<div id="Middlecolumn_internal"> <h3 style="text-align: justify;">மாற்றுத் திறனாளிகளுக்கு பயிற்சியளிக்கும் இலவச மையம்</h3> <p style="text-align: justify;">தேசிய பார்வையற்றோர் இணையமும், அம்பேத்கர் கல்வி வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி மையமும் இணைந்து, பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் பயிற்சி அளித்து வருகின்றன. இவர்களுக்கு, போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களே பயிற்சியளிப்பது, விழியிழந்த மாற்றுத் திறனாளிகளின் வாழ்வில் ஒளியேற்றும் முயற்சிக்கு பேருதவியாக அமைந்துள்ளது.</p> <p style="text-align: justify;">பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் போட்டித் தேர்வுகளில் கலந்து கொண்டு தேர்ச்சி பெறுவதற்கு ஏதுவாக, கோவை வரதராஜபுரத்தில் தேசிய பார்வையற்றோர் இணையத்தைச் சேர்ந்தவர்கள் இலவச பயிற்சி வகுப்பு நடத்தி வருகின்றனர்.</p> <p style="text-align: justify;">பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் சமூக, பொருளாதார ரீதியில் மேம்பாடு அடைய வேண்டும். சரியான வேலைவாய்ப்பை உருவாக்கிக் கொடுப்பதன் மூலம் மட்டுமே இது சாத்தியம் ஆகும். நாடு முழுவதும் 42 அரசுத் துறைகளில் உள்ள காலி இடங்கள் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளைக் கொண்டு நிரப்பப்பட உள்ளன.</p> <p style="text-align: justify;">அம்பேத்கர் கல்வி வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி மையம் அவர்களுக்கு இலவசமாக கற்றுத் தர முன் வந்தது. இதில், சிறப்பு என்னவென்றால் அந்த மையத்தில் போட்டித் தேர்வுகளுக்கு பயின்று வரும் பட்டதாரிகளும், போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்ற பட்டதாரிகளும், இங்கு வந்து பார்வையற்றவர்களுக்கு சொல்லிக் கொடுத்து வருகின்றனர்.</p> <p style="text-align: justify;">இந்த பயிற்சியில் 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு, பட்டப்படிப்பு முடித்த பார்வையற்ற பட்டதாரிகள் பயின்று வருகின்றனர். அவர்களுக்கு தேவையான பயிற்சி, தங்குமிடம், உணவு ஆகியவற்றை இவர்களே கொடுக்கின்றனர். தற்போது 35 பேர் வந்து பயின்று வருகின்றனர். போட்டித் தேர்வுகளுக்கு தயாராக விரும்பும் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் பயிற்சியில் கலந்து கொள்ளலாம் .</p> <p style="text-align: justify;">பொருளாதாரத்தில் பின் தங்கிய ஏழை பட்டதாரிகளுக்கு இலவச பயிற்சி கொடுத்து வருகின்றனர். கடந்த 3 ஆண்டுகளில் எங்களிடம் பயிற்சி பெற்ற 103 பேர் தேர்ச்சி பெற்று வங்கி, பொதுத் துறை காப்பீட்டு நிறுவனம் உள்ளிட்டவற்றில் பணியில் உள்ளனர்.</p> <p style="text-align: justify;">பொதுவாக, சாதாரண மாணவர்கள், வகுப்பில் பாடத்தை கவனிக்கிறார்களா என்பதை அவர்களின் கண்ணை பார்த்து அறிவோம். ஆனால், இங்கு கற்றுத் தருவதை கேட்டு பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் காட்டும் முகபாவனைகள் கற்றுத் தருபவர்களுக்கு மேலும் ஊக்கம் அளிக்கிறது. இந்த முயற்சிக்கு இந்த மையத்தில் பயின்ற மாணவ, மாணவிகளும் மனப்பூர்வமான ஒத்துழைப்பு தருவதால் தான் இந்த முயற்சி சாத்தியம் ஆகியுள்ளது.</p> <p style="text-align: justify;">ஆதாரம்: ம.சரவணன்</p> </div>