுவதும் உள்ள பல்வேறு அமைப்புகளுக்கு கடிதம் எழுதுவதன் மூலமும் இந்த விருதுகளுக்கான பரிந்துரைகள் கோரப்படுகின்றன. இவ்வாறு பெறப்படும் பரிந்துரைகளை தேர்வுக் குழுவினர் முதல் கட்டமாக ஆய்வு செய்து உத்தேச பட்டியலை தயாரிப்பார்கள். அப்பட்டியலை தேசிய தேர்வு குழு ஆய்வு செய்து விருது பெறுவோரின் இறுதிப் பட்டியலை தயாரிக்கும். அப்பட்டியலில் உள்ளவர்களுக்கு டிசம்பர் 3 ஆம் தேதி சர்வதேச மாற்றுத் திறனாளிகள் நாளன்று விருது வழங்கப்படும். ஆதாரம்: திட்டம் மாத இதழ்