அதிவேக ரயில் சேவை நாட்டின் முதல் புல்லட் ரயில் திட்டமான மும்பை-அகமதாபாத் அதிவேக ரயில் வழித்தடப் பணிகள் நிறைவடைய உள்ள நிலையில், நாடு முழுவதும் அதிவேக ரயில் சேவையை விரிவுபடுத்துவதற்கான கட்டமைப்பை இந்தியா உருவாக்கி வருகிறது. மணிக்கு 350 கிலோமீட்டர் வேகத்தில் ரயில்கள் இயக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்தத் திட்டத்தின் அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு, எதிர்காலத்தில் அதிவேக ரயில் வழித்தடங்களில் ஒரே மாதிரியான பொறியியல் வடிவமைப்பு, கட்டுமான நடைமுறை, பராமரிப்பு அமைப்புகள் பின்பற்றப்பட உள்ளன. இதன் மூலம் திட்டச் செயல்பாடுகள் விரைவுபடுத்தப்படுவதுடன், கட்டுமானச் செலவும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்சார்பு இந்தியா, இந்தியாவில் தயாரிப்போம் திட்டங்களின் கீழ், உள்நாட்டிலேயே அதிவேக ரயில்களுக்கான பெட்டிகள், உதிரிபாகங்கள், கட்டுமான உபகரணங்கள் தயாரிக்கும் கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டு வருகிறது. சென்னை ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலை, பாரத் எர்த் மூவர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து மணிக்கு 280 கிலோமீட்டர் வேகத்தில் இயங்கும் உள்நாட்டு அதிவேக ரயில் பெட்டிகளை வடிவமைத்து வருகிறது. அதிவேக ரயில் பெட்டிகள் தயாரிப்புக்காக பெங்களூருவில் புதிதாக ‘ஆதித்யா’ சிறப்பு வளாகம் அமைக்கப்பட்டுள்ளது. ஐஐடி-களில் மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சிகள், சிறப்புப் பயிற்சிகள், ஜப்பானிய தொழில்நுட்ப நடைமுறைகள் ஆகியவை இந்தியாவின் அதிவேக ரயில் சேவைக் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தி வருகின்றன. மும்பை–அகமதாபாத் அதிவேக ரயில் வழித்தடம் இந்தியாவின் முதல் புல்லட் ரயில் திட்டமாகும். சுமார் 508 கிலோமீட்டர் நீளமுள்ள இந்த வழித்தடத்தில் 12 நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மும்பை-அகமதாபாத் நகரங்களுக்கு இடையிலான பயண நேரம் சுமார் ஒரு மணி 58 நிமிடங்களாகக் குறையும். மணிக்கு 350 கி.மீ வேகத்திற்கு வடிவமைக்கப்பட்டுள்ள இந்த வழித்தடத்தில், மணிக்கு 320 கி.மீ வேகத்தில் ரயில்களை இயக்கலாம். இந்த வழித்தடத்தில் முதல் கட்ட ரயில் சேவை, சூரத்–வாபி இடையே 2027 ஆகஸ்ட் மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் திட்டத்தில் அதிநவீன மின்மயமாக்கல் அமைப்பு, சிக்னல் வசதி, ரயில்தட அமைப்பு, ரயில் கட்டுப்பாட்டு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. சபர்மதி, சூரத், தானே ஆகிய இடங்களில் பராமரிப்பு மையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதன் அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு எதிர்காலத்தில் தில்லி–வாரணாசி, வாரணாசி–பாட்னா–சிலிகுரி, சென்னை–பெங்களூரு, பெங்களூரு–ஹைதராபாத், சென்னை–ஹைதராபாத், மும்பை–புனே, புனே–ஹைதராபாத் உள்ளிட்ட ஏழு அதிவேக ரயில் வழித்தடங்கள் அமைப்பதற்கு அடையாளம் காணப்பட்டுள்ளன. சுமார் 16 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டில் அமைக்கப்படவுள்ள இந்தத் திட்டங்கள் நாட்டின் போக்குவரத்து இணைப்புக் கட்டமைப்பை வலுப்படுத்துவதுடன், பயண நேரத்தைக் குறைத்து நீண்டகால பொருளாதார வளர்ச்சிக்கும் முக்கிய பங்களிப்பை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தகவல்களுக்கு https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2280745®=6&lang=11 இணைப்பைப் பார்க்கவும். ஆதாரம்: பத்திரிகை தகவல் மையம்