வீட்டுமனைகளை முதலீடு நோக்கத்திற்காக வாங்குவது அதிகரித்து வருகிறது. அதற்கு விளை நிலங்களும் தப்புவதில்லை. பல இடங்களில் விவசாய நிலப்பகுதிகளுக்கு அருகிலும் வீட்டுமனைகள் முளைத்து கொண்டிருக்கின்றன. அப்படிப்பட்ட இடங்களில் வீட்டுமனை வாங்கும்போது அது வீடு கட்டுவதற்கு ஏற்புடையதுதானா? என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டியது அவசியம்.
அதிலும் விவசாய நிலங்களை வீட்டுமனைகளாக மாற்றம் செய்வதற்கு சில வரையறைகள் இருக்கிறது. குறிப்பிட்ட சில ஆண்டுகள் எந்தவித விளைச்சலும் மேற்கொள்ளப்பட்டிருக்காத நிலங்களாக அவை இருக்க வேண்டும். அத்துடன் வீட்டுமனையாக மாற்றப்பட்டிருப்பதற்கு ஒப்புதலும் பெற்றிருக்க வேண்டும். அப்படி அங்கீகாரம் பெறாமல் வீட்டுமனைகளாக விற்பனை செய்யப்படுகிறதா? என்பதை நன்கு விசாரித்து தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
அதற்கான அனுமதி கிடைப்பதற்கு காலதாமதம் ஆகலாம். அதுபற்றிய தகவல்களை தெரிவிக்காமல் மனை விற்பனை நடைபெறக்கூடும். பிறகு வாங்கிக்கொள்ளலாம் என்று கூறினாலும் விழிப்பாக இருக்க வேண்டும். விலை குறைவாக இருக்கிறது என்ற காரணத்திற்காக அவசரப்பட்டு முடிவு எடுக்கக்கூடாது. அருகில் இருக்கும் மற்ற மனைப்பிரிவுகளின் சதுர அடி விலை என்ன? என்பதை ஒப்பிட்டு பார்க்க வேண்டும்.
அதை விட விலை குறைவாக இருந்தால் அதற்கு என்ன காரணம் என்பதையும் விசாரித்து தெரிந்து கொள்ள வேண்டும். சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் (சி.எம்.டி.ஏ.), நகர ஊரமைப்பு இயக்ககம் (டி.டி.பி.சி) ஆகியவற்றின் அங்கீகாரம் பெற்ற மனைகளாக இருந்தால் பிரச்சினை இல்லை. அந்த மனைப்பிரிவுகள் சற்று விலை அதிகமாக இருந்தாலும் பின்னாளில் பிரச்சினை இருக்காது.
புறநகர்களில் கிராமப்புறத்தையொட்டிய பல இடங்களில் பஞ்சாயத்து அப்ரூவல் என்ற ரீதியில் வீட்டுமனை விற்பனை நடைபெறுகிறது. அத்தகைய மனைகள் முறையான அங்கீகாரம் பெற்றிருக்கிறதா? என்பதை தெளிவுபடுத்தி கொள்வது அவசியம். அதிக எண்ணிக்கையில் மனைபிரிவுகள் பிரிக்கப்பட்டு வீட்டுமனை விற்பனை நடைபெறும் பட்சத்தில் முறையான அனுமதிகள் பெறப்பட்டிருக்கிறதா? என்பதை உறுதிபடுத்திக்கொள்ள வேண்டும்.
குறிப்பாக மனைகளுக்கு இடையே செல்லும் சாலை அளவுகள் விதிமுறைப்படி இருக்கிறதா? என்பதை சரிபார்க்க வேண்டும். அதிலும் குடிநீர் வசதி, வடிகால் வசதி, சாக்கடை வசதி போன்றவற்றுக்கான பொதுபயன்பாட்டு இடங்கள் அமைந்திருக்கிறதா? என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். சட்ட விதிமுறைகள் அனைத்தும் பின்பற்றப்பட்டிருக்கிறதா? என்பதை வக்கீல்கள் உதவியுடன் ஆவண சரிபார்ப்பு மேற்கொள்வது சிறந்தது.
அத்துடன் மனை அளவுகளை வாங்கும்போது சரிபார்ப்பதுடன் விட்டுவிடக்கூடாது. மனையை தொடர்ந்து கண்காணித்து வர வேண்டும். முதலீடு நோக்கத்திற்காக மனை வாங்கும் பலர் பத்திரப்பதிவு செய்தபிறகு மனைகளை சில காலம் கண்டுகொள்ளாமல் விட்டு விடுவார்கள். அப்படி இருப்பது பின்னாளில் பிரச்சினைக்கு வழி வகுக்கக்கூடும்.
ஒரே மனைப்பிரிவில் அடுத்தடுத்து வரிசையாக மனைகள் பிரிக்கப்பட்டு இருக்கும் பட்சத்தில் மனை அளவுகளில் மாறுபாடு தோன்றக்கூடும். ஏனெனில் பக்கத்தில் மனை வாங்கியவருக்கும் ஒரே கல்லில்தான் எல்லை நிர்ணயிக்கப்பட்டிருக்கும். நீண்டகாலம் அந்த கல் அப்படியே இருக்கும் என்று கூற முடியாது. சிலர் தங்கள் மனையை சுற்றி வேலி போடும்போது எல்லைக்கல்லை பிடுங்கி தங்களுடைய வீட்டுமனை அளவுகளை வரையறை செய்ய முற்படலாம்.
அவர்கள் சரியாக எல்லை அளவுகளை கணக்கிட்டு இருந்தால் பிரச்சினை இல்லை. சதுர அடியில் சில அங்குலம் கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ அளவீடு செய்தாலும் பிரச்சினைதான். அடுத்ததடுத்து மனை அமைந்திருக்கும் என்பதால் சதுர அடிகளை சரிபார்த்து வருவது அவசியம். இல்லாவிட்டால் பின்னாளில் வீடு கட்ட தொடங்கும்போதோ அல்லது மனையை விற்பனை செய்ய முற்படும்போதோ சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும்.
வீடு கட்டுவதாக இருந்தால் நான்கு புறமும் இடைவெளி விட்டுத்தான் வீடு கட்ட முடியும். பக்கத்து மனை வாங்கியவரும் அதுபோல் இடம் விட வேண்டியிருக்கும். நீங்கள் மனையை கண்டு கொள்ளாமல் இருக்கும் பட்சத்தில் அவர் போதுமான இடைவெளி விடாமலோ அல்லது உங்கள் மனை பகுதிக்குள் தடுப்பு சுவர் அமைந்திருந்தாலோ தேவையற்ற பிரச்சினைகளையும், கட்டுமான செலவுகளையும் சந்திக்க வேண்டி வரும்.
ஆதாரம் : தினத்தந்தி
கடைசியாக மாற்றப்பட்டது : 6/20/2020
அந்நிய நாட்டவர் மற்றும் அந்நிய சுற்றுலாப் பயணிகள் ...
வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தொழில் தொடங்க நிதியுத...
அருணாச்சல பிரதேசத்தில் மக்களுக்கு கிடைக்கும் சேவைக...
ஜன்தன் திட்டத்தின் வளர்ச்சி மற்றும் நன்மைகள் குறித...