சொந்த வீட்டை கட்டமைப்பது என்பது லட்சங்களின் மதிப்பில் செலவு செய்யும் விஷயமாக இருக்கிறது. மொத்தமாக பணத்தை திரட்டி வீட்டை அமைப்பது என்பது பெரும்பாலானோரால் முடியாத காரியமாக இருக்கிறது. சிறுக, சிறுக சேமித்து வீட்டை அமைக்க நினைத்தாலும் அதற்குள் வீட்டின் மதிப்பு எகிறிவிடும் நிலைதான் இருக்கிறது.
அதனால் பெரும்பாலானோருக்கு கடன் வாங்கிதான் கனவு இல்லத்திற்கு உருவாக்கம் கொடுக்கும் நிலை இருக்கிறது. அப்படி கஷ்டப்பட்டு உழைத்து கட்டமைக்கும் இல்லத்தை பாதுகாப்பதற்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். பேரிடர்களுக்கு இலக்காகி வீடு சிதில மடைந்தாலோ, எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டாலோ ஏற்படும் இழப்பை ஈடுகட்டுவது என்பது விரைவில் இயலாத விஷயமாகவே போய்விடும்.
ஆதலால் வீட்டை கட்டமைப்பதற்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறோமோ அதை போல் அதை பாதுகாக்கும் அம்சங்களில் ஒன்றான காப்பீடு விஷயத்திலும் கவனமாக இருக்க வேண்டும். காப்பீடு என்பதை செலவீனத்தில் எடுத்துக்கொள்ளும் விஷயமாக கருதக்கூடாது. ஏனெனில் பெரும்பாலானோர் வங்கிகளில் அல்லது நிதி நிறுவனங்களில் கடன் வாங்கிதான் வீட்டை வாங்கவோ, கட்டவோ செய்கிறார்கள்.
அதற்கு மாதம், மாதம் தவணை (இ.எம்.ஐ.) செலுத்தி வர வேண்டியிருக்கும். எதிர்பாராதவிதமாக கடன் வாங்கியவருக்கு அசம்பாவிதம் நிகழ்ந்து இறந்துவிட்டால் ஒட்டு மொத்த வீட்டு கடனும் வீட்டில் உள்ளவர்கள் செலுத்த வேண்டிய நிலை ஏற்படும். அது முடியாமல் போகும் பட்சத்தில் வீடு ஏலம் வரும் நிலையை சந்திக்க வேண்டியிருக்கும்.
ஆனால் காப்பீடு எடுத்து கொண்டால் இது போன்ற பிரச்சினையை எதிர்கொள்ள வேண்டி வராது. சிலர் காப்பீடு என்றால் அதற்கு கணிசமான தொகையை ஒதுக்க வேண்டியிருக்கும் என்று நினைக்கிறார்கள். வீட்டின் மதிப்பை ஒப்பிடும்போது சிறு தொகையே காப்பீட்டு செலவாக அமையும்.
அதாவது வீட்டுக்கடன் லட்சக்கணக்கில் இருக்கும்போது ஆண்டுக்கான காப்பீடு தொகை சில ஆயிரங்கள் தொகையில் தான் இருக்கும். இப்போதெல்லாம் வீட்டுக்கடன் வாங்கும்போதே காப்பீடு செய்து கொள்வதும் நடைமுறையில் இருக்கிறது.
காப்பீடு தொகையை மாதம் ஒரு முறையோ, மூன்று மாதம் அல்லது ஆறு மாதத்திற்கு ஒரு முறையோ செலுத்தும் வசதி இருக்கிறது. ஆண்டுக்கு ஒருமுறை கூட கட்டும் நடைமுறையும் இருக்கிறது. இவற்றில் பட்ஜெட் நிலவரத்திற்கு பொருத்தமானதை தேர்வு செய்து கொள்ளலாம்.
காப்பீடு செய்திருந்தாலும் ஏதேனும் வீட்டுக்கு பாதிப்பு ஏற்பட்டால் மட்டும்தானே இழப்பீடு தொகையை பெற முடியும். இல்லாவிட்டால் காப்பீடு செய்தது வீணாகி போய்விடுமே என்ற எண்ணம் இருக்கிறது. அந்த மனக்கவலையை போக்குவதற்கு ஒரு சில காப்பீட்டு திட்டங்கள் இரு வகைகளை கொண்டதாக இருக்கின்றன. அதாவது காப்பீடு செய்து வீட்டிற்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாவிட்டால் காப்பீட்டு காலம் முடிந்த பிறகு செலுத்திய தொகையை திரும்ப பெறும் வசதியை உள்ளடக்கியதாக இருக்கிறது.
அந்த காப்பீடு திட்டத்தை தேர்வு செய்தால் வீட்டுக்கு பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என்றால் காப்பீடு காலத்திற்கு பிறகு செலுத்திய பிரிமீயம் தொகையை திரும்ப பெற்று விடலாம். ஆனால் அதற்கும் சில நடைமுறை விஷயங்களை கடைபிடிக்க வேண்டியிருக்கும். அதிலும் குறிப்பாக இத்தகைய காப்பீடு திட்டத்திற்கு வழக்கமான காப்பீட்டில் இருந்து கூடுதல் தொகையை செலுத்த வேண்டி இருக்கும்.
அதிக வருமானம் ஈட்டுபவர்கள் தயக்கமில்லாமல் இந்த திட்டத்தை தேர்ந்தெடுக்க வழிவகை இருக்கிறது. ஆனால் குறைந்த வருவாய் உடையவர்கள் ஏற்கனவே வீட்டுக்கடன் செலுத்தும் போது இதுபோன்ற காப்பீட்டுக்கும் சற்று கூடுதலாக பணம் செலுத்த வேண்டியிருக்கும். அதற்கு முடியாத பட்சத்தில் வழக்கமான காப்பீடு திட்டத்தை தேர்வு செய்து கொள்ளலாம். ஏதாவது ஒரு காப்பீடு திட்டத்தை தேர்வு செய்வது வீட்டுக்கு பாதுகாப்பு என்பதை மட்டும் நினைவில் கொள்ள வேண்டியது அவசியம்.
வீட்டுக்கடன் வாங்கும்போதே காப்பீடு எடுக்கும் பட்சத்தில் அதற்கான தொகையை வீட்டுக்கடனுடன் சேர்ந்தே செலுத்தும்படி அமைவது சுமையை குறைக்கும் விதத்தில் இருக்கும். சில இடங்களில் காப்பீடு தொகையை தனியாக வசூலிக்கும் வழக்கம் இருக்கும். இவற்றுள் எது வசதியாக இருக்கும் என்பது பற்றி தெளிவாக முடிவு எடுப்பது நல்லது. மேலும் காப்பீட்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் அம்சங்கள் அனைத்தையும் நன்கு விசாரித்து தெரிந்து கொள்ளுங்கள். காப்பீடு எடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அது பற்றிய விவரங்களை முழுமையாக அறிந்து கொள்ளாமல் அசட்டையாக இருந்து விடக்கூடாது.
ஆதாரம் : தினதந்தி நாளிதழ்
கடைசியாக மாற்றப்பட்டது : 6/20/2020
ஜன்தன் திட்டத்தின் வளர்ச்சி மற்றும் நன்மைகள் குறித...
அருணாச்சல பிரதேசத்தில் மக்களுக்கு கிடைக்கும் சேவைக...
அந்நிய நாட்டவர் மற்றும் அந்நிய சுற்றுலாப் பயணிகள் ...
வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தொழில் தொடங்க நிதியுத...